Friday 29 July 2016

" பாவத் பாவம் ", சில சிந்தனைகள்.



ம் படைவீட்டம்மா துணை.  ஜோதிட நண்பர்களுக்கு வணக்கம்.   ..............  " பாவத் பாவம் ", சில சிந்தனைகள்.  பாரம்பரிய முறை பதிவு.  ஒரு ஜாதகத்தை வைத்துக்கொண்டு, அந்த ஜாதகரின் குடும்பத்துக்கே, மருமகன், மருமகள் உட்பட அனைவருக்கும்,  ஜோதிட பலன் சொல்லி முடிக்கும் அளவுக்கு சில ஜோதிடர்களல், இந்த பாவத்பாவ முறை பின்பற்றப்படுகிறது.  ஜாதகர் கேட்கும் கேள்விகளுக்கு, ஜாதகரின்  லக்னத்திலிருந்து, கேள்விக்கு தொடர்புடைய பாவம் எதுவோ, அதை லக்னமாக கொண்டு நடைமுறையில் பலன் சொல்லப்படுகிறது.  உதாரணத்திற்கு, ஒரு ஜாதகர், தன் தம்பியின் கல்வி, தொழில், திருமணம் போன்ற கேள்விகளை கேட்கும் போது, ஜாதகரின் லக்னத்திலிருந்து, தம்பிக்குரிய 3 ஆம் இடத்தை லக்னமாக கொண்டு, கேள்விக்கு சம்பந்தப்பட்ட பாவங்களின் படி பலன் சொல்லப்படுகிறது.  இதே மாதிரியான வழிமுறையில், ஒரு ஜாதகரின் தாய் ஸ்தானம் என்ற 4 ஐ லக்னமாக கொண்டு, தாயின் கணவர் ஸ்தானம் எனப்படும் 7 ஐ மேற்கண்ட 4 உடன் கூட்டி, வரும் எண்ணிக்கை 10 ஐ கொண்டு குழப்பிக்கொள்கிறார்கள்.  தாயின் கணவர் தந்தை என்றால் ஜாதகரின் ஜாதகத்தில் தந்தைக்குரிய ஸ்தானமாகிய 9 அல்லவா வரவேண்டும்.  பாவத்பாவப்படி 10 வருகிறதே என்ற தேவையில்லாத கணிப்பு வேறு.  இப்படி ஒவ்வொரு உறவுமுறைகளையும் கணித்து பார்த்தால், பெரும்பாலும் ஏறுக்கு மாறான ஸ்தானங்களையே அடையாளம் காட்டும்.  நம் மஹரிஷிகளின் வழிகாட்டுதலில் இத்தகைய குழப்பங்களுக்கு இடம் கிடையாது என்பதை நன்றாக புரிந்துகொள்ள வேண்டும்.  பாவத்பாவ தத்துவத்தை நன்றாக புரிந்துகொண்டவர்கள் மேற்கண்ட தவறான கணிப்புகளை செய்ய மாட்டார்கள்.   முதலில் பாவத்பாவத்தை பற்றி நமது சாஸ்த்திர நூல்களில் ஒன்றான " பலதீபிகை ", என்ன சொல்கிறது? என்று பார்க்கலாம்.  பலதீபிகை என்னும் இந்த வடமொழி நூல் ஸ்லோகங்களால் ஆனது.  ஜோதிட பலன் சொல்ல வேண்டிய வழிமுறைகளை பற்றி இது எடுத்து சொல்கிறது.  இதை வடமொழியில் இயற்றிவர் ஸ்ரீமந்த்ரேஸ்வரர்.  மிகச்சிறந்த ஜோதிட மூலனூல்களில் இதுவும் ஒன்று.  : .................

பலதீபிகை : ..... 15 ஆவது அத்யாயம் : .........  " பாவசிந்தாத்யாயம் ". : ............. " எந்த பாவத்திற்கு பலன் பார்க்க வேண்டுமோ, அந்த பாவத்தை லக்னமாக கொண்டு அது முதல் ரூபம், தனம் முதலிய 12 பாவங்களின் பலன்களை யூகிக்க வேண்டும்.  : ......................  இது போலவே அவ்வவற்றின் காரகர்களான சூரியாதி கிரஹங்கள் இருக்குமிடத்தை அந்த பாவங்களின் லக்னம் முதலியவாக கொண்டு அவர்களின் பிதா, மாதா, அம்மான், சகோதரன், பதி,  புத்திரன், வேலையாள் இவர்களை பற்றிய பலனையும் கண்டு கொள்க.  : .............

{ முக்கிய குறிப்பு : மேற்கண்ட பாவத்பாவ முறைபடி பலன் காணும்போது, பாரம்பரிய வேத ஜோதிட விதிமுறைகளை வழக்கம் போல் பயன்படுத்த வேண்டும்.  வேறு வழிமுறைகளை இத்துடன் கலக்கலாகாது }.  அதாவது உடைமைகளின் பலன்களை பாவமுதலாக கொண்டும், உறவுகளின் பலன்களை காரகர் முதலாக கொண்டும் அறிய வேண்டும் என்பது இதன் திரண்ட கருத்து.  உதாரணத்திற்கு, ஒரு ஜாதக கட்டத்தை மட்டும் வைத்துக்கொண்டு, அதன் ஜோதிட பலன் பார்க்காமல், பாவத்பாவ தத்துவப்படி அதை அணுகிப்பார்க்கலாம்.  ஜாதகரின் சொத்துக்கள் பற்றி அறிய, ஜாதககட்டத்தில் உள்ள 4 ஆமிடமாகிய விருச்சிகத்தை கொண்டு பலன் அறிய வேண்டும் என்பது நாம் அனைவரும் அறிந்ததே.  இந்த சொத்தின் மீது வம்பு, தும்பு வழக்குகள் வருமா? என்று அறிய, பலதீபிகையின் வழிகாட்டுதலின்படி சிந்திக்கலாம்.  சொத்து ஒரு உடைமை பொருள் என்பதால், சொத்துக்குரிய 4 ஆமிடமாகிய விருச்சிகத்தை லக்னமாக கொள்ள வேண்டும்.  பின் அந்த சொத்தின் மீது கொண்ட பேராசையால் பகைவர்கள் உள்ளார்களா? என்று அறிய விருச்சிகத்திலிருந்து சத்ருஸ்தானமாகிய மேஷத்தை கொண்டு பலன் அறிய வேண்டும்.  இதில் நீதிமன்ற வழக்கு வருமா? என்று அறிய விருச்சிகத்திலிருந்து, வழக்கு ஸ்தானமாகிய 8 ஆமிடம் எனப்படும் மிதுனத்தை கொண்டு பலன் அறிய வேண்டும்.  இறுதியாக சொத்து கைவிட்டு போகுமா? அல்லது கைவசமாகுமா? என்று அறிய விருச்சிகத்திலிருந்து, இழப்புகளை தரும் ஸ்தானமாகிய [ விரயம் ] துலாத்தையும், வரவுகளை தரும் ஸ்தானமாகிய [ லாபம் ] கன்னியையும் கொண்டு பலன் அறிய வேண்டும்.  இவைகள் உடமைகளை பற்றி அறிய பார்க்க வேண்டிய பாவத்பாவ விதிமுறை.

இந்த ஜாதக கட்டத்தை, உறவுமுறைகளுக்கான பலன் அறியும் பாவத்பாவ விதிமுறை கொண்டு அணுகிப்பார்க்கலாம்.  மேற்கண்ட உதாரண ஜாதகருக்கு, சொத்து கிடைக்க வேண்டுமென்ற விதி இருப்பின், அந்த சொத்து யாருடையதாக இருக்கும்?  தந்தையினுடையதா?  தாயினுடையதா?  யாரிடம் சொத்து இருக்கிறதோ அவரின் சொத்தை அடைய ஜாதகருக்கு வாய்ப்பு உள்ளது.  அப்படியானால் தந்தை மற்றும் தாய்க்குரிய சொத்து ஸ்தானத்தை பார்த்து நாம் ஒரு முடிவுக்கு வர வேண்டும்.  பாவத்பாவ விதிமுறை அறியாதவர்கள், ஜாதகரின் தந்தை ஸ்தானம் 9 என்றும், அவருக்குரிய சொத்து ஸ்தானம், 9 லிருந்து 4 ஐ கூட்ட வரும் 12 ஐ கொண்டு ஜோதிட பலன் சொல்கிறனர்.  அதுபோல் ஜாதகரின் தாய் ஸ்தானம் 4 என்றும், அவருடைய சொத்து ஸ்தானம் 4 க்கு 4 ஆகிய 7 என்று கணித்து ஜோதிடபலன் சொல்கிறனர்.  பலதீபிகையின் படி பார்த்தால்,  இது ஒரு தவறான அணுகுமுறை.

தந்தை, தாய் ஆகியோர் உறவுமுறை என்பதால், காரகர்களை கொண்டு பலன் சொல்ல வேண்டும் என்று பலதீபிகை அறிவுருத்துகிறது.  தந்தையின் சொத்து நிலை பற்றி அறிய தந்தை காரகன் சூரியன் இருக்குமிடமான ரிஷபத்தை  லக்னமாக கொள்ள வேண்டும்.  ரிஷபத்திலிருந்து 4 ஆமிடமாகிய சிம்மத்தை கொண்டு தந்தை சொத்து நிலவரம் பற்றி அறியலாம்.  அதுபோல் தாய்காரகன் சுக்கிரன்.  [ சூரிய உதயத்திலிருந்து, அஸ்தமனம் வரை தாய் காரகன் சுக்கிரன். ]  சுக்கிரன் இருப்பது மேஷம் என்பதால் அதன் சொத்து ஸ்தானமாகிய கடகத்தை கொண்டு தாயின் சொத்து நிலையையும் அறிய வேண்டும்.  இதில் யாருக்கு சொத்து இருக்கிறது என்று முடிவாகிறதோ அவர்களின் சொத்தை ஜாதகர் அடைவார்.  இதுவே பாவத்பாவப்படி மிகசரியான வழிமுறையாகும்.  எனவே இனியாவது பலதீபிகை சொல்லும் விதிமுறையை அனுசரித்து, மிக சரியான ஜோதிட பலனை பாவத்பாவப்படி சொல்லி, நற்பெயர் பெறுவோமாக.  நன்றி  வணக்கம்.