Wednesday 16 March 2016

" சுக்கிரனும் வக்ராஸ்தமனமும் ",



ம் படைவீட்டம்மா துணை.  ஜோதிட நண்பர்களுக்கு வணக்கம்.  " சுக்கிரனும் வக்ராஸ்தமனமும் ",  பாரம்பரிய முறையிலான பதிவு.  சுக்கிரனின் வக்ராஸ்தமனம் புதனுக்கு அடிக்கடி நிகழ்வது போல் சுக்கிரனுக்கு அடிக்கடி நிகழாத  ஒரு அபூர்வ நிகழ்வு.  ஜோதிடத்திற்கும் இதற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு.  எனவே இதை பற்றி இந்த பதிவில் சிந்திப்போம்.  சூரியனை மையமாக கொண்டு கிரகங்கள் சுற்றி வருகிறன.  இவ்வாறு சுற்றி வரும் கிரகங்களில் புதன், சுக்கிரன் ஆகிய இரு கிரகங்கள் பூமிக்கும் சூரியனுக்கு இடையே அடிக்கடி வரும்.  பூமியை மையமாக கொண்டு சந்திரன் சுற்றுவதால் அவ்வப்போது பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் வரும்.  மற்ற செவ்வாய், குரு, சனி ஆகிய கிரகங்கள் பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் வருவதில்லை.  ராகு, கேது ஆகியவை நிழல் கிரகங்கள்.

வக்கிரம்.  .............................  பூமியிலிருந்து பார்க்கும்போது, ஒரு கிரகம், சூரியனை சுற்றிவருகிற வேகம் குறைந்து, பின்னோக்கி நகர்வது போல தோற்றம் அளிப்பதையே வக்கிரம் என்று சொல்கிறோம்.  சூரியனை சுற்றி வரும் எந்த கிரகமும், தன் வேகத்தை மாற்றிக்கொள்வதில்லை.  சுற்றுப்பாதைகளின் தூரங்கள் ஒன்றுக்கொன்று சற்று விலகுவதும், நெருங்குவதுமாக அமைந்துள்ளன.  இப்படி விலகி செல்லும் நிலையில் உள்ள பாதையில் ஒரு கிரகம் பயணிக்கும்போது, வேகம் குறைந்து பின்னோக்கி செல்வது போல் நமக்கு தோன்றுகிறது.  இந்த வக்கிரனிலை ஜோதிட சாஸ்த்திரப்படி, புதன், சுக்கிரன், செவ்வாய், குரு, சனி ஆகிய கிரகங்களுக்கு மட்டுமே உண்டு.  ஆனால் " சூரிய சித்தாந்தம் ", என்னும் வானவியல் சாஸ்த்திரம் சூரியன், சந்திரன், ராகு, கேது ஆகிய கிரகங்களுக்கும் வக்கிரனிலை உண்டு என்கிறது.  இவைகளின் வக்கிர காலம் கணிப்பது மிகவும் கடினம் என்பதாலும், நிறைய வித்தியாசங்கள் வரும் என்பதாலும், வக்கிரனிலை மிக குறுகிய காலமே நிலைக்கும் என்பதாலும் ஜோதிட சாஸ்த்திரம் இதை ஏற்றுக்கொள்ளவில்லை.  மற்ற கிரகங்களை விட பூமிக்கு மிகவும் அருகாமையில் வரக்கூடிய கிரகம் சுக்கிரன்.  மேலும் இதன் வேகம் பூமியை விட அதிகம் என்பதால், இதன் வக்கிர காலம் கணிப்பதில் அதிக கவனம் தேவைப்படுகிறது என்று பஞ்சாங்க நிபுணர்கள் சொல்கிறனர்.  பூமி சூரியனை சுற்றி வரும் வேகம் நொடிக்கு கிட்டத்தட்ட 29.78 கிமி.  சுக்கிரன் சூரியனை சுற்றி வரும் வேகம் நொடிக்கு கிட்டத்தட்ட 35.02 கிமி.  பூமிக்கு அருகில் வந்து, பூமியை விட நொடிக்கு கிட்டத்தட்ட 5.24 கிமி. வேகமாக முந்திக்கொண்டு ஓடும் சுக்கிரன், பின்னோக்கி செல்வது போல் தோற்றமளிக்கும் வக்கிர நிலைக்கு உட்படுவது அபூர்வமே.  எனவே சுக்கிரன் அஸ்தமனம் அடைந்த ஜெனன ஜாதகங்களை அடிக்கடி பார்க்கமுடிகிற நம்மால், சுக்கிரன் வக்கிரமடைந்த ஜாதகங்களை மிக குறைவாகவே பார்க்க முடிகிறது..

அஸ்தமனம்.  ...................  பூமியிலிருந்து பார்க்கும்போது, சூரியனோடு நெருங்கி இணையும் கிரகங்கள், தங்கள் ஒளிச்சக்தியை, சூரியனிடம் இழந்துவிடுகிறன.  அதாவது சூரியனின் மிகபிரகாசமான ஒளிவெள்ளத்தில், மற்ற கிரகங்களின் ஒளி பூமிக்கு புலப்படாமல் மங்கிப்போய்விடுகிறது.  இதையே அஸ்தமனம் என்கிறோம்.  இதை அஸ்தங்கதம் என்றும் சொல்வார்கள்.  செவ்வாய், குரு, சனி ஆகிய கிரகங்கள், சூரியனை சுற்றி வரும்போது, சூரியனுக்கு பின்னால் செல்லும் நிலை ஏற்படும்.  அப்போது அவை அஸ்தங்கதம் அடைகின்றன.  புதன் மற்றும் சுக்கிரன், பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் சுற்றி வருவதால், சூரியனுக்கு முன்புறம் வரும்போதும், சூரியனுக்கு பின்புறம் செல்லும்போதும் அஸ்தங்கதம் அடைகின்றன.  புதன் அடிக்கடி வக்கிரனிலையில், அஸ்தங்கதம் அடைவதுண்டு.  அதுபோல் சுக்கிரனும் அபூர்வமாக வக்கிர நிலையில் அஸ்தங்கதம் அடையும்.  இப்படி இருனிலையும் ஒருசேர அடைவதையே வக்கிராஸ்தமனம் என்கிறோம்.  சுக்கிரன் அடிக்கடி அஸ்தங்கதம் அடையும்.  ஆனால் வக்கிரம் அடைவது மிக குறைவு.  அதிலும் இந்த இரு நிலைகளும் ஒர் சேர ஏற்படுவது மிகமிக அபூர்வம்.  எனவே சுக்கிர வக்கிராஸ்தமன ஜெனன ஜாதகத்தை சிலர் பார்த்திருக்கவே முடியாது.  இந்த பதிவுடன் அத்தகைய அபூர்வ ஜாதகம் ஒன்று இணைக்கப்பட்டுள்ளது. 

புதன் வக்கிராஸ்தமனம் அடையும் போது, தன் ஸ்தானாதிபத்திய பலனை சூரியனி ஸ்தானாதிபத்தியத்திற்கு தக்கவாறு மாற்றிக்கொள்ளக்கூடும்.  ஆனால் தான் தரும் தன் சுய காரகத்துவ பலனை குறைத்துக் கொள்வதில்லை.  அதுபோல் சுக்கிரன் வக்கிராஸ்தமனம் அடையும்போது, தன் ஸ்தானாதிபத்திய பலனை சூரியனின் ஸ்தானாதிபத்தியத்திறு தக்கவாறு மாற்றிக்கொள்ளக்கூடும்.  ஆனால் தன் சுய காரகத்துவ பலன் தருவதில் குறைவு ஏதும் இருக்காது.  புதனின் வக்கிராஸ்தமன ஜாதகர் புதன் காரகத்துவமான கலைகளில் அதிதீவிர அறிவுவளர்ச்சி பெற்றிருப்பார்.  ஆனால் அதையெல்லாம் ஏறுக்குமாறாகவே பயன்படுத்துவார்.  அதுபோல் சுக்கிரன் வக்கிராஸ்தமனம் பெற்ற ஜாதகர் சுக்கிரன் காரக்த்துவமான செல்வமும், காம உணர்வையும் அதிதீவிரமாக பெற்றிருப்பார்.  அவைகளையெல்லாம் ஏறுக்குமாறாகவே பயன்படுத்துவார் என்பது துரதிர்ஷ்டம்.  அதனால்தானோ என்னவோ, இத்தகையோர்கள் அதிகமாக பிறக்ககூடாது என்பதற்காக, சுக்கிரனின் வக்கிராஸ்தமன நிலையை அடிக்கடி நிகழாதபடி செய்திருக்கிறான் இறைவன்.  நன்றி.  வணக்கம்.  . 
              

Monday 14 March 2016

" ஜோதிடபலன் தவறிப்போவது ஏன்? ",



ம் படைவீட்டம்மா துணை.  எல்லோருக்கும் வணக்கம்.  " ஜோதிடபலன் தவறிப்போவது ஏன்? ",  பாரம்பரிய முறையிலான பதிவு.  ஜோதிடசாஸ்த்திரங்களை இயற்றிய நமது ஞானிகள், ஒரு எழுத்துகூட தவறாக பயன்படுத்தியதில்லை.  அவர்கள் எழுதிவைத்த ஜோதிடவிதிகளில் பல வெளிப்படையாகவும், சில சூட்சுமமாகவும் உள்ளன.  அவைகளை புரிந்துகொண்டு நடைமுறைபடுத்தும்போது, செய்யப்படுகிற தவறுகளே, ஜோதிடபலன்களை தவறிப்போக செய்கின்றன.  முதற்காரணம். ...................  மூல ஜாதகம் கணிக்கும்போது ஏற்படும் பிழைகள்.  பெரியோர்கள் குழந்தை பிறந்த நேரத்தை தெரிவிப்பதில் தவறு இருந்தால், மூலஜாதகமும் தவறாக அமைந்துவிடும்.  இத்தகைய தவறுகள், நள்ளிரவில் பிறக்கும் குழந்தைகளின் நேரத்தை தெரிவிப்பதில் அதிகமாக ஏற்படுகிறது.  நள்ளிரவு 12.00 மணிக்கு மேல் ஆங்கில தேதி, கிழமை மாறுகிறது.  தமிழ்தேதி, கிழமை மாறுவதில்லை.  அவை விடிந்தபின், சூரிய உதயத்திற்கு பின்னரே மாற்றம் பெறுகிறன.  இந்த வித்தியாசங்களை பெரியோர்கள் நன்றாக கவனித்து வைத்துக்கொள்ள வேண்டும்.  இந்த தேதி, கிழமை தெரிவிப்பதில் ஏற்படும் குளறுபடியால் மூல ஜாதக கணிப்பு தவறிப்போகிறது.  ஒரு தவறான மூலஜாதக ஜோதிடபலன் தவறாகத்தானே அமையும்.  இதனால் ஜோதிட சாஸ்த்திரத்தில் மிகுந்த நம்பிக்கை கொண்ட ஜாதகரின் வாழ்க்கை பாதிப்படைகிறது.  எனவே முதன்முதலாக மூலஜாதகம் எழுதப்படும் போது, குழந்தையின் பெரியோர்கள், பிறந்த நேரம் தேதியை தெரிவிப்பதில் மிக கவனமுடன் இருக்க வேண்டியது அவசியமாகிறது.

முற்காலத்தில், குழந்தை பிறந்தபின், புண்ணியதானம் செய்யும் நாளில், ஜோதிடசாஸ்த்திரம் அறிந்த ஒருவரை கொண்டு, ஜாதக குறிப்பு ஒன்றை எழுதி, நாம நக்ஷத்திர எழுத்துக்களை கொண்டு பெயரிட்டனர்.  இது மூலஜாதகம் எழுதும் ஜோதிடருக்கு பெரும் உதவியாக இருந்தது.  பெயரின் முதலெழுத்தை கொண்டு, நாம நக்ஷத்திரம் அறிந்து, பெரியோர்கள் ஞாபகமறதியாக தவறான தேதி மற்றும் கிழமையை தெரிவிப்பதில் குழப்பம் இருந்தால் கண்டுபிடிக்க முடிந்தது.  இப்போது, நாம நக்ஷத்திர அடிப்படையில் பெயரிடும் முறை மறைந்துபோனது, துரதிர்ஷ்டமே.  மேற்கண்டவைகள் பெரியோர்கள் தரப்பில் நிகழும் காரணங்கள்.  அதுபோல் மூலஜாதகம் தவறாக அமைய அதை எழுதும் ஜோதிடர்களும் ஒரு காரணமாக அமைந்துவிடுகிறார்கள்.  பெரியோர்கள் மிகசரியாக தெரிவிக்கும் நேரத்தை கொண்டு லக்னம் கணிக்கும் போது அதில் லக்னசந்தி அமைவதை கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவது ஒரு பெரும்குறை.  இதை சரிபார்க்கும் ஜோதிட விதிகளை பற்றி நமது ஞானிகள் சாஸ்த்திரங்களில் எழுதிவைத்துள்ளனர்.  அதிலும் கணிணி கொண்டு ஜாதகம் கணிக்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்ட பின்பு, லக்னசந்தி, ஸ்த்ரி,புருஷகாலம் ஆகியன சாஸ்த்திரப்படி, சரிபார்க்கப்படாமல் உருவாக்கப்படும் ஜாதகங்கள் நிறைய வெளியாகிறன.  இப்படி பிறந்த நேரத்தை சோதனைக்கு உட்படுத்தாமல், அப்படியே ஜாதகம் கணிப்பதில் ஏற்படும் பிழையான ஜாதகங்களுக்கு ஒரு சில ஜோதிடர்களும், கணீணியுமே பொறுப்பாகும்.  அறுவை சிகிச்சை மூலம் பிரசவம் பார்க்கப்படும்போது சில சிக்கல்கள் ஏற்பட்டாலும், மருத்துவர்களால் சரியான பிறந்த நேரம் குறித்து சொல்லுவதில் கவனச்சிதறல் ஏர்பட்டுவிடுகிறது.   எனவே மூலஜாதகம் எழுதும் ஒவ்வொரு ஜோதிடரும், பிறந்த நேர சோதனை செய்து அதன் பின் ஜாதகம் எழுதுவது அவசியமாகிறது.  ஜோதிடபலன் சொல்வது தவறிப்போக மேலும் இன்னொரு காரணமும் உள்ளது.  ..............................

பலன் சொல்ல முற்படும் ஜோதிடர்கள், ஜாதகர்கள் தரும் ஜாதகத்தை, சரியாக இருக்கிறதா? என்று ஒரு முறை ஆராய்ந்து பார்த்து பின்பு, பலன் சொல்ல வேண்டும்.  இவ்வாறு செய்யும் ஜோதிடர்கள் இருக்கிறார்கள்.  அவர்கள் சொல்லும் பலன் தவறாது.  பலன் தவறக்கூடாது என்பதில் மிகுந்த கவனம் உள்ள ஜோதிடர்கள், மூலஜாதகத்தை பார்வையிடாமல் பலன் சொல்வதில்லை.  இதற்கு காரணம், மூலஜாதகத்திலிருந்து கைப்பிரதி எடுக்கும்போதோ, அல்லது, பெரியோர்கள் சொல்லும் தேதி நேரத்தை, கணிணியாளர் கணிணியில் மாற்றித் தரவு  இட்டாலோ ஜாதக கணீப்பு மாறிப்போக வாய்ப்புள்ளது.  அடுத்ததாக, ஜாதக பலன் பார்க்க வரும் ஜாதகர்கள், ஜாதகத்தை, ஜோதிடர் சோதனை செய்து, ஒரு முடிவுக்கு வரும் வரை போதிய அவகாசம் தராமல் அவசரப்படுவது ஜோதிட பலன் தவறுவதற்கு ஒரு காரணம்.  போதிய சன்மானம் தர மறுப்பதால், ஜோதிடர்கள், அதிக நேரம் செலவழித்து ஜாதகத்தை சரிபார்ப்பதை விட்டு விடுகிறார்கள்.  கிடைக்கும் சன்மானத்திற்கேற்ப, வெறும் கோசரத்தை மட்டும் வைத்து பலன் சொல்லியனுப்பும் ஜோதிடர்களும் இருக்கிறார்கள்.  இதனால் முழுமையான ஜோதிட பலன் ஜாதகருக்கு கிடைக்காமல் போகிறது.  இக்குறைகள் எல்லாம் நிவர்த்தி செய்யப்பட்டு, ஜாதகரும், ஜோதிடரும் ஒருவருக்கொருவர் பரஸ்பரம் அனுசரித்து நடந்துகொண்டால், எல்லோராலும் சரியான பலனை சொல்லமுடியும்.  அறிந்துகொள்ள முடியும்..  அதற்குண்டான இணக்கமான சூழ்னிலையை கொண்டு வருவோமாக!  நன்றி.  வணக்கம்.