Monday 2 March 2015

தேவாரமும் ஜோதிடமும் ...............பகுதி 2



நண்பர்களுக்கு வணக்கம்.  கடந்த 24.02.2015 அன்று பெ;ருந்துறையில், திரு அவர்களால் நிகழ்த்தப்பெற்ற " ஜோதிட முழக்கம் ", நிகழ்ச்சியில்,, ' கேவாரமும் ஜோதிடமும் ', என்னும் தலைப்பில் நான் உரையாற்றிய உரையின் தொகுப்பு இது.  பகுதி 2.  கடந்த பதிவின் தொடர்ச்சி...............

கோளறு பதிகத்தின் முதல் தேவாரத்தில் நேரடியாக கிரகங்களை குறிப்பிட்ட ஸ்ரீதிருஞானசம்பந்தர், அடுத்த தேவாரத்தில் மறைமுகமாக ஒரு செய்தியை சொல்ல எண்களை குறிப்பிடுகிறார்.  இந்த நேரத்தில் நம் ஜோதிடக்கலை ஆதித்ய குருஜி அவர்கள் தனது கட்டுரையில் பயன்படுத்திய இரு வரிகள் நினைவுக்கு வருகிறது.  ' நமது முன்னோர்கள் ஒன்றும் கணக்கு வாத்தியார்களல்ல.  காதை திருகி பாடம் நடத்த.......... ' என்று சொன்ன குருஜி அவர்களின் வார்த்தைகள் உண்மை.  சிலவற்றை நாமாக புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது.  எனவே முதலில் தேவாரத்தை பார்த்து விட்டு, ஸ்ரீதிருஞானசம்பந்தர் குறிப்பிடும் அந்த எண்களை பற்றி யோசிப்போம்.

என்பொடு கொம்பொடு ஆமை இவை மார்பு இலங்க
  எருதுஏறி ஏழையுடனே,
பொன்பொதி மத்த மாலை புனல் சூடிவந்து என்
  உளமே புகுந்த அதனால்,
ஒன்பதொடு ஒன்றொடு ஏழு பதினெட்டொடு ஆறும்
  உடனாய நாள்கள் அவைதாம்
அன்பொடு நல்ல நல்ல அவை நல்ல நல்ல
  அடியார் அவர்க்கு மிகவே.

இந்த தேவாரத்தில் 9, 1, 7, 18, 6 ஆகிய எண்களை குறிப்பிட்டு, அதனுடன் சேரும் நாட்கள் நல்லவை என்று அவர் கூறியிருப்பது புரிகிறது.  எனவே இந்த எண்களோடு சேர்க்கப்பட வேண்டியவை,  நாள் தவிர, நக்ஷத்திரம், திதி, கரணம், யோகம் ஆகியவைகளில் ஏதோ ஒன்றை அவர் எண்களாக குறிப்பிட்டுள்ளார்.  திதிக்கள் மொத்தம் 15, கரணங்கள் மொத்தம் 11.  ஆனால் ஸ்ரீ திருஞானசம்பந்தரோ 18 என்ற எண்ணை பயன்படுத்தியிருப்பதால், இந்த எண்கள் திதியையும், கரணத்தையும் குறிப்பிடாது  என்று அவைகளை தள்ளுபடி செய்துவிடலாம்.  மீதம் இருப்பது யோகமும், நக்ஷத்திரங்களுமாகும்.  நக்ஷத்திரங்கள் மொத்தம் 27.  யோகங்கள் மொத்தம் 27.  ஆகவே இவ்விரண்டில் எதுவாக இருக்கலாம்? என்ற குழப்பத்தை தீர்த்துக்கொள்ள, இந்த தேவராம் பாடப்பெற்ற காலசூழ்னிலையை அறிய வேண்டியிருக்கிறது.  இதையே இடம், பொருள், ஏவல் அறிந்து செயல்படுதல் என்று தமிழ் இலக்கணம் கூறுகிறது. 

ஸ்ரீஅப்பர் பெருமானும். ஸ்ரீதிருஞானசம்பந்தரும், வேதாரண்யத்தில் இருந்தபோது, அவர்களை சந்திக்க, பாண்டிய நாட்டு அமைச்சர் குலச்சிரையார் வந்தார்.  அப்போது பாண்டிய நாட்டில் சமணம் ஓங்கியும், சைவம் தாழ்ந்தும் இருந்தது.  மன்னன் கூன்பாண்டியனும் சமண மதத்தை தழுவினான்.  இதை பொறுத்துக்கொள்ள இயலாத அரசியார் மங்கையர்க்கரசியார், தன் அமைச்சர் குலச்சிரையாரை, நிலைமையை ஸ்ரீதிருஞானசம்பந்தரிடம் எடுத்து சொல்லி அவரை அழைத்துவருமாறு அனுப்பியிருந்தார்.   நிலையறிந்த ஸ்ரீதிருஞானசம்பந்தரும் உடனே பாண்டிய நாட்டுக்கு புறப்பட்டார்.  அப்போது ஸ்ரீஅப்பர்பெருமான், ' பயணத்திற்கு நாளும், கோளூம் சரியில்லை, ' என எடுத்துரைக்க, அவருக்கு விடையளிக்கும் வண்ணம் ஸ்ரீதிருஞானசம்பந்தர் பாடிய கோளறு பதிகம் எனப்படும் தேவாரம் இவைகளாகும்.  பயணத்திற்கு நாள் பார்க்கும்போது யோகங்கள் பார்ப்பதில்லை.  நக்ஷத்திரங்கள் பார்க்கப்படுகின்றன.  ஆகவே தேவாரத்தில் இடம்பெற்ற எண்கள் அனைத்தும் நக்ஷத்திரம் சம்பந்தப்பட்டதாக இருக்க வேண்டும்.  அதன் அடிப்படையில், ஸ்ரீதிருஞானசம்பந்தர் குறிப்பிடும் எண்களுக்குரிய நக்ஷத்திரங்களாவன.

ஒன்பதொடு..........  9 ஆவது நக்ஷத்திரம் ஆயில்யம்.
ஒன்றொடு........... 9 + 1= 10.  10 ஆவது நக்ஷத்திரம் மகம்.
ஏழு.......... 9 + 7 = 16.  16 ஆவது நக்ஷத்திரம் விசாகம்.
பதினெட்டொடு....................  18 ஆவது நக்ஷத்திரம் கேட்டை.
ஆறும்...........  6 ஆவது நக்ஷத்திரம் திருவாதிரை. 

ஆக திருவாதிரை, ஆயில்யம், மகம், விசாகம், கேட்டை ஆகிய நக்ஷத்திரங்கள் கொண்ட கெட்ட கிரகங்களின் நாட்கள் பிரயாணத்திற்கு ஆகாது.  ஆனால் ஸ்ரீசிவபெருமானுடைய அடியவர்களுக்கு அவை நல்ல நாட்களேயாகும், என்ற ஜோதிட உண்மையும் நமக்கு புலனாகிறது.   இன்னும் அடுத்த பாடலின் பொருணை பார்த்தோமானால், ஜோதிட சாஸ்த்திர நூலில் கூட பிரயாணத்திற்கு ஆகாத நாட்களை பற்றிய துல்லியமான விபரங்கள் இல்லையென்றே சொல்லும் அளவுக்கு அதில் விஷயங்கள் இருக்கிறன.   அடுத்த பாடலாக கோளறு பதிகத்தின் ஆறாவது பாடலை பார்க்க இருக்கிறோம்.  அதில் இன்னும் சுவாரஸ்யமான விஷயங்கள் இருக்கிறன.  எனவே அந்த பாடலோடு மீண்டும் சந்திக்கலாம்.  .......................தொடரும்........................



No comments:

Post a Comment