Saturday 26 April 2014

வீடு கட்டும் ஜாதகர்களுக்கான பதிவு



     ஓம் நமசிவாய.  அனைவருக்கும் வணக்கம்.  வீடு கட்டும் ஜாதகர்களுக்கான பதிவு இது.  [ பாரம்பரிய முறை ], இது ஜாதக ரீதியான வழிகாட்டுதலையும், திருக்கோயில் வழிபாடுகளையும், கிரக தோஷம் பற்றிய விபரங்களையும் கொண்டதாகும்.  ' வீட்டை கட்டிப்பார், கல்யாணம் பண்ணிப்பார்,' என்பது  பழமொழி.  பார்த்துக்கொண்டே  இருக்கமுடியுமா பயன்படுத்துவது எப்போது? என்ற துணைக்கேள்வி எழாமல் இருக்காது.  உண்மையிலேயே வீடு கட்டுவதும், அதை பயன்பாட்டுக்கு கொண்டு வருவதும் ப்ரம்மபிரய்த்தனமாகும்.  முடிந்தவரை வீடு கட்டும் முயற்சியில் ஏற்படும் சிரமங்களை தவிர்க்க ஜாதகம் பார்ப்பதும், இறைவன் துணையை நாடுவதும் தவறில்லை.

     1.  முதலில் வீடு கட்டும் யோகம் ஜாதகப்படி தனக்குள்ளதா? என்று பார்க்க வேண்டும்.  இல்லையெனில் யோகமுள்ள குடும்ப உறுப்பினர் பெயரில் வீடு கட்டலாம்.  சிலருக்கு கடன் வாங்கி வீடு கட்டும் யோகம் இருக்கும்.  அவ்வாறு உள்ளவர்கள், கையில் தொகை வைத்திருந்தாலும், வீடு கட்டக்கூடிய முதல் செலவுக்கு கடன் வாங்கிவிடுவது நல்லது.  இல்லையென்றால் தொகையெல்லாம் தீர்ந்த பின் ஜாதகமானது பெரிய கடனாக வாங்க வைத்துவிடும்.  இன்னும் சிலருக்கு கட்டி முடிக்கப்பட்ட வீடு வாங்கும் யோகம் இருக்கும்.  ஆகவே முதலில் எந்த வகைப்படி செலவிடலாம் என்று ஜாதகப்படி திட்டமிடுவது நல்லது. 

     இனி சில திருக்கோவில் வழிபாடுகளையும், ஸ்தலங்களையும் சுருக்கமாக பார்க்கலாம்.

     1.  முதலில் வாங்கிய நிலத்தில் எந்த வித தோஷமும் இருக்கக்கூடாது.  தெரிந்தும், தெரியாமலும் இருந்தால், திருச்சிக்கு அருகே உள்ள மணச்சனல்லூர் { மண் அரக்க நல்லூர் }  ஸ்ரீ பூமினாதஸ்வாமி கோவிலில் முறைப்படி மண் வழிபாடு செய்ய வேண்டும்.  இதனால் நாம் வாங்கிய நிலத்தில் அரக்கத்தன்மை உடைய துஷ்ட சக்தி இருந்தால் ஒழிந்துவிடும். 

     2.  அடுத்து நமக்கு தடையின்றி, சிறந்த கட்டுமான பொருட்கள் கிடைக்க வேண்டும்.  இதற்கு திருப்புகலூர் ஸ்ரீ சரண்யேஸ்வரஸ்வாமி திருக்கோவிலில் மூன்று செங்கல் வைத்து அர்ச்சனை செய்ய வேண்டும்.  இந்த கற்கள் கொண்டு வீடு கட்டும் பணியை துவங்கினால், நான் கூறியவாறு கட்டுமான பொருட்கள் கிடைப்பதோடு, வாஸ்து தோஷம் இருப்பினும் நீங்கி விடும்.  இக்கோவிலுக்கு வாஸ்து கோவில் என்று செல்லப் பெயர் உண்டு. 

     3.  இனி கட்டிடத்தை நிர்மாணிக்க வாஸ்து நிபுணத்துவம் பெற்ற நல்ல பொறியாளர் தேவை.  இதற்கு திருவாரூர், ஸ்ரீ தியாகராஜஸ்வாமி திருக்கோவிலில் தனி சன்னிதி கொண்டுள்ள ஸ்ரீ விஸ்வகர்மா தேவரை அபிஷேக, ஆராதனை செய்து வணங்க வேண்டும்.  இவர் தேவலோக சிற்பி ஆவார்.  இவையெல்லாம் பொதுவான வழிபாட்டு முறைகளாகும்.

     இனி ஜாதகப்படி உள்ள தோஷ விபரங்களை பார்க்கலாம்.  நிலம் வாங்கி வீடு கட்டுவது போல, சிலர் பழைய கட்டிடம் வாங்கி இடித்துவிட்டு புதிய வீடு கட்டுவதுண்டு.  அப்படிப்பட்டவர்கள் வாங்கிய கட்டிடத்திற்கு, ஜாதகப்படி " மனைதோஷம் ", உள்ளதா? என்று பார்த்துக்கொள்வது அவசியம்.  மனை தோஷம் பலவகை அதில் கடுமையானது ப்ரேத தோஷம்  அதாவது வாழ்க்கை ஆயுள் முடியுமுன்பே, பாதியில் தானாகவே முடித்துக் கொண்டவர்கள் இருந்த இடமாக அது இருக்கலாம்.    எனவே ஜாதகப்படி ஆராய்ந்து அதை நிவர்த்தி செய்து கொண்டு, இறைவன் திருவருள் துணை கொண்டு, ஜோதிடர்களின் வழிகாட்டுதலுடன் புதிய வீடு கட்டினால் அது இல்லறம் நல்லறமாக செழிக்கும் இனிய மாளிகையாக திகழும் என்பதில் ஐயமில்லை.  நன்றி.. 

Monday 14 April 2014

தம்பதிகளில் ஒருவருக்கு செவ்வாய் தோஷம் இருந்து, ஒருவருக்கு இல்லை என்றால் என்னாகும்? என்ன செய்யவேண்டும்?



  ஓம் நமசிவாய.  அனைவருக்கும் வணக்கம்.  "திருமணம் ஆன தம்பதிகளில் ஒருவருக்கு செவ்வாய் தோஷம் இருந்து, ஒருவருக்கு இல்லை என்றால் என்னாகும்?  என்ன செய்யவேண்டும்? "  என்று நண்பர் திரு. L.v. Rajapandian  அவர்கள் என்னிடம் தனிப்பட்ட முறையில் கேட்ட கேள்வி இது.  இதற்கான பதில் தனிப்பட்ட முறையில் அவருக்கு சொல்வதை விட, பதிவாக வெளியிட்டால், பயனுள்ள நல்ல கலந்துரையாடல் கிடைக்கும்.  அது திரு ராஜபாண்டியன் போன்ற தம்பதியர் அனைவருக்கும் பயனுள்ளதாக அமையுமென்று எண்ணி பதிவாக வெளியிட்டிருக்கிறேன். 

  1.  செவ்வாய் காரகத்துவம் : { ஆண்கள் }
      கட்டுக்கோப்பான உடல், குறையில்லாத ரத்த ஓட்டம், சுகபோகம் தரும் வீரியம், ஆகிய தன்மைகள், செவ்வாய் நல்ல முறையில் ஒரு ஆண் ஜாதகத்திலிருந்தால் அமையக்கூடியனவாகும்.

  2.  செவ்வாய் காரகத்துவம்:  { பெண்கள் }
      காலத்தே பூப்பெய்துதல், முறையான மாத விடாய் ஆகியன, ஒரு பெண்ணின் ஜாதகத்தில் செவ்வாய் நல்ல முறையில் இருந்தால் அமையக்கூடியனவாகும்.  ருது மங்கள ஜாதகம் எழுதும் போதுபெரியோர் சொல்லும் நேரமானது சரியாக இருக்கிறதா? என தெரிந்துகொள்ள செவ்வாய் நிலை ஆராய வேண்டும்.  அதன் பின்பே லக்னம் அமைக்க வேண்டும், என்பது ஜோதிடத்தில் விதியாக கூறப்பட்டுள்ளது.

  மேலே கூறப்பட்ட காரகத்துவம் அமையப்பெற்ற இருவரும், செவ்வாய் பகவான் அருளால் இனிதே இல்லறம் நடத்துவர்.  இவர்கள் இருவரும் செவ்வாய் தோஷம் அற்றவர்களாவர்.  எனவே திருமண பொருத்த விஷயத்தில் செவ்வாய் குறை { தோஷம் } இன்றி உள்ளதா? எனப் பார்த்து இணைக்கிறார்கள்.  குறை { தோஷம் } இருப்பின், குறையுள்ள ப் தோஷமுள்ள } ஜாதகத்தை இணைக்கிறார்கள்.  இதையே ஜோதிட சாஸ்த்திரம் ' தோஷ சாம்யம் ' என்கிறது.  குறை என்பது எத்தன்மையதோ, அதற்கேற்றாற் போல் அத்தன்மை உள்ள ஜாதகத்தை இணைக்கிறார்கள்..    இத்தனமையை கண்டுகொள்வதற்காகத்தான்,  ஜாதகத்தில் செவ்வாய் இருப்பிடம். செவ்வாயை பார்க்கும் கிரகம் ஆகியவற்றை கணக்கிடுகிறார்கள்.  இதில் ஒருவருக்கு குறைத்தன்மை இருந்து, ஒருவருக்கு நிறைத்தன்மை இருந்து இணைத்தோமானால், குறைத்தன்மையானது, ஆண் பெண்ணுக்கு தக்கவாறு காரகத்துவ பலனை குறைத்து விடும்.  இப்படி ஏறுக்கு மாறாக அமைந்த பின்பு என்ன செய்வது? என்பது தான் கேள்வி.

  இதற்கு இரு வழிகளை கடைபிடிக்க வேண்டும்.  ஒருவழி நல்ல மருத்துவரை அணுகுதல்.  இன்னொருவழி இறைவனை அணுகி வழிபடுதல்.  நாம் இறைவனை அணுகும் முறையை பார்க்கலாம்.  "சிறுகுடி" என்றொரு ஸ்தலம் உள்ளது.  மயிலாடுதுரையிலிருந்து, பேரளம், கூந்தலூர், கடகம்பாடி வழியாக ஸ்தலத்தை அடையலாம்.  ஆனால் மயிலாடுதுரையிலிருந்து, பேரளம், திருப்பாம்புரம், வழியாக ஸ்தலத்தை அடைவது போக்குவரத்துக்கு வசதியான வழியாகும்.  திருக்கோயில் காலை 6.00 மணி முதல் மாலை 6.00 மணிவரை திறந்திருக்கும்.  இங்கு ஸ்ரீமங்களனாதர் என்ற பெயருடன் இறைவனும், ஸ்ரீமங்களனாயகி என்ற பெயருடன் இறைவியும் எழுந்தருளியுள்ளார்கள்.  வினாயகரோ ஸ்ரீமங்களவினாயகர்.  தீர்த்தம் ஸ்ரீமங்களதீர்த்தம்.  [ செவ்வாய் பகவானுக்கு மங்களன் என்ற பெயருண்டு என்பது இங்கு நினைவில் கொள்ளவேண்டும் ].  மங்கள வாரத்தன்று அதாவது செவ்வாய்க்கிழமை ஸ்ரீமங்கள தீர்த்தத்தில் நீராடி, ஸ்ரீமங்களவினாயகரை வணங்கி, ஸ்ரீமங்களனாதருக்கும், ஸ்ரீமங்களநாயகிக்கும் அர்ச்சனை செய்து வழிபட வேண்டும்.  தோஷமுள்ளவர் ஆணாக இருப்பின் ஸ்ரீமங்களனாதர் திருவடியிலும், பெண்ணாக இருந்தால் ஸ்ரீமங்களனாயகி திருவடியிலும், ஒரு பவளமணி மாலையை வைத்து அர்ச்சித்து அணிந்து கொள்ளவேண்டும்.  மேலும் செவ்வாய் பகவானுக்குரிய பரிகாரங்கள் எதுவாக இருந்தாலும் மேற்கொள்ளலாம்.  அடுத்து ஸ்ரீஆலிங்கன மூர்த்தியாக எழுந்தருளி, ஸ்ரீஅம்பிகையை அனைத்தவண்ணம் இருக்கும் ஸ்ரீசிவபெருமான் உற்சவ மூர்த்தத்தையும் வணங்கி அர்ச்சனை செய்ய வேண்டும்.  வரும் தம்பதியர்கள் தோஷம் நீங்கப்பெற்று தம்மைப்போலவே ஆனந்தமாய் வாழ இறைவன் ஸ்ரீஆலிங்கன மூர்த்தியாய் இருந்து அருள் புரிகிரார்.  எனவே திருமணத்துக்கு பின் செவ்வாய் தோஷம் இருவரில் ஒருவருக்கு இருப்பது தெரியவரின், இத்தலத்து இறைவனை வணங்கி மங்களமாய் வாழ்வார்களாக. 

Tuesday 8 April 2014

அப "மிருத்யு தோஷம்", பற்றிய பதிவு



 ஓம் நமசிவாய.  அனைவருக்கும் வணக்கம். அப "மிருத்யு தோஷம்", பற்றிய பதிவு இது.  { பாரம்பரிய முறை }.  ஜோதிட சாஸ்த்திரத்தில் அபமிருத்யு தோஷம் என்ற ஒரு வகை உள்ளது.  இது தற்காலிகமானது.  இது மரணபயம் தரும் கண்டத்தை ஏற்படுத்தவல்லது.  இதைப்பற்றிய விளக்கமும், பொதுவாக தானாகவே செய்து கொள்ளும் பரிகார வழிபாட்டு முறைகளையும் ஜோதிட ரீதியான நிவாரண வழிமுறைகளையும், விளக்கும் பதிவு இது.  கண்டத்தால் பாதிக்கப்பட்டு, போராடிக்கொண்டிருக்கும் ஜாதகர்களுக்கு இறையருளை பெற்றுத் தரும் வழிகாட்டியாக இப்பதிவு இருக்கும் என்று நம்புகிறேன். 

 கண்டம் என்றால் மரணம் ஏற்பட்டு விடுமோ! என்று தேவையில்லாமல் அச்சப்பட வேண்டியதில்லை..ஆயுள் தீர்க்கமாக அமைந்தவர்களுக்கு எவ்வளவு கடுமையான கண்டம் ஏற்பட்டாலும் பிழைத்து விடுவார்கள்.  ஆனால் அப்போது ஏற்படுகிற அவஸ்தை சகித்துக் கொள்ள முடியாத அளவுக்கு கடுமையாக இருக்கும்  ஜாதகர்கள் எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் எந்தெந்த கிரகத்தால், எந்தெந்த வகையான கண்டங்கள் ஏற்படுகிறது என்பதை, அவை தரும் நோய் வாரியாக கொடுக்கப் பட்டுள்ளது.

  1.  சூரியன்.          நெருப்பு கண்டம் தரக்கூடியவர்.  நெருப்பு என்பது வெளியில் மட்டுமல்ல.  நம் உடலுக்குள்ளும் உள்ளது.  நம் உடலில் இருக்கும் உஷணத்தால் நோய் உருவாவது. 
  2.  சந்திரன்.         நீர் கண்டத்தை தரக்கூடியவர்.  நீர் என்றால் ஆறு, குளம், குட்டை போன்ற நீர் நிலைகள் மட்டுமல்ல.  நீர் என்பது உடலுக்குள்ளும் இருக்கிறது.  அந்த நீரால் கண்டம் விளையும்.  உதாரண்த்திற்கு,  வயிற்றில் நீரடைத்து வீக்கம், ரத்தம் நீர்த்து போவது போன்றவை.
  3.  செவ்வாய்.          விபத்து போன்ற திடீர் ஆபத்துகளால் கண்டம் தரும்.   
  4.  புதன்.          கடுமையான ஜுரங்களால் கண்டம் ஏற்படுத்தும்.  உதாரணத்துக்கு.  டைபாய்ட், மூளை காய்ச்சல், பன்றி காய்ச்சல் ஆகியவை.
  5.  குரு.          கண்டுபிடிக்க முடியாத நோயை தந்து கண்டத்தை ஏற்படுத்தும்.  மருத்துவர்களால் ஒரு முடிவுக்கு வர இயலாத வகையில் அந்த நோய் அமைந்திருக்கும்.  ஒவ்வொரு மருத்துவர் ஒவ்வொரு வகையான பரிசோதனை செய்து, ஒவ்வொரு விதமாக முடிவுகளை சொல்வார்கள்.  .நமக்கு பெரும் குழப்பமாக இருக்கும்.
  6.  சுக்கிரன்.          தாக விடாயை கொடுத்து, நீர் அருந்த விடாமல் தடுக்கும்.  உடலில் நீர் சுருங்கி வறட்சியால் அவஸ்தை ஏற்படும்.. 
  7.  சனி.          பசியால் ஏற்படும் அவ்ஸ்தைய தந்து கஷ்டப்படுத்தும்.  இது மிகக் கொடுமையானது.  உணவு அருந்தினாலும் உடல் ஏற்றுக்கொள்ளாது.  வயிற்றுக் கோளாறால் உணவு தள்ளுபடி செய்யப்படும்.  ஆனால் மீண்டும் பசிக்கும். 
  8.  ராகு கேதுக்கள் இந்த பட்டியலில் இடம் பெற்வில்லை.  ஏனென்றால் அவைகளுக்கு ஆதிபத்தியம் கிடையாது. அபமிருத்யு கண்டத்தை கிரகங்கள் ஆதிபத்திய அடிப்படையில் தருகிறன.  இக்கிரகங்கள் அஷ்டமத்தில் இருக்கும்போது நோயை தருகிறன.

  ஜோதிட சாஸ்த்திரத்தில் கிரகங்களுக்கு தகுந்தவாறு பரிகார வழிபாட்டு முறைகள் இருந்தாலும், முதலுதவியாக, உடனடியாக மேற்கொள்ளக்கூடிய சில வழிபாட்டு முறைகள் உள்ளன.  இது ஜோதிடம் பார்க்காமலேயே, பொதுவாக இறைவனிடத்தில் நாம் நமது கோரிக்கைகளை வைத்து வழிபட்டு வேண்டிக்கொள்வதாகும். 

  1.  மயிலாடுதுறைக்கு அருகில் உள்ள ஸ்தலம் திருக்கடவூர்.  இறைவன் இங்கு ஸ்ரீ அமிர்தகடேஸ்வரராக எழுந்தருளியுள்ளார்.  ஸ்ரீ மார்க்கண்டேயரின் மரணபயம் போக்கிய ஸ்தலம் இது.  ஸ்ரீ மார்க்கண்டேயருக்காக யமனை காலால் உதைத்த ஸ்ரீ கால சம்ஹாரமூர்த்தியும் இங்கு உள்ளார்.  இங்கு மிருத்யுஞ்செய ஹோமம் செய்யப்படுகிறது.  இதில் கலந்து கொள்வதால் மரணபயமும், கண்டமும் நீங்கும்.  அதன் பின் ஸ்ரீ அமிர்தகடேஸ்வரருக்கும், ஸ்ரீ காலசம்ஹார மூர்த்திகும் அர்ச்சனை செய்ய வேண்டும்.  ஜாதகர் நேரில் சென்று இவைகளில் கலந்துகொள்ள இயலாத நிலையில் இருப்பின், தம் நெருங்கிய உற்வினரை அனுப்பி, தம் பெயரில் அர்ச்சனைகளை மட்டும் செய்து கொள்ளலாம்.  பின்பு வேத விற்பன்னர்களை கொண்டு வீட்டிலேயே மிருயுஞ்செய ஹோமம் செய்து கொள்ளலாம்.  இப்படிப்பட்ட கண்டம் நீங்கும் வழிபாடுகளை முடித்தபின்,  நோய் நீங்கும் வழிபாடுகளை தொடர வேண்டும்.  வைத்தீஸ்வரன் கோவில் சென்று ஸ்ரீ வைத்தீஸ்வரரை வணங்கி அவரின் அருட் பிரசாதமாகிய "சாத்துருண்டை" யை வாங்கி வரவேண்டும்.  இதனால் நோய் நீங்கும்.  திருக்கோவிலில் கிடைக்கும் சாத்துருண்டை மட்டுமே நம்பிக்கக்குரியது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.  இதுபோல் ஸ்ரீரங்கம் சென்றும் ஸ்ரீ தன்வந்திரி பெருமாளை வணங்கி பிரசாதம் பெற்று வரலாம்.  இவ்விரண்டு இடங்களில் ஓரிடம் சென்றால் மட்டும் போதுமானது.  இதுவரை சொல்லப்பட்ட வழிபாடுகள் பொதுவானவையே.  நம்பிக்கையுடன் செயலாற்றுங்கள். 

  இது மட்டுமல்லாமல் ஜாதகரீதியாகவும், பரிகாரவழிபாடுகளை மேற்கொள்வது இன்னும் சிறப்புடையதாகும்.  ஒரு நல்ல, திறமையான ஜோதிடரை அணுகி, கலந்தாலோசித்து, முன்கூட்டியே பரிகாரவழிபாடுகளை மேற்கொள்வதன் மூலம் கடுமையான பாதிப்பு பெருமளவு குறையும்.  எந்த கிரகங்களால் பாதிப்பு வருகிரதோ, அந்த கிரகங்களுக்கும், அவைகளுக்குரிய தெய்வ வழிபாடுகளையும் முறைப்படி செய்து கொள்ளலாம்.  வருமுன் காப்பதும், இறைவனை சரணடைவதும், நமக்கு அவன் அருளை பரிபூரணமாக பெற்றுத் தரும்.

  இனி ஜோதிடர்களுக்கான சிறு குறிப்பு:....................................அபமிருத்யு தோஷம் என்பது, பாதகாபதியும் அஷ்டமாதிபதியும் தொடர்பு கொள்ளும் போது ஏற்படுவதாகும்.  இவர்கள் இருவரும் தசானாதனாகவும், புக்தினாதனாகவும் வரும் போது இத்தோஷம் விளைகிறது.  அன்னேரத்தில் கோசரத்தில் அஷ்டமத்தில் சனி, குரு, ராகு அல்லது கேது இருந்தால் பாதிப்பு கடுமையாக இருக்கும். ஜனன ஜாதகப்படியும், கோசரப்படியும் ஆய்வு செய்து, ஜாதரை சரியான, முறையான வழிபாடு செய்யவைத்து, அவர்களுக்கு நிம்மதியை ஏற்படுத்தி தர வேண்டியது நம் கடமை.  நன்றி.  .  .   

Wednesday 2 April 2014

ஆயில்ய தம்பதியர்க்காக ஒரு பதிவு



     நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.  திரு. ஸ்வாமிகள் எனது வேண்டுகோளுக்கு செவி சாய்த்து, அனுமதி வழங்கியதற்கு நன்றி.  இது ஸ்வாமிகள் வழங்கிய ஒரு பதிவில் இட வேண்டிய கருத்துரை ஆகும் [ கமெண்ட் ].  மிக நீண்டதாக அமைந்திருப்பதல் தனியாக இட வேண்டியதாயிற்று. 

     ஆயில்யம் ஆயில்யத்தோடு இணைக்கும் போது ராசியாதிதபதி ஒருவராகத்தான் இருப்பார் இதில் சந்தேகம் இல்லை.  எனவே நான் முன் கூறியபடி, ராசி கணம், ரஜ்ஜு ஆகிய பொருத்தங்கள் இல்லை என்றாலும் இணைக்கலாம்.  ராசிப்பொருத்தத்தின் பயனான வம்ச விருத்தி கிடைத்து விடும்.  அது போல் கணப்பொருத்தத்தின் பயனான மங்களகரமான வாழ்க்கை அமையும்.  ர்ஜ்ஜுப்பொருத்தத்தின் பயனான தீர்க்கசுமங்கலித்துவம் கிடைத்துவிடும்.  திரு ஸ்வாமிகள் சுட்டி காட்டியிருக்கும் தம்பதிருக்கு இவையனைத்தும் கிடைத்திருப்பதில் ஆச்சரியமில்லை. 

     ஆனால் அவசியம் இருந்தாக வேண்டும் என்று சொல்லக்கூடிய ஐந்து பொருத்தங்களில் மீதம் உள்ள தினம், யோனி ஆகிய பொருத்தங்களின் பயன்கள் கிடைக்காமல் போய்விடும்.  தினப்பொருத்தம் என்பது ஆயுள், ஆரோக்கியத்துடன் சம்பந்தப்பட்டது.  ஆயில்ய தம்பதியருக்கு வாழ்க்கையில் இவை இரண்டில் ஒன்றை அனுபவிக்கும் பாக்கியம் நிச்சயமாக இருக்காது.  நல்ல ஆரோக்கியம் இருந்தால் ஆயுள் இருக்காது.  நல்ல ஆயுள் இருந்தால் ஆரோக்கியம் இருக்காது.  வாழ்க்கை முழுவதும் ஆயில்ய தம்பதியர் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு, மருந்து, மாத்திரைகளால் உயிர் வாழ்ந்து கொண்டிருப்பார்கள்.  திரு ஸ்வாமிகள் ஒரு மருத்துவ ஜோதிடர்.  ஜோதிடம் பார்த்து, அதற்குப்பின் மருத்துவம் மேற்கொள்வார்.  அந்த தம்பதியரின் ஜாதகத்தை ஆராய்ந்த பின்னரே மருத்துவமும் செய்திருப்பார்.  எனவே ஸ்வாமிகளுக்கு, நான் கூறிய அமைப்பின் படி அந்த தம்பதியருக்கு ஆரோக்கியமானது அமைந்திருக்கும் என்று அறிந்திருப்பார்.  இனி இதற்கு மேல் ஸ்வாமிகள்தான் விளக்கம் சொல்லவேண்டும்.

     யோனிப்பொருத்தம் இல்லாததால் ஆயில்ய தம்பதியர் முழுமையான தாம்பத்திய சுகம் அனுபவிக்க இயலாமல்போகும்.  அவர்கள் ஜாதகத்தை ஆராய்ந்தால் சயன தோஷம் கூட அமைந்திருக்கலாம்.  இது தம்பதியருக்கு மட்டுமே தெரிந்திருக்கக்கூடிய ரகசியம்.  இதை அவர்கள் மனதில் எண்ணி, எண்ணி பொறுமிக்கொண்டிருப்பார்களே தவிர, வெளிகாட்டிக்கொள்வதில்லை.  மற்ற காரணங்களுக்காகவெல்லாம், ஜாதக பொருத்தத்தை மறுபரிசீலனை செய்பவர்கள், நான் சொல்லும் இவ்விரு காரணங்களுக்காக மறுபரிசீலனை செய்வதில்லை.  ஆரோக்கியக்குறைவுக்கு வேறு வேறு காரணங்களை தனக்குதானே கற்பித்துகொண்டு விடுவார்கள்.  இவ்வாறு ஆயில்ய தம்பதியினரின் இவ்விரு குறைபாடுகள் வெளியில் தெரியாமல் போகிறது.  வெளிப்பார்வைக்கு அவர்கள் நல்ல வாழ்க்கை வாழ்வதுபோல் தெரியும்.  நன்றாக சாஸ்திரம் கற்றுணர்ந்த ஜோதிடருக்கு இது அவர்கள் சொல்லாமலேயே புரிந்துவிடும். 

     என் கண்ணில் இருந்து மறைதாலும் இன்னும் கருத்தில் இருந்து வழி நடத்திக்கொண்டிருக்கும் என் குருனாதரின் உபதேச மொழிகள் இவை.  எனவே ஆயில்யத்தை ஆயில்யத்தோடு இணைத்து இவ்விரு துன்பங்களையும் அவர்களை அனுபவிக்க செய்யும் பாவத்தை சுமக்க என் மனம் விரும்பாததால் ஆயில்யத்தை ஆயில்யத்தோடு நான் இணைப்பதில்லை.  மனம் திறந்து என் கருத்தை சொல்ல வாய்ப்பை உருவாக்கித் தந்த ஸ்ரீ ஸ்வாமிகளுக்கு என் நன்றியை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன்.  நன்றி.