Friday 19 December 2014

திருமண காரியம் தொடங்கும் முன் பெற்றோரின் கடமைகள்.



ஓம் நமசிவாய.  அனைவருக்கும் வணக்கம்.  திருமண காரியம் தொடங்கும் முன் பெற்றோரின் கடமைகள்.  வாசகர்களுக்கான பதிவு இது.  எந்த ஒரு சுப காரியத்தை தொடங்கினாலும், தெய்வத்தின் திருவருளோடு, சுற்றத்தார் ஆதரவோடு, எந்த வித தங்கு தடையின்றி நடந்து முடியும்போது அந்தன் ஆனந்தமே அளவிட முடியாதது.  அதற்க்காக கடைபிடிக்க வேண்டிய வழி முறைகளை ஜோதிட ரீதியாக எடுத்து சொல்லும் பதிவாக இது அமைகிறது.  இந்த கட்டுரை, பெண்ணுக்கு மாப்பிள்ளை பார்ப்பவர்களுக்காகவும், பிள்ளைக்கு பெண் பார்ப்பவர்களுக்குமாகவும் பொதுவாக எழுதப்பட்டது.  எனவே மகனுக்கு திருமண்ம் செய்ய விரும்புவர்கள், வரன் என்று உள்ள இடத்திலெல்லாம், பெண் என மாற்றியமைத்து வாசிக்க வேண்டுகிறேன்.   

முதலில் நாம் திருமணம் செய்ய இருக்கும் பிள்ளைக்கு கல்யாண திசை வந்து விட்டதா? என் தெரிந்துகொள்ளுதல் அவசியம்.  கல்யாண திசை வந்த பின் சுப காரியத்தை தொடங்கினால், தெய்வத்தில் ஆசி, சுற்றத்தார் ஆதரவு, ஆகியன கிடைக்கும்.  வரன் எளிதில் அமையும்.  நிதிச்சுமை இருக்காது.  பொதுவாக எந்த குறையுமில்லாமல், சுப காரியமானது நிறைவாக நடக்கும்.

கல்யாண திசை வந்து விட்டது என்றால், முதலில் பித்ருக்கள் வழிபாடு, குல தெய்வ வழிபாடு, திருமனம் செய்து கொள்ள இருப்பவரின் இஷட தெய்வ வழிபாடு ஆகியவற்றை குறைவின்றி நிறைவேற்றிவிட வேண்டும்.  கல்யாண திசையில் ஏதேனும், சிறு தடைகள் இருப்பின், அதற்கான பரிகார வழிமுறைகளையும் முடித்து விட வேண்டும்.  இக்கால கட்டத்தில் ஜோதிடரை அணுகும் போது பெற்றோர்கள் ஜோதிடரிடம் தெரிந்துகொள்ள வேண்டிய பலன்களாவன....................

  காதல் திருமணமா? அல்லது நிச்சயிக்கும் திருமணமா?  வரன் அமைவது உறவா?  அன்னியமா?    உறவு என்றால் யார் மூலமாக் வரன் தேடுவது?    அன்னியம் என்றால் சொந்த முயற்சியில், அல்லது தரகர் மூலம், அல்லது இணையதள மூலம் தேடலாமா?    வரனின் அடையாள எப்படி இருக்கும்?  [ உருவம், கல்வி, வசதி, தேடவேண்டிய திசை, தொலைவு ஆகியவை....................] 

மேற்கண்ட தகவல்களை வைத்து வரன் தேடினால் விரைவில் கிடைத்துவிடும்.  இதன் பின் கிடைத்த வரன் ஜாதகத்திற்கு பொருத்தம் பார்ப்பது அடுத்த கடமை.  பொருத்தம் பற்றிய அதிக விபரங்கள் தெரிந்துகொள்ள என் பிளாக் ஸ்பாட் பாருங்கள்.  முகவரி. www.josyamramu.blogspot.com  " தானாகவே திருமண பொருத்தம் பார்த்துகொள்பவர்களுக்கான பதிவு ?, என்ற கட்டுரை 2014, ஃபெப்ரவரி பகுதியில் உள்ளது.  இப்படி ஒரு முழுமையான பொருத்தம் பார்த்துகொள்வதன் மூலம், பொருந்தும் தம்பதியர்க்கு, வம்சவிருத்தி, குடும்பஒற்றுமை, அன்யோன்யம், ஆகியன நல்ல முறையில் அமையும். 

பின் கூடுமானவரை குறை இல்லாத நிறைவான நல்ல நாளில் திருமணம் வைத்துகொள்வது இன்னும் நல்லது.  நல்ல நாள் பார்ப்பதில், நாள்  [ இதில் கரினாள், ஜீவ, நேத்திர நாட்கள் அடங்கும் ], நக்ஷத்திரம், திதி, லக்னம், சந்திராஷ்டமம், அமிர்தாதியோகம், குரு, சுக்கிர மூடம் ஆகியவை முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியவை.  இதில் குறை ஏற்படுவதால், விவாகரத்து, புத்ரபாக்கியமின்மை, ஆகியன ஏற்படுகிறன.  இவைகளையெல்லாம் தவிர்க்கப்படுவதற்காகவே, மேற்கண்ட வழிமுறைபடி திருமண செயல்பாடுகளை திட்டமிட்டால், எல்லாம் இறைவன் திருவருளால் நிறைவாக கை கூடும்.  நன்றி.



Saturday 13 December 2014

கிரகங்களில் நட்பு, பகை கண்டறியும் சூத்திரம்.

ஓம் நமசிவாய.  அனைவருக்கும் வணக்கம்.  கிரகங்களில் நட்பு, பகை கண்டறியும் சூத்திரம்.  ஜோதிடம் பயில்பவர்க்கான பதிவு.  கிரகங்களில் மற்றும் அவற்றின் வீடுகளில் நட்பு, பகை நிர்ணயிப்பதில் சத்யாச்சாரியாருக்கு முன் ஒரு கொள்கையாகவும், அவருக்கு பின் வேறு கொள்கையாகவும் மாறுபட்டுள்ளது.  கிரகங்களில் உச்ச, நீச, மூலத்திரிகோண, ஆட்சி வீடுகள் அறிவதில் எல்லோரும் ஒத்த கருத்துடையவர்களாக இருந்தனர்.  மிக பழமையான நூல்களில் கிரகங்க்ளின் நட்பு, பகை, மற்றும் அவற்றின் வீடுகள் அறிவதில் முரண்பாடுகள் இருந்தன.  உதாரணத்திற்கு, சில நூல்களில் சிம்மத்தில் சந்திரன் நட்பு எனவும், சில நூல்களில் பகை எனவும் வாதிடும் வகையில் உள்ளது.  இந்த குழப்பத்தை போக்கும் வகையில் சத்தியாச்சாரியார் தனது ஜோதிட நூலாகிய சத்தியாச்சாரியத்தில், ஒரு சூத்திரத்தை வகுத்து தந்திருக்கிறார்.  தற்காலத்தில் ஒரு சில பஞ்சாங்கங்களை தவிர மற்ற அனைத்து பஞ்சாங்கங்களும் இந்த சூத்திரத்தையே பின்பற்றுகின்றன.  திருக்கணிதம் முழுக்க முழுக்க நட்பு, பகையை இந்த சூத்திரம் கொண்டே தீர்மானிக்கிறது. 

சத்தியாச்சாரியாரின் சூத்திரம்........................." ஒரு கிரகம் தான் மூலத்திரிகோணம் அடையும் ராசியிலிருந்து, 2. 4. 5. 8. 9. 12 ஆம் வீடுகளை நட்பாகவும், அதன் ராசியதிபதிகளை நண்பர்களாகவும் கொள்ளும்.  அது போல் 3. 6. 7. 10. 11 ஆம் வீடுகளை பகை வீடாகவும், அதன் ராசியதிபதிகளை பகைவர்களாகவும் கொள்ளும். " ...........................

இதன்படி சந்திரனின் மூலத்திரிகோண வீடாகிய ரிஷபத்திலிருத்து சூரியனின் வீடாகிய  சிம்மம் 4 ஆவது வீடு என்பதால் சந்திரனுக்கு சிம்மம் நட்புவீடு, அதன் அதிபதி சூரியன் நட்புக்கிரகம்.  அதுபோல் சூரியனின் மூலத்திரிகோண வீடாகிய சிம்மத்திலிருந்து, சந்திரனின் வீடாகிய கடகம் 12 ஆவது வீடு என்பதால் சூரியனுக்கு கடகம் நட்பு வீடு.  அதன் அதிபதி சந்திரன் நட்புக்கிரகம். இதுபோல் மற்ற கிரகங்களுக்கும் கணிக்கலாம்.  சூரிய சந்திரர்களுக்கு முறையே ஒவ்வொரு வீடு மட்டுமே உள்ளது.  இரு வீடுகள் கொண்ட கிரகங்களின் நட்பு, பகை எவ்வாறு கணிப்பது?

மேற்கண்ட கேள்விக்கு விடை தேடும்போதுதான் கிரகங்களில் " சமம் " என்ற ஒன்று உருவாக்கப்பட்டது.  சத்தியாச்சாரியாருடைய நூலுக்கு முன்னால் இந்த சமம் என்பது கிடையாது.  நட்பு, பகை மட்டுமே இருந்தன.  உதாரணத்துக்கு இரு வீடுகள் கொண்ட செவ்வாயை கொண்டு சுக்கிரனுக்கு  செவ்வாய் எவ்வகை என கணிப்போம்.  சுக்கிரனின் மூலத்திரிகோண வீடாகிய துலாத்திலிருந்து மேஷம் 7 வது வீடு என்பதால் பகை.  ஆனால் விருச்சிகம் 2 வது வீடு என்பதால் நட்பு.  இப்படி பகை, நட்பு என இரண்டாக வரும் போது, இரண்டுக்கும் பொதுவாக சமம் என கொள்ள வேண்டும்.  எனவே சுக்கிரனுக்கு விருச்சிகமும், மேஷமும் சம வீடுகள்.  அவைகளின் அதிபதி செவ்வாய், சுக்கிரனுக்கு சம கிரகம். 

இப்படியாக பிற்காலத்தில் சமம் என்ற ஒரு புதிய வகை உருவாக்கப்பட்டு, குழப்பம் தவிர்க்கப்பட்டது.  இந்த புதிய முறையை சில வாக்கிய கொள்கையாளர்கள் இன்று வரை ஏற்றுகொள்ளவில்லை.  ஒரு சில வாக்கிய கொள்கையாளர்களும், முழுக்க, முழுக்க திருக்கணித கொள்கையாளர்களும் இந்த புதிய முறையை ஏற்றுக்கொண்டு, தற்போது பஞ்சாங்கங்களை வெளியிட்டு வருகிறனர்.  தற்போது இந்த புதிய முறையே பெரும்பான்மையாக உள்ளது.  திருக்கணித முறையை பின்பற்றும் நாம் அனைவரும் இதையே பின்பற்றுவோம்.  நன்றி.   

Wednesday 26 November 2014

புத்ரபாக்கியமு, புத்ர ஹானியும் [ புதன் கிரகம் ]

ஓம் நமசிவாய.  அனைவருக்கும் வணக்கம்.  புத்ரபாக்கியமு, புத்ர ஹானியும் [ புதன் கிரகம் ] என்ற இந்த பதிவை இட ஒரு காரணம் உள்ளது.  கடந்த 16.11.2014 அன்று முகனூல் ஜோதிடர் சபை சேலம் கருத்தரங்கில், புதனை பற்றி என்னால் சொல்லப்பட்ட இரு வரி கருத்தின் விளக்கமாக இதை வெளியிட்டிருக்கிறேன்.  பிருகுசூத்திரம் என்ற வடமொழி ஜோதிட நூல் கூறும் பலன் ஒன்றின் அடிப்படையில் அந்த இரு வரிகளை பேசினேன்.  புதனுக்கு புத்ரஹானி என்னும் காரகத்துவம் உண்டு என்றும், அதனால் புதன் புத்ர பாக்கிய ஸ்தானத்தில் எந்த நிலையில் இருந்தாலும் புத்ரபாக்கியம் தடுப்பார்., என்றும், குழந்தை பிறக்காது என்றும் நான் கூறியதன் விளக்கம் இது.

புதன் புத்ர பாக்கிய ஸ்தானத்தில் இருந்தால் குழந்தை பிறக்காது என்று பிருகுசூத்திரம் கூறுகிறது.  சில நூல்கள் புத்ர பாக்கியம் தாமதமாகும் என்று சொல்கிறன.  இன்னும் சில நூல்கள் குழந்தை பிறக்கும் என்றும் சொல்கிறன. உதாரணத்திற்கு பலதீபிகை குழந்தை பிறக்கும் என்கிறது.  நூல்களுக்குள் ஏனிந்த வேறுபாடு?  ஜோதிடம் அறியாதவர்கள் இயற்றியதா? என்றால் இல்லை.  பின் ஏன் இந்த குழப்பம் என்று ஆய்வுசெய்வதே இப்பதிவின் நோக்கம்.

புதன் அதிக வலுவுடன் இருக்ககூடிய ஸ்தானம் கன்னி.  இதில் புதனுக்கு, ஆட்சி, உச்சம், மூலத்திரிகோணம் என்ற ஸ்தானத்திற்கு அதிபதி என்ற பெருமை சேரும்.  இதுவே புத்ரபாக்கிய ஸ்தானமாக அமைந்தால் அவர் புத்ரஸ்தானாதிபதியாகிறார்.  ஒரு ஸ்தானாதிபதி, அதே ஸ்தானத்தில் நல்ல வலுவுடன் இருந்தால் அந்த ஸ்தானத்தின் பலன் தடையின்றி கிடைக்கும் என்பது ஜோதிடவிதி.  அதன்படி ரிஷப லக்ன ஆண்களுக்கும், மகர லக்ன பெண்களுக்கும் அவர் புத்ர பாக்கியத்தை தடையின்றி வழங்க வேண்டும்.  ஆனால் பலதீபிகையின் பலன் அப்படியில்லை.  புதன் புத்ர ஹானி, அதாவது புத்ர பாக்கியத்தை கெடுப்பவர் என்பதால், மிக அதிக வலுவுடன் இருக்கும் புதனின் காரகத்துவமானது செயல்பட்டு புத்ர பாக்கியத்தை தடை செய்துவிடும் என்ற பிருகுசூத்திரத்தின் கருத்து ஏற்புடையதாக இருக்கிறது.  ஆக புதன் குழந்தை பேற்றை தருவாரா? அல்லது தடை செய்வாரா? என்பது கேள்விக்குறியாகிறது.  இதற்கு தீர்வு?????.....

புத்ர பாக்கியம் என்பது இருவர் சம்பந்தப்பட்ட விஷயம்.  தனியொருவர் ஜாதகத்தை மட்டும் வைத்துக்கொண்டு முடிவுக்கு வருவது தவறான பலனையே காட்டும்.  ஆணுக்கு இல்லை என்றும், பெண்ணுக்கு உண்டு என்றும் இருந்தால் புத்ர பாக்கியம் தாமதமாக கிடைக்கும்.  இருவருக்கும் தாமதம் என்றால், அதற்கான பரிகார வழிபாடு செய்து மிக தாமதமாக புத்ர பாக்கியத்தை பெறலாம்.  இருவருக்கும் இல்லை என்று ஆகிவிட்டால் நிச்சயம் புத்ர பாக்கியம் கிடைக்காது.  இது பொதுவான் பலன். புதன் கன்னியில் இக்கட்டான சூழ்னிலையில் இருக்கும் போது பெண்ணின் ஜாதகத்தில் தாமதம் என்றோ, இல்லை என்றோ ஆகிவிட்டால், ஆணின் ஜாதகத்தில் உள்ள புதனால் புத்ர பாக்கியம் தர முடியாமல் போகும்.  அதேனேரம் பெண்ணின் ஜாதகத்தில் புத்ரபாக்கியம் நல்ல வலுவுடன் இருந்தால், கிடைக்கும் பாக்கியமானது தாமதப்படும்.  இதையே மேற்கண்ட நூல்கள் கிடைக்காது, தாமதம், கிடைக்கும் என்றெல்லாம் மாற்றி மாற்றி சொல்கிறன.

புதன் சுபகரமாக, தன்புத்ரபாக்கிய ஸ்தானத்திலேயே இருக்கும் போதே இந்த கேள்விக்குறி நிலை என்றால் மற்றவர்களின் புத்ரபாக்கிய ஸ்தானத்தில் இருந்தால் நிச்சயம் புத்ரபாக்கியம் வாய்க்காது என்பது புலனாகிறது.  அதிலும், குருவுடன் சேர்ந்திருந்தால், காரகோ பாவ நாஸ்தி என்ற அடிப்படையில் புதனுடன் இணைந்து, நிச்சயம் புத்ரபாக்கியத்தை குரு கெடுத்துவிடுவார்.  எனவே புதனோடு பாபகிரகங்களின் தொடர்பு என்பது புத்ரபாக்கியத்துக்கு வழிவகுக்காது என்றும் சொல்லிதெரியவேண்டியதில்லை..  இதை பற்றி இன்னும் விரிவாக சொல்லவேண்டுமென்றால் ஒரு சிறிய அளவிலான நூலையே எழுதிவிடலாம்.  மொத்தத்தில் கூட்டி கழித்து பார்த்தால் புத்ரபாக்கியம் புதனால் கிடைக்காது என்பதே பெரும்பான்மையாக அமையும்.  ஆகவே பொதுவாக பிருகுசூத்திரமானது, அழுத்தம் திருத்தமாக, ஐந்தில் புதன் இருந்தால் புத்ரபாக்கியம் இருக்காது என்று கூறுகிறது.  இதை அடிப்படையாக வைத்தே சேலம் கருத்தரங்கில், புதனால் புத்ரபாக்கியம் தர இயலாது என்று பேசியிருக்கிறேன் என்பதை ஒரு விளக்கமாக உங்கள் அனைவருக்கும் பணிவன்போடு தெரிவித்துக்கொள்கிறேன்.

மேலே நான் சொல்லியிருக்கும் விதி முறைகளை ஒவ்வொரு லக்னத்திற்கும் ஒப்பிட்டு கணக்கிட்டு பாருங்கள் மிக சரியாக வரும்.  ஆகவே ஆணோ, பெண்ணோ.......................இருவரில் ஒருவரின் ஜாதகத்தில் புத்ரஃபாக்கிய ஸ்தானத்தில் புதன் இருந்துவிட்டால் புத்ரபாக்கியம் மிகப்பெரும் கேள்விக்குறிதான் என்பதில் சந்தேகமேயில்லை.  நன்றி.

Thursday 6 November 2014

ஜோதிடம் பயில்பவர்களின் கவனத்திற்கு..............



ஓம் நமசிவாய.  அனைவருக்கும் வணக்கம்.  குறிப்பாக ஜோதிடம் பயில்வோர் கவனத்திற்கு இந்த பதிவு.  இந்த பதிவில் ஜாதகம் கணிப்பதை கற்றல் மற்றும் பலன் உரைத்தல் பற்றிய முக்கியத்துவம் பற்றி ஒரு சிறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.  முதலில் ஜோதிடம் பயில விரும்புபவர் தனது ஜாதகத்தில் அதற்கான கொடுப்பினை உள்ளதா? என அறிந்து கொள்ளுதல் அவசியம்.  அது ஏண்? என்பதற்கான காரணங்களையும்  இந்த பதிவு ஆராய்கிறது.  ஒரு குறுகிய காலத்திற்குள் ஜோதிடக்கலையில் தேர்ச்சி பெற்று விட முடியாது என்ற விழிப்புணர்வையும் விளக்கவே இந்த பதிவு.

ஒருவரது பிறந்தனாள், நேரம், ஊர், பெயர் ஆகியவற்றை நாலு ஜோதிடரிடம் தந்தால், ஜாதகத்தை நால்வரும் ஒரே மாதிரியாக கணித்து தந்துவிடக்கூடும்.  அதே ஜாதகத்தை அதே நால்வரிடம் தந்து பலன் கேட்டால் நாலு பேரும் நாலு வகையாக பலன் சொல்வர்.  இதிலிருந்து ஜாதகம் கணிப்பதை விட பலன் சொல்வது கடினமான செயல் என புரியும்.  ஜாதகம் கணிப்பதும் அவ்வளவு எளிதான செயல் அல்ல.  அதை தற்போதைய கணிணிகள் எளிதாக்கிவிட்டன என்று எண்ணிக்கொண்டிருக்கிறோம்.  கணிணிகள், ஜாதகம் கணிக்கும்போது, ஸ்திரிகாலம், புருஷகாலம், லக்னசந்தி, ராசிசந்தி, நக்ஷத்திரசந்தி ஆகியவற்றை சரி பார்ப்பதில்லை.  இவைகளையும் சரி பார்த்து கணிக்கப்படுவதே சரியான ஜாதகமாகும்,  இப்படிப்பட்ட ஒரு ஜாதகத்தை நன்றாக கற்றறிந்த ஜோதிடரால் மட்டுமே கணிக்க இயலும் என்பது உண்மை.  எனவே ஜோதிடம் பயில்வோர்கள் நல்ல கற்றறிந்த ஜோதிடராக மாறவேண்டும் என்று விரும்பினால் ஜாதக கணிதத்தை முழுமையாக கற்றுக்கொள்ளவேண்டும். 

பலன் உரைப்பதை முழுமையாக கற்றுக்கொண்டேன் என்று நான் உட்பட எந்த ஜோதிடராலும் சொல்ல முடியாது.  ஆனால் ஜாதகம் கணிக்க முழுமையாக கற்றுக்கொண்டேன் என்று,  முயன்றால் ஜோதிடம் பயில்பவர்களாலும் சொல்லமுடியும்.  எனவே முதலில் ஜாதக கணிதம் அறிந்துகொள்வதை குறிக்கோளாக கொள்ளவேண்டும்.  அதுமட்டுமல்லாமல், நம்மிடம் வருகிற ஜாதகம் சரியாக கணிக்கப்பட்டுள்ளதா? என்று தெரிந்துகொள்ள, லக்னம், நவாம்சம், பாவசக்கரம், சோடச வர்கங்கள், தசாபுக்தி கணிதம், ஷட்பல கணிதம், அஷ்டவர்க கணிதம், போன்றவைகளை எந்த அடிப்படையில் கணக்கிடப்படுகிறது என்றும் தெரிந்துவைத்துக் கொள்ளவேண்டியுள்ளது.  தவறாக கணிக்கப்பட்ட ஜாதகத்தை நம்பி பலன் உரைத்தால், ஜாதகப்படி பலன் துல்லியமாக இருந்தாலும், ஜாதகரை பொறுத்தவரை எல்லாம் தவறாகிப்போகும்.   இவற்றையெல்லாம் நன்றாக பயின்று அறிய நல்ல கணித அறிவு தேவை.  எனவே பயில முனைபவர்கள் தங்கள் ஜாதகத்தில் அதற்கான அமைப்பு உள்ளதா? என்று அறிந்துகொள்ளவேண்டும்.  இதற்கு ஜாதகத்தில் புதன் நல்ல முறையில் அமைவதோடு, நான்காம் பாவமும் சுபமாக இருக்க வேண்டும்.

அடுத்து, பலன் உரைக்கும் நூல்களில் ஹோராசாரம், சாராவளி, பாராசரியம், சந்தான தீபிகை, பிருகத் ஜாதகம், சர்வார்த்த சிந்தாமணி, மணிகண்ட கேரளம், ஜம்புனாதியம் போன்றவை முக்கிய நூல்களாகும்.  இந்த பட்டியலிலுள்ள நூல்களை கொண்டு, தாம் ஜாதக அலங்காரத்தை இயற்றியதாக திரு. கீரனூர் நடராஜனார் அவர்கள் தெளிவுபட சொல்லியிருக்கிறார்கள்.  இப்படிப்பட்ட நூல்கள் ஏகப்பட்டவை உள்ளன.  அவைகளை எல்லாம் கற்று தேர்வது மிகவும் கடினம்.  மேலும் பலன் உரைக்கும் விதிமுரைகளை அறிவுருத்தும் நூல்களும், அதன் உரைகளும் ஒன்றுக்கொன்று வித்தியாசப்படுகின்றன.  இவைகளை ஆய்வு செய்து, எந்த வழிமுறை நமக்கு பலிதமாகிறது என்று தெரிந்துகொள்ளவே பல ஆண்டுகள் சென்று விடும்.  இந்த ஆண்டுகளின் எண்ணிக்கையே அனுபவம் என்கிறோம்.  இதை பயிற்சி நிலையங்களில் பெற இயலுவதில்லை.  இதையும் தாண்டி இன்னொரு விஷயமும் உள்ளது.  அதுவே தெய்வீக உள்ளுணர்வும், வாக்குபலிதமுமாகும்.  கல்வியில் மிக குறைந்தவர்கள் கூட மிக சரியாக ஆச்சரியப்படும் வகையில் பலன் உரைப்பதை நாம் அறிவோம்.  இதற்கு காரண்ம் இறையருளும், குருவருளும் அவர்களுக்கு வழங்கியிருக்கும்,, இந்த தெய்வீக உள்ளுணர்வும், வாக்குபலிதமுமாகும்.  இதை நம்மால் எந்த விலை கொடுத்தும் வாங்க  இயலாது.  இப்படி பலன் உரைப்பதில், அனுபவமும், தெய்வீக உள்ளுணர்வும், வாக்குபலிதமும் நமக்கு கிடைக்க, வாக்குஸ்தானமும், பாக்கியஸ்தானமும், குருவும் நல்ல முறையில் நம் ஜாதகத்தில் அமைந்திருக்க வேண்டும்.  இந்த அமைப்புகளை பொறுத்தே ஒருவர் வெற்றிகரமான, சிறந்த ஜோதிடராக திகழமுடிகிறது.

ஆகையால், ஜோதிடம் பயில விரும்புவர்கள், முதலில் தங்கள் ஜாதகத்தில் அதற்கான கொடுப்பினை இருக்கிறதா? என அறிந்துகொள்ளுங்கள்.  பின் அவசியம் ஜாதக கணிதம், பலன் உரைக்கும் வழிமுறை கற்று தரும் நல்ல பயிற்சி மையத்தில் இணையுங்கள்.  அதன்பின் அனுபவம் பெற நல்ல குருனாதரை நாடுங்கள்.  குருவருளும், இறையருளும் இணைந்து வாக்குபலிதத்தையும், தெய்வீக உள்ளுணர்வையும் தரட்டும்.  வெற்றிகரமான ஜோதிடர்களாக திகழுங்கள்.  அனைவரின் சார்பாக வாழ்த்துக்கள். 


Monday 27 October 2014

ஜாதகமும் பரிகார வழிபாடுகளும்.



ஓம் நமசிவாய.  அனைவருக்கும் வணக்கம்.  பரிகார வழிபாடுகள் பற்றிய முழுதகவல்களை ஜாதகர்களுக்கு தெரிவிக்கும் பதிவு இது.  திரு கீரனூர் நடராஜன் அவர்கள் இயற்றிய ஜாதக அலங்காரம் என்னும் நூல் ஜோதிடர்களுக்கு ஒரு அறிவுரையை வழங்குகிறது.  இந்த அறிவுரை 11 வது பாடலாக இடம் பெற்றுள்ளது. 

' பிரம்மதேவர் அவரவர்கள் முற்பிறவியில் செய்த நல்வினை தீவினைகளுக்கேற்ப அவரவர்களது தலையெழுத்தை நிர்ணயிக்கிறார்.  பிரம்மதேவர் விதித்த அந்த விதி என்னவென்று எடுத்தியம்புவதே ஜாதகமாகும்.  ஜாதகத்திலுள்ள பன்னிரண்டு பாவங்களை கொண்டு அவர்வர்களுக்கு இப்பிறவியில் நடக்கவிருக்கின்ற நன்மை என்ன/ தீமை என்ன/ என்று பெரியோர்கள் கண்டறிந்து கூறியிருக்கின்றனர்.  நன்மை வருமானால் அதை எடுத்து சொல்லி, மனிதர்களை ஆனந்தப்படுத்துவதற்கும், தீமை வருமானால் அதற்கான பரிகாரத்தை எடுத்து சொல்லி மனிதர்களை ஆற்றுப்படுத்துவதற்கும், ஜாதக கணிதத்தை பெரியோர்கள் வகுத்துரைத்துள்ளனர் '.

இதிலிருந்து பரிகாரங்களை எடுத்துரைப்பதும், அதற்கு வழிகாட்டுவதும் ஒரு ஜோதிடரின் கடமையென புரிந்துகொள்ளலாம்.  நல்வினைகளை ஜாதகர்கள் தானே அனுபவிப்பர்.  இந்த நல்வினை பயன்களை முழுமையாக தடையின்றி பெற குலதெய்வ வழிபாடும், இஷ்டதெய்வ வழிபாடும், பிதுர் வழிபாடும் முறையாக செய்து வருதல் வேண்டும்.  இது எல்லோருக்கும் பொதுவானது.  தீவினை பலன்கள் தரக்கூடிய ஜாதகங்களை இருவகையாக பிரிக்கலாம்.  அவை..............

1.  தீவினை பலன்கள் அனுபவித்தே ஆக வேண்டிய ஜாதகங்கள்.
2.  பரிகார வழிபாடுகளால் தீவினைகளை குறைக்கவும், தவிர்க்கவும் வழிவிடக்கூடிய ஜாதகங்கள்.

முதல்வகை ஜாதகங்களுக்கு பாக்கியஸ்தானம் முற்றிலுமாக கெட்டுப்போயிருக்கும்.  இவ்வகை ஜாதகர்களுக்கு எவ்வித பரிகார வழிபாடுகளும் செல்லுபடியாகாது.  எனவே அவர்கள், முன் சொல்லப்பட்டதுபோல் குலதெய்வவழிபாடையும், இஷ்டதெய்வவழிபாடையும், பிதுர் வழிபாடையும் தவறாது செய்து வருதல் வேண்டும்.  பிதுர்வழிபாடு விடுபட்டு போயிருப்பின் திலஹோமம், அல்லது குறிப்பிட்ட சில ஸ்தலங்களுக்கு சென்று வழிபாடு செய்து விடுபட்டு போன பிதுர் வழிபாட்டு குறையை நிவர்த்தி செய்துகொள்ளலாம்..

இரண்டாம் வகை ஜாதகங்ளில் பாக்கிய ஸ்தானம் நல்ல முறையில் அமைந்திருக்கும்.  இவ்வகை ஜாதகங்களை இரு வகையாக பிரிக்கலாம்.

1.  சுப கிரகங்கள் நல்லயோகம் தரும் நிலையில் இருந்தும், அவற்றில் தாமதம், அல்லது தடை ஏற்படும் வகையில் அமைந்திருப்பது.
2.  ஜாதகத்தில் நல்லயோகம் கிடைக்கும் நிலை இருந்தும் அசுப கிரகங்களால் தடுக்கப்படுவது.

இவ்விருவகையான ஜாதகர்களுக்கும் இருவகையான பரிகார வழிபாடுகள் உள்ளன.  இவற்றை முறையாக செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.  மாற்றி செய்யும்போது பலன் ஏறுக்கு மாறாக அமைந்துவிடும்.  எந்த வகை வழிபாடாக இருந்தாலும். அவ்வழிபாடு மனமொன்றி செய்தலும் அவசியம். மேற்கண்ட இருவகை ஜாதகங்களுக்கும் திருக்கோவில் பரிகார வழிபாடு, மற்றும் அதற்கேற்ற தான தருமங்கள் செய்தல் அவசியம்.  திருக்கோவில் பரிகார வழிபாடால் பரமாத்மாவை வணங்குகிறோம்.  தானதருமங்களால் இவ்வுலக ஜீவாத்மாக்களுக்கு உதவுகிறோம்.  இதை ஜாதகர்கள் மறந்துவிடலாகாது. மேலும் முதல்வகை ஜாதகர்கள் வழிபடும்போது, நல்லயோகங்களை விரைந்து தடையின்றி வழங்கியருளுமாறும், இரண்டாம் வகை ஜாதகர்கள் யோகங்கள் பெறுவதில் உள்ள தடைகளை நீக்கியருளுமாறும் வேண்டிக்கொள்ளவேண்டும்.  இவ்விரண்டுக்கும் உள்ள வித்தியாசத்தை உணர்ந்து வழிபடுவது சாலச்சிறந்தது.  இதன் பின்பு தொடர்ந்து செய்யக்கூடிய வழிபாடுகளில் வித்தியாசங்கள் உள்ளன.  முதல்வகை ஜாதகங்களுக்கு, நவரத்தினகற்கள், எந்திரம் ஆகியவற்றின் துணையால் நல்ல யோகங்களை தாமதமின்றி, தடையின்றி விரைவாக கிடைக்கும்..  இதே நவரத்தினகற்கள், எந்திர வழிபாடை இரண்டாம் வகை ஜாதகங்களுக்கு பரிகார வழிபாடாக மேர்கொண்டால், அசுபகிரகங்களின் சக்தி அதிகரித்து, பலன் எதிர்வினையாகிவிடும்.  இரண்டாம்வகை ஜாதகங்களுக்கு, வீட்டிலேயே ஜாதகர் ஹோமம் செய்து வழிபடுவதே சிறந்தவழியாகும்..

கடைசியாக ஒரு முக்கிய குறிப்பு.  ஜனன ஜாதகத்தில் ஒரு நல்ல யோகம் இல்லையென்றால், என்ன வழிபாடு செய்தாலும் நல்லது நடந்துவிடாது.  ஆனால் ஏமாற்றி பிழைக்கும் சில ஜோதிடர்கள், இல்லாததை வரவழைத்துவிடலாம் என்றும் மந்திர, எந்திர வழிபாடு செய்யலாம் என்றும் தந்திரம் புரிந்து பணம் பறித்துவிடுகிறார்கள்.  இம்மாதிரியான ஜோதிடர்களிடம், ஜாதகர்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.  எனவே நல்ல அனுபவமுள்ள, மனிதநேயமுள்ள ஜோதிடரை அணுகி, சரியான வழிகாட்டுதலுடன், பரிகார வழிபாடுகளை நிறைவேற்றி வாழ்க்கையில் வளம் பெறுங்கள்.  இறைவன் திருவருள் புரிவானாக.  நன்றி.  வணக்கம்.