Saturday 7 March 2015

" விபத்துகளும் திரேக்காணமும், " Part 2



ஓம் நமசிவாய.  அனைவருக்கும் வணக்கம். ,,,,,,,,,,,,,,,,,,, " விபத்துகளும் திரேக்காணமும், " ,,,,,,,,,,,,,,,,,,,,    பாரம்பரிய முறையிலான பதிவு.  பகுதி 2.  திரேக்காணம் காண்பது மிகவும் எளிது.  ராசிசக்கரத்தின் ஒரு ராசியில் 9 நக்ஷத்திர பாதங்கள் உள்ளன.  அவற்றை மூன்று பங்காக்கினால், பங்கு ஒன்றுக்கு மூன்று பாதங்கள் வரும்.  முதல் பங்கில் இருக்கக்கூடிய லக்னம் அல்லது கிரகஙகளை, திரேக்காண சக்கரத்தில், அந்த ராசியிலேயே குறிக்க வேண்டும்.   இரண்டாம் பங்கிலிருப்பவைகளை, அந்த ராசியிலிருந்து ஐந்தாவதாக எண்ண வரும் ராசியில் திரேக்காண சக்கரத்தில் குறிக்க வேண்டும்.  மூன்றாம் பங்கிலிருப்பவைகளை, அந்த ராசியிலிருந்து எண்ண வரும் ஒன்பதாம் ராசியில் திரேக்காண சக்கரத்தில் குறிக்க வேண்டும்.  இவ்வாறே ஒவ்வொரு ராசியிலிருப்பவைகளையும், பங்கிட்டு குறித்து முடித்தால் திரேக்காண சக்கரம் முழுவடிவம் பெற்றுவிடும்.  இந்த திரேக்காண சக்கரம் அமைப்பதில் இன்னொரு முறையும் உள்ளது.  அதை பெரும்பாலானவர்கள் பயன்படுத்தவதில்லை என்பதாலும், கணிணி மென்பொருட்களிலும் மேற்கண்ட முறை மட்டுமே பயன்படுத்தப்படுவதாலும், அந்த இன்னொரு முறை பற்றி அறிந்து கொள்வதை நாம் விட்டுவிடுவோம்.

நமது சாஸ்த்திரத்தில் இந்த திரேக்காண சககரத்தின் அடிப்படையில் உறுப்புகள் குறிப்பிட்டு சொல்லப்பட்டுள்ளன.  காலபுருஷ தத்துவப்படி உறுப்புகளை கண்டு, ஜாதகருக்கு அதன் சம்பந்தமான பலன் சொல்வதை விட, திரேக்காண சக்கரத்தின் அடிப்படையில் உறுப்புகளை கண்டு, பலன் சொன்னால் அது துல்லியமாக அமையும்.  காரணம்.  காலபுருஷ தத்துவப்படி காணப்படும் உறுப்புகள் அனைவருக்கும் ஒரே மாதிரியாகவே அமையும்.  திரேக்காண சக்கரம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையாக அமைவதால், இது துல்லியமானதாகும். 

ராசிசக்கரத்தில் லக்னத்தை எவ்வாறு முதலாம் வீடாக கருதுகிறோமோ அவ்வாறே, திரேக்காண சக்கரத்திலும் லக்னமே முதலாம் வீடாகும்.  ராசி சக்கரத்தில், முதல் மூன்று பாதங்களுக்குள் அமைந்த லக்னம் கொண்டு அமைக்கப்பட்ட முதல் திரேக்காணப்படி அமைந்த லக்னம் தொடங்கிய 12 வீடுகளும் முதலாம் திரேக்காணம் எனப்படும்.  ராசி சக்கரத்தில், 4, 5 ,6 ஆகிய பாதங்களில் அமைந்த லக்னம் கொண்டு அமைக்கப்பட்ட இரண்டாம் திரேக்காணப்படி அமைந்த லக்னம் தொடங்கிய 12 வீடுகள் இரண்டாம் திரேக்காணம் எனப்படும்.  ராசி சக்கரத்தில், 7, 8, 9 ஆம் பாதங்களில் அமைந்த லக்னம் கொண்டு அமைக்கப்பட்ட,  மூன்றாம் திரேக்காணப்படி அமைந்த லக்னம் தொடங்கிய 12 வீடுகள் மூன்றாம் திரேக்காணம் எனப்படும்.   இவ்வீடுகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு உறுப்புகளை குறிக்கும்.  இந்த மூன்று திரேக்காணங்களுக்குரிய வீடுகளின் உறுப்புகளுக்குண்டான பட்டியலை ஸ்ரீவராஹிமிஹிரர் தனது ' பிருகத் ஜாதகம் ', நூலில் விரிவாக கொடுத்துள்ளார்.  இவை அந்த நூலில் 4 வது அத்தியாத்தில் 24 ஆவது ஸ்லோகமாக உள்ளது.  அது போல் சுருக்கமாக ' ஜாதக அலங்காரம் ', எடுத்து சொல்கிறது.  முதல் திரேக்காணம் தலை முதல் வாய் வரை அமைந்துள்ள உறுப்ப்களையும், இரண்டாம் திரேக்காணம்,  கழுத்து முதல் தொப்புள் சுழி வரை உள்ள உறுப்புகளையும், மூன்றாம் திரேக்காணம், அடிவயிறு முதல் பாதம் வரையிலுள்ள உறுப்ப்களையும் குறிக்கும். 

மேலே குறிப்பிடப்பட்டுள்ள உறுப்புக்கான ஸ்தானத்தில் இயற்கை பாப கிரகம் இருந்தால், கடுமையான விபத்தால் பாதிப்பு ஏற்படும்.  சூரியன் என்றால் காட்டுவிலங்குகளாலும், மேலிருந்து விழும் மரம் போன்ற உறுதியான பொருட்களாலும்,  சந்திரன் என்றால் நம்மோடு வாழ்ந்து வரும் விலங்குகளாலும், அவற்றின் கொம்புகளாலும், செவ்வாய் என்றால் தீயாலும், ஆயுதங்களாலும், புதன் என்றால் கீழே விழுவதாலும், சனி என்றால் கல்லில் அடிபடுவதாலும், [ அதாவது உறுதியான பொருளின் மீது மோதிக்கொள்வது ],  விபத்து நேரும்.  ராகு, கேதுக்களுக்கு பழமையான நூல்களில் இதை பற்றிய குறிப்புகள் இல்லை. எனது அனுபவத்தில் இவ்விரு கிரகங்கள் இருக்கும் உறுப்பு சேதமடைவதுடன், ஜாதகர்கள் மரணத்தில் எல்லைக்கே சென்றுவிடுகிறனர்.  குறிப்பிட்ட உறுப்பில் மாற்று உறுப்பு பொருத்தப்பட்டு, அதை கொண்டு வாழ்னாளை கழிக்கும் நிலை ஏற்படுகிறது. 

இந்த பதிவின் முதல் பகுதியில் கூறப்பட்டுள்ள கிரக நிலைப்படி, கடுமையான விபத்து நேரும் என்பது உறுதியாகிவிட்டால், விபத்தை உருவாக்கும் கிரகம், எத்தனையாவது திரேக்காணத்தில் எந்த உறுப்பு ஸ்தானத்தில் உள்ளது என்று அறிந்து, கிரகத்தின் விபத்து தன்மை உணர்ந்து, இவைகளை இணைத்து பலன் சொல்ல வேண்டும்.

மேற்கண்ட விளைவுகள் நேரும் என்று உறுதியாக தெரிந்தால், அதற்குரிய பரிகார வழிபாடுகள் செய்து விபத்தின் கடுமையை பெருமளவு குறைத்துக்கொள்ள இயலும்.  சில ஜாதகங்கள் பரிகார வழிபாடுகளை ஏற்றுக்கொள்வதில்லை.  இவ்வகை ஜாதகர்கள், தான் அனுபவிக்க வேண்டிய பாபகர்மாவை அனுபவித்தே ஆக வேண்டியிருக்கிறது.  பரிகார வழிபாடுகள் பற்றிய முழு விபரங்களுக்கு என் பிளாக் ஸ்பாட்டிலுள்ள கட்டுரையை படித்து பாருங்கள்.  முகவரி.  www.josyamramu.blogspot.com    எனவே ஜாதகர்கள், முதல் பகுதியில் சொல்லப்பட்ட கிரகனிலைகள் தங்களுடைய ஜாதகத்தில் அமைந்தால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக,  ஒரு நல்ல ஜோதிடரை அணுகி தற்காத்துக்கொள்வது அவசியம்.  அதுபோல் ஜோதிடர்களாகிய நம்மை அணுகும் ஜாதகர்களுக்கு தேவையான அறிவுரைகளை துல்லியமாக எடுத்து சொல்லி அவர்களை பாதுகாப்பதும், தன்னம்பிக்கையூட்டுவதும் நம் கடமையாக கருத வேண்டும்.  அனைத்துக்கும் இறைவன் அருள் புரிந்து நம்மை காப்பானாக.  நன்றி.  வணக்கம்.  





.


1 comment:

  1. திரு. ராமு ஐயா, வணக்கம் தங்களுடைய பதிவுகளை படித்தேன் அருமையான விளக்கம். இரண்டாம் பதிவில் கூறிய Brihat Jataka என்ற நூலில் என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. எந்த பக்கத்தில் என்று கூற முடியும!!!! நன்றி

    ReplyDelete