Saturday 25 April 2015

ஜாதகத்தில் வெளினாட்டு யோகம். [ அன்றும், இன்றும் ].



ம் நமசிவாய.  அனைவருக்கும் வணக்கம்.  ஜாதகத்தில் வெளினாட்டு யோகம்.  [ அன்றும், இன்றும் ].  பாரம்பரிய முறையிலான பதிவு.  லக்னம் சரஸ்தானமாகி, லக்னாதிப்தி, வேறு சரஸ்தானத்தில் நின்றால், அதன் ஜாதகர் நிச்சயம் வெளினாடு சென்றுவிடுவார்.  இப்படி ஒரு எளிமையான ஜோதிட விதியை முற்காலத்தில் அதிகமாக பயன்படுத்தி பலன் கூறி, அதில் ஜோதிடர்கள் வெற்றி பெற்று வந்தனர்.  தற்போது பரந்து விரிந்து கிடக்கும் இந்திய தேசம், முற்காலத்தில் பல குறுகிய நிலப்பரப்புகளாக பிரிந்து, அவைகள் பல மன்னர்களால் ஆளப்பட்டு வந்தன.  ஒரு மன்னனுடைய நாட்டிலிருந்து ஒரு பிரஜை, இன்னொரு மன்னன் நாட்டுக்கு சென்றால் அது அயல்தேசமாகிவிடும்.  உதாரணத்திற்கு, புதுக்கோட்டையிலிருந்து ஒருவர், தஞ்சாவூர் வந்தாலே, அவர் அயல்னட்டுக்கு வந்துள்ளார் என்று பொருளாகிவிடும்.  புதுக்கோட்டை பாண்டியனாடாகவும், தஞ்சாவூர் சோழனாடாகவும் இருந்த காலமது.  எனவே மேலே சொல்லப்பட்ட ஜோதிடவிதி அக்காலத்தில் மிக பரவலாக ஜோதிடர்களால் கையாளப்பட்டு வந்தது. 

இதே விதியை இக்காலத்தில் பயன்படுத்தினால் அதை எவ்வாறு? பொருள் கொள்வது என்று சிந்திக்கவேண்டியிருக்கிறது.  மேற்கண்ட விதிப்படி ஜாதகம் அமைந்தவர்கள்,  வெளினாடு சென்றாக வேண்டும் என்றால் அவர், அண்டை நாடுகளுக்காவது செல்லவேண்டும். ஆனால் அனுபவத்தில், மேற்கண்ட விதிப்படி ஜாதகம் அமைந்த ஜாதகர்கள், மதுரையில் பிறந்தவர், பெங்களூர், மைசூர் தாண்டி, இன்னும் சொல்லப்போனால் மும்பை தாண்டி செல்லாத நிலையை பார்க்கமுடிகிறது.  லக்னம் சரமாக இருந்தால், தொழில்ஸ்தானம் சரமாக இருக்கும்.  எனவே அவர் தொழிலுக்காக அவ்விடம் செல்வார்.  அதுபோல் லக்னம் சரமாக இருந்தால் களத்திரஸ்தானமும் சரமாக இருக்கும்.  எனவே அவருக்கும் அமையக்கூடிய மனைவி அவ்விடத்திலிருந்து அமைவாள்.  லக்னம் சரமாக இருந்தால் இருப்பிடத்தை குறிக்கும் ஸ்தானமும் சரமாக இருக்கும்.  எனவே அவரது வாழ்க்கை மேற்கூறப்பட்ட ஊர்களில் அமையும்.  அக்காலத்தில் இவ்வாறு அமைவதையே, அயல்தேசதொழில், அயல்தேசமனைவி, அயல்தேசவாசம் என்று கூறிக்கொண்டனர்.  ஆனால் இக்காலத்தில் அயல்தேசமனைவி என்று சொல்லிக்கொள்ள வேண்டுமானால் அவள் அடையாளமே வேறு.  குறைந்தபட்சம், அண்டைனாடுகளான நேபாளத்திலோ அல்லது இலங்கையிலோ பிறந்தவளாக இருக்க வேண்டும்.  நம் அத்தை, மாமனுக்கு பிறந்திருந்தாலும், அவள் பிறப்பு இந்திய எல்லைக்குள் நடந்திருக்கக்கூடாது.  இப்படி எல்லாமே பெரும் மாற்றங்களுக்குள்ளாகி இருக்கிறது.  எனவே நாம் நமது ஜோதிடவிதியிலும், இக்காலத்திற்கேற்ப உள்ள விதியை முதன்மையாக கொண்டு, அக்காலத்தில் பரவலாக பயன்படுத்தப்பட்ட விதியின் பொருளிலும் சில மாற்றங்களை செய்துகொள்ள வேண்டியிருக்கிறது.

என் அனுபவத்தில் நான் கடைபிடிக்கும் விதியை விளக்க விரும்புகிறேன்.  ......................  " லக்னாதிபதி இருக்கும் பாவத்திற்கு, விரையாதிபதி, லக்னாதிபதிக்கு பகையாகவோ, அல்லது அஸ்தங்கமாகவோ, நீசமாகவோ, அல்லது வேறு வழிகளில் வலுவிழந்தோ இருந்தால், ஜாதகர் வெளினாடு சென்றுவிடுவார்.  லக்னாதிபதி சரஸ்தானாதிபதியாக இருந்தால் ஜாதகர் குடும்பத்தோடு  நிலையாக வெளினாட்டில் தங்கிவிடுவார்.  லக்னாதிபதி ஸ்திரஸ்தானாதிபதியாக இருந்தால், அவர் குடும்பம் இந்தியாவில் இருக்க, ஜாதகர் மட்டும் வெளினாட்டுக்கு செல்வார்.  லக்னாதிபதி உபயஸ்தானாதிபதியாக இருந்தால், ஜாதகர குடும்பத்தோடு, வெளினாட்டிலும், இந்தியாவிலும், மாறி, மாறி வாழ்னாளை கழிப்பவராக இருப்பார்.  இதில் இன்னும் நாம் கொஞ்சம் நுணுக்கத்தை கையாண்டால், செல்லும் நாடு உள்ள திசை, ஜாதகர் வெளினாடில் இருக்கப்போகும், இடத்தின் தன்மை ஆகியனவும் கண்டுகொள்ளலாம்.  அதுபோல் வெளினாடு செல்லும் காலம், இருக்கும் காலம் ஆகியனவும் அறியலாம்.

வெளினாட்டுக்கு செல்லவேண்டுமென்றால், அதற்குரிய யோகமான தசாபுக்தி வரவேண்டும் என்று சொல்லப்படுவதுண்டு.  இத்தகைய நேரங்களில் வெளினாடு சென்றால், செல்லும் செலவுக்கு கடன் வாங்காமல், மகிழ்ச்சியாகவும், நல்லதொழில் புரிந்து, பெருந்தொகையை சம்பாதிக்கும் வாய்ப்பை தரும் பயணமாக அது அமையும்.  சிலருக்கு இது நேர் எதிர்மறையாக நடக்கும்.  கடன் வாங்கி, மனவேதனையுடன், குடும்பத்தைவிட்டு பிரிந்து, நல்ல தொழில் அமையாமல், வாங்கிய கடனை அடைக்கவும் முடியாமல் திணறுபவராகவும் இருப்பதுண்டு.  இப்படி எதிர்மறையான நிகழ்வுகள் நடக்கவும் கிரகங்களே காரணம்.  இத்தகையோருக்கு வெளினாடு செல்லும்வாய்ப்பு இருக்கும்.  அந்த வாய்ப்பானது, ஏழரைசனி காலத்திலோ, அல்லது 2, 8 ஆகிய ஸ்தானங்களில் ராகு, கேது, சனி அமையும் காலத்திலோ, அமைந்துவிடும்.  இக்காலகட்டத்தில் இந்த கிரகங்களானது, வெளினாடு சென்று அவஸ்தைபடட்டும் என்றே, ஜாதகரை வெளினாட்டுக்கு இழுத்து சென்று தள்ளி விட்டுவிடும்.  முற்காலத்தில் இம்மாதிரியான சந்தர்ப்பத்தில், அரசதண்டனையாக மனைவி, மக்களை பிரித்து, ஜாதகரை கிரகங்கள் நாடு கடத்த வைத்துவிடும்.  இக்காலத்தில் இந்த பலனை ஜாதகருக்கு நாம் சொல்ல முடியாது.  

முற்காலத்த்ல் நிலவழி போக்குவரத்து அதிகமாக இருந்தது.  அதற்கடுத்து நீர்வழி போக்குவரத்து இடம் பெற்றது.  நீர்வழி போக்குவரத்து பெரும்பாலும் ஆறுகள் வழியே நடந்தன.  பெரும் செல்வம் படைத்த வணிகர்கள் மட்டும், கடல் கடந்து, இந்தியாவுக்கு அருகாமையிலுள்ள, தீவுகளுக்கும், பர்மா, தாய்லாந்து போன்ற அண்டை நாடுகளுக்கு சென்று வணிகம் புரிந்து வந்தனர.  வான்வழி போக்குவரத்து இல்லாமலிருந்த காலம் அது.  வெளினாட்டு பயணம், நீர்வழியா? நிலவழியா> என்பதை பஞ்ச பூத கிரகங்களில் நிலம், நீர்கிரகங்களையும், நில, நீர் ராசிகளையும் வைத்து சொல்லிவந்தனர்.  இக்காலத்தில் இவைகளோடு, வாயு கிரகங்கள், வாயு ராசிகள் ஆகியவற்றை இணைத்து சொல்லி வருகிறோம்.  தற்போது வான்வழிபோக்குவரத்து எளிதாகிவிட்டது.  ஆக காலத்திற்கேற்பவும், பலனையும், அதற்கான விதிகளின் பொருளையும் நாம் மாற்றிக்கொள்ள வேண்டியிருக்கிறது.  ஜோதிடமானது, கால, தேச, வர்த்தமான மாற்றங்களுக்கு உட்பட்டது என்பதை எல்லோரும் அறிவோம்.  ஆகவே அம்மாற்றங்களையும் சிந்தித்து ஜோதிட பலன் உரைத்து வெற்றி பெறுவோமாக.  இறைவன் திருவருள் புரியட்டும்.  நன்றி.          

   

Monday 13 April 2015

அஷ்டமமா? கஷ்ட [ம] மா?



 ம் நமசிவாய.  அனைவருக்கும் வணக்கம்.  அஷ்டமஸ்தானத்தால் ஏற்படும் சாதகத்தை விளக்கும் பதிவு இது.  [ பாரம்பரிய முறை ].  அஷ்டமசனி, சந்திராஷ்டமம், அஷ்டமி திதி...............என்றெல்லாம், அஷ்டமத்தோடு தொடர்புடைய பெயர்களை கேட்டாலே கிடுகிடுத்துப்போகும் அளவுக்கு, ஒரு உருவகத்தை நம் ஜோதிட உலகம் உருவாக்கி வைத்திருக்கிறது.  அஷ்டமத்தில் கிரகம் இருப்பின், அது தன் சுபாவ தன்மையாலும், ஸ்தானாதிபத்தியத்தாலும், நிச்சமயமாக கெடுதலை தந்தே தீரும்.  எனவே அஷ்டமத்தில் எந்த கிரகமும் இல்லாமல், அந்த ஸ்தானம் காலியாக இருப்பது நல்லது என்று ஒரு பொதுவான கருத்து நிலவுகிறது.  அஷடமாதிபதி என்று ஒருவர் இருப்பாரல்லவா!.  அவரால் கெடுதல் விளையுமே, என்றாலும், இந்த அஷ்டமாதிபதியை தவிர்க்க இயலாது.  [ இவரே 6. 12 ஆகிய இடங்களில் மறைந்தால் அது வேறு விஷயம். ].  இவர் எந்த ஸ்தானத்தில் இருந்தாலும் கெடுதலே.  சுபக்கிரகங்களின் பார்வையால் இவர் கெடுதல்கள் குறையும், அல்லது தடுக்கப்படும்.  நிச்சயமாக நன்மை விளையப்போவதில்லை.   

இவைகள் ஒரு புறம் இருக்க அஷ்டமஸ்தானத்தாலும், யோகங்களை தந்து, ஜாதகரின் வாழ்க்கைதரத்தை உயர்த்த முடியும் என்பதையும் நாம் சிந்தித்து பார்க்கவேண்டும்.  அஷ்டமம் பணபர ஸ்தானனகளில் ஒன்று.  எனவே ஜாதகரின் நிதினிலையை நிர்ணயித்து, அவருக்கு அதில் செழிப்பை தரும் கடமையும் இந்த ஸ்தானத்திற்கு உண்டு.  மேலும் கிரகங்களின் இணைவுகள் எனப்படும் யோகங்கள் தரக்கூடிய நற்பலன்களும் இந்த ஸ்தானத்தின் மூலம் ஜாதகருக்கு கிடைக்கும்.  மேற்கண்ட இந்த விளக்கத்தை, தனது உத்திரகாலாம்ருதத்தில், 4 வது அத்தியாயம், 22 வது ஸ்லோகத்தின் மூலம், மஹாகவி காளிதாசர் உறுதிப்படுத்துகிறார்.  அந்த ஸ்லோகத்தின் சாராம்சத்தை தமிழில் கீழே கொடுத்திருக்கிறேன்.

அசுபஸ்தானங்கள் என்று சொல்லப்படும், 6, 8, 12 க்குரிய ஸ்தானாதிபதிகள், தனித்தனியாகவோ அல்லது இணைந்தோ வெவ்வேறு அசுபஸ்தாங்களில் இடம் பெறவேண்டும்.  அல்லது, மேற்கண்ட ஸ்தானாதிபதிகள் ஒருவருக்கொருவர் பரிவர்த்தனையாகி இருக்கவேண்டும்.  அல்லது மேற்கண்ட ஸ்தானாதிபதிகள், குறைந்தபக்ஷம் இருவராவது ஒருவருக்கொருவர் பார்த்துக்கொள்ளவேண்டும்.  இவ்வாறு இருக்கும்போது, மற்ற கிரகங்களின் பரிவர்த்தனையோ அல்லது பார்வையோ பெறக்கூடாது.  இவ்வகை அமைப்பு உடைய ஜாதகர், நாடாளும் யோகம், உலகளாவிய புகழ், பெயர், மற்றும், கணக்கற்ற திரண்ட செல்வம், ஆகியவைகளை பெறுவார்.  இம்மூன்றும் ஒருசேர கிடைக்கவில்லையாயினும், நிச்சயம் இவற்றில் ஒன்றை அவர் அனுபவிப்பார்.  இவைகள், இந்த யோகம் தரும் ஸ்தானாதிபதிகளின் தசாபுக்தி காலங்களில் நிகழும்.  இந்த யோகத்திற்கு ' விபரீத ராஜயோகம் ' என்று பெயர்.  [ முக்கிய குறிப்பு...................யோகம் தரும் கிரகம் எந்த வகையிலும் தன் பலத்தை இழக்ககூடாது.  அவ்வாறு பலமிழந்தால் யோகம் பங்கப்பட்டுவிடும்.  ]

இனி அஷ்டமத்திற்கு வருவோம்.  அஷ்டமத்தில் முழுபலத்துடன் 6, 12 ஆம் அதிபதிகள் தனியாகவோ இணைந்தோ இருக்கலாம்.  அஷ்டமாதிபதியுடன் 6, 12 ஆம் அதிபதிகள் பரிவர்த்தனை மற்றும் பார்வை பெறலாம்.  அதே நேரம் மற்ற கிரகங்களின் பரிவர்த்தனையோ, பார்வையோ பெறக்கூடாது.  இவ்வகை அமைப்புடன் இருக்கும் அஷ்டமஸ்தானம் சிறந்த ராஜயோகம் தரும் என்பதில் ஐயமில்லை.    

இந்த ஜோதிடவிதியின் அடிப்படையில் அஷ்டமஸ்தானம், ஒரு சிறந்த ராஜயோகம் தரும் ஸ்தானமாகிறது.  இப்படிப்பட்ட கிரக அமைப்பு கொண்ட யோகத்தால், தமிழ்னாட்டை ஆட்சி செய்து, உலகளாவிய அளவில் பெயரும், புகழும் அடைந்த பேரறிஞர் அண்ணா அவர்களின் ஜாதக கட்டத்தை உங்கள் பார்வைக்காக இணைத்திருக்கிறேன்.  அஷ்டமாதிபதி சூரியனுடன், சத்ருஸ்தானாதிபதி புதன் இணைவாலும், அதுபோல் விரையாதிபதி குரு இணைவாலும் விபரீத ராஜ யோகம் உண்டாகி, அவருக்கு, நாடாளும் சிறப்பையும், உலகளாவிய புகழையும் பெருமையையும் தந்தது.  வேறொரு வகையில் சத்ருஸ்தானாதிபதி புதனுடன், விரையாதிபதி குரு இணைவு என்று கூட கொள்ளலாம்.  இதுபோல் இந்த யோகத்த்தால், வாழ்க்கையின் சிகரத்தை தொட்டவர்கள் நிறைய பேர்கள் உண்டு.  உதாரணத்திற்கு, திரு.சச்சின் டெண்டுல்கர், திரு. அமிதாப்பச்சன், திரு. நர்கிஸ் [ பழம்பெரும் இந்தி நடிகை ], திரு. ராஜ்கபூர், திரு. ஐஸ்வர்யாராய் பச்சன், திரு. ரஜினிகாந்த், திரு. லதாமங்கேஷ்கர், திரு. ரவீந்திரனாத் டாகூர், திரு. ராம்கிருஷண டால்மியா, திரு. ஜுகல் கிஷன் பிர்லா ஆகியோரும் விபரீத ராஜயோக ஜாதகர்களே.  [ இந்த பட்டியல் இணையதளத்திலிருந்து பெறப்பட்டது. ].

எனவே அஷ்டமத்தில் கிரகங்கள் இருப்பின், அவைகள் யோகத்தை தருகின்றனவா? என்று முதலில் ஆராய வேண்டும்.  அவ்வாறு இல்லையென்றால் மட்டுமே, அந்த கிரகங்களால் அஷ்டமஸ்தானத்திற்குரிய தீய பலன்கள் நடக்குமென்று உறுதி செய்துகொள்ள வேண்டும். நன்றி.  வணக்கம்.     

Tuesday 7 April 2015

நக்ஷத்திர பலன்கள்............ஒரு பார்வை .



ம் நமசிவாய.  அனைவருக்கும் வணக்கம்.  ..............நக்ஷத்திர பலன்கள்............ஒரு பார்வை . [ பாரம்பரிய முறை ]   ஜாதக நோட்டுகளில் ' நக்ஷத்திர பலன் ', என்று விரிவாக எழுதப்படுகிறது.  ஊடகங்களிலும் நக்ஷத்திரத்தை மட்டும் குறிப்பிட்டு சில பலன்கள் சொல்லப்படுகிறன / எழுதப்படுகிறன.  இதை எந்த அளவுக்கு வாசகர்கள் ஏற்றுக்கொள்ளலாம்? அல்லது பின்பற்றலாம் என்பதை ஆராய்ந்து சுருக்கமாக எடுத்து சொல்வதே இப்பதிவின் நோக்கமாகும்.

ஸ்ரீராமபிரானுக்கு புனர்பூசம் ஜென்ம நக்ஷத்திரம் என ராமாயணம் சொல்கிறது.  ஸ்ரீமுருகப்பெருமானுக்கு விசாகம் ஜென்ம நக்ஷத்திரம் என கந்தபுராணம் சொல்கிறது.  அதுபோல் ஆழ்வார் திருனக்ஷத்திரங்கள் எனவும், நாயன்மார்கள் திருனக்ஷத்திரங்கள் எனவும் பஞ்சாங்கங்களில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.  அந்தந்த நக்ஷத்திரங்களில், அந்தந்த மஹான்கள் அவதரித்திருக்கிறார்கள்.  அதே நக்ஷத்திரம் ஜென்ம நக்ஷத்திரமாக அமைந்துவிட்டால், அவர்களுக்கு அமைந்ததுபோன்ற குணாதிசயங்கள், உருவ அமைப்புகள் நமக்கு அமைகிறதா? என்றால் இல்லை.  ஜாதக அலங்காரம் எனும் நூல் புனர்பூசம் நக்ஷத்திரத்தில் பிறந்தவர்கள், அகங்காரியாகவும், கடினமொழி உடையவனாகவும், கள்ளனாகவும் இருப்பான் என்று பலனாக எடுத்துரைக்கிறது.  ஸ்ரீராமபிரான் அப்படிப்பட்டவரா? என்றால் இல்லை.  விசாக நக்ஷத்திரத்தில் பிறந்தவர்கள், நீடுதுயில் பிரியனாகவும், முன்கோபியாகவும் இருப்பான் என்று பலனாக சொல்லப்படுகிறது.  ஸ்ரீமுருகப்பெருமானின் குணாதிசயங்கள் அப்படியா இருந்தது?  மிக உயர்ந்த சொல்லாகிய ' திரு ', என்பதை அடைமொழியாக கொண்டவை திருவாதிரையும், திருவோணமும் மட்டுமே.  ' ஐயமற உலகுதொழ ஒரு மணியாய் விளங்கிய ஆதிரை ', என்று ஜாதக அலங்காரம்  திருவாதிரையை சிறப்பித்து கூறுகிறது.  இதற்கு காரணம், திருவாதிரை, ஸ்ரீசிவபெருமானோடு தொடர்புடையதாகும்.  மேற்கண்ட ' திரு ', என்ற அடைமொழி கொண்ட நக்ஷத்திரங்களில் பிறந்தவர்கள் எல்லாம் தெய்வாமசம் பொருந்தியவர்களா? என்றால் இல்லை.  பொய்யுரை சொல்பவன் என்றும், தரித்திரன் என்றும், நோயன் என்றும், திருவாதிரையில் பிறந்தவர்களுக்கு இலக்கணமாக ஜாதக அலங்காரம் நக்ஷத்திர பலன் சொல்கிறது. 

அதுபோல் உருவ அமைப்பில் புனர்பூச நக்ஷத்திரத்தை ஜென்ம நக்ஷத்திரமாக கொண்டவர்களில் சிகப்பாக உள்ளவர்களும், விசாகம் நக்ஷத்திரத்தை ஜென்ம நக்ஷத்திரமாக கொண்டவரகளில் கருப்பாக உள்ளவர்களும் உண்டு.  ஆழ்வார், நாயன்மார் திருனக்ஷத்திரங்களில் பிறந்தவர்களில் நாத்திவாதிகளும் உண்டு.  இப்படிப்பட்ட முரண்பாடுகள் இருப்பதை சிந்தித்து பார்த்தால், நக்ஷத்திரபலன்படி குணாதிசயம் கொண்டவர்களும், சாமுத்திரிகா லக்ஷணங்களை கொண்டவர்களும் குறைவு என்பது நன்றாக விளாங்கும்.  ஒவ்வொருவருடைய நடை, உடை, பாவனை, நிறம், தோற்றம் ஆகியவற்றை ஜாதககட்டத்திலுள்ள கிரக அமைப்புகளே தீர்மானிக்கின்றன.  

பின் ஏன்" நம் முன்னோர்கள், ஜென்மநக்ஷத்திரபலன், ஜென்மராசிபலன், ஜென்மலக்னபலன் என்றெல்லாம் சொல்லி வைத்தார்கள் என்ற கேள்வி எழும்.  இந்த பலன்களெல்லாம் வைத்து ஒருவருடைய வாழ்க்கையை தீர்மானித்துவிட முடியாது என்பது அவர்களுக்கு தெரியும்.   ஜாதகம் கணிக்கும்போது, நக்ஷத்திரசந்தி, ராசிசந்தி, லக்னசந்தி, ஆகியன ஏற்படுவதுண்டு.  இதை பற்றி என்னுடைய பிளாக்ஸ்பாட்டில் ' சந்தியில் பிறந்தவர்களுக்கான பதிவு ', என்று ஒரு கட்டுரை எழுதியிருக்கிறேன்.  அதில் இந்த சந்திகளை பற்றிய முழுவிபரங்கள் உள்ளன.  முகவரி.  www.josyamramu.blogspot.com  இந்த சந்திகளை திருத்தியமைத்து ஜாதகம் எழுதவேண்டும்.  திருத்தும்போது, இந்தலக்னமா? அந்தராசியா? எந்தனக்ஷத்திரம் என்றெல்லாம் சந்தேகங்கள் வரும்.  இதற்கு தீர்வு காண பல வழிமுறைகள் உள்ளன.  அந்த வழிமுறைகளில் ஒன்று நக்ஷத்திரபலன்.  இதை ஜோதிடர்கள், ஜாதகம் கணிக்குபோது, தன் சொந்த பயன்பாட்டிற்க்காக மட்டுமே பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.  இதை வைத்து ஜாதகர்களுக்கு பலன் சொல்கிறேன் என்று ' நீங்கள் இப்படித்தான் இருப்பீர்கல் ', என்று அறிவுருத்துவது தவறாகும்.  அதுபோல் வாசகர்களும், இந்த நக்ஷத்திரபலன், ராசிபலன், லக்னபலன், சாமுத்திரிகா லக்ஷணம், ஆகியவற்றை தனக்காக தனிப்பட்ட முறையில் சொல்லப்பட்டது என்று எண்ண வேண்டாம்.  இப்படி எண்ணுவதால் வீணான குழப்பங்களே அதிகரிக்கும்.   ஆகவே ஜனன ஜாதகப்படி அமையும் புறஅழகு, அகஅழகு ஆகியன மட்டுமே நிரந்தரமானவை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.  அதிலும் புறஅழகுக்கு முக்கியத்துவம் தராமல் அகஅழகுக்கு முதலிடம் தந்து, அதை செம்மையாக்கிக்கொண்டு, வாழ்க்கையில் நற்புகழை அடையுங்கள்.  இறைவன் நல்லருள் புரிவானாக.  நன்றி வணக்கம்.