Monday 2 March 2015

தேவாரமும் ஜோதிடமும் ...............ப்குதி 1



எல்லோருக்கும் வணக்கம்.  கடந்த 24.02.2015 அன்று பெ;ருந்துறையில், திரு அவர்களால் நிகழ்த்தப்பெற்ற " ஜோதிட முழக்கம் ", நிகழ்ச்சியில்,, ' கேவாரமும் ஜோதிடமும் ', என்னும் தலைப்பில் நான் உரையாற்றிய உரையின் தொகுப்பு இது. 

ஜோதிட சாஸ்த்திரத்தை நமக்கெல்லாம் எடுத்து சொல்வதற்காக ரிஷிகளும், சித்தர்களும் பல ஜோதிட நூல்களை இயற்றியுள்ளனர்.  ஆனால் தேவாரம் என்பது அப்படிப்பட்ட ஜோதிட சாஸ்த்திர நூலல்ல.  ஸ்ரீஅப்பர், ஸ்ரீசுந்தரர், ஸ்ரீதிருஞானசம்பந்தர் ஆகிய மூன்று நாயன்மார்களால் பாடப்பெற்றதாகும்.  இது அவர்கள் இறைவன் மீது கொண்ட பக்தி அனுபவத்தின் வெளிப்பாடு.  இதில் ஜோதிடம் சாரந்த செய்திகளையும் தன்னகத்தே கொண்டுள்ளது.  இப்படிப்பட்ட தேவார பதிகங்களில் ஜோதிடம் சார்ந்த செய்திகளை அதிகமாக கொண்டது, ' கோளறு பதிகம் ' ஆகும்.  இதை ஸ்ரீதிருஞானசம்பந்தர அருளி செய்திருக்கிறார்.  கோளறுபதிகம் மொத்தம் 11 பாடல்களை கொண்டது.  அதில் மூன்று பாடல்களை மட்டும் இப்போது பார்ப்போம்.  முதல் பாடல்.

வேயுறு தோளி பங்கன், விடமுண்ட கண்டன்,
  மிக நல்ல வீணை தடவி,
மாசறு திங்கள் கங்கை முடிமேல் சுமந்து
  என் உளமே புகுந்த அதனால்,
ஞாயிறு, திங்கள், செவ்வாய், புதன், வியாழம்
  வெள்ளி, சனி, பாம்பிரண்டுடனே
ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல
  அடியார் அவர்க்கு மிகவே.

இதன் பொருளாவது.  நாம் சிவபெருமானுடைய அடியவர்களக ஆகிவிட்டால், எல்லா கிரகங்களும், நல்லவையே.  அவைகள் நன்மை செய்யும்.  இதன் மூலம் நாம் அறிந்துகொள்ள வேண்டியதாவது.  கிரகங்களால் கெடுதல் நேரும் போது, அவைகளுக்கு தக்க ப்ரீதி, சாந்தி செய்வதை விட இறையடியார்களாக மாறிவிட்டோமானால் மற்ற பரிகார வழிபாடுகள் தேவையில்லை.  பிரீதி என்பது கிரகங்களுக்கும், அவைகளின் அதிதெய்வங்களுக்கும் அபிஷேக ஆராதனைகள் செய்து வழிபடுவதும், கிரக காரகத்துவங்கள் கொண்ட ஜீவாத்மாக்களுக்கு வேண்டிய உதவிகளை செய்வதும் ஆகும்.  சாந்தி என்பது கிரகங்களுக்குரிய ஹோமங்கள், யாகங்கள், இயந்திர வழிபாடுகள் செய்வது.  சில நேரங்களில் பரிகார வழிபாடுகள் செய்தும் பலனளிக்காத நிலைகளை காணமுடிகிறது.  அப்படியிருக்க இதை எவ்வாறு நம்புவது? என்ற கேள்வி எழலாம்.  நம்மை பற்றி முன்னரே தெரிந்து வைத்திருக்கும் ஸ்ரீஞானசம்பந்தர் தன்னுடைய 11 வது பதிகத்தில் '  ஆணை நமதே ', என உறுதியாக சத்தியம் செய்து புகல்கிறார். 

கிரகங்களில் சூரியன், செவ்வாய், சனி, ராகு, கேது ஆகியவை நல்ல கிரகங்களல்ல என நாம் அறிந்ததே.  இதில் சந்திரனின் பிறைக்கு தகுந்தவாறு அது நல்ல கிரகமாகவும், கெட்ட கிரகமாகவும் மாறுகிறது.  புதன் சுபர்களுடன் சேரும்போது நல்ல கிரகமாகவும், பாபர்களுடன் சேரும்போது கெட்ட கிரகமாகவும் விளங்குகிறது.  மீதம் உள்ள குரு, சுக்கிரன் மட்டுமே எப்போதும் நல்ல கிரகங்கள்.  இப்படி கிரகங்களில் பிரிவினை உண்டு.  ஆனால் நாம் இறையடியாராக மாறும் போது கிரகங்களில் பிரிவினை இல்லாம,ல் எல்லாமே நல்ல கிரகங்களாக மாறி நன்மை செய்கின்றன.  கெட்ட கிரகங்களின் தாக்கத்திலிருந்த விடுபடவும், அல்லது அதை தாங்கிக்கொள்ளவும், நாம் பரிகார வழிபாடுகளை மேற்கொள்கிறோம்.  அவைகளுக்கு என்று சில முறையான வழிகள் உள்ளன..  அதுபோல் அடியார்களாக மாறுவதிலும் சில முறையான வழிகாட்டுதல்களை நம் முன்னோர்கள் கூறிவைத்துள்ளனர். 

வழிபாடில் முக்கரண வழிபாடு என்பது உண்டு.  மனம், மொழி, மெய் ஆகியன முக்கரணங்கள்.  மனதால் வழிபடுவது மனவழிபாடு என்றும். நம் நாவால் இறைவன் திருனாமத்தையோ அல்லது மந்திரத்தையோ உச்சரிப்பது மொழி வழிபாடு என்றும்,.  உடலால் தொண்டு செய்வதுடன், தலைவணங்கி, சாஷ்டாங்கமாய் விழுந்து நமஸ்கரிப்பதும் மெய் வழிபாடுஎன்றும் நம் முன்னோர்கள் நமக்கு வழி காட்டியுள்ளனர்.  இதில் சிறந்ததாக மொழி வழிபாடை கருதுகிறேன்.  நாம் மனதால் வழிபடும்போது, வழிபாடு நம் மனதுக்கு மட்டும் தெரியும்.  மெய்யால் வழிபடும்போது, இந்த வழிபாடை கண்ணுறுபவர்களுக்கு மட்டுமே தெரியும்.  இதனை கண்ணுறுவோர்களும், இறைவனை சிந்திக்க மெய்வழிபாடு ஒரு காரணியாக அமைகிறது.  மொழியால் இறைவன் திருனாமத்தை அல்லது மந்திரந்த்தை உச்சரிக்கும்போது, காண்போர், கேட்போர் அனைவரும் இறைவனை சிந்திக்கிறனர்.  ஆகவே எல்லோரையும் இறைவன் மீது கவனம் கொள்ள செய்வது மொழிவழிபாடாகும். எனவே நம் பெரியோர்கள் இறைவன் திருனாமத்தையே குழந்தைகளுக்கு பெயர்களாக சூட்டினர்.  ஒரு முறை அந்த குழந்தையை அழைக்கும் பொருட்டு, குழந்தையின் பெயரை உச்சரிப்பதன் மூலம் நாம் நம்மையறியாமல் மொழிவழிபாடை செய்துவிடுகிறோம்.  எனவே நாம் நம் குழந்தையின் பெயரை முழுவதுமாக நன்றாக நாவால் உச்சரித்து அழைக்கவேண்டும்.  ஜெகன்னாதன் என்ற இறைவன் திருனாமத்தை ஜக்கு என்று உச்சரிப்பது பெரும் பாவமாகும்.  தடுக்கினால் கூட இறைவன் திருனாமத்தை சொல்ல வேண்டும் என்று நம் முன்னோர்கள் சொல்லிவைத்துள்ளனர்.  அதுவும் மொழிவழிபாடுக்கு சமமாகும்.  ஆனால் நாம் ஐயோ என்றுதானே சொல்கிறோம்.  ஐயோ என்பது இறைவன் திருனாமமல்ல.  யமனின் மனைவி பெயர்.  இவ்வாறு இல்லாமல் இறை சிந்தனையுடனே, அவன் நாமத்தை சொவதன் மூலம் நாம் அடியார் என்ற தகுதியின் முதல் படியில் ஏறத்தொடங்குகிறோம்.  இந்த வழிபாடே கிரகங்களை நல்ல கிரகங்களாக மாற்றி நன்மை செய்ய வைக்கிறது, என்பதை உணர்ந்து, அவன் அடியாராக மாற முயல்வோமாக.  [ இன்னும் இரு தேவார பாடல்கள் உள்ளன.  அவைகள் தொடர இருக்கும் பதிவுகளில் தொடரும். ]  நன்றி. 

No comments:

Post a Comment