Wednesday 30 December 2015

" திருமண பொருத்த விளக்கப் பதிவு ", ...... பகுதி எண் 4.



ம் படைவீட்டம்மா துணை.  வாசக நண்பர்களுக்கு வணக்கம்.  " திருமண பொருத்த விளக்கப் பதிவு ", ......  பகுதி எண் 4.  ..........  வாசகர்களுக்கான பதிவு.  .....................  " யோனிப்பொருத்தம் ", பற்றி பார்த்துக்கொண்டிருக்கிறோம்.  காதல் இல்லாமல் கூட மனிதனால் இருந்துவிட முடியும்.  காமத்தை தவிர்த்து விட்டு மனிதனால் இருக்க முடியுமா? என்ற சிந்தனையை உங்கள் முன் வைத்துவிட்டு பதிவு தொடர்கிறது.  காமம் யோனிப்பொருதத்தோடு தொடர்புடையது என்பதால் இந்த சிந்தனையை நாம் சிந்திக்க வேண்டியிருக்கிறது.

இளம்தம்பதியர்கள் பிரிகிறார்கள் என்றால், அதற்கு அவர்கள் பல்வேறு காரணங்கள் சொல்லலாம்.  ஆனால் வெளிப்படையாக சொல்ல முடியாத ஒரு காரணம், காமக்குறைபாடாகவும் இருக்கலாம்.  பிரிவினையில் பெரும்பான்மை இந்த காரணத்திற்கு உண்டு.  தாம்பத்திய உறவில் திருப்தியின்மையால் ஒரு தம்பதியர் பிரிகிறார்கள் என்றால், அதன் உண்மையான காரணத்தை ஒரு வழக்கறிஞரால் யூகிக்கமுடியும்.  ஒரு ஜோதிடரால் நிச்சயமாக உறுதியாக தெரிந்து கொள்ள முடியும்..  அதை காட்டிக்கொடுப்பதில் பெரும்பங்கு யோனிப்பொருத்தத்திற்கு உண்டு.  ஒருவருக்கு ஒருவர் என்ற நீதியை மீறி, ஒரு குடும்பத்தில் முறை தவறும் வாழ்க்கை உருவாகிறது என்றால், அதற்கு முக்கிய காரணம் இந்த யோனிப்பொருத்தமின்மையே.  விவாஹதசவித பொருத்தத்தில் எல்லாபொருத்தங்களும் பொருந்தி, இந்த ஒரு பொருத்த்தம் மட்டும் இல்லையென்றால் கூட அந்த இரு ஜாதகங்களையும் இணைக்ககூடாது என்று மிகவும் கண்டிப்பாக நமது சாஸ்த்திரங்கள் சொல்லியிருக்கிறன.  இந்த பொருத்தத்திற்கு விதிவிலக்குகள் எதுவும் சொல்லப்படாததிலிருந்தே இதன் முக்கியத்துவத்தை நம்மால் உணர முடியும்.  தாம்பத்திய உறவை விரும்பும் உணர்வின் அளவு, ஒருவருக்கு எந்த அளவுக்கு இருக்கிறதோ, அதே அளவு கொண்ட ஒரு துணையை இந்த பொருத்தத்தின் மூலம் தேர்வு செய்து இணைக்கமுடிகிறது.  ஏறுக்குமாறாக அமையும்போது, ஒருவர் வேறொருவரை தேடுகிறார்.  எனவே இந்த விஷயத்தில் இருவரும் எப்படி? என்று மறைமுகமாக நமக்கு உணர்த்த, நமது முன்னோர்கள், மிருகங்களை அடையாளம் காட்டி பொருத்த சாஸ்த்திரத்தை அமைத்திருக்கிறார்கள்.  அதை கவனமுடன் பார்த்து இணைப்பதே சாலச்சிறந்தது.

வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள்:  ......................  இனி ஒரு சில ஜோதிட குறிப்புகளோடு இந்த பதிவு தொடரும்.  அந்த குறிப்புகளையெல்லாம், உங்கள் ஜாதகத்துடனோ அல்லது மற்றவர்கள் ஜாதகத்துடனோ ஒப்பிட்டு பார்க்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்..  அதுபோல் இதன் சம்பந்தமாக ஜோதிட குறிப்புகளை கொடுத்து, ஜோதிட பலனையும் தயவுசெய்து கேட்க வேண்டாம்.  .............................  சப்தமாதிபதி, லாபத்தில், அல்லது திரிதியத்தில் இருந்தால், அந்த ஜாதகருக்கு காம உணர்வுகள் அதிகமாக இருக்கும்.  அதோடு காம காரகன் சுக்கிரனும் லாபத்திலோ அல்லது திரிதியத்திலோ இருந்தால், வேறு வினையே வேண்டாம்.  இத்தகையோர்கள் ஒன்றிருக்கும்போதே இன்னொன்றையும் நாடுவார்கள்.  சிலர் வாழ்க்கையில் கள்ளத்தொடர்பு, சின்னவீடு ஆகியன உருவாவதற்கும் காரணம் இதுவாக அமைந்துவிடுகிறது.  நிம்மதியான குடும்பத்தில் புயலை கிளப்பிவிட்டுவிடுகிறது.  இதை தவிர்க்க பொருத்தம் பார்க்கும்போதே ஜோதிடர்களால் நல்ல ஆலோசனைகளை வழங்கமுடியும்.  சம்பந்தப்பட்டவர்களுக்கு பரிகாரவழிபாடுகளை செய்ய சொல்வதன் மூலம், தவறான உணர்வுகளை கட்டுப்படுத்த முடியும் .  இல்லையென்றால், இவ்வகையான கிரக அமைப்பிற்கு நம் முன்னோர்கள் பரிகாரவழிபாடுகளை தேவையின்றி சொல்லியிருக்க மாட்டார்கள்.  மேலும், ஆணுக்கு ஆண் மிருகம் அமைந்திருந்தால், பொருத்தும் பெண்ணின் ஜாதகத்தில் பகையில்லாத பெண் மிருகம் இருக்குமாறு உள்ள ஜாதகத்தை பொருத்தினால், மேற்கண்ட விபரீதங்கள் நடக்காது.

மேற்கண்ட கிரக அமைப்பு உடைய ஆண்கள், முற்காலத்தில், வெளிப்படையாகவே ஆசைநாயகியோடு தொடர்பு கொண்டனர்.  மேலும் பல திருமணங்களையும் செய்துகொண்டனர்.  இக்காலத்தில் இத்தகைய நடவடிக்கைகளுக்கு ஆதரவில்லை.  இது வரவேற்புக்குரியதே.  ஆனால், விவாகரத்து, உரியவரை விட்டுவிட்டு அடுத்தவரோடு வாழ்தல், போன்ற திசைகளில் விவகாரம் திரும்பிவிட்டது.  பெண்களுக்கும் இதே மாதிரியான, கிரக அமைப்பு இருப்பதுண்டு.  அக்காலத்தில், வழிபடும் தெய்வத்தை விட கணவனே கண்கண்ட தெய்வம் என்றும், பூஜை புனஸ்காரங்கள், விரதாதி அனுஷ்டானங்கள் என்றும், ஆண்களைவிட பெணகளுக்கு அதிகமாக கற்பிக்கப்பட்டது.  இவையெல்லாம், தவறான உணர்வுகளை மறக்கடித்து,  திசை திருப்பி வைத்தன என்றால் அது மிகையில்லை.  இப்போது மாற்றங்கள் நிறைய ஏற்பட்டுவிட்டன.  அதற்கேற்றாற் போல், யோனிப்பொருத்தத்திலும், மிக அதிக கவனம் செலுத்தி, நல்ல இல்லறம் நடத்தும் தம்பதியர்களை இணைக்கும் பொறுப்பு ஜோதிடர்களுக்கு மிக அதிகமாகவே இருக்கிறது.  எனவே இந்த தொடரின் முதல் பதிவில் சொல்லப்பட்டது போல், திருமண பொருத்த அட்டவணைகளை முழுமையாக நம்பிவிட வேண்டாம். : .......................  தொடரும் ...................  நன்றி. ..................  வணக்கம்.             

விவாஹதசவித பொருத்த விளக்க பதிவு . பகுதி 3.



ம் படைவீட்டம்மா துணை.  வாசகர்களுக்கு வணக்கம்.  ...................  விவாஹதசவித பொருத்த விளக்க பதிவு  ......................  பகுதி 3.  ...................  பாரம்பரிய முறை.  ........................  கணப்பொருத்தம் பற்றி பார்த்துக்கொண்டிருக்கிறோம். 

பொதுவாகவே ராக்ஷஸர்கள், மனிதர்களோடும், தேவர்களோடும் ஒத்துப்போனதில்ல.  இதை அடிப்படையாக கொண்டே விவாஹதசவித பொருத்த சாஸ்த்திரமும் வகுக்கப்பட்டிருக்கிறது போலும்.  மேலுலகில் கூட தேவகணங்கள் உண்டு.  மனுஷகனங்களோ, ராக்ஷஸ்கணங்களோ கிடையாது.  பூதகனங்களை சேர்த்துக்கொண்டவர்கள், மனுஷ, ராக்ஷஸகணங்களை தள்ளுபடி செய்துவிட்டார்கள்.  இந்த இருவரைவிட பூதங்கள் பரவாயில்லை போலிருக்கிறது.  கைலாயத்தை காவல் காப்பவை பூதகணங்கள்.  இவர்களுக்கு தலைவர் ஸ்ரீவினாயகப்பெருமான்.  தேவகணங்களுக்கு தலைவர் இந்திரன்.  மனிதர்களுக்கும், ராக்ஷஸர்களுக்கும் தலைவர்.............................  ????.  அடித்துக்கொள்ளுங்கள் என்று பூமியில் தள்ளப்பட்டுவிட்டார்கள்.  இரு ராக்ஷஸர்களிடையே மிக எளிதாக விவகாரத்தை கிளப்பிவிட்டுவிடலாம்.  ஒருவருக்கொருவர் ஒத்து போகமாட்டார்கள்.  இந்த பலஹீனத்தை பயன்படுத்தி, சும்பன், நிசும்பன் என்ற இரு ராக்ஷஸர்களிடையே வெகு எளிதாக பகைமை மூட்டி, அவர்களை அழித்தாள் ஸ்ரீபராசக்தி.  விவாகதசவித பொருத்தமும் இதையே அடிப்படையாக கொண்டது.  இரு ராக்ஷஸகணங்களை விதிவிலக்குகள் பாராமல் இணைத்தால், அவர்களுக்குள் தானாகவே காரணமின்றி பகைமை வளர்ந்து அழிந்து போவார்கள்.  தேவகணமும், ராக்ஷஸகணமும் இணைந்தால் என்னாகும் என்பதற்கு சிறந்த உதாரணம் ராவணன்.  ராவணின் தந்தை விஸ்ரவசு எனும் முனிவர் [ தேவகணம் ]  தாய் கைகசி எனும் அரக்கி. [ ராக்ஷஸகணம் [.  இருவரும் இணைந்து வாழ்க்கை நடத்தவே இல்லை.  இணைந்தார்கள்.  அவ்வளவுதான்.  விளைவு  ............   ராவணன் என்ற ராக்ஷஸகண புத்ரபாக்கியம்.  இவனால்தான் இந்த பூமிக்கு செய்வினை தோஷமும், ஏவல், பில்லி, சூனியங்கள் வந்தன.  தேவர்களுக்கும், மனிதர்களுக்கும் எதிராக இவை உருவாக்கப்பட்டன.  இவற்றை பயன்படுத்துபவர்களும், பார்வைக்கு மனிதனாக இருந்தாலும், ராக்ஷஸகணத்தவராகவே இருப்பார்கள்.  எனவே ரக்ஷஸகணத்தோடு மனுஷகணமும், தேவகணமும் சேராது என்கிறது சாஸ்த்திரம்.

கணப்பொருத்தம் பார்த்து இணைப்பதிலும் சில விதிவிலக்குகள் உள்ளன.  அவற்றை ஜோதிடர்கள் அறிவார்கள்.  மேலும் இதிலுள்ள சில சுவாரஸ்யங்களையும் ஜோதிடர்கள் ரசிப்பதுண்டு.  இரு ஜாதகர்களுக்கும், ராசியதிபதிகள் ஒரே கிரகமாகவோ, அல்லது இரு ஜாதகங்களின் ராசியதிபதிகள் நட்பாகவோ இருந்தால் கணப்பொருத்தம் உண்டு.  பேதம் பார்க்க வேண்டியதில்லை.  ராசியதிபதிகள் ஒருவரே என்றால், அவர்கள் பெரும்பாலும், இரு ஜாதகங்களுக்கிடையே ராசிகள் ஒரே ராசியாக இருக்கும்.  சில் நேரங்களில் இருவரின் ஸ்தானங்கள் ஒன்றுகொன்று அசுபமாகவும் அமைந்துவிடுவதுண்டு..  ஒரு சுபத்தை அசுபங்கள் தருகிறன என்றால் அது விசித்திரம்தான்.  மேஷத்திற்கும், விருச்சிகத்திற்கும் அதிபதி ஒருவரே.  செவ்வாயாகும்.  இவை ஒன்றுக்கொண்டு சஷ்டாஷ்டகம்.  இருப்பினும் கணப்பொருத்தம் உண்டு.  அது போல் மகரதிற்கும், கும்பத்திற்கும் அதிபதி ஒருவரே.  அது சனியாகும்.  இந்த ஸ்தானங்கள் ஒன்றுகொன்று த்வித்வாதசம்.  இருந்தாலும், கணப்பொருத்தம் உண்டு..  தனி ஜாதக பலனில் இவை அசுபபலன் தரும்.  பொருத்தத்தில் சுபத்தை தருகிறது.  அதுபோல் இரு ஜாதக ஸ்தானாதிபதிகள் நட்பாக இருக்க வேண்டுமென்றால், அவர்கள் பெரும்பாலும் திரிகோணாதிபதிகளாக இருப்பர்.  இப்படி அசுபஸ்தானாதிபதிகளும், திரிகோணாதிபதிகளும் கணப்பொருத்தம் தந்து விடுகிறனர்.  அடுத்து கேந்திரத்தின் சார்பில், இரு ஜாதக ஸ்தானங்கள் ஒன்றுகொன்று சப்தமமாக இருந்தாலும் கணப்பொருத்தம் உண்டு.

04.  யோனிப்பொருத்தம்:  ......................  ஆண், பெண் இருவருக்குமிடையே இருக்கும் சிற்றின்ப வேட்கையின் அளவை தெரிந்துகொள்ள உதவும் முக்கியமான பொருத்தமிது.  இருவரும் தாம்பத்திய உறவு மேற்கொள்ளும்போது, அவ்விருவரிடையே சம அளவு திருப்தி உண்டாகுமா? என்பதற்கும் இப்பொருத்தமே விடை சொல்கிறது.  இப்பொருத்தம் பொருந்தாத போது, அதனால் இருவரிடயே ஏற்படும் வெறுப்புகள் பற்றியும், இதனால் மறைமுகமாக சமுதாயமும் பாதிக்கப்படுவதை பற்றியும், ராசிக்கட்டத்தில் தொடர்புடைய ஸ்தானங்கள் பற்றியும் அடுத்த பதிவில் தொடர்ந்து பார்ப்போம்:  ....................................  தொடரும்....................  நன்றி.  வணக்கம்.         

Monday 21 December 2015

விவாஹ தசவித பொருத்த விளக்கம். ............... 2 ஆவது பகுதி:



ம் படைவீட்டம்மா துணை.  அனைவருக்கும் வணக்கம்.  .....................  விவாஹ தசவித பொருத்த விளக்கம்.  ...............  2 ஆவது பகுதி:  .....................  பாரம்பரிய முறை.  ................... 02.  ரஜ்ஜுப்பொருத்தம்:  .................  ஜாதக அலங்கார பாடலில் விவாஹதசவித பொருத்தம் பார்க்கும்போது, முதலில் ரஜ்ஜுப்பொருத்தத்தை பார்க்க வேண்டும் என்று அறிவுருத்தப்பட்டுள்ளது.  இது மணப்பெண்ணின் மாங்கல்ய பலத்தை குறிப்பிடுவதாகும்.  ரஜ்ஜு என்றால் கயிறு, என்று பொருள்.  இங்கு இது மாங்கல்ய சரடை குறிக்கிறது.  ஒரு பெண்ணுக்கு மாங்கல்ய பலம் முக்கியம்.  இது பலமாக இருந்தால், கணவனுக்கு வரும் கண்டத்திலிருந்து அவரை காப்பாற்றும்.  அத்துடன் தினப்பொருத்தமும் இருந்தால் ஆயுளுக்கும் பங்கம் வராமல் இருக்கும்.  ரஜ்ஜுப்பொருத்தம் பார்ப்பதில் பல விதிவிலக்குகள் உள்ளன.  ராசியதிபதி பொருத்தம் இருப்பின் ரஜ்ஜு பார்க்க வேண்டியதில்லை.  அதுபோல், ஒரே ரஜ்ஜுவாக இருப்பினும், நக்ஷத்திராதிபர்கள் வேறுவேறாக இருந்தால் ரஜ்ஜு பார்க்க வேண்டியதில்லை.  இந்த விதிவிலக்குகளின்படி, ரஜ்ஜு பொருத்தம் தேவையில்லை என்று அந்த பொருத்தம் தள்ளுபடி செய்யப்பட்ட, ரஜ்ஜு பொருத்தம் இல்லாத தம்பதியர்கள் பலர் வெற்றிகரமாக வாழ்க்கையை நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.

ஜாதக அலங்கார பாடலின்படி அக்காலத்தில் ரஜ்ஜுப்பொருத்தத்திற்கு முதலிடம் தந்தனர்.  பெண்ணுக்கு கணவனும், அவன் சூட்டும் மாங்கல்யமும் மட்டுமே முக்கியமாக கருதப்பட்டது.  விதிவசமாக எவ்வளவு கருத்து வேற்றுமை வந்தாலும், அக்காலத்து பெண்கள் மாங்கல்யத்திற்கு முக்கியத்துவம் தந்து எல்லாவற்றையும் சகித்துக்கொண்டனர்.  பெண்ணுக்கு மறுமணம் கண்டிப்பாக மறுக்கப்பட்டது.  பெண் சுயமாக நிதி சேர்த்து, சொந்தக்காலில் நிற்பது மிகவும் அரிதாக இருந்தது.  இதனால் அவள் கணவணை சார்ந்தே வாழ வேண்டியிருந்தது.  வாழ்க்கையில் தனக்கு கணவன் ஒருவனே என்பதால், அந்த ஒருவன் நிலையாக இருக்க வேண்டும் என்பதற்காக மாங்கல்ய பலத்தை குறிக்கும் ரஜ்ஜுப்பொருத்தத்திற்கு முதலிடம் இருந்து வந்தது.  இக்காலத்தில் கணவனை இழந்தும், பிரிந்தும் வாழும் பெண்களின் எண்ணிக்கை பெருகி வ்ருவதை பார்த்தால், ரஜ்ஜுப்பொருத்தத்திற்கு, தற்போது மரியாதை போய்விட்டது என்றே கருத தோன்றுகிறது.  ஜோதிடர்களில் சிலர், விவாஹதசவித பொருத்தமாகிய மொத்த எண்ணிக்கை 10ல் ரஜ்ஜுபொருத்தம், ராசியதிபதி பொருத்தம், தவிர மற்ற 8 பொருத்தங்கள் இருந்தால், 2 தானே குறைகிறது என்று எண்ணிக்கைக்கு முன்னுரிமை தந்து ஜாதகத்தை பொருத்திவிடுகிறனர்.

ஜோதிடரீதியாக சிந்தித்தால், ஒரு விசித்திரமான கணிப்பு இந்த ரஜ்ஜுபொருத்தத்தில் இருப்பதை காண முடிகிறது.  ஒவ்வொரு நக்ஷத்திரத்திற்கும் இரு அதிபதிகள் உண்டு.  இந்த இருவரிடையே கடும் போட்டி நிலவுகிறது.  ஒருவர் நக்ஷத்திராதிபதி.  இன்னொருவர் ராசியாதிபதி.  பொருத்தம் பார்க்கப்படும் இரு ஜாதகங்களின் நக்ஷத்திரங்களுக்கு நக்ஷத்திராதிபதி ஒருவராகவே இருந்தால் ரஜ்ஜுபொருத்தம் இல்லை.  ஆனால் இதுவே ராசியதிபதி ஒருவராகவே இருந்தால் ரஜ்ஜுபொருத்த்ம உண்டு.  நக்ஷத்திரப்பட்டியலை வைத்துக்கொண்டு சரி பார்த்தால் இது உண்மையாகவே இருக்கிறது.  நல்ல வேளை ராசியதிபதி பொருத்தம் ஒன்று இருப்பதைப்போல் நக்ஷத்திராதிபதி பொருத்தம் என்ற ஒன்று இல்லை.

03.  கணப்பொருத்தம்: ..............................  இது பொருத்தம் பார்க்ககூடிய இரு ஜாதகர்களின் மன இயல்பை தெரிந்துகொள்ள உதவுவது.  மனிதர்களில் தெய்வகுணம், மிருககுணம், இயல்பான மனிதகுணம் கொண்ட 3 வகையினர் உள்ளனர்.  அவர்களை அடையாளம் காட்டுவது இந்த கணம் என்ற பிரிவு.  தெய்வகுண மன இயல்பு கொண்டவர்கள் தேவகணம்.  மிருககுண மன இயல்பு கொண்டவர்கள் ராக்ஷஸ கணம்.  இரண்டுக்கும் இடையே சாதாரண மனிதகுண இயல்பு கொண்டவர்கள் மனித கணம்.  மொத்தமுள்ள 27 நக்ஷத்திரங்களையும் 9, 9 ஆக பிரித்து, ஒவ்வொரு கணத்துக்கும் ஒரு பிரிவை உரித்தாக்கியிருக்கிறது நமது சாஸ்த்திரம்.  { இதில், மிருகசீரிஷம், மகம், ஸ்வாதி, அனுஷம் ஆகியவை சிறப்பு நக்ஷத்திரங்கள் என்பதால், அவைகளை கணப்பட்டியலிலிருந்து நீக்கிவிடலாம்.  இந்த நக்ஷத்திரங்களின் படி கணம் கொண்ட ஜாதகரகள் மற்ற இரு கணங்களோடும் நன்றாக ஒத்துப்போவார்கள். }  இதன்படி தேவகணம் எனும் தெய்வகுண இயல்பு கொண்ட தேவகணத்தினர், மிருககுண இயல்பு கொண்ட ராக்ஷஸ கண ஜாதகரோடு குடும்பம் நடத்த இயலாது.  இவ்விரு குண இயல்புகளும் ஒத்துப்போகாது.  அதுபோல், மனிதகுண இயல்பு கொண்ட மனிதகண ஜாதகர்கள், ராக்ஷஸகண ஜாதகர்களோடு குடும்பம் நடத்துவதும் அரிதே.  இவ்வாறு ஒன்றோடொன்றை தொடர்பு படுத்திப்பார்த்து, ஜாதகர்களை இணைப்பதே கணப்பொருத்தமாகும்.  இதை பற்றி இன்னும் விரிவாக, வாசகர்களுக்காகவும், ஜோதிடர்களுக்காவும், சில சுவாரஸ்யமான செய்திகளை அடுத்த பதிவில் பகிர்ந்துகொள்ள இருக்கிறேன்.  நன்றி.  வணக்கம்.:  ..............................  தொடரும்  :.................................         

விவாஹ தசவித பொருத்த விளக்கம். ........................ வாசகர்களுக்கான பதிவு...



ம் படைவீட்டம்மா துணை.  அனைவருக்கும் வணக்கம்.  .....................  விவாஹ தசவித பொருத்த விளக்கம்.  ........................  வாசகர்களுக்கான பதிவு.............  பாரம்பரிய முறை.  ...................  ஜாதக அலங்காரத்தில் உள்ள 12 ஆவது பாடலை அடிப்படையாக கொண்ட பதிவு இது.  இது வாசகர்களுக்கு விழிப்புணர்வூட்ட வேண்டும் என்று பதிவு செய்யப்பட்டாலும், ஆங்காங்கே ஜோதிடர்களுக்கான தகவல்களும் இணைக்கப்பட்டுள்ளது.  முதலில் வாசகர்களின் சிந்தனைக்கு ஒரு கருத்து.  மொத்தம் 27 நக்ஷத்திரங்கள்.  ஒரு நக்ஷத்திரம் இன்னொரு நக்ஷத்திரத்தோடு பொருந்துகிறதா? என அறிய, விவாஹதசவித பொருத்த விதிகளான 10 ஐயும் ஒப்பிட வேண்டும்.  ஒரு நக்ஷத்திரத்திற்கு பொருத்தம் பார்க்க மட்டும், 10 விதிகளுடன் ஒப்பிட வேண்டும்.  10 ஒப்பீடுகள் கொண்ட அந்த ஒரு நக்ஷத்திரம் 23 நக்ஷத்திரங்களுடனும் பொருந்துகிறதா? என அறிய 230 ஒப்பீடுகளை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது.  மிருகசீரிஷம், மகம், ஸ்வாதி, அனுஷம் ஆகிய 4 நக்ஷத்திரங்களுக்கு விவாஹதசவித பொருத்தம் மட்டும் பார்க்க வேண்டியதில்லை என்பதால் அவை தள்ளுபடி செய்யப்பட்டு மீதம் உள்ள 23 நக்ஷத்திரங்கள் கணக்கிடப்பட்டுள்ளன.  ஒரு நக்ஷத்திரத்திற்கு 230 ஒப்பீடுகள் என்றால் 23 நக்ஷத்திரங்களுக்கும் 5,290 ஒப்பீடுகளை மேற்கொள்ள வேண்டும்.  இவ்வளவும் செய்தால்தான் ஒரு முழுமையான, சாஸ்த்திரரீதியான பிழையில்லாத ஒரு திருமண அட்டவணையை பெற முடியும்.  வெளியடப்ப்டும் அட்டவணைகளில் இத்தனை ஒப்பீடுகளும் மேற்கொள்ளப்படுகிறதா? என்றால் அது சந்தேகத்திற்கிடமாகவே இருக்கிறது.  என் அனுபவத்தில் பார்த்த அட்டவணைகளில் இத்தனை ஒப்பீடுகளையும் முறையாக மேற்கொண்ட அட்டவணையை பார்த்ததில்லை.  பொருத்தம் பார்ப்பதில் இவ்வளவு விஷயங்கள் உள்ளனவா! என்று வாசகர்கள் ஆச்சரியப்படக்கூடும்.  அதனை விளக்குமுகமாக இந்த பதிவு அமைகிறது.  இது தொடர் பதிவாக அமையும்.

மேலும் இம்மாதிரியான அட்டவணைகளின் தாராளமான விற்பனைக்கு காரணமென்ன? ...................  இதை கட்டுப்படுத்த ஜோதிடர்கள் என்ன செய்யலாம்?.  ;;;;;;  யோசிக்க வேண்டியுள்ளது.  ஒரு வாடிக்கையாளர் பொருத்தம் பார்க்க, தன் மகன் / மகள் ஜாதகத்தோடு கிட்டத்தட்ட 10 ஜாதகம் தருகிறார் என்றால், அந்த 10ம் பொருந்தாமல் போகும்போது, சில ஜோதிடர்கள் 10 ஜாதகத்திற்கான தொகையையும் வாடிக்கையாளரிடமிருந்து பெற்று [ கறந்து ] விடுகிறார்கள்.  ஒவ்வொரு முறையும் இவ்வாறு செலவு செய்து அதிக தொகை இழக்க அவரால் முடியாமல் போகிறது.  எனவே சுருக்கமான செலவில் கிடைக்ககூடிய அட்டவணையை அவர் நாடுகிறார்.  பொருந்தக்கூடிய ஜாதகத்திற்கு மட்டும் ஜோதிடர் தொகை பெற்றால், வரும் வாடிக்கையாளர் திருப்தி அடைவதோடு, அவர் கவனம் அட்டவணை பக்கம் போகாது.  எந்த ஜாதகமும் பொருந்தவில்லை என்றால் ஒரு குறைந்தபட்ச தொகையை தட்சிணையாக பெறலாம்.  அத்துடன் பொருத்தம் பார்ப்பதிலும், தான் நேர்மையான திறமைசாலி என்று வாடிக்கையாளரை நம்பவைக்கும் ஒரு சிரமமான கடமை ஜோதிடருக்கு ஏற்படுகிறது.  இவைகள் நடந்தேறினால் அட்டவணைகளின் விற்பனை கட்டுப்படுத்தப்படுவதோடு, ஜாதகர்கள் அதை நம்பி ஏமாந்து, வாழ்க்கை இழக்கும் நிலையும் குறையும்.  ஜோதிடரகள் பரிசீலிக்க வேண்டுகிறேன்.  இனி விவாஹதசவித பொருத்த விதிகளின் பெயர்களையும்,, அதன் காரணப்பொருளையும் பார்க்கலாம்.

01.  தினப்பொருதம்:  ...............  இருவரின் ஜாதகங்களை தினப்பொருத்தப்படி பொருத்தினால, அந்த இருவரின் ஆயுள் மற்றும் உடல் ஆரோக்கியம் திருப்தியாக உள்லது என்று பொருள்.  இது பொருந்தவில்லை என்றால், அந்த ஜாதகங்களை இணைக்க்கூடாது என்றும், மற்ற பொருத்தங்களை பார்க்க வேண்டிய அவசியமில்லை என்றும் சாஸ்த்திரம் சொல்கிறது.  எந்தவொரு காரியத்திற்காகவும், பொதுவாக ஜாதகம் பார்க்கத்தொடங்கினால், முதலில் ஜாதகரின் ஆயுளை கணிக்க வேண்டும் என்று ஜாதக அலங்கார பாடல் சொல்கிறது.  ஒரு ஜாதகத்தில் பல யோகங்கள் இருக்கலாம்.  அந்த யோகங்கள் அந்தந்த தசாபுக்தி வரும்போது செயல்படும்.  அதுவரை ஜாதகர் ஆயுள் இருக்க வேண்டும்.  யோகங்கள் இருந்தென்ன பயன்.  அதை அனுபவிக்க ஆயுள் வேண்டுமே!  ஆகவே முதலில் ஆயுளை பார்க்கச்சொல்கிறது சாஸ்த்திரம்.  ஆகவே விவாஹதசவித பொருத்தத்திலும் இணையும் தமபதியரின் ஆயுளையும் ஆரோக்கியத்தையும்  தெரிவிக்கும் " தினப்பொருத்தம் ", முதலாவதாக வைக்கப்பட்டுள்ளது.  : ............................ :  தொடரும்.  ..................

   
v