Monday 2 March 2015

தேவாரமும் ஜோதிடமும் ...............பகுதி 3



அன்புடையோருக்கு வணக்கம்.  கடந்த 24.02.2015 அன்று பெ;ருந்துறையில், திரு Astro Senthil Kumar அவர்களால் நிகழ்த்தப்பெற்ற " ஜோதிட முழக்கம் ", நிகழ்ச்சியில்,, ' தேவாரமும் ஜோதிடமும் ', என்னும் தலைப்பில் நான் உரையாற்றிய உரையின் தொகுப்பு இது.  பகுதி 3. 

தற்காலத்தில் பிரயாணம் வெகு சுலபமாகிவிட்டது.  அக்காலத்தில் பல இடர்பாடுகள் நிறைந்ததாக இருந்தது.  முக்கியமாக பாதைகள் காடுகள் நிறைந்ததாக இருந்தது.  எனவே விலங்குகள் தொல்லைகளை சமாளிக்க வேண்டியிருந்தது.  இந்த தேவாரத்தில் அதன் தாக்கம் நன்றாகவே தெரிகிறது.  முதலில் தேவாரத்தை பார்ப்போம். 

வாள்வரி அதனது ஆடை வரிகோவணத்தர்
  மடவாள்த னோடும் உடனாய்
நாள்மலர் வன்னி கொன்றை நதிசூடிவந்து, என்
  உளமே புகுந்த அதனால்
கோளரி உழுவையோடு கொலையானை, கேழல்
  கொடுநாக மோடு கரடி
ஆளரி நல்ல, நல்ல, அவை நல்ல, நல்ல
  அடியார் அவர்க்கு மிகவே.

இதன் பொருளாவது..........................  வனாந்திரத்தில் அலையும் விலங்குகளான,, புலி, யானை, பன்றி, பாம்பு, கரடி, சிங்கம், ஆகியவை கொடிய மிருகங்களாக இருந்தாலும், அடியார்களை அவை ஒன்றும் செய்யாத. அவைகள் நல்லவைகளாக மாறிவிடும்.  என்பதாகும்.  இங்கே நாம் கொஞ்சம் சிந்திக்க வேண்டியிருக்கிறது.  விலங்குகள் அடியார்களை ஒன்றும் செய்யாது என்பதும், அடியார்கள் அவைகளுக்கெல்லாம் பயந்தவர்களல்ல என்பதும் நாம் நன்றாக அறிந்ததே.  இதற்கு சான்று ஒன்று உள்ளது. 

ஸ்ரீஅப்பர்பெருமானை கல்தூணில் சங்கிலியால் பிணைத்து, கடலில் தூக்கி வீசிவிட்டனர்.  கடல்விலங்குகளான சுறா, திமிங்கிலம், போன்ற கொடிய விலங்குகள் ஸ்ரீஅப்பர்பெருமானை ஒன்றும் செய்யவில்லை.  இதற்கு காரணம் என்ன? என்பதை அவர் தனது தேவாரத்தில் எடுத்துரைக்கிறார்.  .................." கற்றூணைப் பூட்டியோர் கடலில் பாய்ச்சிடினும், நற்றுணையாவது நமசிவாயவே.................? என்பது அந்த தேவாரம்.  இதிலிருந்து ஸ்ரீஅப்பரை போல நமசிவாய மந்திரத்தை துணையாக கொண்ட ஸ்ரீதிருஞானசம்பந்தர், காட்டுவிலங்குகளுக்கு அஞ்சுபவரா என்ன?  மேலும் விலங்குகள், தனக்கே உரித்தான கொடிய தன்மையை மாற்றிக்கொண்டு நல்லவைகளாகி விடாது.  எனவே ஸ்ரீதிருஞானசம்பந்தர் மறைமுகமாக வேறு எதையோ குறிப்பிடுகிறார் என்பது நன்றாக விளங்குகிறது.  மேலும் இந்த தேவாரம் ஸ்ரீஅப்பருக்கு விடையளிக்கும் முகமாக பாடப்பட்டதால், நாள் பார்க்கும் விஷயத்தோடு தொடர்புடையது என்றும் புரிகிறது. 

பஞ்சாங்கம் என்பது பஞ்ச அங்கம் எனப்படும், ஐந்து உறுப்புகளை கொண்டது.  1.  நாள்.  2.  நக்ஷத்திரம்.  3.  திதி.  4.  யோகம்.  3.  கரணம்  ஆகியவை.  இதில் நாம் ஏற்கனவே நாள், நக்ஷத்திரம், ஆகியவை தேவாரத்துடன் ஒப்பிட்டு பார்த்தாகிவிட்டது.  மீதம் இருப்பது திதி, யோகம், கரணம் ஆகியவை.  இதில் யோகம் பிரயாண நாள் பார்க்க பயன்படுவதில்லை.  மீதம் உள்ள திதி, கரணத்தில் தேவாரம் குறிப்பிடும் விலங்குகள் கரணத்தோடு தொடர்புடையவையாகவே இருக்க வேண்டும் என்பதில் சந்தேகமில்லை.  மேலும் இந்த தேவாரம் 'இரட்டுற மொழிதல்' என்னும் இலக்கிய வகையை சார்ந்தது.  அதாவது ஒரு சொல் இருபொருளை தரும் வகையாகும்.  இவ்வகையில் இந்த தேவாரத்தில் இடம் பெற்றுள்ள விலங்குகள் பெயர்களை கரணங்களோடு இணைத்து பார்க்கலாம். 

கோளரி உழுவை = புலி = பாலவ கரணம்
கொலையானை = கரசை கரணம்.
கேழல் = பன்றி = கௌலவ கரணம்.
கொடு நாகம் = நாகவ கரணம்.
ஆளரி = சிங்கம் = பவ கரணம்.

வான்வெளியில் சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடைப்பட்ட இடைவெளி தூரத்தை ' திதி ' என்று பெயரிட்டு நம் முன்னோர்கள் அழைத்தனர்.  இன்னும் சற்று துல்லியமான அளவீடு தேவைப்பட்டதால் அந்த அளவை ' கரணம் ' என்று பெயரிட்டு அழைத்தனர்.  கரணம் என்பது திதியில் பாதியாகும்.  திதிக்களுக்கு எப்படி பலன் வகுக்கப்பட்டதோ, அது போல் கரணங்களுக்கும் பலன்கள் வகுக்கப்பட்டுள்ளன.   பிரயாணத்திற்கு ஆகாத இந்த கரணங்கள் எல்லாம், அடியார்களுக்காக தன் கொடிய தன்மையை மாற்றிக்கொள்ளும் என்பது ஸ்ரீதிருஞானசம்பந்தரின் சத்திய வாக்கு.  ஆயுள் குறைவாக உள்ள ஒருவர், மேற்கண்ட கரணங்கள் கொண்ட நாட்களில் பயணம் புறப்பட்டால் மரணம் நிகழவும் நிறைய வாய்ப்புகள் உண்டு என்று இந்த தேவாரத்தின் மூலம் அறிகிறோம்.  ' கரணம் தப்பினால் மரணம் ', என்று சொல்லப்படும் பொன்மொழி கூட இதன் அடிப்படையில் சொல்லப்படுவதே ஆகும்.  இப்படி மரணத்தை தர வல்ல கரணங்களை, கொலையானை, என்றும் , கொடுநாகம் என்றும் ஸ்ரீதிருஞானசம்பந்தர் வர்ணிக்கிறார் என்பதையும் நாம் சிந்தித்து பார்க்க வேண்டும்.  இதுவரை இந்த தொடரில் நாம் பார்த்த மூன்று தேவாரங்களிலும் உள்ள ஜோதிட செய்திகளை அடுத்த பதிவில் ஒன்றாக இணைத்து தொகுத்து பார்க்கலாம்.  இன்னும் இந்த தொடர் கட்டுரை சம்பந்தமாக சில செய்திகள் உள்ளதால் அவைகளை அடுத்த பதிவில் காண்போம்.  நன்றி ............................தொடரும்.......................




No comments:

Post a Comment