Thursday 20 March 2014

சயனதோஷம் பற்றிய ஜோதிடர்களுக்கான பதிவு



     ஓம் நமசிவாய.  அனைவருக்க்ம் வணக்கம்.  இது.  [ பாரம்பரிய முறை ] இதை வாசகர்களுக்கான பதிவின் தொடர்ச்சியாகவும் கொள்ளலாம்.  சயனதோஷத்தின் கிரக அமைப்பே சற்று வித்தியாசமானதாகும்.  சயனஸ்தானம் எனப்படும் விரயத்தோடு தொடர்புடையது இது.  இந்த ஸ்தானத்தில் சுபாவ சுபர்களான குரு, சுக்கிரன், சுப புதன், சுப சந்திரன் ஆகியோர் தனித்தனியாகவோ அல்ல்து கூட்டாகவோ இருந்தால் சயனதோஷம் ஏற்படும்.  ஸ்ரீ வராகிமிகிரர் தத்துவப்படி, ஒரு பாபஸ்தானத்தில் சுபாவ சுப கிரகம் இருந்தால், அந்த ஸ்தானத்தின் பலன் தரும் வலிமை குறையும். அதன் படி விரயஸ்தாத்தில் சுபாவ சுப கிரகங்கள் இருக்கும் போது,  அந்த ஸ்தானத்தின் பலன் தரும் வலிமை குறைந்து தோஷம் உருவாகிறது. 

     1.  குரு என்ற சுபாவ சுப கிரகம் இந்த ஸ்தானத்தில் இருக்கும்போது சயனதோஷம் உருவாவதோடு,  புத்திரத்தடை ஏற்படுகிறது.  ஏனென்றால் குருவின் காரகத்த்துவத்தில் ஒன்று புத்திர பாக்கியம். 

     2.  சுக்கிரன் என்ற சுபாவ சுப கிர்க்ம் இந்த ஸ்தானத்தில் இருக்கும் போது சயனதோஷம் உருவாவதோடு, தாம்பத்திய உறவில் திருப்தியின்மையோ அல்லது நாட்டமின்மையோ ஏற்படுகிறது.  ஏனென்றால் சுக்கிரனின் காரகத்துவத்தில் ஒன்று காமம். 

     3.  புதன் என்ற கிரகம் சுபாவ சுபத்தன்மையோடு இந்த ஸ்தானத்தில் இருக்கும் போது சயனதோஷம் ஏற்படுத்துவதோடு, புத்திர பாக்கிய தடையும் ஏற்படுத்துகிறது.  புதனுக்கு புத்ர ஹீனன் என்ற காரகத்துவம் உண்டு.  அதாவது ஜனன ஜாதகத்தில் புதன் கெட்டுபோக வேண்டும் அதாவது அஸ்தங்கதம் அடையவேண்டும்.  அல்லது 6,8,12 ஆகிய இடங்களில் மறைய வேண்டும். அப்போதுதான் புத்ரஹீனமும் கெட்டு மறைந்து புத்ர பாக்கியம் உண்டாகும்.  இப்படிப்பட்ட சூழ்னிலையில் புதனின் தொடர்பு புத்ர பாகய ஸ்தானத்திற்கு ஏற்பட்டால் புத்திர தடை இருக்காது.  புதன்  நல்ல நிலையில் இருந்தால் புத்ர பாக்ய தடை உருவாகும்.  இங்கு புதன் விரயத்தில் மறைவதால் புத்திர பாக்கியம் இருக்கும்.  ஆனால் சயனதோஷத்தின் காரணமாக தாமதமாகும். 

     4.  சந்திரன் என்ற் சுபாவ சுப கிரகம் இந்த ஸ்தானத்தில் இருக்கும் போது சயனதோஷம் ஏற்படுத்துவதோடு, பெண்மை குறைவையும் ஏற்படுத்தி, தாம்பத்தியம் கசக்க செய்கிறது.  இது பெண்கள் ஜாதகப்படி மட்டுமே நேரும்.

     குரு, சுக்கிரன், புதன், சந்திரன் ஆகிய கிரகங்களின் சுபத்தன்மையை இந்த தோஷத்தை பொறுத்தவரை அதன் சுபாவத்தை வைத்து முடிவெடுக்க வேண்டும்.  ஸ்தானாதிபத்தியத்தால் அவை எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம்.  பாப ஸ்தனங்களுக்கு அதிபதியாக இருந்தாலும் பாவிகளாக மாட்டார்கள்.  சுபாவப்படி அவர்கள் சுபர்களே. 

     இந்த தோஷம் ஏற்படும் கால கணிதமும் சற்று வித்தியாசமானதே.  இளம் தம்பதியருக்கு, இந்த கிரகங்கள் தங்களூடைய தசா, புக்தி காலங்களில் மட்டுமே தோஷத்தை தரக்கூடியவர்கள்.  அதிக பட்சம் சுக்கிரதசை, சுக்கிர புக்தி காலத்தில் 3 வருஷம் 4 மாதம் இந்த தோஷத்தை சுக்கிரன் தருவார்.  சந்திரன் தன் தசா, புக்தி காலத்தில் 10 மாதங்கள் மட்டுமே தோஷம் தருவார்.  இந்த தசாபுக்திகள் நடைமுறைக்கு வரும் போது தம்பதியருக்கு இளம் வயதாக இருக்க வேண்டும்.  இந்த கிரக அமைப்பு இல்லாத இளம் தம்பதியருக்கு இந்த தோஷமே ஏற்படுவதில்லை.  ஜனன ஜாதகத்தில் இந்த கிரக அமைப்பு இருந்தும், அது இளமையில் நடைமுறைக்கு வராத நிலையும் உண்டு.  எனவே இந்த கிரக அமைப்பு ஜனன ஜாதகத்தில் இருந்தால், அந்த ஜாதகமே சயனதோஷ ஜாதகம் என்று முடிவெடுப்பதும்  தவறாகிவிடும்.  எனவே சயனதோஷத்தின் கணக்கீடுகளை உன்னிப்பாக கவனித்து, அவர்களுக்கு தகுந்த அறிவுரை வழங்கி, [ பரிகார வழிபாட்டு முறைகளை சொல்வது ] அவர்கள் வாழ்க்கையை பிரகாசமடைய செய்யவேண்டியது ஜோதிடர்கள் கடமையாகும்.  நன்றி

"சயன தோஷம்," பற்றி வாசகர்களுக்கான பதிவு



     ஓம் நமசிவாய.  அனைவருக்கும் வணக்கம்.  "சயன தோஷம்," பற்றி வாசகர்களுக்கான பதிவு இது.  சயன தோஷம் இருந்தால் புத்திர பாக்யம் தடை ஏற்படும்.  புத்திர தோஷத்திற்கும், சயன தோஷத்திற்கும் ஒரு வித்தியாசம் உள்ளது.  ஜாதகத்தில் புத்திர தோஷம் இருந்தால், புத்திர பாக்யம் கிடைக்காமல் போக வழி உள்ளது.  ஆனால் புத்திர பாக்யம் இருந்து, சயன தோஷம் இருந்தால் புத்திர பாக்யம் கிடைப்பதில் தடையும் தாமதமும் ஏற்படும். 

     சயன தோஷம் என்பது, இளம் தம்பதியருக்கு தாம்பத்திய உறவில் விருப்பமின்மையை ஏற்படுத்தி அதில் நாட்டத்தை குறைக்கும்.  அல்லது திருப்தியின்மைய தந்து, அதன் மீது ஒரு இனம் புரியாத வெறுப்பை ஏற்படுத்திவிடும்.  இப்படிப்பட்ட தோஷம் இருவரில் ஒருவருக்கு நேரலாம்.  சில நேரங்களில் அபூர்வமாக இருவருக்கும் நேர்வது உண்டு.  விவாக தச வித பொருத்தத்தில் யோனிப்பொருத்தத்தோடு தொடர்பு உடையது இது.  இந்த பொருத்தம் அமையவில்லை என்றால், அவர்களுக்கு சயன தோஷம் பெரும்பாலும் இருக்கும்.  எனவே யோனிப்பொருத்தம் என்பது முக்கியமான ஐந்து பொருத்தங்களில் ஒன்றாகவும், அவசியம் இருந்தாக வேண்டும் என்றும் கூறப்படுகிறது. 

     அஸ்திவாரம் பலவீனமானால் அதில் வீடு கட்டினால் தாங்காது என்பது போல, அடிப்படை தோஷமான இது இருந்தால் புத்திர பாக்கியத்திற்கு வழி கிடைக்காமல் தடை ஏற்பட்டு விடும்.  புத்திர பாக்ய தோஷம் என்பது நிரந்தரமாகவோ அல்லது மிக நீண்ட காலமோ இருக்கக்கூடியது.  சயன தோஷம் என்பது தற்காலிகமான குறுகிய காலம் கொண்டது.  தானாகவே நீங்கிவிடக்கூடியது.  உடனடியாக நீங்க பரிகாரவழிபாடுகளை மேற்கொள்ளலாம்.  அதிக பட்சமாக 3 வருஷம் 4 மாதம் நீடிக்கும்.  குறைந்த பட்சமாக 10 மாதம் நீடிக்கும்.  இந்த கணக்கின் விபரம் ஜோதிடர்க்கான பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது.  நீண்ட காலமோ, குறுகிய காலமோ, இந்த கால கட்டத்தில், ஆணுக்கு ஆண்மை குறைவு என்றும், பெண்ணுக்கு பெண்மை குறைவு என்றும் தேவையில்லாத பட்டம் கட்டி அவர்களை மன வேதனைக்கு ஆளாக்கிவிடுகிறது இந்த சமுதாயம்.  சிலர் மனம் திறந்து, மருத்துவ கவுன்சிலிங் மேற்கொள்வதுண்டு.  அறிவியல் ரீதியாக இது நல்ல வழிமுறையாகும்.  அத்துடன் ஜோதிட ரீதியாகவும் தீர்வு காண வேண்டியது அவசியம்.  சிலர் இவ்விஷயத்தில் வெளிப்படையாக இருக்க நாணிக்கொண்டு, ஜோதிட தீர்வையும், மருத்துவ கவுன்சிலிங்கையும் நாடாமல் மறுத்துவிடுவதும், மறைத்துவிடுவதும் உண்டு. 

     இப்படிப்பட்டவர்கள் தம் நண்பர்கள், தோழிகள் போன்றோரிடம் மட்டும் கலந்தாலோசிப்பது உண்டு.  அவர்களோ சயனக்கோல பெருமாள் கோவிலுக்கு சென்று வந்தால் சரியாகிவிடும் என்றும், இந்த விஷயம் யாருக்கும் தெரியப்போவதில்லை என்றும் வழி காட்டிவிடுகிறனர்.  இது ஒரு வகையில் பாதியளவு பரிகாரவழிபாடாகும்.  பெருமாளுக்கு பத்து வித சயனத்திருக்கோலங்கள் உண்டு.  இதில் சரியான ஸ்தலத்தை தேர்வு செய்து கொண்டு சென்று வருவது முழு பலனைத்தரும்.  எந்த கிரக அமைப்பால் தோஷம் ஏற்படுகிறதோ, அந்த கிரக சம்பந்தமாக பரிகார வழிபாடை மேற்கொண்டால் சிறப்பானதாக இருக்கும்.  இதற்கான முழு விபரங்கள்" சயனதோஷம் ஜோதிடர்களுக்கான பதிவு," என்பதில் தரப்பட்டுள்ளது.  எனவே இவ்விஷயத்தில் ஒரு மூத்த, விபரமான ஜோதிடரை அணுகி, தீர்வுக்கான வழிமுறைகளை தேர்வு செய்து கொள்வதோடு, நாணம் கொள்ளாமல், மனம் திறந்து ஒரு மருத்துவரிடமும் கவுன்சிலிங் பெற்று வாழ்க்கையை வளமாகவும், மகிழ்ச்சியாகவும் வாழும் வகையில் அமைத்துக்கொள்ளுங்கள்.  வாழ்த்துக்கள்.

    முக்கிய குறிப்பு:  இந்த பதிவின் தொடர்ச்சியாக உள்ள " சயனதோஷம். ஜோதரகளுக்கான பதிவு," என்பதையும் படித்து பாருங்கள்.  அதில் உங்களுக்கு தேவையான விபரங்களும் கிடைக்கலாம்.  ஆனால் அந்த பதிவு ஜோதிடர்களுக்கானது என்பதால் உங்களுக்கு புரியுமாறு அமைந்திருப்பது கடினம் என எண்ணுகிறேன்.  நன்றி.

Tuesday 4 March 2014

மோக்ஷப் பிறவிகளைப் பற்றிய பதிவு



     ஓம் நமசிவாய.  அனைவருக்கும் வணக்கம்.  மோக்ஷப் பிறவிகளைப் பற்றிய பதிவு இது.  [ பாரம்பரிய முறை ]  இவ்வுலகத்தில்  பிறந்து துன்பங்களையும், துயரங்களையும் மட்டுமே அனுபவித்து வருபவர்களுக்கும் இது ஒரு ஆறுதல் பதிவாக இருக்கும் என்று நம்புகிறேன்.

     பொதுவாக விரயத்தில் கேது இருப்பின் மோக்ஷ ஜாதகம் என்று பரவலாக கருதப்படுகிறது.  ஜோதிட ரீதியாக கொஞ்சம் ஆன்மிக சிந்தனையோடு சிந்திப்போம்.  " இருள் சேர் இருவினையும் சேரா, இறைவன் பொருள் சேர் புகழ் புரிந்தார் மாட்டு",  இத்திருக்குறளை சற்று விரிவாக பார்த்தோமானால் நமக்கு ஒன்று புரியும்;  இவ்வுலகில் பிறந்த ஜீவன்கள் அனைத்தும், வினைப்பயனை அனுபவிக்கப் பிறந்தவை.  புண்ணியம் புரிந்தவர்கள் புண்ணிய பயனை அனுபவிக்கவும், பாவம் புரிந்தவர்கள் பாவ பயனை அனுபவிக்கவும் பிறந்தோம்.  இப்படி பாவ புண்ணிய கணக்கில் எது மிஞ்சுகிறதோ அதை அனுபவிக்கும் பிறவி நமக்கு வாய்க்கிறது.  இதை ஜோதிட ரீதியாக ஜோதிடர்கள், பூர்வபுண்ணிய ஸ்தானத்தையும், பாக்கிய ஸ்தானத்தையும் பார்த்து, நம் பிறவி எத்தகையது என்று கூறிவிடுவார்கள்.  ஆக புண்ணியம் பாபம் இரண்டிலும் எதுவும் மிச்சம் இல்லாதபடி நம் வாழ்க்கை அமையுமானால் நமக்கு மோக்ஷம் நிச்சயம்.  ஆகவே திருவள்ளுவர், புண்ணியம், பாபம் என்ற இருவினையும் பிறவி என்ற இருளுக்க்ள் தள்ளுவதால் " இருள் சேர் இருவினை "என்கிறார்.

     இது சம்பந்தமாக மகாபாரதம் தரும் விளக்கம் ஒன்றை பார்க்கலாம்.  மாதா, பிதா, குரு, தெய்வம் ஆகிய அனைவராலும் கை விடப்பட்ட பாப ஆத்மா கர்ணன்.  வாழ்க்கையில் துயரங்களையும், துன்பங்களையும் மட்டுமே அனுபவித்தவன்.  இப்படி துன்பங்களையே அனுபவித்ததால் அவன் பாவவினைகள் எல்லாம் கழிந்தன.  அப்படியென்றால் கர்ணன் ஜாதகம் எப்படி இருந்திருக்கும்?  இப்பிறவியில் பாப புண்ணீய அனுபவங்களை தரக்கூடிய பாக்கிய ஸ்தானம் கெட்டுப்போயிருக்கும்.  இறுதியில் கர்ணன் போர்களத்தில் குற்றுயிரும், கொலையுயிருமாக இருக்கும் போது ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா அவனுக்கு மோக்ஷம் தர விரும்புகிறார்.  ஆனால் கர்ணன் செய்த தான தருமங்கள் புண்ணியவினைகளாக மாறி அடுத்தபடி புண்ணியபிறவியை தர இருந்தன.  இது மோக்ஷத்திற்கு தடையாக இருந்தது.  எனவே பரமாத்மா, அவனது புண்ணியத்தையெல்லாம் தானமாக பெற்றுக்கொள்கிறார்.  அதுவும் புண்ணியதானம் தருவதால் ஒரு புண்ணியம் உருவாகுமே, அதையும் சேர்த்து தானமாக பெற்றுக்கொள்கிறார்.  இப்போது கர்ணன் கணக்கில் புண்ணியமுமில்லை.  பாவமுமில்லை.  மோக்ஷம் கிடைத்தது.  அவனது ஜாதகம் எப்படி இருந்திருக்கும்? ....................

     எனவே மோக்ஷ பிறவியாக வ்ரும் அவதார புருஷரகள், தமது பாபவினைகளை தாமே ஏற்று அனுபவித்து தீர்த்துகொள்கிறனர். புண்ணிய வினைகளை " சிவார்ப்பணம் "  " கிருஷ்ணார்ப்பணம் " என்று இறைவனுக்கு அர்ப்பணித்துவிடுகிறனர்.  அவர்கள் வாழ்க்கையில் துன்பங்கள் தான் நிறைந்திருக்கும்.  இதனால் அவர்கள் பாக்ய ஸ்தானம் நிச்சயமாக நன்றாக இருக்காது என்று விளங்குகிறது.  புண்ணிய, பாவ நிலையில்லாத நிலையடையும்  இவர்களது மற்ற ஸ்தானங்கள் எப்படியிருக்கும்? என்பது நம் சிந்தைக்கு எட்டாததாகவே இருக்கிறது.  ஆகவே விரயத்தில் கேது இருப்பின் மோக்ஷம் என்பது ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லை.  பொதுவாக, வாழ்க்கையில் துன்பங்களையே அனுபவிக்கும் ஜாதகர்கள் எதையும் இறைவனுக்கு அர்ப்ப்ணித்துவிட்டால் மோக்ஷம் கிடைக்கும் என நம்பலாம்.  ஆனால் இன்னார் தான் மோக்ஷம் அடைவர் என்று எந்த ஜோதிடராலும், எந்த ஜாதகத்தையும் அடையாளம் காட்ட இயலாது. ஆகையால் பாக்ய ஸ்தானம் பாதிக்கப்பட்டு கஷ்டப்படும் ஜாதகர்கள், மஹான்களின் ஜாதகம் போல் நம் ஜாதகம் அமைந்துள்ளது என்று எண்ணி இறைவனுக்கு நன்றி சொல்லி அவன் திருவடி அடையும் வழியை தேடுவோமாக...............அதற்கு இறைவன் அருள் புரிவான்.  நன்றி. 

ஆயில்ய நக்ஷத்திர பெண்களுக்கான பதிவு



     ஓம் நமசிவாய.  அனைவருக்கும் வணக்கம். திருமணத்திற்கு காத்திருக்கும்,  ஆயில்ய நக்ஷத்திர பெண்களுக்கான பதிவு இது. [ பாரம்பரிய முறை ]

     ஆயில்ய நக்ஷத்திர ஜாதகங்களை ஜோதிடர்கள் பலர் " மாமியாருக்கு ஆகாத ஜாதகம்," என ஒதுக்குவது வழக்கம்.  இதனால் இவர்கள் மாமியார் இல்லாத குடும்ப வரணை தேடுவது வழக்கம். அப்படி தேடி, கிடைத்தாலும், ஜாதக பொருத்தம் அமைவது குறைவாகவே இருக்கும்.  மிருகசீரிஷம், மகம் ஸ்வாதி, அனுஷம் ஆகிய 4 நக்ஷத்திர ஜாதகங்கள் ஜோதிட விதிப்படி பொருத்தம் பாராமலேயே, அதாவது விவாஹ தச வித பொருத்தம் மட்டும் பார்க்காமலேயே இணைக்கலாம்.  விவாஹ தச வித பொருத்தம் பார்த்தால் இணையக்கூடியது உத்திரம் 1 ம் பாதம் மட்டுமே.  இந்த 5 வகை ஜாதகங்களில் : தோஷ சாம்யம் ", அமையாமல் தள்ளுபடியாகக் கூடியவை உண்டு. மீதம் இருப்பவற்றில் ஜாதக கட்ட பொருத்தம் பார்க்க வேண்டியுள்ளது.  ஆக கடைசியில் சொற்ப அளவு ஜாதகங்களே பொருத்தம் உள்ளதாக அமைவதால் வரன் தேடுவதில் சிக்கல் நீடித்துக்கொண்டிருக்கும்.  அதன் பின் நடைமுறை கொடுக்கல் வாங்கல் வேறு.  ஆக மொத்தம் மேற்கண்ட காரணங்களால்,  ஆயில்ய நக்ஷத்திர பெண்கள் திருமணம் தள்ளிப்போய், காத்துக்கொண்டிருக்கும் நிளை ஏற்படுகிறது. 

     இதற்கிடையில் பொதுவாக, திருமணம் செய்து வைக்கும் சாஸ்த்திரிகள் தரப்பில் ஒரு செய்தி கூறப்படுகிறது.  திருமண பந்தலில் மணமகனின் தாயார் ஸ்தானத்த்ல், பெற்ற தாய்க்கு பதிலாக வேறு யார் இருந்து, திருமண சடங்கு சம்பிரதாயங்களை நிறைவேற்றினாலும், அவர் மணமகளுக்கு மாமியார் ஆகிவிடுகிறார்.  இந்த ஆயில்ய நக்ஷத்திர தோஷம் மாமியாரை பாதிக்குமல்லவா? என்கிறனர்.  சாஸ்த்திர ரீதியாக இதை ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும்.  இப்போது என்ன செய்வது?

     இந்த சாஸ்திரத்துக்கு ஆதரவாக ஒரு மகாபாரத சம்பவமும் உள்ளது.  அர்ஜ்ஜுனனுக்கும், சுபத்திரைக்கும் திருமணம்.  தந்தை பாண்டு இல்லாத காரணத்தால் தாய் குந்தி அர்ச்சுனனுக்காக தாய் ஸ்தானத்தில் இருந்து சடங்கு சம்பிரதாயங்களை நிறைவேற்ற இயலவில்லை.  எனவே தாய், தந்தை ஸ்தானத்தில் பாஞ்சாலியும், தருமரும் அமர்கிறனர்.  பாஞ்சாலி தாய் ஸ்தானத்தில் அமர்ந்து சடங்கு சம்பிரதாயங்களை நிறைவேற்றிய காரணத்தால், அர்ஜ்ஜுனன் தன் மனைவியான பாஞ்சாலியை அன்று முதல் தாயாகவே பாவித்து நடந்துகொண்டான். 

     இறைவன் கருணையே வடிவானவர்.  இந்த சாஸ்த்திர சிக்கலுக்கென ஒரு தீர்வை அவர் தந்திருக்கிறார்.  ஆயில்ய நக்ஷத்திர பெண்களுக்கென ஒரு கோவில் உள்ளது.  அது திருச்சியில் உறையூரில் [ நாச்சியார் கோவில் ] அமைந்துள்ளது.  ஆயில்ய நக்ஷத்திராதிபதி புதன்.  புதன் வழிபடும் தெய்வம் திருமால்.  அந்த திருமால், அங்கு ஆயிலய நக்ஷத்திர பெண்களின் மாமியார் தோஷத்திலிருந்து விடுதலை தர கோவில் கொண்டிருக்கிறார்.  ஸ்ரீ கமலவல்லி நாச்சியார் உடனுறை ஸ்ரீ அழகிய மணவாள பெருமாளாக எழுந்தருளியிருக்கிறார்.  நாச்சியார் பங்குனி மாதம் ஆயில்ய நக்ஷத்திரத்தில் உதித்தவள்.  அவள் ஸ்ரீ பெருமாளை மணம் புரியும் திருக்கோலத்துடன் எழுந்தருளியிருக்கிறாள்.    இந்த திருக்கோவிலுக்கு ஆயில்ய நக்ஷத்திர பெண்கள் ஆயில்ய நக்ஷத்திர தினத்தன்று சென்று அர்ச்சனை செய்து விரைவில் வரன் அமைய வேண்டிக்கொள்ளவேண்டும்.  வரன் அமைந்த பின் மாங்கல்ய தாரணம் [ தாலி கட்டிக்கொள்ளுதல் ] மூலஸ்தானத்தில் இறைவன் திரு முன்பாக நடத்திக்கொள்ள வேண்டும்.  சன்னதியில் பட்டாச்சாரியார் பெருமாள் திருவடியில் மாலையும், மாங்கல்யமும் வைத்து, அரச்சனை செய்து வழங்க, அதை மணமகன், மணமகளுக்கு சூட்ட வேண்டும்.  இவ்வாறு நடக்கும் போது, அங்கு மற்ற திருமண சடங்குகள் இல்லை.  எனவே மணமகன் தாயார் ஸ்தானத்தில் இருந்து சடங்கு, சம்பிரதாயங்களை நிறைவேற்ற யாரும் தேவைப்படுவதில்லை.  சாஸ்த்திர ரீதியாகவும் மாமியார் தோஷம் இல்லாமல் போகிறது.

     எனவே ஆயில்ய நக்ஷத்திர பெண்கள் அனைவரும், திருச்சி, உறையூர் [ நாச்சியார் கோவில் ], ஸ்ரீ கமலவல்லி நாச்சியார் உடனுறை ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் திருக்கோவிலுக்கு சென்று பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.  பெருமாள் திருவருளால் நல்ல வாழ்க்கை அமையும். 

     முக்கிய குறிப்பு:  ஒரு நல்ல ஜோதிடரை அணுகி தனக்கு திருமண யோகம் வந்துவிட்டதா? என தெரிந்துகொண்டு, அதன் பின் கோவிலுக்கு செல்வது மிகவும் உத்தமம்.