Thursday 26 November 2015

" ஜோதிடரும், ஜீவனபலனும் [ தொழில் / பணி / வணிகம் ] ",



ம் படைவீட்டம்மா துணை.  அனைவருக்கும் வணக்கம்....................  " ஜோதிடரும், ஜீவனபலனும் [ தொழில் / பணி / வணிகம் ] ",...............பாரம்பரிய முறையிலான ஜாதகர்களுக்கான பதிவு.  இந்த பதிவை ஜாதகர்கள் படிப்பதன் மூலம், ஒரு ஜோதிடர் மூலம், ஜாதகப்படி, சரியான ஜீவனத்தை தேர்வு செய்துகொள்ளும் வழிமுறையையும், அதை வெற்றிகரமாக நடத்த தேவையான பின்பற்றுதல்களையும் { இயந்திரம், நவரத்தின கற்கள் தெய்வ வழிபாடு } அறிந்துகொள்ள முடியும்.

ஜோதிடரும், ஜாதகமும்:......................  ஒரு ஜாதகருக்குரிய ஜீவனத்தை அறிய வேண்டுமானால், ஜீவனஸ்தானம், லாபஸ்தானம், ஜீவனாதிபதி இருக்கும் ஸ்தானாதிபதி ஆகிய மூன்று நிலைகளில் அணுகவேண்டியிருக்கிறது.  மொத்தம் ஒன்பது கோணங்களில் ஆராய்ந்து, அதில் அதிக வலுவுள்ள, சுபகரமான கிரகத்தை, தேர்வு செய்ய வேண்டும்.  இப்படி தேர்வு செய்யப்படும் கிரகமே ஜீவன கிரகமாகும்.  நமது சாஸ்த்திரத்தில், ஒவ்வொரு கிரகத்துக்கும் நூற்றுக்கணக்கான ஜீவனங்கள் அடையாளம் காட்டப்பட்டுள்ளன.  எனவே ஜோதிடரால், அந்த கிரகத்தை அடையாளம் காட்டி, பொதுவாக 1.  அரசுப்பணி,  2.  பெரிய நிறுவனத்தில் நிர்வாக பணி  3.  சொந்ததொழில்  04.  அடிமைத்தொழில்  05. வணிகம் என்றெல்லாம் குறிப்பிட முடியுமே தவிர, ஜாதகர் இந்த தொழிலைத்தான் செய்வார் என்று உறுதியாக சொல்ல இயலாது.  எனவே ஜாதகர்கள் தனக்கான வெற்றிகரமான ஜீவனத்தை தேர்வு செய்ய, ஜோதிடருடன், நீண்ட கலந்துரையாடல் செய்ய வேண்டியிருக்கிறது.  ஜாதகர் செய்யும் ஜீவனம், விரும்பும் ஜீவனம், ஆகியன ஜோதிடரிடம் தெரிவித்தால், அந்த ஜீவனங்கள் ஜீவனகிரகத்தோடு ஒத்துப்போகிறதா?  அல்லது மாற்றிக்கொள்ள வேண்டுமா?  அல்லது தடை ஏதும் இருப்பின், அதை நீக்கிக்கொள்ள வழி ஏதேனும் இருக்க்றதா? அல்லது செய்வது தற்காலிகமா? நிரந்தரம் எப்போது?  என்றெல்லாம் அவர் ஆராய்ந்து வழிகாட்டுவார்.

ஜீவனத்தில் வெற்றியும், தோல்வியும்:  ....................  ஒரு ஜாதகருக்கு, கல்வியை தருவது கல்விக்கிரகம்.  இந்த கல்விக்கிரகமே, ஜீவனகிரகமாக அமையும்போதும், கல்விக்கிரகம் ஜீவன ஸ்தானத்துடன் தொடர்பு கொண்டிருந்தாலும், அல்லது ஜீவன கிரகம் கல்விஸ்தானத்தோடு தொடர்பு கொண்டிருந்தாலும், படித்த படிப்புக்கேற்ற ஜீவனம் ஜாதகருக்கு அமையும்.  எனவே அவர் வெற்றிகரமான ஜீவனத்தை மேற்கொள்வார்.  கல்விக்கிரகமும், ஜீவனகிரகமும் வேறுவேறாக அமைந்துவிட்டால், படித்த படிப்புக்கேற்ற ஜீவனம் அமையாது.  இத்தகைய ஜாதகரால் முழு ஈடுபாடுடன் ஜீவனத்தை மேற்கொள்ள முடியாமல், அரைமனதுடனேயே காலத்தை கழிப்பார்.  எனவே மேற்படிப்புக்கான கல்வியை தேர்வு செய்யும்போதே, அது ஜீவனத்திற்கு உதவுமா? அன்று அறிந்துகொள்ளுதல் நன்று.  ஒரு சிலருக்கு, படித்தபடிப்புக்கேற்ற ஜீவனம் அமைந்தாலும், அதில் மேன்மையடைய முடியாமல் தவிப்பார்கள்.  இதற்கு காரணம், கல்விகிரகமும், ஜீவனகிரகமும் ஒரே கிரகமாக அமைந்திருந்தாலும், அந்த கிரகம் பலவீனமாக இருக்கலாம்.  இந்த பலவீனத்தை போக்க, இறைவழிபாடு, நவரத்தின கற்கள், இயந்திரம் ஆகியவை உதவுகிறன.  இந்த வழிமுறைகளில் தேவையானதை தேர்வு செய்துகொண்டு ஜீவனத்தில் வெற்றியடையமுடியும்.

இயந்திரம், நவரத்தின கற்கள், இறைவழிபாடு:.............................  இயந்திரங்களை இருவகையாக பிரிக்கலாம்.  1.  கிரக இயந்திரங்கள்.  2.  கிரகத்துக்குரிய தெய்வீக இயந்திரங்கள்.  அதாவது, கிரகங்களுக்கான தெய்வங்களுக்குரிய இயந்திரங்கள்.  இவ்விருவகை இயந்திரங்களை பற்றியும், அதற்குரிய மந்திரங்களை பற்றியும், நமது வேதங்கள் விரிவாக எடுத்துரைக்கின்றன.    கிரக இயந்திரங்கள், கிரகங்களின் சக்தியை ஈர்த்துத்தருபவை.  அந்த சக்தி தீயபலனை தருவதாக இருந்தாலும் அதையும் ஈர்த்துதந்துவிடும்.  எனவே கிரக இயந்திரங்களை தேர்வு செய்வதில் மிகுந்த கவனம் தேவை.  கிரகதெய்வீக இயந்திரங்கள், இறை வழிபாட்டுக்கு ஒப்பானவை.  பாதுகாப்பானவை.  ஆனால் நிதானமாக செயல்புரியக்கூடியவை.  இவ்வகை இயந்திரங்கள், நம் வேண்டுதலுக்கு ஏற்றவாறு, கிரகங்களின் சக்தியை பெற்றுத்தரும்.  உதாரணத்திற்கு, ஒரு ஜீவனகிரகம், சுபகரமாக இருந்தாலும், நீசமடைந்திருந்தால், பலன் தருவதில் மிகவும் பலவீனமாக இருக்கும்.  அந்த கிரகத்துக்குரிய இயந்திரத்தை ஸ்தாபித்துக்கொள்வதன் மூலம், பலவீனத்தை போக்கி சக்தியை பெருக்கிக்கொள்ளலாம்.  அதுவே ஜீவன கிரகம் நல்ல வலுவுடன் இருந்து, விரயத்தில் இருந்தால், ஜாதகர் அடிக்கடி ஜீவனத்தை மாற்றிக்கொள்வார்.  அத்துடன் ஜீவன இடமும் அடிக்கடி மாறும்.  அலைச்சல் அதிகமாக இருக்கும்.  இப்படிப்பட்ட சூழ்னிலையில், ஜீவனகிரக இயந்திர ஸ்தாபிதம் செய்துகொண்டால், மேற்கண்ட விரும்பத்தகாத பலன்கள் அதிகரித்துவிடும்.  எனவே இத்தகைய ஜாதக அமைப்புக்கு கிரகதெய்வீக இயந்திரங்களே பொருத்தமானவை.  இதைப்போலவே நவரத்தின கற்களும் செயல்படுகின்றன.  ஒவ்வொரு நவரத்தின கல்லும், அதற்குரிய கிரக சக்தியை ஈர்த்துத்தரும்.  எனவே கல்லை தேர்வு செய்வதில், இயந்திர தேர்வை விட மிகமிக கவனமாக இருக்க வேண்டும்.  கிரகதெய்வீக இயந்திரங்களைப்போல் கற்களில், கிரகதெய்வீக கற்கள் கிடையாது.  நமது சாஸ்த்திரங்களில், கிரகங்களுக்குரிய கற்கள் மட்டுமே  பரிந்துரைக்கப்பட்டுள்ளன.  அடுத்து, இறைவழிபாடு என்பது கிரகங்களுக்குரிய பரிகார வழிபாடாகும்.  அதாவது, ஜீவன கிரகத்துக்குரிய ப்ரீதிகளை செய்வதுடன், அக்கிரகத்திற்கான தெய்வத்தையும் வணங்கி, அந்த தெய்வத்தின் சார்பாக, இவ்வுலக உயிர்களுக்கும் உதவுவதாகும்.  இதை சுருக்கமாக ஜீவகாருண்யம் என்று சொல்லலாம். 

எனவே ஜாதகர்கள், தங்கள் ஜீவனத்தை [ தொழில் / பணி / வணிகம் ] பற்றி தெரிந்துகொள்ள ஜோதிடரை அணுகும்போது, மேற்கண்ட வழிமுறைகளை, கவனத்தில் கொண்டு, ஜோதிடரிடம், மனம் திறந்த கலந்துரையடலை மேற்கொண்டு, வெற்றகரமான ஜீவனத்தை அமைத்துக்கொள்ள வேண்டும் என்பது என் வேண்டுகோளாகும்.  அதற்கு இறைவன் அருள் துணையிருப்பதாக.  ................  நன்றி.  வணக்கம்.                

" கிரகபார்வைகள் ",



ம் படைவீட்டம்மா துணை.  வணக்கம்.  " கிரகபார்வைகள் ", ........................... ஜோதிடம் பதிதாக கற்பபவர்களுக்காவும், ஜோதிட ஆர்வலர்களுக்காகவும் இடப்படும் பதிவு....................  பாரம்பரிய முறை................ஒவ்வொரு கிரகத்துக்கும் இரு விதமான பார்வைகள் உண்டு.  01.  சுப,அசுப பார்வை  02.  ஸ்தானதிபத்திய பார்வை.  இவ்விருவிதமான பார்வைகளையும் கிரகங்கள் எப்போது, எவ்விதமாக பார்க்கிறன? என்பதை புரிந்துகொள்வதில் ஒரு சிலர் குழப்பத்திலேயே உள்ளனர்.  இந்த கட்டுரையில், எந்தெந்த கிரகங்கள், தானிருக்கும் இடத்திலிருந்து எத்தனையாவது இடங்களை பார்க்கும்? என்பதை பற்றிய விளக்கம் இடம் பெறவில்லை.  இந்தவகையான பார்வை விதியை பயன்படுத்துவதில் அனைவரும் ஒரே மாதிரியாகவே எந்த குழப்பமுமில்லாமல் இருக்கிறனர்.  எனவே குழப்பம் தரக்கூடிய அசுப,சுப, ஸ்தானதிபத்திய பார்வைகளை பற்றி சற்று விரிவாக பார்க்கலாம்.

சுப கிரகம் ஒன்று ஒரு ஸ்தானத்தை பார்க்கும்போது, அந்த பார்வை சுப பலனை தரும்.  அசுப கிரகம் ஒன்று ஒரு ஸ்தானத்தை பார்க்கும்போது, அது அசுப பலனை தரும்.  நவக்கிரகங்கள் சுப, அசுப கிரகங்கள் என்று பிரிக்கப்பட்டுள்ளன.  சூரியன், அசுபசந்திரன், செவ்வாய், அசுபபுதன், சனி, ராகு, கேது ஆகியவை அசுப கிரகங்கள்.  சுபசந்திரன், சுபபுதன், குரு, சுக்கிரன் ஆகியவை சுப கிரகங்கள்.  இவைகளில் சந்திரனும், புதனும், தங்களுடைய தன்மைகளை சுபமாகவும், அசுபமாகவும் மாற்றிக்கொள்ளக்கூடியவை.  இதை நாம் விரிவாக தெரிந்துகொள்ளுதல் நல்லது.

சந்திரன் தான் வழங்கும் ஒளியின் அளவை பொறுத்து, சுபகிரகம் என்றும் அசுபகிரகம் என்றும் குறிப்பிடப்படுகிறார்.  சந்திரனின் ஒளி அளவு பாதிக்கு மேல் இருக்கும்போது, சந்திரன் சுபகிரகம்.  பாதிக்கு கீழ் குறையும் போது அசுப கிரகம்.  குறிப்பாக சொன்னால், வளர்பிறை அஷ்டமி முதல், தேய்பிறை சப்தமி வரை சந்திரனின் ஒளி அளவு பாதிக்கு மேல் இருக்கும்.  ஆகவே இந்த திதிக்காலங்களில் சந்திரன் சுபசந்திரன்.  இதுவே தேய்பிறை அஷ்டமி முதல், வளர்பிறை சப்தமி வரை சந்திரனின் ஒளி அளவு பாதிக்கு குறைவாக இருக்கும்.  எனவே இந்த திதிக்காலங்களில் சந்திரன் அசுபசந்திரன்.  இந்த அசுபசந்திரன் மீது, குரு, சுக்கிரன், தனித்த புதன் ஆகியோரின் பார்வை விழுந்தால், சுபச்சந்திரனாகிவிடுவார்.  கடைசியாக சொல்லப்பட்ட இந்த விதியை நாம் மனதின் நன்றாக நிலை நிறுத்திக்கொள்ள வேண்டும்.  சிலர் குறிப்பிடுவதுபோல் தேய்பிறை சந்திரன், அசுபசந்திரன் என்றும், வளர்பிறை சந்திரன், சுபசந்திரன் என்றும் பொதுவாக கொள்வது பெரும் தவறு.   புதன், அசுபகிரகங்களான, சூரியன், அசுபசந்திரன், செவ்வாய், சனி, ராகு, கேது ஆகியோருடன், ஒரே ராசியில் இணைந்திருந்தால், புதன் அசுபனாவார்.  இதுவே புதன் தனித்திருந்தாலும், குரு, சுக்கிரன், சுபசந்திரன், சுபர்பார்வைபெற்ற அசுபசந்திரன் ஆகியவர்களோடு, ஒரே ராசியில் இணைந்திருந்தால், புதன் சுபனாவார்.  எனவே, சந்திரன், புதன் ஆகிய இருவரை பொறுத்தவரை, மேற்கண்ட விதிகளை கவனத்தில் கொண்டு, இவர்களின் பார்வை, சுபமா? அல்லது அசுபமா? என்று தீர்மானிக்க வேண்டும்.  ஜாதகபலன் கூறும் போது, பலன் கூற இந்த விதிகள் பெரிதும் பயன்படுகிறன.

அதுபோல், ஸ்தான பலங்கள் கணிக்க, கிரகங்களின் ஸ்தானாதிபத்திய பார்வைகள் பெரிதும் உதவுகிறன.   ஒரு கிரகம், அது சுபகிரகமாக இருந்தாலும், அசுப கிரகமாக இருந்தாலும், அது தன் சொந்த வீட்டை பார்க்கும்போது, அந்த வீட்டை, அதன் பார்வை வலுப்படுத்தும்.  இது பொதுவாக சொல்லப்படும் விதியாகும்.  இதில் ஒரு நுணுக்கமும் உள்ளது.  அதை பற்றி விரிவாக, ஒரு உதாரணத்தின் மூலம் தெரிந்துகொள்வோம்.  உதாரணத்திற்கு " மேஷ லக்னம் ", என்று கொள்வோம்.  செவ்வாயின் பார்வை மேஷத்தில் விழும்போது, மேஷம் லக்னம் என்பதால், அந்த பார்வை லக்னாதிபதி பார்வையாகும்.  இதனால் மேஷத்தின் லக்ன காரகத்துவங்கள் வலுப்பெறும்.  செவ்வாயின் பார்வை விருச்சிகத்தில் விழும்போது, விருச்சிகம் அஷ்டமம் என்பதால், அந்த பார்வை அஷ்டமாதிபதி பார்வையாகும்.  இதனால் விருச்சிகத்தின் அஷ்டம காரகத்துவங்கள் வலுப்பெறும்.  இங்கு, செவ்வாய் லக்னாதிபதி என்பதால், விருச்சிகத்தில் விழும் செவ்வாயின் பார்வை லக்னாதிபதி பார்வை என்று கொள்ளலாகாது.  மேஷம், விருச்சிகம் தவிர, மற்ற ஸ்தானங்களை செவ்வாய் பார்க்குமாறு ஜாதகம் அமையுமானால், அந்த பார்வைகள் செவ்வாய் என்னும் அசுப கிரகத்தின் அசுப பார்வையாக கொள்ள வேண்டும்.

இனி இதே மேஷ லக்னத்தை கொண்டு இன்னொரு உதாரணம் காணலாம்.  " குரு பார்க்க கோடி நன்மை ", என்று பொதுவாக சொல்லப்பட்டதை, எல்லா ஸ்தானங்களுக்கும் எடுத்துக்கொள்ளலாகாது.  மேஷ லக்னத்துக்கு குரு, பாக்கியம், விரையம் என்னும் இரு ஆதிபத்தியங்களை பெறுகிறார்.  எனவே குருவின் பார்வை தனுசில் விழும்போது அது பாக்கியாதிபதி பார்வையாகிறது.  இதுவே மீனத்தில் விழும்போது அது விரையாதிபதி பார்வையாகிறது.  மற்ற இடங்களில் விழும் போது, குரு சுபகிரகம் என்பதால், அவை சுபபார்வைகளாகிறன.  எனவே இத்தகைய நுட்பங்களையெல்லாம், கவனத்தில் கொண்டு, ஜாதகத்தை அணுகி பலன் சொல்லும்போது, அது வெற்றிகரமாக அமைகிறது.  நன்றி.  வணக்கம்.           

Thursday 5 November 2015

" தோஷ நக்ஷத்திர பெண்களின் திருமணம்............. [ விசாகம், கேட்டை. ].



ம் படைவீட்டம்மா துணை.  எல்லோருக்கும் வணக்கம்.  " தோஷ நக்ஷத்திர பெண்களின் திருமணம்............. [ விசாகம், கேட்டை. ].  .................  பாரம்பரிய முறையிலான பதிவு.  ஆயில்யம், மூலம் நக்ஷத்திர பெண்களின் திருமணம் பற்றி ஏற்கனவே சென்ற பதிவில் பார்த்தோம்.  இந்த பதிவில் விசாகம், கேட்டை நக்ஷத்திர பெண்களின் திருமணம் பற்றிய விபரங்களை பார்க்கலாம்.   மாப்பிள்ளைக்கு தம்பி இருந்தால், அந்த வீட்டுக்கு விசாக நக்ஷத்திர பெண் மருமகளாக வரக்கூடாது என்று விசாக ஜாதகத்தை ஒதுக்குகிறார்கள்.  அதுபோல் மாப்பிள்ளைக்கு அண்ணன் இருந்தால், கேட்டை நக்ஷத்திர பெண் வீட்டுக்கு மருமகளாக வரக்கூடாது என்றும் கேட்டை ஜாதகத்தை ஒதுக்குகிறார்கள்.   சில விதிவிலக்குகளை கையாண்டு, சாஸ்த்திரத்தை அனுசரித்து, சில சம்பிரதாயங்களை  விட்டுவிடுதல் அல்லது மாற்றியமைத்துக் கொள்ளுதல் மூலமாக இவ்விரு நக்ஷத்திர பெண்களையும் நம் வீட்டுக்கு நாம் மருமகளாக்கிக்கொள்ளலாம்.  சில தவிர்க்க இயலாத சந்தர்ப்பங்களில், வேறு வழியின்றி, இவ்விரு நக்ஷத்திரப்பெண்கள், புகுந்த வீட்டுக்கு வரும் நிலை ஏற்பட்டால், கீழ்கண்ட சிலவழிமுறைகளை கடைபிடித்து அவளை புகுந்த வீட்டில் வரவேற்கலாம்.

01.  ஆண் வாரிசு இல்லாத அல்லது, மாப்பிள்ளையை விட மூத்த வயதுடைய மகன் இல்லாத பெற்றோர்களை தேர்வு செய்து, மாப்பிள்ளைக்கு தாய், தந்தையராக மணவறையில் அமர வைத்து, கன்னிகாதானம் என்ற முறையில், கேட்டை நக்ஷத்திர பெண்ணை தாரை வார்த்து கொடுக்கச்சொல்லி பெற்றுக்கொள்ளலாம்.  இவ்வகையில், சித்தப்பா, பெரியப்பா, தாய்மாமன் போன்ற தம்பதியர்கள், மாப்பிள்ளையின் பெற்றோராக சங்கல்பம் செய்துகொண்டு மணவறையில் அமர்ந்து, சாஸ்த்திரப்படி சம்பிரதாயங்களை நிறைவேற்றலாம்.  பெற்றோராக மணவறையில் அமர்ந்திருக்கும் தம்பதியர்கள், மாப்பிள்ளையின் சார்பில், கன்னிகாதானம் பெற்று, பெண்ணை தன் குடும்பத்துக்கு உரிமையாக்கி கொள்கிறார்கள்.  இதனால் மாப்பிள்ளையின் அண்ணன் இல்லாத வீட்டுக்கு பெண் மருமகளாக ஆகிறாள்.  மேலும் வீட்டுக்கழைத்தல் என்னும் கிரகப்பிரவேசம், கன்னிகாதானம் பெற்றுக்கொண்டவர்களின் வீட்டில் நடக்க வேண்டும்.  புதுமண தம்பதியர்கள் தங்கள் வாழ்க்கையை [ முதலிரவு ] அந்த வீட்டிலேயே தொடங்க வேண்டும்.  அதன்பின் தான் வாழ வேண்டிய வீட்டுக்கு, அதாவது, மாப்பிள்ளை அண்ணன் இருக்கும் வீட்டுக்கு செல்லலாம்.  இதே வழிமுறையை பின்பற்றி, விசாக நக்ஷத்திர பெண்ணையும் மருமகளாக்கி கொள்ளலாம்.  அதாவது கன்னிகாதானம் பெறும் பெற்றோர்களுக்கு, மாப்பிள்ளையை விட இளைய வயதுடைய ஆண்வாரிசு இருக்ககூடாது.  அல்லது ஆண்வாரிசே இல்லாமல் இருந்தால் இன்னும் நல்லது.  கேட்டை நக்ஷத்திர பெண்ணுக்கு குறிப்பிடபட்டுள்ள மற்ற எல்லா சடங்கு, சம்பிரதாயங்கள் நடந்தபின் உண்மையில் மாப்பிள்ளைக்கு தம்பி இருக்கும் புகுந்தவீட்டிற்கு சென்று விசாக நக்ஷத்திர பெண் குடும்பம் நடத்தலாம்.

02.  சென்ற பதிவில் விவரிக்கப்பட்ட ஆயில்ய, மூல நக்ஷத்திர பெண்களின் திருமண வழிமுறையை கடைபிடித்தால் இன்னும் நிம்மதி.  எந்த சந்தேகத்திற்கும் இடமிருக்காது.  சென்ற பதிவில் கன்னிகாதான சம்பிரதாயம் நடைமுறைபடுத்தாமல் நிறுத்த வேண்டும் என்றும், அதற்கு திருக்கோவில் சன்னதி திருமணம் மிக உகந்தது என்றும் விவரிக்கப்பட்டிருந்தது.

03.  கேட்டை நக்ஷத்திர பெண்ணை, தன்னுடைய தம்பிக்கு திருமணம் செய்து வைக்கும், அண்ணனே, தம்பிக்கு பெற்றோராக சங்கல்பம் செய்துகொண்டு, மணவறையில் அமர்ந்து, மாப்பிள்ளை என்னும் தன் தம்பியை மகனாக பாவித்து அனைத்து சாஸ்த்திர சம்பிரதாயப்படி திருமணத்தை நிறைவேற்றலாம்.  இதற்கு மஹாபாரதம் நமக்கு வழிகாட்டுகிறது.  இந்த நடைமுறைபடி அண்ணன் தந்தையாகிறான்.  அண்ணி தாயாகிறாள்.  அண்ணி தாய்க்கு சமம் என்று நம் பெரியோர்களின் பொன்மொழியை இங்கு நினைத்து பார்க்க வேண்டும்.  நம் முன்னோர்கள் எதையும் அர்த்தமில்லாமல், நமக்காக சொல்லி வைத்ததில்லை.  இனி மஹாபாரத சம்பவம் ஒன்றை பார்க்கலாம்.

மஹாபாரதத்தில் அர்ஜுனனுக்கும், சுபத்திரைக்கும் திருமணம்.  சுபத்திரை பகவான் ஸ்ரீகிருஷ்ணரின் தங்கை.  திருமணத்தில் கன்னிகாதான நிகழ்ச்சி நடக்க வேண்டும்.  அப்படியென்றால் அர்ஜுனனுக்கு பெற்றோர் மணவறையில் அமர வேண்டும்.  தாயார் குந்தியோ விதவை.  எனவே பெற்றோராக, வேறு வழியின்றி தருமரும், பாஞ்சாலியும் அமரும் நிலை வந்தது.  தருமர் அர்ஜுனனுக்கு அண்ணன்.  பாஞ்சாலி ஒருவகையில் மனைவி இன்னொரு வகையில் அண்ணி முறை.  இருவரும் அர்ஜுனனுக்கு பெற்றோராக அமர சங்கல்பம் செய்துகொண்டு, கன்னிகாதானமும் பெற்றனர்.  மனைவியே / அண்ணியே தாயாக இருந்து நடத்திய திருமணம் இது.  எனவே அன்றுமுதல் அர்ஜுனன் பாஞ்சாலியை தாயாகவும், தருமரை தகப்பனுமாகவே பாவித்து வந்தான்.  அர்ஜுனன் பாஞ்சாலியை நெருங்கவே இல்லை.  மனைவி என்ற உரிமை கொண்டாடவும் இல்லை.  சுபத்திரையோடு வாழ்க்கை நடத்தி அபிமன்யுவை மகனாக பெற்றான்.  இவ்வாறு திருமணத்தில் சாஸ்த்திரப்படி, சங்கல்பம் செய்துகொண்டவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் மாப்பிள்ளைக்கு பெற்றோராகிவிடுகிறனர்.  இவ்வகையில் அண்ணன், தகப்பனாக சங்கல்பம் செய்துகொண்டு, கேட்டை நக்ஷத்திர பெண்ணை கன்னிகாதானமாக பெறும் போது, அந்த அண்ணன், பெண்ணுக்கு மாமனாராகிவிடுகிறார்.  ஜேஷ்டனுக்கு ஆகாது என்ற தோஷம் செயல்படாது.

04.  மாப்பிள்ளைக்கு மூத்த, இளைய சகோதரர்கள், நிலையாக தொலைதூரத்திலோ அல்லது வெளினாட்டிலோ வசிக்கும் நிலை இருப்பினும் கேட்டை, விசாக பெண் தோஷம் செயல்படாது.  காரணம், தோஷ நக்ஷத்திர பெண்கள் வாழ்க்கை நடத்தும் குடும்பத்தோடு, மாப்பிள்ளை சகோதரர்கள் இருக்கப்போவதில்லை.  தொடர்பும் அடிக்கடி நிகழாத வண்ணம் அரிதாகி தொலைதூரமாகி விடுகிறது.  இதே போல் மாப்பிள்ளை, தன் குடும்பத்தை விட்டு தொலைதூரத்திலோ, அல்லது வெளினாட்டிலோ குடும்பம் நடத்தினாலும், தோஷம் செயல்படாது.

இப்படிப்பட்ட ஒரு சில மாற்றங்களை திருமணத்தின் போது மேற்கொள்வதன் மூலமாக, விசாக, கேட்டை நக்ஷத்திர பெண்களுக்கும் நம்மால் ஒரு இனிய இல்லறத்தை, இறைவன் திருவருளால் அமைத்துதர முடியும்.  சிந்திப்போமாக.  நன்றி.  வணக்கம்.   

 
     

" தோஷ நக்ஷத்திர பெண்களின் திருமணம். [ ஆயில்யம், மூலம். ] ",

ம் படைவீட்டம்மா துணை.  வணக்கம்.  " தோஷ நக்ஷத்திர பெண்களின் திருமணம்.  [ ஆயில்யம், மூலம். ] ", ....................  பாரம்பரிய முறையிலான பதிவு............................  ஆயில்யம், விசாகம், கேட்டை, மூலம் ஆகிய நக்ஷத்திரத்தில் பிறந்த பெண்கள், செல்லக்கூடிய புகுந்த வீட்டில், முறையே மாமியார், கொழுந்தன் அதாவது இளையவன், ஜேஷ்டஃன் அதாவது மூத்தவர்,  மாமனார் இருப்பின் அவர்களுக்கு ஆகாது என்று காரணம் காட்டி, பொருத்தம் பார்க்கும்போது, ஜாதகத்தை தள்ளுபடி செய்வது வழக்கமாக உள்ளது.  தவிர்க்க முடியாத சந்தர்ப்பங்களில், இந்த நக்ஷத்திரங்களில் பிறந்த பெண்கள், புகுந்த வீட்டிற்கு மருமகளாக வரும் சூழ்னிலை ஏற்பட்டால் என்ன செய்யலாம்? என்பதற்கு வழிகூறுகிறது இந்த கட்டுரை.

முதலில் மூல நக்ஷத்திரம் சம்பந்தமாக..............................  மூல நக்ஷத்திரத்தில் பிறந்த பெண்ணை, மருமகளாக்கிக்கொண்டால், மாமனாருக்கு ஆகாது.  ஆகவே அவளை ஏற்றுக்கொள்வதா? வேண்டாமா" என்று குழப்பமடையத் தேவையில்லை.  மூல நக்ஷத்திர பெண்ணும், மாப்பிள்ளையின் தகப்பானாரும், மருமகள் மாமனார் என்ற உறவு உறுதி செய்ய்ப்படுவதால்தானே, மருமகள் மாமனார் என்ற உறவு அமைகிறது.  இந்த உறவின் தொடர்பால் பாதிப்பு வந்துவிடும் என்ற கவலையும் வருகிறது.  இப்படி உறுதி செய்யப்படுவதை நிறுத்திவிட்டால் மருமகள் மாமனார் என்ற உறவு ஏற்படாது.  இந்த உறவை உறுதி செய்யும் சம்பிரதாயமே, " கன்னிகாதானம் ", ஆகும்.  இந்த சம்பிரதாயத்தின்படி, பெண்ணை பெற்றவர்கள், கன்னியான தன் மகளை, பிள்ளையை பெற்றவர்களிடத்தில், மருமகளாகவும், பிள்ளையிடத்தில், மனைவியாகவும், தீர்த்தம் கொண்டு தாரை வார்த்து, தானம் கொடுத்து விடுகிறனர்.  இந்த சம்பிரதாயத்தின் மூலம், பெண்ணின் பெற்றோர்கள் மகள் என்ற தங்கள் உறவின் உரிமையை, பிள்ளையை பெற்றவர்களிடமும், பிள்ளையிடமும், முறையே மருமகள், மனைவி என்ற உறவின் உரிமையாக தந்துவிடுகிறனர்.  இந்த சம்பிரதாயத்தை மட்டும் விவாஹ சடங்கில் நிறுத்துவதன் மூலம், மாமனார் மருமகள் என்ற உரிமை சாஸ்த்திர சம்பிரதாயப்படி ஏற்படாது.  பேச்சுக்கு வேண்டுமானால் மாமனார், மருமகள் என்று சொல்லிக்கொள்ளலாம்.  இப்படி உரிமையில்லாத மூல நக்ஷத்திர மருமகளின் பாதிப்பு சாஸ்த்திரப்படி மாமனாருக்கு வராது.  மற்ற விவாஹ சம்பிரதாயங்களின்படி மூல நக்ஷத்திரப்பெண், தன் மனைவி என்ற உரிமையை பிள்ளை மட்டும் பெறுகிறான்.  திருக்கோவில் சன்னதியில் திருமணம் நடக்கும் போது, இந்த கன்னிகாதான நிகழ்வு நடத்தப்படுவதில்லை.  எனவே திருக்கோவில் சன்னதியில் திருமணத்தை வைத்துக்கொள்வதன் மூலம், மூல நக்ஷத்திர பாதிப்பு, மருமகள், மாமனார் இடையே வராது.  மேலும் தம்பதியர் தனிக்குடித்தனம் செல்வதாக இருப்பின் இன்னும் நல்லது.  மாமனார் மருமகள் இருவரது வாழ்க்கையும் ஒரே இடத்தில் அமையப்போவதில்லை..  தம்பதியர்களுக்கு தொலைதூர வாழ்க்கை, அல்லது வெளிநாட்டு வாழ்க்கை அமைந்துவிட்டால் இன்னும் மிக மிக நல்லது.  இவ்வகை வாய்ப்பு உள்ளவர்கள், தங்கள் குடும்பத்திற்கு மூல நக்ஷத்திர பெண்ணை தயங்காமல் தேர்வு செய்யலாம்.  இதே விதி ஆயில்ய நக்ஷத்திர பெண்ணுக்கும் பொருந்தும்.  மாமியார், மருமகள் உறவு சம்பிரதாயப்படி, உறுதி செய்யப்படவில்லை என்றால், ஆயில்யம் மாமியாரை பாதிக்காது.

  இதை இன்னும் ஒரு வகையிலும், சாதகமாக சிந்திக்கலாம்.  பிள்ளையை, சிறுவயதில், பெற்றோர்கள் தத்து கொடுத்திருந்தால், அந்த பிள்ளைக்கு பெற்றோர் என்ற உரிமை பெற்றவர்களுக்கு இருக்காது.  ஆனால் தத்து முறைப்படி தெய்வத்திற்கு மட்டுமே கொடுக்கப்பட்டிருக்கவேண்டும்.  எனவே தெய்வம் பிள்ளையின் பெற்றோர் என்ற ஸ்தானத்திற்கு வந்து விடும்.  இந்த நிலையில் கன்னிகாதானம் பெறும் உரிமை பெற்றவர்களுக்கு இல்லை என்பதாலும், பிள்ளையின் பெற்றோர் தெய்வம் என்பதாலும், திருமணம், தத்து கொடுக்கப்பட்ட தெய்வ சன்னதியில் நடைபெறவேண்டும்.  தெய்வமே தத்து பெற்ற பெற்றோர் என்பதால், மூல / ஆயில்ய நக்ஷத்திர பாதிப்பு தெய்வத்தை ஒன்றும் செய்துவிடமுடியாது.  உறவினர்களிடம் தத்து தரப்பட்ட பிள்ளையாக இருப்பின், அந்த உறவினர்களே பிள்ளையின் பெற்றோராவர்.  எனவே அவர்களும் மூல / ஆயில்ய நக்ஷத்திரப்பெண்ணை கன்னிகாதானமாக தாரை வார்த்து பெற்றுக்கொள்ளக்கூடாது.

மேற்கண்ட வகையில் நாம் திருமணத்தை அமைத்துக்கொள்வதன் மூலம், ஒரு சில சம்பிரதாயங்கள் குறைந்தாலும், திருக்கோவில் திருமணம் என்பதால், அது மனதிற்கு மட்டற்ற மகிழ்ச்சியை தந்துவிடும்.  திருமண சம்பிரதாயங்களை திருக்கோவிலில் நிறைவேற்றிக்கொண்டு, உறவினர், நண்பர்கள் சம்பிரதாயங்களை வழக்கம் போல் திருமண மண்டபத்தில் நிறைவேற்றிக்கொள்ளலாம்.  எனவே இக்கருத்தை பிள்ளையை பெற்றவர்கள் நன்றாக சிந்தித்து பார்த்து உண்மையை உணர்ந்து, திருமண சடங்குகளை இனிதே நிறைவேற்றி, இனிய இல்லறத்தை தம்பதியர்களுக்கு வழங்கி ஆசியளிக்க வேண்டும் என்று வேண்டுகிறேன்.  

குறிப்பு::::::::::::::  இதைபோலவே, விசாகம், கேட்டை நக்ஷத்திரங்களில் பிறந்த பெண்களுக்காக, மஹாபாரத சம்பவம் ஒன்றை அடிப்படையாக கொண்டு, அடுத்த பதிவு இடுகிறேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.  நன்றி.