Friday 6 March 2015

" விபத்துகளும் திரேக்காணமும், " Part 1.



ஓம் நமசிவாய.  அனைவருக்கும் வணக்கம். ,,,,,,,,,,,,,,,,,,, " விபத்துகளும் திரேக்காணமும், " ,,,,,,,,,,,,,,,,,,,,    பாரம்பரிய முறையிலான பதிவு.  பகுதி 1. ஒருவர் ஜாதகத்தில் கடுமையான விபத்து எப்போது நடக்கும்? எதனால் நடக்கும்? பாதிக்கப்படும் உறுப்பு, ஆகியவைகளை பற்றிய விபரங்களை தெரிந்துகொள்ளும்  வழிகாட்டுதலாக அமையும் பதிவு இது. 

ஒருவர் ஜாதகத்தில் அஷ்டமசனி, விரயசனி, ஜென்மசனி, அஷ்டமராகு, அஷ்டமகேது, அஷ்டம செவ்வாய், ஆகியவை கோசரப்படி நடப்பிலிருந்தால் அவர்கள் மட்டுமே சற்று முன்னெச்சரிக்கையாக இருந்து, விபத்து பற்றி அறிய ஜோதிடரை அணுக வேண்டும்.  மற்றோர் இதை பற்றி கவலை கொள்ள வேண்டாம்.  கடுமையான விபத்து அவ்வளவு எளிதில் நடந்துவிடுவதில்லை.  ஒருவருக்கு கடுமையான விபத்து நடக்க வேண்டும் என்ற விதியை மேற்கண்ட கோசர கிரகங்கள் மட்டும் முடிவெடுப்பதில்லை.  இவைகளுடன் அஷ்டமத்தோடு தொடர்புடைய கிரகங்களின் தசாபுக்திக்காலம் நடைமுறைக்கு வந்து  இணையும்போதுதான் கடுமையான விபத்து நடக்கிறது.  அதுவும் தசாபுக்தி கிரகங்கள் பாப கிரகங்களாகவோ, துர்ஸ்தான கிரகங்களாகவோ அமைந்துவிட்டால் விபத்தின் அளவீடு பெரிய இழப்பாக இருக்கும்.  இந்த தசாபுக்தி கிரகங்கள் சுபசம்பந்தம் பெற்றால் விபத்தின் தன்மையில் சற்று மாறுபாடு இருக்கும். 

இதில் கிரகங்களுக்குரிய உறுப்புகளை அடிப்படையாக கொண்டு, ஜோதிடர்கள் எச்சரிப்பதுண்டு.  உதாரனத்திற்கு, கோசரத்தில் அஷ்டம ராகு சுபர் பார்வை பெறாமல், பகை ஸ்தானத்திலிருக்க, ஜனன ஜாதகத்தில் சுபர் பார்வை பெறாமல் அஷ்டமத்தில் சனி நீசம் பெற்றிருக்க அதன் தசாபுக்தி நடைமுறைக்கு வந்தால் முழங்கால் மூட்டு, அல்லது இடுப்பு எலும்பில் கடுமையாக அடிபட்டு, அதன் ஜவ்வு பிசகி சில காலம் செயல்பட முடியாத அளவுக்கு கடுமையான விபத்தை ஏற்படுத்தி விடும்.  இங்கு சனியின் காரகத்துவம் எலும்பின் இணைப்புகள் என்பதும், ராகுவின் காரகத்துவம் உடல் தசை நார் எனப்படும் ஜவ்வு என்பதையும் கவனித்து பார்க்க வேண்டும்.  அதுபோல் காலபுருஷ தத்துவப்படி அஷ்டமஸ்தானம், இடுப்புக்கும், தொடைக்கும் இடைப்பட்ட பாகமாகும்.  எனவே இதையும் இணைத்து, சில ஜோதிடர்கள் உடலில் விபத்து ஏற்பட இருக்கும் பாகத்தை குறித்து சொல்வதுண்டு.  ஆனால் மேற்கண்ட கிரக அமைப்பு கொண்ட எல்லோருக்கும் இது மிக சரியாக ஒத்து வருவதில்லை.  விபத்துக்காலம் சரியாக இருந்தாலும், விபத்து ஏற்படும் உடல் பகுதி மாறிவிடுகிறது.  இதையும் துல்லியமாக சொல்லும் ஜோதிடர்கள் திரேக்காணத்தை பயன்படுத்துகிறனர் என்றால் அது மிகையில்லை.  உண்மை.

திரேக்காணம் என்பது, நவாம்சத்தை போல வர்கசக்கரங்களில் ஒன்று.  ராசிசக்கரத்தை துல்லியமாக பகுத்து காண்பதே வர்கசக்கரங்களாகும்.  நாம் துல்லியத்தை நோக்கி செல்ல, செல்ல, ஜாதக கணிதமும் மிக துல்லியமாக இருக்க வேண்டியது அவசியம்.  தற்காலத்தில் கணிணியின் மென்பொருட்கள், ஜாதகத்தை தவறில்லாமல், விரைவாக கணிப்பதோடு, முக்கியமான வர்க்கசக்கரங்களையும் கணித்து தருகிறது.  ஆனால், லக்னசந்தி, ராசிசந்தி, நக்ஷத்திரசந்தி, ஸ்திரிபுருஷ காலங்கள், மற்றும் கொடுக்கப்பட்ட பிறந்த நேரம் சரியான நேரமா? என்ற அம்சங்களையெல்லாம் மென்பொருட்கள் சோதித்து பார்ப்பதில்லை.  எனவே இவைகளில் பிழை நேர்ந்தால், துல்லியத்தை நோக்கி செல்லும் வர்க்கசக்கர கணிப்பிலும் பிழை ஏற்பட்டுவிடும்.  இப்படி பிழையான வர்க்கசக்கரங்களை வைத்து பலன் சொன்னால் அது முற்றிலும் பிழையாகி விடும் என்பதை ஜோதிடர்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.  ஆகவே ஜாதக கணிதத்தோடு, வர்க்கசக்கர கணிதங்களையும், பிழையின்றி கணிக்க நாம் தெரிந்து வைத்துகொண்டிருப்பது நல்லது.  முற்காலத்தில் இவ்வகையான பலனை துல்லியமாக அறிய, ராசி, நவாம்ச சக்கரங்களோடு, திரேக்காணத்தையும் கணித்து எழுதி தருவதும் வழக்கமாக இருந்ததை சிந்தித்து பார்த்தால், திரேக்காணம் எவ்வளவு முக்கியமானது? என்பதை நாம் அறிந்துகொள்ளலாம்.  எனவே திரேக்காணத்தை பற்றி ஆதிமுதல் அந்தம் வரையிலான முழுவிபரங்களை, நாம் பார்க்கப்பபோவதில்லை என்றாலும் நமக்கு தேவையான அளவு, விபரங்களை அடுத்த பதிவில் பார்ப்போம்.  .....................தொடரும்........................ .  

1 comment:

  1. உங்களின் பணியை வணங்குகிறேன். விபத்து என்றாலே அச்சமாக இருக்கிறது. அதை தவிர்க்க உங்கள் பணி உதவுகிறது. மேலும் உங்கள் பணி சிறப்படைய வேண்டுகிறேன். அரைகுறையாக படித்து புரிந்துகொள்ள முயல்கிறேன். என் வாழ்கையில் நடைபெற்ற விபத்தை பொருத்தி பார்க்க விருப்பம்.உங்கள் ஆசீர்வாதம் வேண்டுகிறேன்.நன்றி.

    ReplyDelete