Wednesday 26 August 2015

" செய்வினை தோஷம் ", 4 ஆவது கடைசி பகுதி.



ம் படைவீட்டம்மா துணை.  அனைவருக்கும் வணக்கம்.  " செய்வினை தோஷம் ", 4 ஆவது கடைசி பகுதி.  சென்ற பகுதியில் தெய்வீக பரிகார வழிபாட்டு முறைபடி நிவாரணம் அடையும் முறையை பார்த்தோம்.  ஒரு சிலருக்கு தெய்வ பரிகார வழிபாடுகளும் பலிக்காமல் போகிறது.  எனவே அவர்கள் நிவாரணத்திற்காக மாந்திரிக வழிமுறையை நாட வேண்டியிருக்கிறது. 

..........................  [[ மாந்திரீக வழிமுறை நிவாரணம்  ]] .....................  முள்ளை முள்ளால் எடுக்க வேண்டும் என்றொரு பழமொழி உள்ளது.  அதுபோல், மாந்திரீகத்தால் உருவாக்கப்பட்ட துன்பத்தை, மாந்திரீகம் கொண்டே தீர்க்கவேண்டும்.  தோஷ துன்பத்தை உருவாக்கிய மாந்திரீகரும், அதை விலக்கும் மாந்திரீகரும், ஒரே வழிமுறையையே கையாளுகின்றனர்.  இருவரும் சிறுதெய்வ வழிபாடு செய்வர்.  அந்த தெய்வத்தின் அடிமைகளாக இருக்கும், குட்டிசாத்தான், குறளி, காத்து, கருப்பு போன்ற சக்திகளை வசப்படுத்திக்கொள்வர்.  இந்த சக்திகளை வைத்தே துன்பம் உருவாக்கப்படுகிறது.  அதுபோல் விலக்கப்படுகிறது.  இதில் உடனடி நிவாரணமும் கிடைக்கிறது.  ஆனால் நாம் அணுகும் மாந்திரீக ஜோதிடர், மனித நேயம் மிக்கவராக இருக்க வேண்டும்.  அதுபோல் போலியாக இல்லாமல், மாந்திரீகத்தை முறையாக கற்றுணர்ந்த, உண்மையானவராகவும் இருக்க வேண்டும்.

தெய்வீக பரிகார வழிபாட்டுக்கும், மாந்திரீக நிவாரண வழிமுறைக்கும் பெரும் வித்தியாசம் ஒன்று உள்ளது.  தெய்வீக பரிகார வழிபாடில், நம் பாவங்கள் மன்னிக்கப்படுகிறன.  எனவே, செய்வினை துன்பம் நீக்கப்படுகிறது.  ஆனால் மாந்திரீகத்தில் விலக்கப்படுகிறது.  அதாவது தள்ளி வைக்கப்படுகிறது.  இந்த வழிமுறையில் நம் பாவங்கள் மன்னிக்கப்படுவதில்லை.  பாவங்களை மன்னிப்பது தெய்வீக சக்திக்கு மட்டுமே உண்டு.  மாந்திரீக வழிமுறையில் பாதிக்கப்பட்டவர் நிவாரணம் பெற்றாலும், அவர் அனுபவிக்க வேண்டிய பாவங்கள் நிலுவையிலிருக்கும்.  மீண்டும் ஜாதகப்படி, துன்பங்கள் அனுபவிக்க வேண்டிய காலம் வரும் போது, நிலுவையிலுள்ளவைகளும் இணைந்துகொள்ளும்.  மீண்டும் துன்பம் அனுபவிக்கும் காலம், செய்வினை தோஷ காலமாக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை.  அது வேறு வகையான தீயதசாபுக்தியாலும் வரலாம்.

பாக்கியஸ்தானம் முற்றிலுமாக பாபகிரகங்களின் ஆதிக்கத்தில் இருந்தால், அவருடைய எந்த வித தெய்வீக பரிகார வழிபாடுகளும் பலன் தராது.  இத்தகையோர்கள், வந்த வினையை அனுபவித்தே ஆக வேண்டும் என்பது இறைவன் விதித்த விதியாகும். அனுபவித்தே பாவங்களை தீர்த்துக்கொள்வது ஒரு வகை.  தோஷத்தின் துன்பம் தாங்கமுடியாமல், மாந்திரீகத்தால், பாவங்களை தள்ளி வைத்துக்கொள்ளவது இன்னொரு வகை.  ஒரு சிலருக்கு, பாக்கியஸ்தானத்தில் சுபம், அசுபம் என்னும் இருவகை கிரகங்களின் ஆதிக்கமும் இருக்கும்.  இத்தகையோர்கள், பாக்கிய ஸ்தான பாபகிரக சம்பந்தப்பட்ட தசாபுக்திகளில் துன்பங்களை அனுபவித்தே ஆக வேண்டும்.  மற்ற கிரக தசாபுக்திகளில், தெய்வீக பரிகார வழிபாடின் மூலம் தோஷ நிவர்த்தி அடையலாம்.  பாக்கியஸ்தானம் முற்றிலும் சுபமாக இருக்கும் அமைப்பு கொண்டவரகள் கொடுத்து வைத்தவரகள்.  தெய்வம் என்னேரமும் அவர்களுக்கு அருள் வழங்க காத்திருக்கும்.  இந்த ஜோதிட விதிமுறை கோசரத்திற்கும் பொருந்தும்.  பாக்கிய ஸ்தானத்தில் சனி, ராகு, கேது இருக்கும்போது, ஜாதகரின் கோசர சம்பந்தமான தெய்வீக பரிகார வழிபாடுகள் பலன் தராது.  மாறாக, பாக்கிய ஸ்தானம் காலியாக இருந்தாலும், சுப கிரகங்கள் இருந்தாலும் தெய்வீக பரிகார வழிபாடுகள் உடனே பலன் தரும்.

எனவே செய்வினை தோஷத்தால் பாதிக்கப்பட்டவரகளுக்கு, என்னுடைய தனிப்பட்ட ஆலோசனை ஒன்று சொல்ல விரும்புகிறேன்.  இதை ஏற்றுக்கொள்வதும், பின்பு தவறாமல் நடைமுறைபடுத்துவதும், அவரவர் விருப்பம்.  செய்வினை, ஏவல், பில்லி, சூன்யம் ஆகியவற்றால் பாதிக்கப்படும் ஜாதக அமைப்புகள் எவ்வாறு இருக்கும் என்று ஓரளவு வாசகர்களுக்கு புரியும் வண்ணம் இந்த தொடர் பதிவுகளில் விவரிக்கப்பட்டுள்ளது.  துல்லியமாக அறிய ஜோதிடரை அணுகுங்கள்.  பாதிப்பு இருப்பதாக தெரிந்தால், தெய்வீக பரிகார வழிபாடுகளை பற்றி அறிந்துகொள்வதோடு, அவைகள் பலிக்குமா? என்ற கேள்விக்கும் ஜோதிடரிடம் விடை கேளுங்கள்.  பலிக்கும் என்றால் மகிழ்ச்சி.  தற்காலிகமாக பலிக்காது என்றால், அவசரத்திற்கு ஒரு நல்ல மனிதநேயமிக்க மாந்திரீக ஜோதிடரை அணுகி, நிவாரணம் பெறுங்கள்.  அதனால், நமது பாவங்கள் தள்ளிவைக்கப்படுகிறன, என்பதை உணர்ந்து, தெய்வீக பரிகார வழிபாடுகள் பலிக்கும் சமயம் வாய்க்கும்போது, மறக்காமல், தோஷத்திற்குரிய வழிபாடுகளை நிறைவேற்றிவிடுங்கள்.  தோஷ காலம் முடிந்துவிட்டது என்றோ, நிவாரணம் கிடைத்துவிட்டது என்றோ அலட்சியமாக இருந்துவிட வேண்டாம்.  பாக்கிய ஸ்தானம் முற்றிலுமாக பாதிக்கப்பட்டு, எப்போதுமே தெய்வீக வழிபாடுகள் பலன் தராது என்ற நிலையில் உள்ளவர்களுக்கு, நிச்சயம் குலதெய்வமும், இஷ்டதெய்வமும் உதவும்.  இத்தகையோர்கள், மாந்திரீக வழிமுறையை அணுகி, தீர்வு காண்பதோடு, தெய்வத்தை மனமுருகி, வணங்கும் ஈடுபாட்டை பொறுத்து நிரந்தர நிவாரணம் கிடைக்கும்.  " எல்லோரும் இன்புற்றிருப்பதுவே அன்றி வேறொன்றும் அறியேன் பராபரமே.................  ", என்ற தாயுமானஸ்வாமிகளின் உள்ளகிடக்கைக்கேற்ப இந்த தொடர் பதிவுகள் இடப்பட்டுள்ளன.  இறைவன் எல்லோருக்கும் துன்பத்தை நீக்கி இன்பத்தை அருள்வானாக.  நன்றி வணக்கம்.           

செய்வினை தோஷம் 3 ஆவது பதிவு.



ம் படைவீட்டம்மா துணை.  நண்பர்களுக்கு வணக்கம்.  செய்வினை தோஷம் 3 ஆவது பதிவு.  சென்ற பதிவுகளில், தோஷம் எப்படி உருவாகிறது? யாரால் உருவாகிறது? எதற்காக உருவாகிறது? என்றும், அதன் துணை தீயசக்திகளான ஏவல், பில்லி, சூன்யம் ஆகியனவற்றின் தன்மைபற்றியும், சில முன்னெச்சரிக்கைகளை பற்றியும் பார்த்தோம்.  இனி இந்த பதிவில் தோஷத்திலிருந்து நிவாரணம் பெற செய்யவேண்டிய தெய்வீக பரிகார வழிபாடுகளை பற்றி சற்று விரிவாக ஆலோசிப்போம்.

.....................  [[  தெய்வீக வழிபாடுகள்  ]]  ....................  01.  ஸ்ரீ காலபைரவர் வழிபாடு நன்மை தரும்.  பிரான்மலை, ராமேஸ்வரம் ஆகிய ஸ்தலங்களில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீபீஷண பைரவர்கள் மிகவும் பிரசித்தி பெற்றவர்கள்.  அங்கு சென்று அக்கோவில் முறைபடி, சிறப்பு வழிபாடு செய்துவிட்டு, பின்பு வாரந்தோறும், உள்ளூர் சிவபெருமான் கோவிலிலுள்ள ஸ்ரீகால பைரவர் சன்னதியில் விளக்கேற்றி வழிபட்டு வர வேண்டும்.  02.  ஸ்ரீமஹாபிரத்யங்கரா தேவி வழிபாடு செய்வதும் நல்லது.  ஆங்காங்கே சில ஸ்தலங்களில் இவர் சன்னதி இருப்பினும், கும்பகோணத்திற்கு அருகே ஐயாவாடியிலுள்ள சன்னதி தலைமை பீடம் எனலாம்.  அமாவாசை தோறும், முற்பகலில் இங்கு நடக்கும் நிகும்பல யாகத்தில் [ மிளகாய் யாகம் ] கலந்துகொண்டால் தோஷம் நீங்கும்.  இங்கு யாகத்தில் கலந்து கொள்ள வரும் போது இயன்ற அளவு மிளகாய் கொண்டுவந்து காணிக்கையாக செலுத்தலாம்.  பின் வாரந்தோறும் ஒரு அம்மன் கோவிலுக்கு சென்று விளக்கேற்றி வழிபட்டு வர வேண்டும்.  03.  பெருமாள் கோவில்களில் எழுந்தருளியிருக்கும், ஸ்ரீ நரசிம்மர் இணைந்த ஸ்ரீசக்ரத்தாழ்வார், தனித்த ஸ்ரீஉக்ர நரசிம்மர், ஸ்ரீவராக பெருமாள், ஸ்ரீபஞ்சமுக ஆஞ்சனேயர் ஆகியோரின் சன்னதி வழிபாடுகள் தோஷத்தை நீக்க வல்லவை.  இத்தெய்வங்கள் உள்ள திருக்கோவில் முறைபடி சிறப்பு வழிபாடு செய்து விட்டு, வாரந்தோறும் உள்ளூர் பெருமாள் கோவிலில் உள்ள இத்தெய்வங்களின் சன்னதியில் விளக்கேற்றி வழிபட்டு வர வேண்டும்.  ஸ்ரீசக்ரத்தாழ்வரின் சன்னதிக்கு சிறந்த ஸ்தலம், கும்பகோணம் ஸ்ரீசக்ரபாணி திருக்கோவில்.  ஸ்ரீ நரசிம்மர், ஸ்ரீஆஞ்சனேயருக்கு சிறந்த ஸ்தலம், அரக்கோணத்திலிருந்து, வேலூர் செல்லும் வழியிலுள்ள சோளிங்கர் எனப்படும் சோளிங்கபுரம் மலை.  ஸ்ரீவராக பெருமாளுக்கு சிறந்த ஸ்தலம், ஸ்ரீமுஷ்ணம்.  இது விருத்தாசலம் அருகே உள்ளது.  பொதுவாக உக்ர வடிவ பெருமாள் எங்கிருந்தாலும் அங்கு வழிபடலாம்.  03.  சிங்கம்புணரியிலுள்ள ஸ்ரீவடுகநாத சித்தரின் ஜீவசமாதி.  பௌர்ணமிதோறும் இரவில நடக்கும் சிறப்பு பூஜை, வழிபாடில் கலந்து கொண்டு அன்று இரவு அங்கு தங்க வேண்டும்.  வழிபாட்டுக்கு முன்பு அன்னதானம் அளிக்கப்படுகிறது.  அங்கு தங்களாலியன்ற அளவு காணிக்கை செலுத்துங்கள்.  பின் வாரந்தோறும், உள்ளூரில் அல்லது அருகாமையிலிருக்கு ஜீவசமாதிக்கு சென்று வரலாம்.  அவ்வாறு ஏதும் இல்லையெனில், சிவபெருமான் கோவில் நவக்கிரக குருவுக்கு வியாழந்தோறும், முல்லை அல்லது கொண்டை கடலை மாலை சாற்றி வழிபட்டு வரலாம்.  04.  ஸ்ரீசரபேஸ்வரர் வழிபாடு நல்ல பலன் தரும்.  இவர் சிவஸ்தலங்களில் சன்னதி கொண்டிருப்பார்.  இவரது தனி சன்னதி கொண்ட ஸ்தலம் கும்பகோணத்திற்கு அருகில் உள்ள திருபுவனம்.  இவருக்கு அபிஷேக ஆராதனை செய்து வழிபட்ட பின், வாரந்தோறும் அருகில் உள்ள சிவஸ்தலங்களில் உள்ள ஸ்ரீசரபேஸ்வரர் சன்னதியில் விளக்கேற்றி வழிபட்டு வருதல் சிறப்பு. 

மேற்கண்ட ஸ்தலங்களுக்கு சென்று வழிபடுமுன், உங்கள் குலதெய்வ வழிபாடை முறையாக குறைவின்றி முடித்துவிடவேண்டும்.  அதன் பின் பாதிக்கப்பட்டவரின் ஜாதகக்ப்படி அவரது இஷ்டதெய்வ வழிபாடை நிறைவாக செய்யதுவிடவேண்டும்.  அதன்பின்பே தோஷனிவர்த்தி ஸ்தல வழிபாடு மேற்கொள்ள வேண்டும்.  இதோடு இன்னொரு முக்கிய குறிப்பு உள்ளது.  இலுப்பைவிதையை பொடியாக்கி, அதை நயம் சாம்பிராணியோடு சரிசமமாக கலந்து பாக்கெட்டில் ஒரு சிறிய அளவு அடைத்து கொள்ளவேண்டும்.  இந்த பாக்கெட்டை, ஸ்தல வழிபாடின் போது, அத்தெய்வத்தின் திருவடியில் வைத்து அர்ச்சனை செய்ய வேண்டும்.  எந்த கிரகங்களால் பாதிப்பு ஏற்பட்டுள்ளதோ அந்த் கிரக நாட்களில், பூஜையறையில் விளக்கேற்றி, குல, இஷ்ட, ஸ்தல தெய்வங்களை வேண்டிக்கொண்டு தூபமிடவேண்டும்.  ஐயாவாடியில் மட்டும் அர்ச்சனை கிடையாது.  இங்கு பிரார்த்தனை மட்டுமே.  வாரந்தோறும் வழிபட்டு வரும் வழிபாடை, தோஷம் நீங்கும் நாள் வரை விடாமல் செய்துவர வேண்டும்.  மேலும் முடிந்த போதெல்லாம் ஸ்தல வழிபாடு மேற்கொள்வது நல்லது.  நிவாரணம் பெற ஆரம்பித்தவுடன், வழிபாடை நிறுத்திவிடக்கூடாது.  மீண்டும் தோஷம் தொற்றிக்கொள்ளும்.  உங்கள் வழிபாடுகளால், நீங்கள் நிவாரணம் அடைவதை எதிரி புரிந்துகொண்டு, மீண்டும் தொல்லை தருவார்.  தோஷ காலகட்டம் முடிந்துவிட்டதா? இல்லையா? என்பதை ஒரு ஜோதிடர் மூலம் தெரிந்துகொள்ளுங்கள்.  மேலும் ஸ்தல தெய்வங்களை தேர்வு செய்வதிலும் ஜோதிடர் உதவி தேவைப்படும்.  எந்த கிரகங்களால் பாதிப்பு ஏற்பட்டுள்ளதோ, அந்த கிரகங்களுக்கேற்றவாறு ஸ்தல தெய்வங்களை தேர்ந்தெடுத்து வழிபடுவது நல்லது.  அவ்வாறு செய்வதன் மூலம், கிரக சம்பந்த தெய்வங்களையும் வழிபட்டது போலாகும்.  மேற்கண்ட தெயுவீக வழிபாடிலும் ஒரு சிக்கல் உள்ளது.  ஒரு சிலருக்கு, தெய்வீக பரிகார வழிபாடுகள் பலிப்பதில்லை.  அத்தகையோர்கள் மாந்திரீக வழிமுறை மூலமே தோஷ நிவர்த்தி செய்துகொள்ள முடியும்.  அவைகளை பற்றி விரிவாக அடுத்த பதிவில் சிந்திப்போம்.  நன்றி .........................  [[  தொடரும்  ]]  ...................   

Friday 21 August 2015

" செய்வினை தோஷம் ", இரண்டாவது பதிவு



ம் படைவீட்டம்மா துணை.  நண்பர்களுக்கு வணக்கம். " செய்வினை தோஷம் ", பாரம்பரிய முறையிலான இரண்டாவது பதிவு இது.

............................  [[  செய்வினையும் மாந்திரீகமும்  ]]  ....................  சென்ற பதிவில் ஒருவர் இன்னொருவர் மீது செய்வினை செய்ய ஜாதக அமைப்பு எப்படி இருக்கும்? என்று பார்த்தோம்.  இந்த ஜாதக அமைப்பு இல்லாதவர்களுக்கு, யாராலும் செய்வினை தோஷத்தை உருவாக்க முடியாது.  எனவே செய்வினை செய்யும் மாந்திரீக ஜோதிடர், வெற்றியடைய, பாதிக்கப்படும் நபரின் ஜாதகத்தை பார்த்தபின்பே அதில் ஈடுபடுவார்.  ஜாதகம் கிடைக்காத போது இருக்கவே இருக்கிறது, மற்ற வகைகளான பில்லி, சூன்யம், போன்றவை..  இதற்கு நக்ஷத்திரமும், ராசியும் தெரிந்தால் போதும்.  பாதிக்கப்படவேண்டிய நபரின் தலைமுடி, பயன்படுத்திய துணிமணிகள், காலடிமண் ஆகியவற்றில் ஒன்று கிடைத்தால் போதும், அந்த நபரை பில்லி, சூன்யத்துக்கு உட்படுத்திவிடலாம்.  கோசரப்படி அஷ்டமத்தில் ராகு, கேது, சனி இருக்கும் காலத்தில் மட்டுமே இத்தகைய செயல்கள், குறிப்பிட்ட நபரை பற்றிக்கொள்ள செய்யமுடியும்.  ஜாதகமும் இல்லை, ராசி நக்ஷத்திரமும் தெரியவில்லை.  இந்த நிலையில் தீயசக்தி கொண்டு நம்மை தாக்க நினைப்பவர்கள், பயன்படுத்துவது இயந்திரம்.  இப்படிப்பட்ட மாந்திரீக தகடுக்ளை, நம் குடியிருப்பு எல்லைக்குள், திருட்டுத்தனமாக வந்து புதைத்து அல்லது கண்ணில் தென்படாவண்ணம் ஒளித்து வைத்து விடுவார்கள்.  இந்த இயந்திரங்கள், முன் குறிப்பிட்டு சொல்லப்பட்டுள்ளபடி, கிரக அமைப்புகள் அமையும் வரை காத்திருந்து, பின் செயல்பட துவங்கும்.  இவை அமைதியாக இருக்கும் காலங்களில் நமக்கு அதை பற்றி ஒன்றுமே தெரியப்போவதில்லை.     

ஒரு மாந்திரீக ஜோதிடரால் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் இத்தீயசக்திகளை ஒருவர் மீது பயன்படுத்த முடியும் என்றாகிவிட்டால், பிறகு தெய்வம் இருப்பதற்கே அர்த்தம் இல்லாமல் போய்விடும்.  கிரகங்கள் வழி விட்டால் தீயசக்திகள் தாக்கும்.  இதன்படிபார்த்தால், இந்த தீய சக்தியால் விளையும் துன்பங்கள் எல்லாம் நமக்கு தெய்வத்தின் அனுமதியோடுதான் நடக்கிறது என்றல்லாவா ஆகிவிடுகிறது.  ஆச்சரியமாக இருக்கிறதா!  அதுதான் உண்மை.  நாம் செய்யும் கர்மவினைகள் நம்மை திருப்பி தாக்கும் என்பதை நீங்கள் ஒப்புக்கொள்பவராக இருந்தால், அந்த பாபகர்மவினை திருப்பி தாக்கும் வழிமுறைகளில், இதுவும் ஒன்று என்று ஏற்றுக்கொண்டுதானாக வேண்டும்.  ஆகவே பாபங்கள் புரியாமல், தர்மவழியில் நடக்கவேண்டும் என்பதை உணர்ந்து கொள்ளவே நாம் இன்னிலைக்கு ஆளாகிறோம் என்பதும் உண்மையிலும் உண்மை.  இதை உணர்ந்தவர்கள், தீயசக்திகளை கொண்டு நம்மை தாக்கும், எதிரிகள் மீதோ, அதை செயல்படுத்தும் மாந்திரீக ஜோதிடர்கள் மீதோ வருத்தப்பட மாட்டார்கள்.  [  இது என் சொந்த அனுபவம்.  நானும் செய்வினை தோஷத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டு அல்லல் பட்டிருக்கிறேன்.  மஹான்களும் ஞானிகளும் கூட இதிலிருந்து தப்பவில்லை எனும் போது நாம் எம்மாத்திரம்.  ]]  எந்த நேரத்தில்? எப்போது? யாருக்கு? நாம் எத்தகைய கொடும்பாவம் புரிந்தோம் என்று தெரிந்துகொள்ளவும் ஜோதிடத்தில் வழி இருக்கிறது. 

.......................  [[  முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்  [[  ....................  பொதுவாக நாம் ஜாதகம் பார்க்கும்போது, எந்த தசாபுக்தியாவது, நமக்கு செய்வினை தோஷத்தை உருவாக்குமா? என்றும், அதன் காலகட்டத்தை அறிந்து வைத்துக்கொள்வது நல்லது.  சிலருக்கு மேற்கண்ட தசாபுக்திகள் தீயசக்திகளுக்கு வழிவிடாத அமைப்பும் ஜாதகத்தில் இருக்கும்.  நம் ஜாதக விபரங்களை, நமது நம்பிக்கைக்குரியவரிடம் தவிர மற்றவரிடம் வெளியிடாமல் இருப்பதும் நல்லது.  நமது தலைமுடியை அனாவசியமாக உதிரவிடாமல் இருக்க வேண்டும்.  நமது இந்துமத சாஸ்த்திரம் இதை ஒரு சம்பிரதாயமாகவே வலியுறுத்துகிறது.  பொழுதுபோன பின் தலைமுடி வாரக்கூடாது என்பதும் இதில் சேர்ந்ததுதான்.  இருட்டிய நேரத்தில் உதிர்ந்த தலைமுடிகளை சுத்தம் செய்வதில் விடுபட்டு போகும்.  வீட்டினுள் தலைமுடி வரக்கூடாது என்பதும் இந்த சம்பிரதாயத்தின் ஒரு அங்கமே.  தானங்களில் ஒன்றான வஸ்திரதானம் மேற்கொள்ளும் போதும், புதியதையே அளிக்க வேண்டும்.  நாம் பயன்படுத்தியதை கொடுத்துவிடக்கூடாது.  அதை நாமே அழித்துவிடவேண்டும்.  [[  போகிப்பண்டிகையை நினைவிற்கொள்க.  ]]  பாதரட்சை இல்லாமல் நடமாடக்கூடாது.  விரத நாட்களில், நாம் வெறும் காலில் இருக்கும்போது, நம்மை இறைவன் ரட்சிப்பான்.  இன்னாட்களில் எடுக்கப்படும் காலடிமண் எதிரிக்கு உதவாமல் போகும்.  " அதிதி தேவோ பவ: ", என்ற சொற்றொடரை அடிக்கடி கேட்டிருப்பீர்கள்.  நம்மால் முடிந்தபோதெல்லாம், ஆன்மிகம், யோகம், ஆகிய நிலைகளில் உயர்ந்தவர்களை அழைத்து, அவர்களை வணங்கி, ஆசி பெற்று, விருந்துபசரிக்க வேண்டும் என்று ஒரு இந்துமத சம்பிரதாயம் இருக்கிறது.  இத்தகையோர்களே அதிதிகளாவர்.  தெய்வத்திற்கு சமமானவர்கள்.  அமைதியாக இருக்கும் மாந்திரீக தகடுகள் பற்றி இவர்களுக்கு புரிந்துவிடும்.  இவர்கள் வருகையால் மாந்திரீக தகடுகள் தானாகவே சக்தியிழந்துவிடும்.  எனவே அதிதி தேவோ பவ: என்னும் விருந்தளித்தல் சம்பிரதாயத்தை விடாமல் கடைபிடித்து வர வேண்டும் என்று நம் முன்னோர்கள் நமக்கு அறிவுருத்தியிருக்கிறார்கள்.  ......................  [[  தொடரும்  ]]  ...................... 


" செய்வினை தோஷம் ", முதல் பதிவு



ம் படைவீட்டம்மா துணை.  நண்பர்களுக்கு வணக்கம்.  " செய்வினை தோஷம் ", பற்றிய பாரம்பரிய முறையிலான முதல் பதிவு இது.  இந்த தோஷத்தால் பாதிக்கப்பட்ட ஜாதகர்கள், தன்னுடைய கவலை தோய்ந்த முகத்தோடு, சில நேரம் கண்ணீரோடும், நடந்ததை விவரிக்கும் போது, மனசாட்சியுள்ள எந்த ஜோதிடராலும் கலங்காமல் இருக்க முடியாது.  அவ்வளவு கொடூரமான விளைவுகளை ஏற்படுத்தும் தோஷம் இது.  இதில் எப்படி அகப்படுகிறோம்?  விடுபட என்ன வழி என்பதை பற்றிய விபரங்களை பரிமாறிக்கொள்ளும் பதிவுகளாக இது அமைந்திருக்கும். 

..........  [[  செய்வினை தோஷம் உருவாகும் விதம்  ]] ..................  ஜாதகத்தில் பாதகாதிபதியும், சத்ருஸ்தானாதிபதியும் இணைந்து திசைபுக்தி நடத்தும் போது இந்த தோஷம் உருவாகிறது.  சில சமயங்களில், இந்த திசைபுக்தி நடப்பிற்கு வருமுன்னரே, கோசரப்படி, அஷ்டமத்தில் சனி, ராகு, கேது இருந்தால் அந்த கிரகங்களின் கால கட்டத்திலேயே இந்த தோஷம் பாதிக்கத் தொடங்கிவிடும்.  அதுபோல் மேற்கண்ட திசைபுக்தி தொடங்குமுன்னர், ஜனன ஜாதகத்தில் அஷ்டமத்தோடு தொடர்புடைய சனி, ராகு, கேது கிரகங்களின் புக்தி நடப்புக்கு வந்தாலும் அப்போதே இந்த தோஷம் பாதிக்கத்தொடங்கிவிடும்.  இது முடியும் காலமும் இப்படியே அமைகிறது.  பாதகாதிபதி, சத்ருஸ்தானாதிபதி இணைந்த திசைபுக்தி முடிந்த பின்னரும், கோசரப்படி, அஷ்டமத்தில், சனி, ராகு, கேது கிரகங்களின் ஆதிக்கம் தொடர்ந்தால், அவை அஷ்டமத்திலிருந்து விடுபடும் வரை தோஷம் தொடரும்.  அதுபோல் ஜனன ஜாதகத்தில் செய்வினை தோஷத்திற்கான திசைபுக்தி முடிந்தும், அதற்கடுத்து, அஷ்டமத்தோடு தொடர்புடைய சனி, ராகு, கேதுக்களின் புக்தி நடந்தாலும், அவை முடிந்தபின்பே தோஷமும் முடிகிறது.  மேற்கண்ட கிரக அமைப்புகள் தவிர மற்ற வகை அமைப்புகளால் செய்வினை தோஷம் உருவாவதில்லை.  சிலர் கோசரப்படியும், ஜனன ஜாதகப்படியும் அஷ்டமத்தில் ராகு, கேது வந்தாலே செய்வினை தோஷம் பாதித்துவிடுமோ என்று அஞ்சுகின்றனர்.  இந்த அச்சம் தேவையில்லாது.  செய்வினை தோஷமானது, நமக்கு வேண்டாத எதிரிகளால் உருவாக்கப்படுவதால், எதிரி ஸ்தானமாகிய சத்ருஸ்தானம் நடப்புக்கு வராமல் இந்த தோஷம் வந்து விடாது.  இந்த தோஷத்திற்கும், பில்லி, சூனியம் ஆகியவற்றுக்கும் வித்தியாசம் உள்ளது.  இவைகளை பற்றியும் பின்னர் விரிவாக பார்க்கலாம்.

..................  [[ செய்வினை தோஷத்தை உருவாக்குபவர்கள்  ]] ........................  ஒரு மனிதன் இன்னொரு மனிதன் மீது வைக்கும், விரோதம், பொறாமை, வஞ்சம், ஆகியனவையே இந்த தோஷத்தை அவன் உருவாக்க காரணமாக அமைகின்றன.  சத்ருஸ்தானாதிபதி இருக்கும் ஸ்தான அடிப்படையில் இந்த தோஷத்தை உருவாக்கிய அந்த நபர் யார்? என்று ஒரு ஜோதிடரால் சொல்லிவிட முடியும்.  ஆனால் நான் உட்பட பலர் இதை வெளியிடுவதில்லை.  வெளியிட்டால், இது அவ்விருவரிடையே அடிதடி, தகராறு, எனப்போய் முடிகிறது.  இதில் அகப்படும் ஜோதிட்ர பாடு திண்டாட்டமாகிவிடுகிறது.  எனவே ஜோதிடர்கள், யாரால்? என்ற கேள்விக்கு பதில் சொல்வதைவிட, எதற்காக என்பதற்கு தயங்காமல் பதில் சொல்லிவிடுவர்.   பாதகாதிபதி அமரும் இடத்தை பொறுத்து, எதற்காக என்று சொல்லமுடியும்.  இன்னும் பாத சாரப்படி பார்த்தால் துல்லியமகாவும் சொல்லலாம்.

......................  [[  செய்வினையும் மாந்திரீகமும்  ]]  ....................  ஜோதிடம் என்னும் புனிதமான கலை வேதத்திலிருந்து தோன்றியது.  அது, பரம்பரை வேதம், வாஸ்து, மருத்துவம், மாந்திரீகம் என பல பிரிவுகளாக உள்ளது.  இந்த பிரிவுகள் எல்லாமே மனிதனை வாழவைக்க தோன்றியவை.  தீயசக்திகளிடமிருந்து தன்னை காத்துக்கொள்ள தோன்றியதே மாந்திரீக ஜோதிடம்.  ஆனால் மனிதன், எல்லாவற்றையும் தீமைக்கும் பயன்படுத்துவதுபோல், இதையும் தீய செயல்கள் செய்வதற்காக பயன்படுத்த தொடங்கினான்.  அரக்கர் குலத்தை சேர்ந்த ராவணன், மனித குலத்தை வேரறுக்க, உருவாக்கியதே ராவண சம்ஹிதை.  வேதம் முழுதும் நன்றாக கற்றறிந்த ராவணன், அதர்வண வேதத்திலிருந்து, மாந்திரீக ஜோதிடத்தை மட்டும் தனியாக பிரித்து ராவண சம்ஹிதையை உருவாக்கினான்.  இதை அரக்கர் குலத்திற்கு மட்டும் போதித்ததாக வரலாறு உண்டு.  இப்போது இந்த மாந்திரீக ஜோதிட கலையை, மனிதன் மனிதனை வேரறுக்க பயன்படுத்துகிறான்.  முற்காலத்தில் ஒருவருக்கொருவர் விரோதம் கொண்டால் பேசி தீர்த்துக்கொண்டனர்.  பஞ்சாயத்தில் நியாயம் கேட்டனர்.  மன்னிப்பு பெரும் தண்டனையாக கருதப்பட்டது.  காலம் செல்ல செல்ல, தண்டித்தே தீர வேண்டும் என்ற நோக்கத்துடன் காவல்துறையையும், நீதிமன்றங்களையும் நாடினான்.  தற்போது இவைகளையெல்லாம் விட்டுவிட்டு, உணவில் உடனடி உணவு வந்ததை போல, தன்னுடைய விவகாரங்களுக்கும், தான் விரும்பும் வகையில், உடனடி தீர்வை கண் முன்னேயே கண்டுவிட வேண்டும் என்ற துடிப்பு, அவனை தவறான வழியில், மாந்திரீக ஜோதிடத்தையும், செய்வினை, ஏவல், பில்லி, சூன்யம், வசியம் ஆகியனவற்றை நாட வைத்திருக்கிறது.  இத்தகைய நாசகர எதிரிகள் பிற்காலத்தில் நன்றாக வாழ்ந்ததாக வரலாறு கிடையாது...........................  [[  தொடரும்  ]]  ..................