Tuesday 21 July 2015

ஆடிமாதத்தில் புதுமண தம்பதியரை பிரித்து வைப்பது ஏன்?................... பகுதி 2.


ம் படைவீட்டம்மா துணை.  அனைவருக்கும் வணக்கம்.  ஆடிமாதத்தில் புதுமண தம்பதியரை பிரித்து வைப்பது ஏன்?................... பகுதி 2.  ..................  சென்ற பதிவின் தொடர்ச்சி...............பாரம்பரிய முறை......................  இக்காலத்தில் குடும்ப நலத்திட்டம் என்று ஒரு திட்டம் உள்ளது.  குழந்தை பிறத்தல், தடுத்தல் ஆகியவற்றிற்கான விஞ்ஞான வழிமுறைகளை இத்திட்டத்தின் மூலம் கடைபிடிக்கிறார்கள்.  நமது ஜோதிட சாஸ்த்திரம், மெய்ஞ்ஞான வழிமுறைபடி குழந்தை பிறப்பை திட்டமிட்டுக்கொள்ளும் குடும்ப நலத்திட்டத்தை அக்காலத்திலேயே வகுத்து தந்துள்ளது.  இதன்படி திட்டமிட்டு, ஆடியில் கருவுருதலை மூத்த தம்பதியர்கள் தடுத்துக்கொண்டனர்.  அதை பற்றி சுருக்கமாக பார்க்கலாம். 

ஒவ்வொரு மாதமும் பெண்ணுக்கு மாதப்பிரவிடை நேர்ந்த பிறகு, கோசரப்படி சந்திரன் உபஜெய ராசிகளில் இருக்கும்போது, சந்திரனை குரு பார்க்கும் போது தம்பதியர் தாம்பத்தியம் விரும்புவர்.  ஜென்மராசிக்கு 3. 6. 10. 11 ஆகிய ராசிகள் உபஜெய ராசிகளாகும்.  இதன்பின் சந்திரன் அபஜெயராசிகளில் இருக்கும்போது பெண் கருவுருவாள்.  ஜென்மராசிக்கு 1. 2. 4. 5. 7. 8. 9. 12 ஆகிய ராசிகள் அபஜெய ராசிகள்.  மனக்கட்டுப்பாடு நிறைந்த மூத்த தம்பதியர்கள், மேற்கண்ட காலகட்டங்களை அறிந்து நடந்துகொண்டனர்.  மேற்கண்ட காலங்கள் ஆடியில் வரும்போது தாம்பத்தியத்தை தவிர்த்தனர்.  இம்மெய்ஞான குடும்ப நலத்திட்டத்தை மூத்த தம்பதியர்கள் மனக்கட்டுப்பாடுடன் கடைபிடித்ததனால், ஆடியில் அவரகளை பிரிக்க வேண்டிய அவசியமில்லாமல் போனது. 

ஆடியில் சில இனத்தவர்கள் திருமணம் செய்துகொண்டு, முதலிரவை கொண்டாடுகிறார்கள், என்ற செய்தியை சென்ற பதிவில் சொல்லியிருந்தேன்.  அவரகள் முஹூர்த்தம் குறிக்கும்போது, ஐப்பசிமாதம் முழுதும் சூரியன் நீசபங்கம் பெறுகிறாரா? என்பதை முதலில் கவனிக்கிறனர்.  ஐப்பசி மாதத்தில் சுக்கிரன் மாதம் முழுதும், சிம்மத்தில் அல்லது சூரியனுடன் துலாத்தில் இருந்தால், அந்த மாதம் முழுதும் சூரியன் நீசபங்கமடைவார்.  அபூர்வமாக சில வேளைகளில், ஐப்பசி மாதம் முழுதும், சனி மேஷத்திலிருந்து சூரியனை பார்த்தாலோ, அல்லது சூரியனுடன் துலாத்தில் இருந்தாலோ, சூரியன் நீசபங்கம் அடைவார்.  ஆடிமாதம் திருமணமாகி, உடனே கருவுற்றாலும், கருவின் 4 ஆவது மாதமான ஐப்பசியில் சூரியன் நீசபங்கம் அடைவதால், பிறக்கும் குழந்தைக்கு எலும்புக்குறைபாடு இருக்காது.  ஐப்பசி மாதம் முழுதும் சூரியன் நீசபங்கம் பெறும் வாய்ப்பு இல்லையென்றால், திருமணத்தை, ஆடி மாத கடைசிக்கு மாற்றிவிடுவர்.  அல்லது ஆடியை தவிர்த்துவிடுவர்.

மேற்கண்ட சாஸ்த்திர, சம்பிரதாயங்களை, கவனமுடன் கடைபிடித்து வந்தபோதும், அக்காலத்திலும் சில சாஸ்த்திர, சம்பிரதாய மீறல்கள் தெரிந்தோ, தெரியாமலோ நடந்தன.  அதனால் எலும்பு வளர்ச்சிக்குறைபாடுள்ள குழந்தைகள் பிறக்கவே செய்தன.  அத்தகையோரில் கூன்பாண்டியனும், அஷ்டவக்கிரனும் முன்மாதிரிகள்.  மதுரையை ஆண்ட பாண்டிய மன்னர்களில் ஒருவரான, கூன்பாண்டியனுக்கு, பெயருக்கேற்றவாறு, பிறவிலிருந்தே முதுகு வளைந்திருந்தது.  இந்த குறையை ஸ்ரீஞானசம்பந்தர் திருநீற்றுப் பதிகம் பாடி, திருநீறு தடவி, கூனைப்போக்கினார்.  அன்று முதல் பாண்டியன், நின்றசீர் நெடுமாறனானான்.  அஷ்டவக்கிரனுக்கு, உடம்பில் ஏற்பட்ட எலும்புக்குறைபாடால் எட்டு இடங்களில் வளைவும், கோணலும் இருந்தது.  இதை அஷ்டலிங்க மூர்த்தியாக எழுதருளியிருக்கும் ஸ்ரீசிவபெருமான் போக்கியருளினார்.  இவ்வதிசயம் நடந்த இத்தலத்தில் இன்றும் இதற்கான பரிகார வழிபாடுகள் நடைபெற்றுக்கொண்டிருக்கிறன.

தவறுதலாக ஆடி மாதம் கருவுற்றுவிட்டால், ஐப்பசி மாதத்தில் அஷ்டலிங்க வழிபாடு செய்து, எலும்பு ஆரோக்கியமுள்ள குழந்தையை பெற்றுக்கொள்ளலாம்.  4 ஆவது மாதம், கருவை மருத்துவர் அனுமதியுடன், ஸ்கேன் செய்து பார்த்தோமானால், அதன் எலும்பு வளர்ச்சி பற்றிய முழுதகவல் நமக்கு கிடைத்துவிடும்.  குறைபாடு இருப்பின், மருத்துவம் மேற்கொள்வதோடு, பரிகார வழிபாடும் மேற்கொள்ள வேண்டும்.  கும்பகோணத்திலிருந்து, திருவைக்காவூர் செல்லும் பாதையில் கூனன்சேரி என்றொரு சிவத்தலம் உள்ளது.  இது அஷ்டவக்கிரனுடைய குறையை நீக்கிய தலம்.  அக்குறையை நீக்கிய அஷ்டலிங்கங்களுக்கு அபிஷேக ஆராதனை செய்து, வஸ்த்திரம் சாற்றி வழிபடவேண்டும்.  இக்கோவிலில் எழுந்தருளியிருக்கும். ஸ்ரீகைலாசனாதருக்கும், ஸ்ரீஅம்பாளுக்கும் அர்ச்சனை செய்து வழிபடல் வேண்டும்.  இறைவன் திருவருளால் குறை நீங்கப்பெறும்.  குழந்தை பிறந்தவுடன் இக்குறை இருப்பது தெரிந்தாலும், இத்தலத்தில் வழிபாடு செய்து நிவாரணம் பெறலாம்.  ஆனால் காலம் கடந்த நிலையில் பயனில்லாமல் போகும். 

ஒரு சிவத்தல பரிகார வழிபாடை சிந்தித்தோம்.  இதே போல், இக்குறையை போக்கும் வைஷ்ணவ ஸ்தலமும் உள்ளது.  தலத்தின் பெயர். ஊனமாஞ்சேரி.  ஊனம் மாய்தல் சேரி என்பது காலப்போக்கில் மாறிவிட்டது.  சென்னைக்கு அருகே வண்டலூர்......திருப்போரூர் சாலையில் 5 கி.மி தொலைவில் கொளப்பாக்கம் அருகில் ஊனமாஞ்சேரி அமைந்துள்ளது.  எலும்புக்குறைபாடை தீர்க்கும் தெய்வமாக இங்கு ஸ்ரீராகவப்பெருமாள் விளங்குகிறார்.

நம் முன்னோர்கள் நமக்கு வகுத்துதந்த சாஸ்த்திர சம்பிரதாயங்களை தவறாமல் கடைபிடித்து, ஆடி மாதம் தாம்பத்தியம் தவிர்த்து, ஆரோக்கியமான குழந்தைகள் பிறக்க, திட்டம் வகுத்து, நல்ல வம்சம், பரம்பரை விளங்க முயல்வோமாக................ அதற்கு இறைவன் தனது பரிபூரண நல்லாசிகளை அருள வேண்டுகிறேன்.  நன்றி.  வணக்கம்.              

Saturday 18 July 2015

ஆடி மாதம் புதுமண தம்பதியரை பிரித்து வைப்பது ஏன்?.....


ம் படைவீட்டம்மா துணை.  வணக்கம்.......................  ஆடி மாதம் புதுமண தம்பதியரை பிரித்து வைப்பது ஏன்?......................  வாசகர்களுக்கான பதிவு.  [ பாரம்பரிய முறை ].  பகுதி. 1.. ......................ஆனி மாதத்தின் கடைசி வாரத்தில் திருமணம் செய்துகொண்ட தம்பதியரை கூட விடுவதில்லை.  அந்த அளவுக்கு கெடுபிடியாக இந்த பழக்கத்தை மக்கள் கடைபிடித்து வருகிறார்கள்.  ஆடி மாதம் புதுமண தம்பதியர்கள் தாம்பத்தியம் கொண்டுவிட்டால், அதிலிருந்து 10 ஆம் மாதமாகிய சித்திரையில் குழந்தை பிறக்கும்.  சித்திரை கோடையின் வெய்யில் உச்ச கட்டத்தில் இருக்கும்.  இதனால் கோடை சம்பந்தப்பட்ட, அம்மை, சிரங்கு, கட்டி ஆகியன தோன்றுகின்றன.  பெரியோர்களே இதை தாங்கமுடிவதில்லை.  சின்னஞ்சிறு சிசு எப்படி தாங்கிக்கொள்ளும்?  தெரிந்தே நாம் இந்த துன்பத்தை சிசுவுக்கு தரலாகாது.  எனவே புதுமண தம்பதியர் தாம்பத்தியத்தில் இணைந்துவிடாமலிருக்க அவர்களை பிரித்துவிடுகிறார்கள்.  இது ஒரு காரணமாக சொல்லப்படுகிறது.  இந்த காரணத்தின் பின்னணியில் நமக்கு பல சந்தேகங்கள் முளைக்கின்றன. 

1.  இக்காலத்தில் வைகாசியிலும் கோடை தகிக்கிறது.  புதுமண தம்பதியர் ஆவணியில் தாம்பத்தியத்தில் ஈடுபட்டால், அதன் 10 ஆம் மாதமான வைகாசியில் குழந்தை பிறந்தால், அது வைகாசி கோடையை அனுபவித்து துன்பப்படாதா?  ..........  2.  நமது முன்னோர்கள் ஆடியில் புதுமண தம்பதியர்கள் மட்டும் பிரிய வேண்டும் என்று சொல்லிவைத்திருக்கிறார்களா?  இதற்கு ஆதாரம் ஏதேனும் உள்ளதா?  ..................  3.  சற்று மூத்த தம்பதியர்கள் கூட ஆடி மாதத்தில் தாம்பத்தியத்தில் இணைய வாய்ப்பு உள்ளது.  இதனால் பிறக்கும் குழந்தை சித்திரை கோடையில் அவதிப்படாதா?  .............  4.  கோடையில் பிறக்கும் குழந்தை, அதன் தாக்கத்தால், அது சம்பந்தப்பட்ட நோயால் வாடும் என்பது மட்டும் காரணாமா?  வேறு ஏதேனும் உள்ளதா?  .....................  5.  ஒரு சில இனத்தவர், ஆடியில் திருமணமே செய்து, முதலிரவை விமரிசையாக கொண்டாடுகிறார்களே.  அவர்கள் ஏன் இந்த ஆடி மாதத்திற்கு அஞ்சவில்லை?  ............  6.  இவற்றுக்கெல்லாம் ஜோதிடசாஸ்த்திரம் பதில் சொல்கிறதா?      .................... என்பது போன்ற கேள்விகளுக்கெல்லாம் விடை காண்பதே இப்பதிவின் நோக்கமாகும்.

ஸ்ரீ வராஹிமிஹிரர் தொகுத்த ப்ருஹத்ஜாதகத்தில் இதற்கான விளக்கம் கிடைக்கிறது.  நம் மீது கிரகங்கள் ஏற்படுத்தும் விளைவுகளை அறிய ஜாதகம் கணித்து அறிந்துகொள்கிறோம்.  அது போல் ஒரு தாயின் வயிற்றில் இருக்கும். கருவின் மீதும் கிரகங்கள் விளைவுகளை ஏற்படுத்துகின்றன.  கரு வளரும் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு கிரகம் தனது ஆதிக்கத்தை கரு மீது செலுத்துகிறது.  கருவின் 4 ஆம் மாதத்தில் சூரியன் ஆதிக்கம் செலுக்க்துகிறது.  இதனால் கருவில் எலும்புகள் உருவாகி, நல்ல வளர்ச்சி அடைகிறன.  சூரியனின் காரகத்துவங்களில் ஒன்று எலும்பு.  ஜோதிட சாஸ்த்திரம் சொல்லும் இந்த உண்மையை விஞ்ஞானமும் ஒப்புக்கொண்டுள்ளது.  எனவே கருவின் 4 ஆம் மாதத்தில் சூரியன் நீசம், பகை போன்ற ஸ்தானங்களை அடையக்கூடாது.  நீசம் அடைந்தாலும் நீசபங்கம் பெறவேண்டும்.  இப்படி சூரியன் கெட்டால், கருவின் எலும்புகள் வளர்ச்சி குன்றி, குள்ளம், கூன், கை, கால்களில் எலும்பில் தேவையற்ற வளைவுகள் தலை பெரிதாகி உடல் சிறுத்துப்போவது, போன்ற குறைபாடுகள் உண்டாகின்றன.

ஆடி மாதம் தம்பத்தியம் கொள்வதால், ஐப்பசி 4 ஆவது மாதமாக அமையும், அப்போது சூரியன் நீசமடைகிறது.  எனவே தாம்பத்தியத்திற்கு நம் முன்னோர்கள் ஆடியை தவிர்த்தனர்.  தாம்பத்தியத்தை தானாகவே தவிர்த்துக்கொள்ளும் அளவுக்கு பக்குவமடையாத, புதுமணத்தம்பதியரை வலுக்கட்டாயமாக பிரித்தனர்.  தையில் திருமணம் செய்து, தாம்பத்தியம் கொள்வதால், அதன் 4 ஆவது மாதமாக சித்திரை அமையும்.  சித்திரையில் சூரியன் உச்சம்.  எனவே கருவின் எலும்புகளின் வளர்ச்சியில் எந்த குறைபாடும் இருக்காது.  அதுபோல் வைகாசியில் திருமணம் செய்துகொண்டு, தாம்பத்தியம் கொள்வதால், அதன் 4 ஆவது மாதமாக ஆவணி அமையும்.  ஆவணியில் சூரியன் ஆட்சி.  எனவே கருவின் எலும்பு வளர்ச்சி நன்றாக அமையும்.  எனவே திருமண முஹூர்த்தம் வைப்பதில் இவ்விரு மாதங்களுக்கு முதலிடம் கொடுத்தனர் நம் முன்னோர்கள்.  ஐப்பசி, கார்த்திகை, மாசி ஆகிய மாதங்களுக்குரிய 4 ஆம் மாதம் சூரியன் பகையாவதால் இந்த மாதங்களில் திருமணம் செய்ய்க்கூடாது என்றனர்  .......... ம்ஹும்...................  இப்போது எல்லாம் மாறிவிட்டது.  சில சாஸ்த்திர சம்பிரதாய மீறல்களால், எலும்பு குறைபாடுடன், உடல் ஊனமுற்ற குழந்தைகள் பிறந்துவிடுகிறன.  இதற்கு முழு பொறுப்பு பெரியோர்களே.  இக்குறைபாடுடன் பிறக்கும் குழந்தைகளுக்காக நம் முன்னோர்கள் சில பரிகார வழிபாடுகளுக்கும் வழி காட்டியிருக்கிறார்கள்.  அவற்றை அடுத்த பதிவில் பார்ப்போம்.  ...................  தொடரும்..................நன்றி.....................         

Monday 6 July 2015

அஸ்தங்கம் மற்றும் வக்கிரம் பற்றிய பதிவு இது............ பாகம். 4.


ம் படைவீட்டம்மா துணை.  ஜோதிட நண்பர்களுக்கு வணக்கம்.  அஸ்தங்கம் மற்றும் வக்கிரம் பற்றிய பதிவு இது............  பாகம். 4.  பாகம் 3 இன் தொடர்ச்சி.  ......................  பாரம்பரிய முறை........................  இந்த தொடர் பதிவில் விடுபட்டு போன சில விஷயங்களை உங்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.  பொதுவாக கிரகங்கள் அஸ்தங்கமடைந்தால், அதன் ஒளியையும், சக்தியையும் இழந்துவிடும்.  அதனால் பலன் தர இயலாமல் பலவீனமடைகிறன.  ஆனால் புதன் மட்டும் அஸ்தங்கமானாலும், தன் சுயகாரகத்துவத்தை பலனாக வழங்குவது எவ்வாறு"  அது போல் சந்திரனுக்கு அஸ்தங்க தோஷம் இல்லயென்றால் அதன் காரணம் என்ன?  இப்படியெல்லாம் சில கேள்விகள் என்னிடம் கேட்கப்பட்டன.  பதிவிடும்போதே இதற்கும் சேர்த்து பதிவிட்டிருக்க வேண்டும்.  விடுபட்டு போனதால் இப்போது பதிவிடுகிறேன். 

சூரியனை ஒரு மையப்பொருளாக கொண்டு, இந்த பூமி ஒரு வட்டப்பாதையை அமைத்துக்கொள்டு சுற்றி வருகிறது.  பூமிக்கும், சூரியனுக்கும் இடையே ஒரு உள்வட்டப்பாதையை அமைத்துக்கொண்டு சூரியனை புதன் சுற்றி வருகிறது.  சந்திரன் பூமியை சுற்றி ஒரு வட்டப்பதையை அமைத்துக்கொண்டு பூமியை சுற்றி வருகிறது.  செவ்வாய், குரு, சனி ஆகிய கிரகங்கள் சூரியனை மையப்பொருளாக கொண்டு, பூமியின் வட்டாபாதைக்கு அடுத்தாற்போல் வெளிவட்டப்பாதைகளை அமைத்துக்கொண்டு சுற்றி வருகிறன.  இக்கிரங்கங்களின் பாதை சூரியனையும், பூமியையும் விட்டு விலகி வெளிவட்டமாக அமைந்ததால், பூமிக்கும், சூரியனுக்கும் இடையே இவைகள்  வருவதில்லை.  சுக்கிரனுடைய பாதை, புதனைப்போல உள்வட்டப்பாதையாக அமைந்திருந்தாலும், அது பூமிக்கும், சூரியனுக்கும் இடையே வருவதில்லை.  அதன் பாதை அமைப்பு அவ்வாறு உள்ளது.  ஆனால் புதன் அடிக்கடி பூமிக்கும், சூரியனுக்கும் இடையே வரும்.  சந்திரனும் பூமியை சுற்றி வருவதால் 15 தினங்களுக்கு ஒருமுறை பூமிக்கும், சூரியனுக்கும் இடையே வருகிறது. 

செவ்வாய், குரு, சுக்கிரன், சனி ஆகிய கிரகங்கள் அஸ்தங்கமடையும் போது, அவை சூரியனுக்கு பின்னால் சென்று மறைகிறன.  எனவே அவைகளின் சக்தியையும், ஒளியையும், சூரியன் ஆக்கிரமித்துக்கொண்டு விடுகிறது.  சூரியனுக்கும், பூமிக்கும் இடையே புதன் வரும் போது ஒருமுறையும், சூரியனுக்கு பின்னால் செல்லும் போது ஒரு முறையும் புதன் அஸ்தங்கமடைகிறது.  புதன், சூரியனுக்கு பின்னால் சென்று மறையும் போது, மற்ற கியரகங்களிப்போல், சூரியனிடம் தன் சக்தி, ஒளி ஆகியனவற்றை இழந்தாலும், மற்ற கிரகங்களைப்போல் தன் சுயகாரகத்துவங்களை முற்றிலுமாக இழப்பதில்லை.  மற்ற கிரகங்கள் மிகவும் தொலைதூரத்தில் சூரியனுக்கு பின்னால் மறைகிறன.  புதன் வெகு அருகாமையில் மறைகிறது.  எனவே அதன் சக்தி ஓரளவு நமக்கு கிடைத்துவிடுகிறது.  இப்படி புதன் மறைந்தாலும், அதன் பலன் நமக்கு கிடைப்பதால், " மறைந்த புதன் நிறைந்த பலன் ", என கூறப்படுகிறது.    அதுவே புதன், சூரியனுக்கும், பூமிக்கும் இடையே வரும் போது, புதன் முழுமையாக மறைந்துவிடுவதில்லை.  அதன் ஒரு பாதி சூரியனை பார்த்தவாறும், மறுபாதி பூமியை பார்த்தவாறும் இருக்கும்.  எனவே புதன் தன் சக்தியை பூமிக்கு நேரடியாக தந்துவிடுகிறது.  இதனால் புதனின் சுயகாரகத்துவம் நமக்கு கிடைக்கிறது.  ஆனால், இம்மாதிரியான அஸ்தங்க அமைப்பில் புதன் இருக்கும்போது, அது வக்கிரமடைந்துவிடும்.  எனவே அவரது சுயகாரகத்துவங்கள் வக்கிரமடைந்த பலனாகவே நமக்கு கிடைக்கிறது.  இவ்வாறு, புதன் சூரியனோடு இணைந்து, பின்னால் அஸ்தங்கமானாலும், முன்னால் அஸ்தங்கமானாலும், அதன் காரகத்துவங்கள் நமக்கு கிடைத்துக்கொண்டே இருப்பதால் இதை " புதாதித்ய யோகம் ", என்கிறனர்.

இனி சந்திரனுக்கு ஏன் அஸ்தங்க தோஷம் இல்லை? என்பதை பற்றி சிந்திப்போம்.  அஸ்தங்கம், உதயம், சீக்கிரம், சமம், மந்தம், வக்கிரம் ஆகிய கதிகள் எல்லாம் சூரியனை சுற்றி வரும் கிரகங்களுக்கு ஏற்படுகிறன.  சந்திரன் பூமியை சுற்றுவதால் இதற்கு இவ்வகையான எந்தவித கதிகளும் இல்லை.  ஒரு கிரகம் அஸ்தங்கமடையும் போது, இழக்கும் தன் சக்தி, ஒளி ஆகியவற்றை உதயகதியின் போது முழுமையாக பெற்று விடுகிறது.  ஆனால் சந்திரன் அஸ்தங்கம் அடைவதாக சொல்லப்படும் எல்லை விட்டு விலகி வந்தாலும், தன் சக்தி, ஒளி ஆகியவற்றை முழுமையாக உடனே பெற்று விடுவதில்லை.  வளர்பிறை என்ற வகையில் சிறுக, சிறுக ஒளியை பெற்று வருகிறது.  இவ்வாறு முழு ஒளியை அடைந்தவுடன் மீண்டும் தன் ஒளியை தேய்பிறை என்ற வகையில் இழக்க ஆரம்பித்துவிடுகிறது.  ஆகையால் நம் முன்னோர்கள் சந்திரன் சூரியனை நெருங்கவதாலும், விலகுவதாலும், பெறும் ஒளியை வைத்து சுபகிரகம், அசுபகிரகம் என்று அதன் தன்மையை வரையறுத்தார்கள்.  ஆகையால் சந்திரனுக்கு அஸ்தங்க தோஷம் இல்லாமல் போனது.  சந்திரன், புதனைவிட இன்னும், மிக, மிக, மிக, நெருக்கமாக பூமிக்கு அருகில் அமைந்திருப்பதால், அதன் ஸ்தானாதிபத்தியம், மற்றும் காரகத்துவ பலன்களை குறைவின்றி நமக்கு  கொடுத்துவிடுகிறது.  மற்ற கிரகங்களுக்கு, அஸ்தங்கம், வக்கிரம் ஆகிய கதிகளை வைத்து பலனை கணிப்பதுபோல், சந்திரனுக்கு, அதன் சுப, அசுபதன்மையை வைத்து பலன்களை கணிக்க வேண்டும்.  நன்றி.  வணக்கம் நண்பர்களே.................................முற்றும்....................             

Saturday 4 July 2015

அஸ்தங்கம் மற்றும் வக்கிரம் பற்றிய பதிவு இது. [ பாகம் 3.


ம் படைவீட்டம்மா துணை.  ஜோதிட நண்பர்களுக்கு வணக்கம்.  அஸ்தங்கம் மற்றும் வக்கிரம் பற்றிய பதிவு இது.  [ பாகம் 3. ]............பாகம் 2 தொடர்ச்சி.  .............  பாரம்பரிய முறை.  ..................  கிரகங்கள் எல்லாம் தத்தம் பாதையில் முன்னோக்கி சென்று கொண்டிருக்கிறன.  அவை எப்போதும் பின்னோக்கி வருவதில்லை.  சில நேரங்களில், பூமியிலிருந்து பார்க்கும்போது அவை பின்னோக்கி வருவது போல் தோன்றும்.  இது உண்மையல்ல.  இது ஒரு தோற்றம் அவ்வளவே.  இந்த தோற்றத்திற்கு வக்கிரகதி என்று பெயர்.  இதை ஒரு உதாரணத்தின் மூலம் விளக்கலாம்.  தூரத்தில் ஓடிக்கொண்டிருக்கும் ஒருவன் மெதுவாக நகர்ந்து செலவது போல் நமக்கு தோன்றும்.  அதே வேகத்தில் அவன் நம் அருகில் ஓடினால், விரைந்து ஓடுவது போல் இருக்கும்.  இரண்டும் ஒட்டத்தில் ஒரே வேகமே.  இப்போது நாமும் அவனுடன் சேர்ந்து ஒடும் போது, சில நேரங்களில் அவன் நம்மிலிருந்து பின்னடைவது போல் இருக்கும்.  அப்போதும் அவன் ஓட்டம் முன்னோக்கியே இருக்கும்.  அவனுடைய பின்னடைவு ஒரு தோற்றம் அவ்வளவே.  அது போல் கிரகங்களின் ஒட்டங்களில், நமக்கு தோன்றும் ஒரு தோற்றமே வக்கிரகதியாகும்.  வழக்கத்திற்கு மாறாக இப்படி ஒரு தோற்றம் நிகழ்வதால், அந்த கிரகங்கள் தரும் பலன்கள் கூட வழக்கத்திற்கு மாறாக அமைந்திருக்கும். 

வக்கிர கதியில் இருக்கும் கிரகங்களின் பலன்களை கணிப்பதில், கூடுதல் கவனமும், அனுபவமும் தேவை.  திடீர், திடீரென்று அவை தான் பலன் தரவேண்டிய தன்மைகளை மாற்றிக்கொள்ளும்.  ஒரு பைத்தியக்காரனின் செயல்பாடுகளைப்போல் அதன் செயல்பாடுகள் இருக்கும்.  நல்ல பலன் தரப்போகிறது என்று எதிர்பார்க்கும் நேரத்தில், துர்பலன் தரும்.  திடீரென்று நற்பலன் தரும்.  தந்ததை முன்னறிவிப்பில்லாமல் பிடுங்கிக்கொள்ளும்.  பலன்கள் ஒரு நிலையாக இருக்காது.  எனவே பொதுவாக, வக்கிரகதியிலிருக்கும் கிரகம், நீச ஸ்தானத்தில் இருந்தால், உச்சபலன் தரும் என்றும், உச்ச ஸ்தானத்திலிருந்தால் நீச பலன் தரும் என்றும் கொள்ள வேண்டியிருக்கிறது.  ஒரு வக்கிரபுத்தி படைத்த புத்திசாலியை போல் நடந்துகொள்ளும்.  ஒரு உதாரணத்தின் மூலம் இதை சிந்திப்போம். 

ஒரு புத்திசாலியான சிறுவன் ஒருவனால், எதையும் உடனே புரிந்துகொண்டு உடனடியாக செயலாற்ற முடியும்.  எல்லோரும் வியந்து மூக்கின் மேல் விரல் வைக்கும் அளவுக்கு அதிபுத்திசாலியாக அவன் இருப்பான்.  இதுவே அவனுக்கு வக்கிர புத்தியும் சேர்ந்திருந்தால் என்ன செய்வான்?  ஒரு முறை அவனை பார்த்து, " எல்லோரும் வியந்து போய் மூக்கின் விரல் வைக்கும்படி ஒரு செயலை செய்துகாட்டு ", என்று உத்தரவிட்ட போது, உடனே எல்லோரும் வியந்து முக்கின் மேல் விரல் வைக்கும்படி ஒரு செயலை செய்துவிட்டான்.  அவன் யோசித்ததை போல் அவ்வளவு விரைவாக நம்மால் யோசிக்க முடியாது.  அதாவது....................... ஒரு நீண்ட குச்சியை எடுத்தான்.  பக்கத்தில் இருந்த ஒரு சாக்கடை குட்டையை, படு வேகமாக கிண்டி, குழப்பிவிட்டான்.  எல்லோரும் மூக்கில் விரலை வைத்துக்கொண்டனர்.  ...................உங்களுக்கு புரிந்திருக்கும் என்று எண்ணுகிறேன்.  எதிரபாராமல், திடீரென்று அவன் யோசித்த அறிவு வேகத்தை, விவேகத்தில் காட்டியிருந்தால் அவனை பாராட்டியிருக்கலாம்.  வேகம் இருந்தது, விவேகம் இல்லை.  அது போல் பலன் தருவதில் வக்கிர கிரகங்கள் உடனுக்குடன் வேகமாக செயல்படும்.  அதில் விவேகம் இருக்காது.  ஆகவே வக்கிரகதியிலிருக்கும் கிரகங்களின் பலன்களை துல்லியமாக கணித்து சொல்வதில் மிகுந்த கவனமும், அனுபவமும் தேவை என்று முன்கூட்டியே சொல்லியிருக்கிறேன்.  இப்படி வக்கிரகதி கிரகங்களின் பலன்கள் ஒரு நிலையாக இல்லாததால், நம் சாஸ்த்திரங்கள் பெரும்பாலும் வக்கிரகதி பலனை சொல்லாமல் விட்டு விட்டன.  ஸ்ரீவராகிமிகிரரின், ப்ருஹத் ஜாதகத்தில், கிரகயோனி பிரபேதாத்யாயமும், ஜாதக கணிதாமிர்த சாகரம் என்னும் நூலும், வக்கிரகதி பலனை பற்றி ஓரளவு விவரித்துள்ளன. 

குரு வக்கிரகதியில் இருக்கும் காலம் 3 மாதங்களுக்கு அதிகமாகவும், சனி வக்கிரகதியிலிருக்கும் காலம் 4 மாதங்கள் முதல் 5 வரையிலும், ஆகின்றன.  செவ்வாய் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை சுமார் 2 மாதகாலம் வக்கிரமடைகிறது.  செவ்வாய் கிரகத்திற்கு மட்டும் ஸ்தம்பனகதி என்று ஒரு சிறப்பு கதி உண்டு.  அதாவது, செவ்வாய் சில நேரங்களில் 4, 5 மாதங்களானாலும் ஒரே இடத்தில் அசைவற்று நிற்பது போன்ற ஒரு தோற்றமளிக்கும்.  எந்த கிரகமும் ஒரு இடத்தில் நிலையாக நிற்பதில்லை என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.  இந்த பிரபஞ்சத்தில், சூரியன் கூட, தன் சூரிய குடும்பத்தோடு இடம் விட்டு, இடம், நகர்ந்துகொண்டு இருக்கிறது.  இதை பஞ்சாங்க கணிதம் செய்பவர்கள் நன்றாக அறிவார்கள்.  சுக்கிரன் ஒன்றரை வருஷத்திற்கு ஒருமுறை சுமார் 50 நாட்கள் வக்கிர கதியிலிருக்கும்.  புதனின் வக்கிர காலத்தை கணிப்பது ஒரு சவாலாகவே இருக்கிறது.  நன்றி நண்பர்களே.  ..................தொடரும்..................    
v