Wednesday 11 May 2016

" கிரகங்களின் இரட்டை வேஷம் ", ....... [ நிறைவு ] பதிவு எண் 07 .......... நாடக காரகனின் நாடகம்.



ம் படைவீட்டம்மா துணை.  ஜோதிட நண்பர்களுக்கு வணக்கம்.  ...... " கிரகங்களின் இரட்டை வேஷம் ", .......  [ நிறைவு ] பதிவு எண் 07 .......... நாடக காரகனின் நாடகம். ........  பாரம்பரிய முறையிலான பதிவு.  ......... இது இந்த தொடரின் கடைசி பதிவு.    இந்த தொடரில் ஒரு கிரகம் இரு வேஷங்களை போட்டு, இதில் எந்த வேஷத்தை, எப்போது? எப்படி? செயல்படுத்தும் என்றெல்லாம் பார்த்தோம்.  இப்படி இரு வேஷம் கொண்ட கிரகங்களே ஜோதிடர்களை மிக நன்றாக குழப்பிவிடும் என்பதையும் விரிவாக பார்திருக்கிறோம்.  இப்படியிருக்கும் போது ஒரு கிரகம் பல வேஷங்களை போட்டால், ஜோதிடர் எப்படியெல்லாம் குழம்ப வாய்ப்பு இருக்கிறது?  அதை அவர் எப்படி சமாளிக்கிறார்?  இதனால் ஜோதிடர் படும் பாட்டை ஜாதகர்களுக்கு எடுத்து சொல்வதே இந்த பதிவின் நோக்கம்.  இதோடு ஒரு எளிமையான ராசிக்கட்டம் ஒன்றும் இணைக்கப்பட்டுள்ளது.   நம் கதானாயகன் " புதன் ".  இந்த புதனைத்தான் நாடக காரகன் என்று சொல்லியிருக்கிறேன்.  நவராத்திரி திரைப்பட சிவாஜிகணேசன் மாதிரி, இந்த புதன் போடும் வேஷங்களை பட்டியலிடுவோம்.  ........................

01.  பத்தாம் அதிபதி.
02.  ஏழாம் அதிபதி
03.  தனித்திருந்து தசாபுக்தி நடத்தும் போது பத்ரயோகம் தருபவர்.
04.  சூரியனுடன் இணைந்து இருப்பதால் தர்மகர்மாதிபதி யோகம் தருபவர்.  சூரியன் தர்மாதிபதி.  புதன் கர்மாதிபதி.  புதன் அஸ்தங்கதமோ வக்கிரமோ அடையவில்லை.
05.  இன்னொரு புறம் இதையே புதாதித்ய யோகம் என்றும் சொல்லலாம். 
06.  தனுசு உபய லக்னம் என்பதால் புதன் பாதகாதிபதி.
07.  புதன் சுபாவ அசுபராகிய சூரியனுடன் ஒரே ராசியில் இணைந்திருப்பதால் சுபாவ அசுபர்.  எனவே புதன் பார்வை அசுபபார்வை.

ஆக இத்தனையையும் ஒரு ஜோதிடர் கவனிக்கும் நேரத்தில், ராசிக்கட்டத்தில் விவரிக்கப்படாமல் இருக்கும் விஷயங்களையும் கவனிக்க வேண்டியிருக்கிறது.  புதன், தவிர மற்ற கிரகங்களின் இருப்பிடம், அவர்கள் பார்வை, பாதசாரம், கோசர கிரகங்களின் நிலை ஆகிய எல்லாவற்றையும் கணித்தால்தான், சரியான பலன் சொல்ல முடியும்.  இனி மேற்கண்ட குறிப்பை மட்டும் வைத்துக்கொண்டு புதனை சுருக்கமாக திறனாய்வு செய்யலாம்.  .........................  இப்போது புதன் திசையில் புதன் புக்தி தொடங்குகிறது என்று வைத்துக்கொள்வோம்.  7 ஆம் அதிபதி 10 ல் கெடாமல் இருப்பதால் திருமணம் நடக்கும்.  10 ஆம் அதிபதி ஆட்சி, உச்சம் என்பதால் தொழில் வளர்ச்சியடையும்.  பத்ரயோகத்தால் புதனின் சுயகாரகத்துவம் நற்பலன் தரும்.  உதாரணத்திற்கு மனைவியும்,, ஜாதகரும் கணிணி துறையை சார்ந்தவராக அமைந்து, தொழிலில் உச்ச நிலை அடைவார்கள்.  புதாதித்ய யோகத்தால் அரசு துறையின் ஆதரவு பெருகும்.  புதனின் அசுப பார்வை சுகஸ்தானத்தில் விழுவதால், சுகம் கெடும்.  உதாரணத்திற்கு, பித்தம் அதிகமாகி வாந்தி மயக்கம், அஜீரணம் ஆகும்............... அடுத்து, சுக்கிரன், சந்திரன், செவ்வாய் ஆகியோருடன் இணைந்து தசைபுக்தி ந்டத்தும்போது பாதகாதிபத்யம் வெளிப்படும்.  6 ஆம் அதிபதி சுக்கிரனின் புக்தியில் செய்வினை தோஷம் உருவாகும்.  செய்யும் தொழில் எதிரிகளின் சதியாலும், போட்டி, பொறாமைகளாலும் முடங்கிப்போகும்.   சந்திர புக்தியில் தொழில் அதிக கடன் காரணமாக எதிர்பாராத நஷ்டம் தரும்.  உருவாக்கும் பொருள் அல்லது சேவையின்  தரமும் தாழ்ந்துபோவதால் அவமானமாக இருக்கும்.  செவ்வாய் புக்தியில், வாழ்க்கையில் சந்திக்காத ஒரு இழப்பு நேரும்.  தொழிலையே இழுத்து மூட நேரும்.  அறிவாற்றலும், திறமையும் கை கொடுக்காமல் கெடும்.  சூரிய புக்தியில் தர்மகர்மாதிபதி யோகத்தால், தொழிலை நேர்மையாக செய்து, புகழடைவதுடன், அதில் வரும் வருமானத்தை, ஆன்மிகம் போன்ற நற்காரியங்களுக்கு செலவு செய்து புண்ணியம் தேடிக்கொள்வார்கள்.  அதே நேரம் சூரியன், புதன் இருவரின் இணைந்த அசுப பார்வையானது சுகஸ்தானத்தில் விழுவதால், மஞ்சள் காமாலை நோய்க்கு ஆளாகி வருந்த நேரும்.  குரு புக்தியில் நிறைய சொத்து சேர்க்கும் யோகம் உண்டாகும்.  கணிணி மூலம் பங்குசந்தை வணிகத்தில் ஈடுபட்டு, அதிக அளவில் லாபம் பெறலாம்.  புதன் புக்தி தவிர, மேலும் சூரியன், குரு, ஆகியோரின் புக்தியிலும் திருமண யோகம் நேரும்.

இப்படி புதன் பலவகைகளில் நாடகமாடி, அதிர்ஷ்டம், நோய், இழப்பு, ஆகியவற்றை தனித்தனியாகவும், ஒரே நேரத்திலும் தந்து, பல வேஷம் போடுகிறார்.  இந்த புதன் எத்தனை வேஷம் போட்டு ஏமாற்றப் பார்த்தாலும், திறமையான ஜோதிடர்கள், புதனின் உண்மை வடிவத்தை கண்டுபிடித்துவிடுவார்கள்.  ராவணனுக்கு அரண்மனையிலிருந்த பெண்கள் எல்லோரும் சீதையாக தெரிந்தார்களாம்.  அதுபோல் புதன் கேந்திராதிபத்ய தோஷம் உள்ளவர் போலும் தோற்றமளிக்கலாம்.  சுபாவசுப கிரகங்களுக்கு மட்டுமே கேந்திராதிபத்ய தோஷம் உண்டு.  இந்த ராசிக்கட்டத்தின்படி புதன் சுபாவ அசுபர்.  மேலும் சூரியனுடன் இருப்பதாலும் கேந்திராதிபத்ய தோஷம் இல்லை.  ஆகவே புதனுக்கு கேந்திராதிபத்ய தோஷம் கிடையாது.  மொத்தத்தில் கிரகங்களிலேயே புதன் அதிக வேஷம் போடுபவராக இருப்பார்.  காரணம் அவர் புத்திசாலியல்லவா!.  அவர் அருள் நமக்கெல்லாம் கிடைக்கட்டும் என்ற பிராத்தனையுடன் இந்த தொடரை நிறைவு செய்வோம்.  நன்றி  வணக்கம்.           

Saturday 7 May 2016

" அக்ஷயதிரிதியை ", ஒரு குசேல பார்வை. .



ம் படைவீட்டம்மா துணை.  அனைவருக்கும் வணக்கம். ...  " அக்ஷயதிரிதியை ", ஒரு குசேல பார்வை. ...........  பாரம்பரிய முறையிலான ஜோதிட பதிவு. ...........  பல பெண் குழந்தைகளை பெற்று, கட்டிக்கொடுக்க கடுகளவு கூட தங்கம் இல்லாமல் கவலைப்படும் கலியுக குசேலர்களுக்கு இந்த பதிவு சமர்ப்பணம்.  .............    அக்ஷயதிரிதியை அன்று தங்கம் வாங்கினால், அது ஆண்டாண்டு காலமாக பெருகிக்கொண்டே இருக்கும் என்று ஒரு நம்பிக்கை நிலவுகிறது.  இதைபற்றி சிந்திக்கும் போது பின்னணியில் சில கேள்விகள் எழுகிறன.   அக்ஷய திரிதியைக்கு சொர்ண அக்ஷய திரிதியை என்று ஏதாவது சிறப்பு பெயர் உள்ளதா?  { அக்ஷய என்றால் குறைவின்றி வளரும். என்ற பொருள் உள்ளது. }   குண்டுமணி அளவுகூட தங்கம் வாங்க முடியாதவர், அக்ஷயதிரிதியை அன்று தங்கம் வாங்காவிட்டால், அவர் வாழ்க்கையில் தங்கமே சேராதா?  அப்படியானால் ஸ்ரீமஹலக்ஷ்மியின் அருள் அக்ஷயதிரிதியை அன்று தங்கம் வாங்கும் வசதிபடைத்தவர்களுக்கு மட்டும்தான் கிடைக்குமா?  தெய்வம் தங்கத்துக்கு மயங்கி அடிமையாகிவிடுமா?  இவையெல்லாம் இல்லையென்றானால் உண்மையில் அக்ஷயதிரிதியையின் பொருள்தான் என்ன?  {{ ஒரு முதிர்கன்னியின் கேள்வி இது ............  அக்ஷயதிரிதியை அன்று நல்ல முஹூர்த்தனாளாக இருக்கும்.  பிற்காலத்தில் பெருகும் என்பதற்காக, இப்போது குண்டுமணி தங்கத்துடன் என்னை திருமணம் செய்துகொள்ள யாராவது தயாரா?  மன்னனாக வாழும் கண்ணன் வேண்டாம்.  மரவுரி தரித்த ராமன் போதும்.  }}    .............  ஜோதிட ரீதியாக விடை காண்போம்.  .....................

அக்ஷயதிரிதியை அன்று தங்கம் வாங்கினால் அது வருஷம் முழுதும் மென்மேலும் பெருகும் என்பதற்கு ஒரு காரணம் சொல்லப்படுகிறது.  அன்றைய தினம் பரமாத்மா குசேலருக்கு செல்வத்தை அள்ளி வழங்கிய நாள்.  அதுபோல் நமக்கும் பரமாத்மா செல்வத்தை அள்ளி வழங்குவார்.  இதிலும் சில கேள்விகள் முளைக்கிறன.  குசேலருக்கு 27 குழந்தைகள்.  திருமணமாகி கிட்டத்தட்ட இருபத்திரண்டரை ஆண்டு காலம் பஞ்சத்திலேயே வாழ்ந்திருக்கிறார் என்று குழந்தைகளின் பிறப்பை வைத்து கணக்கிட்டுவிடலாம்.  இத்தனை ஆண்டில் எத்தனை திரிதியைகள் வந்துபோயிருக்கும்.  ஒன்றுகூடவா பரமாத்மாவின் கவனத்திற்கு வராமல் போனது.  குசேலர் பஞ்சப்பராரி என்று பரமாத்மாவுக்கு தெரியாதா?  அருள் தர இவ்வளவு தாமதமா?  அல்லது குசேலர் பரமாத்மாவை மறந்தே போய்விட்டாரா?  இவ்வளவு கேள்விகளுக்கும் விடை காண்பதே இப்பதிவின் நோக்கம்.  ஒரு ஜாதகத்தில் தங்கக்கொடுப்பினை இல்லையென்றால், அந்த ஜாதகப்படி ஸ்ரீமன் நாராயாணனே அவதரித்தாலும், தங்கம் அவருக்கு உடைமையாகிவிடாது.  ஒரு ஜாதகத்தில் தங்கயோகம் அமைந்துவிட்டால், பரமதரித்திரன் குசேலன் கூட குபேரனாகிவிடுவான்.  இதில் அக்ஷயதிரிதியை எவ்வாறு சம்பந்தப்படுகிறது?  இனி விரிவாக ஜோதிடத்திற்குள் செல்வோம்.

ஒரு ஜாதகத்தில் நாலாமிடம் என்று சொன்னால், அது சொத்துஸ்தானம் என்று உடனே சொல்லிவிடலாம்.  அந்த ஸ்தானம் சுபமாக நல்ல முறையில் அமைந்திருந்து, தங்ககாரகன் குரு கெடாமல் இருந்தால், தங்கம் நிறைய வாங்கி சேர்க்க முடியும்.  இப்படிப்பட்ட ஜாதக அமைப்பு அமைய வேண்டும் என்பது பலரின் விருப்பமாக இருக்கிறது.  ஆனால் பரமாத்மாவின் அருளால், ஐஸ்வரியம் பெருக வேண்டும் என்றால், அந்த ஜாதக அமைப்பு வேறு விதமாக அல்லவா அமைகிறது.  இதே சொத்து ஸ்தானத்தை குசேலபார்வை கொண்டு பார்த்தால் அது நட்புஸ்தானமாக தெரியும்.  அதே ஆர்வத்துடன் இந்த ஸ்தானத்தை பார்த்தால் அது பரமாத்மாவின் ஸ்தானமாகவும் தெரியும்.  கேந்திர ஸ்தானங்களை, பராசரர் தாம் இயற்றிய பிருகத்பராசர ஹோரையில் விஷ்ணு ஸ்தானங்கள் என்றும், திரிகோணங்களை லக்ஷ்மி ஸ்தானங்கள் என்றும் கூறுகிறார்.  ஜோதிடவிதிப்படி, 5 ஆம் அதிபதி 4 ஆம் இடத்தில் இருந்தால், அந்த ஜாதகர் துவாரகாதிபதியின் [ மஹாவிஷ்ணு ] பக்தராக இருப்பார்.  இதுவே மகளிர் ஜாதகமாக இருப்பின் 9 ஆம் அதிபதி 4 ல் இருக்க வேண்டும்.  5 தெய்வபக்திக்குரிய ஸ்தானம்.  4 நட்பு மற்றும் நாராயணன் ஸ்தானம்.  குசேலர் விஷ்ணுபக்தர் என்பது நமக்கு தெரிந்த விஷயம்.  ஜோதிடப்படி 5 என்னும் தெய்வபக்தியை 4 என்னும் நட்பு உணர்வாக கொண்டு நாராயணன் என்னும் 4 ஐ 4 என்னும் தனது உடைமையாக்கிக் கொண்டார்.  இது நடந்தது அக்ஷய திரிதியை அன்று.  ஜோதிட விதிப்படி, 5 க்குரியவன் திசை புக்தி நடக்கும் போது இது நடக்கும்.  குசேலருக்கு திருமணமாகி தாமதமாக இந்த திசைபுக்தி வந்திருக்கலாம்.  5 என்னும் வித்யாதிபதி 4 என்னும் இடத்தில் இருந்தால், அவர் கல்வி கேள்விகளில் மிக சிறந்தவராக இருப்பார்.  குருகுலத்தில் பயின்றபோது, ஸ்ரீகிருஷ்ணருக்கு தோன்றும் சந்தேகங்களையெல்லாம் குசேலர் தீர்த்துவைத்திருக்கிறார்.  அதுபோல் 5 என்னும் புத்ரஸ்தானாதிபதி, 4 என்னும் கேந்திரத்தில் இருந்தால், குழந்தைகளுக்கு பஞ்சமிருக்காது.  குசேலருக்கு பஞ்சமில்லாமல் குழந்தைகள் இருந்தன. 

இதே 5 ஐ 7 என்னும் கேந்திர, விஷ்ணுஸ்தானத்தோடு பொருத்திப்பார்த்தால் இன்னொரு உணமையும் புரியவரும்.  ஜோதிட விதிப்படி 5 ஆம் அதிபதி 7 ஆமிடத்தில் இருந்தால் காதல் வரும்.  ஆண்டாளும், மீராவும், 7 என்னும் காதலால் 7 { விஷ்ணுஸ்தானம் } நாராயணனை 5 என்னும் தெய்வ பக்தியால் அடைந்தவர்கள்.  இவ்வுலகில் பிறந்த ஜீவாத்மாக்கள் தெய்வபக்தியோடு { 5 } தன் கர்மவினைகளை { 10 } நிறைவேற்றுவதன் மூலம் பரமாத்மாவை { 10 } ஐ அடைகிறன.  பகவத் கீதையின் கர்மாத்யாயம் படித்தால் இந்த தத்துவம் நன்றாக விளங்கும்.  இந்த உண்மை தத்துவங்களை புரிந்துகொண்டால், அக்ஷயதிரிதியைதங்கம் ஒரு தூசாக தோன்றும். 

நமக்கு 5 { தெய்வபக்தி } ஐ பற்றிய கவலை கிடையாது.  4 { சொத்து, தங்கம் } மட்டும் தன்வசமாகிவிட வேண்டும் என்ற பேராசை மட்டும் உள்ளது.  இப்படிப்பட்ட பேராசையால் அக்ஷய திரிதியை அன்று வருகின்ற 4 { தங்கம் } பெருகி வளர்கிறதா? அல்லது உருகி கரைகிறதா? என்பது வாங்கியவர்களுக்கே வெளிச்சம்.  இதில் கடன்பட்டு வாங்குபபவர்கள் வேறு இருக்கிறார்கள்.  ஜாதக கொடுப்பினையும், இறைவன் அருளும் இன்றி நம் வாழ்வில் எதுவும் மேன்மையடையாது என்று எல்லோரும் உணரும் நாள் வரவேண்டும்.  அக்ஷயதிரிதியை அன்று பரமாத்மாவை நாம் உடைமையாக பெற வேண்டும் என்ற பக்திபெருக்கு பெருக வேண்டும்.  நன்றி.  வணக்கம்.         

கிரகங்களின் இரட்டை வேஷம். .............. தொடர் பதிவு எண் 06. ................ " அமாவாசையின் யோகமும், அவயோகமும் ",



ம் படைவீட்டம்மா துணை.  ஜோதிட நண்பர்களுக்கு வணக்கம்.  ............  கிரகங்களின் இரட்டை வேஷம்.  ..............  தொடர் பதிவு எண் 06.  ................  " அமாவாசையின் யோகமும், அவயோகமும் ",  ...........  பாரம்பரிய முறை.  ....................  சென்ற பதிவில் அமாவாசை தரும் யோகம் ஒன்றை பார்த்தோம்.  இந்த பதிவில் அமாவாசை தரும் அவயோகம் ஒன்றை பார்க்கலாம்.  .............  ராசிக்கட்ட அமைப்பு.  விருச்சிக லக்னம்.  மிதுனத்தில் ஒரே பாதத்தில் சூரியன் சந்திரன்.  ............  விருச்சிகத்திற்கு அடிப்படையில் சந்திரன் 9 ஆம் அதிபதி என்னும் பாக்கியாதிபதி, என்னும் சுபஸ்தானாதிபதி.  சூரியனும் 10 ஆம் அதிபதி என்னும் சுபஸ்தானாதிபதி.  அஸ்தங்கத தத்துவத்தின் படி, சூரியனிடம் சந்திரன் தன் சுபத்தன்மை கொண்ட ஸ்தானாதிபத்ய காரகத்துவ பலனையெல்லாம், ஒப்படைத்துவிடுகிறார்.  சூரியனும் சுபஸ்தானாதிபதி என்பதால், சந்திரனின் சுப ஸ்தானாதிபத்ய பலனை அப்படியே பெற்றுத் தரவேண்டும்.  ஆனால் இணைவு நிகழ்வதோ அஷ்டமத்தில்.  எனவே சூரியன், சந்திரனிடம் இருந்து பெற்ற சுபபலன்களும், தானாக தர வேண்டிய சுபபலன்களும், இருக்கும் ஸ்தானமாகிய அஷ்டமத்திற்கு தகுந்தாற்போல், அசுபமாக மாற்றப்பட்டு விடுகிறது..  எனவே அமாவாசை யோகம் சுபகரமானதாக இருக்காது.  சந்திரன், சூரியனுக்கு முன்னால் அஸ்தங்கதம் அடையும் உள்வட்ட கிரகம் என்பதால், தன் சுய காரகத்துவத்தை மட்டும், மாற்றாமல் நேரடியாக அப்படியே நமக்கு தந்துவிடுகிறார்.

சென்ற பதிவில் அமாவாசையானது நல்ல யோகத்தை தரும் நிலையில் அமைந்திருந்ததால், சந்திரன் அஸ்தங்கதம் ஆனாலும் யோகம் தர முடிந்தது.  எனவே சந்திரனுக்கு அஸ்தங்கத தோஷம் இல்லை என்று சொல்வது உண்மை என்று தோன்றியது.  இப்போது இந்த பதிவில் அமாவாசை யோகம் சுபமாக இல்லாமல் அசுபமாகிப்போனதால், சந்திரனுக்கு அஸ்தங்கத தோஷம் உண்டு என்று பொருளாகிறது.  சூரியனுக்கு பின்னால் அஸ்தங்கதம் அடையும் செவ்வாய், குரு, சனி ஆகிய கிரகங்கள் தம் சுயகாரகத்துவத்தை கூட வெளிப்படுத்த முடிவதில்லை.  எனவே அவைகளுக்கு எப்போதும் அஸ்தங்கத தோஷம் உண்டு.  சில நேரங்களில் புதன், சுக்கிரன் ஆகிய உள்வட்ட கிரகங்கள் கூட சூரியனுக்கு பின்னால் அஸ்தங்கதம் அடைவதுண்டு.  அச்சமயத்தில் அவைகளின் ஸ்தானாதிபத்ய காரகத்துவங்களுடன், சுய காரகத்துவங்களும் சூரியனால் தடுக்கப்பட்டுவிடுகிறன.  இவ்விரு கிரகங்களும் சூரியனுக்கு முன்னால் அஸ்தங்கதம் அடையும் போது மட்டும். தம் சுயகாரகத்துவங்களை நமக்கு நேரடியாக தந்துவிடுகிறன.  சந்திரன் பூமியை சுற்றி வருவதால், சூரியனுக்கு பின்னால் செல்ல முடியாது.  ஆகவே ஒவ்வொரு அமாவாசையின் போதும் சந்திரனுடைய சுய காரகத்துவங்கள் நமக்கு தடையின்றி கிடைத்து விடுகிறது.  புதன் சூரியனுக்கு பின்னால் அஸ்தங்கதம் அடையும்போது வக்கிரம் அடையாது.  சூரியனுக்கு முன்னால் அஸ்தங்கதம் அடையும் போது வக்கிரம் அடையும்.  எனவே புதன் வக்கிராஸ்தமனம் அடைந்தால், அது சூரியனுக்கு முன்னால் இருக்கிறது என்று பொருள்.  அதுபோல் சுக்கிரனும் எப்போது சூரியனுக்கு முன்னால் அஸ்தங்கதம் அடைகிறது? என்பதற்கும் ஒரு அடையாள்ம் உண்டு.  பொதுவாக எல்லா கிரகங்களும் மேற்கில் அஸ்தங்கதம் அடைந்து கிழக்கே உதயமாகும்.  இதை பஞ்சாங்கம் மூலம் நாம் அறியலாம்.  சுக்கிரனும் அதுபோல் மேற்கில் அஸ்தங்கதம் அடைந்து கிழக்கில் உத்யமாகும் போதெல்லாம் சூரியனுக்கு பின்னால் அஸ்தங்கதம் அடைந்திருக்கிறது என்று பொருள்.  சில நேரங்களில் சுக்கிரன் கிழக்கில் அஸ்தங்கதம் அடைந்து பின் மேற்கில் உதயமாகும்.  அப்போது அது சூரியனுக்கு முன்னால் அஸ்தங்கததம் அடைகிறது என்று பொருள்.  இதையும் பாஞ்சாங்கம் மூலம் நாம் அறியலாம்.  . 

இனி இவ்விரு பதிவுகளில் வந்த அமாவாசைகளை ஒப்பிடும்போது, சந்திரன் தன் சுய காரகத்துவத்தை எப்போதும் எந்த சூழ்னிலையிலும் விட்டுத்தருவதில்லை என்ற உண்மை புலனாகிறது.  ஆனால் ஸ்தானாதிபத்ய பலன் மாற்றம் பெறுகிறது.  எனவே சந்திரனுக்கு அஸ்தங்கத தோஷம் இல்லையென்றால், அதன் பொருள், எப்போதும் சந்திரனின் சுயகாரகத்துவம் நமக்கு கிடைத்துக்கொண்டிருக்கும் என்பதாகும்.  ஆனால் ஸ்தானாதிபத்ய பலன் தான் இருக்கும் இடத்தில் நேரும் அஸ்தங்கதத்தை பொறுத்ததாகும்.  இதன்படி சந்திரனுக்கு அஸ்தங்கத தோஷம் உண்டு என்றும் சொல்லலாம்.  எப்போது? என்பதை மட்டும் நாம் வரையறுத்துக்கொள்ள வேண்டும்.    ...........................   {{ முக்கிய வேண்டுகோள். }}  ....................  சந்திரனை பற்றி இதில் இடம் பெற்றுள்ள கருத்துக்கள் சிலருக்கு முரண்பாடாக தோன்றலாம்.  எனவே அவர்கள் தயவுசெய்து இந்த கருத்துக்களை தள்ளுபடி செய்ய வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.  ஏனையோர், சந்திரனை பற்றிய கருத்துக்களை, சிந்தித்து ஏற்றுக்கொண்டு, அவற்றை தங்கள் அனுபவத்தில் சோதித்து, அதற்கு பின் நடைமுறைக்கு கொண்டுவர வேண்டுகிறேன்.  நன்றி.  வணக்கம்.   

Monday 2 May 2016

" கிரகங்களின் இரட்டை வேஷம் ", .................... தொடர் பதிவு எண்: 05. .............. " அமாவாசையின் யோகமும் அவயோகமும் ".



ம் படைவீட்டம்மா துணை.  ஜோதிட நண்பர்களுக்கு வணக்கம்.  " கிரகங்களின் இரட்டை வேஷம் ",  ....................  தொடர் பதிவு எண்: 05.  ..............  " அமாவாசையின் யோகமும் அவயோகமும் ".  ................  பாரம்பரிய முறை.  ...............  அமாவாசையில் பிறந்த ஜாதகர் திருட்டு குணம் கொண்டவராக இருப்பார்.  சந்திரன் இருண்டு போவதால், அதன் மனம் என்ற காரகத்துவமும் இருண்டு பொய்யனாக இருப்பார்.  ஜாதகரை தாய் ஒதுக்கி வைக்க, தாயோடு இணைந்து வாழ தகுதியற்றவராக இருப்பார். என்றெல்லாம் பலவிதமான பழிச்சொல்லுக்கு ஆளாகிறார்.  இது உண்மைதானா? என்று சிந்திக்கும் பதிவாக இது அமைகிறது.  சூரியன், சந்திரன் ஆகிய இரு கிரகங்களின் இணைவே அமாவாசையாகிறது.  எனவே கிரகங்களின் இணைவு பற்றியும் நாம் சிந்திக்க வேண்டும்.  சூரியனும் சந்திரனும் ஒரே பாதத்தில் அல்லது, 3.33 பாகை இடைவெளியில் இணையும் போது அமாவாசை வலுப்பெறுகிறது..  ஒரு ராசிக்கட்டத்தில் இவ்விரு கிரகங்கள் இணைந்திருந்தாலும் அமாவாசை என சொல்லப்படுவதில்லை.  அதாவது இன்னும் சூரியசந்திர இணைவு ஏற்படவில்லை என்று பொருள்.  ஆனால் மற்ற கிரகங்கள் ஒன்றோடொன்று, ஒரே ராசிக்கட்டத்திற்குள் வந்துவிட்டால், அது கிரக இணைவு என்று சொல்லப்படுகிறது.  இதில் எது? சரியென்று  நாம் கொஞ்சம் யோசித்தால் விடை கிடைத்துவிடும்.  ;;;;;;;;;;;;;;;;

இரு கிரகங்கள் ஒரே ராசிக்கட்டத்தில் இருக்கும்போது, அவை வர்க்க பலத்தாலும், பாவபலத்தாலும் இணைகிறதா? என்று சோதித்து பார்த்தால் அவ்வாறு இருக்காது.  ராசிச்சக்கரத்தில் ஒரே ராசியில் இருக்கக்கூடிய இரு கிரகங்கள், பாவ சக்கரத்தில் இருவேறு கட்டங்களில் அமைந்துவிடும்.  ஆனால் ராசிக்கட்டத்தில் ஒரே பாதத்தில் மிக நெருக்கமாக இணையும் கிரகங்கள் பாவசக்கரத்தில் பிரிவதில்லை.  ஒரே கட்டத்திற்குள் இருக்கும் சில பழைமையான ஜோதிடர்கள், துல்லியம் வேண்டும் என்பதற்காக, தசவர்க்கம் கணித்து பலன் சொல்வதுண்டு.  இரு கிரகங்கள் கொண்ட ராசிக்கட்டத்தை பல வர்க்கங்களாக அமைக்கும்போது, ராசிசக்கரம் தவிர மற்ற வர்க்க சக்கரங்களில் பிரிந்திருக்க நிறைய வாய்ப்புகள் உள்ளன.  ஆனால் ஒரே பாதத்தில் மிக நெருக்கமாக இணையும் கிரகங்கள் கொண்ட ராசிக்கட்டத்தை  பல வர்க்கங்களாக அமைக்கும் போது, பெரும்பாலான வர்க்கசக்கரங்களில் அந்த கிரகங்கள் இணைந்தே இருக்கும்.  இப்படி பாவசக்கர பலமும், வர்க்கசக்கரங்களின் பலமும் கொண்ட கிரகங்களின் இணைவே வலுவான இணைவாகும்.  இந்த உண்மையை புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே சூரியசந்திரர்கள் சில நிகழ்வுகளை நம் கண் முன்னே நிகழ்த்திக்காட்டி, நிரூபணம் செய்கிறார்கள்.  சூரிய சந்திரர்கள் ஒரே பாதத்தில், அல்லது ஒரு பாதத்திற்குரிய 3.33 பாகை இடைவெளியில் இணையும் போது அமாவாசை உருவாகிறது.  அதுபோல் சூரிய, சந்திரர்களோடு, ராகு, கேதுக்கள் ஒரே பாதத்தில், அல்லது 3.33 பாகை இடைவெளியில் இணையும் போது முழுகிரகணம் உண்டாகிறது.  ஒளிக்கிரகங்களும், நிழல் கிரகங்களும் ஒரே ராசியில் இருந்துவிட்டால் கிரகணம் உருவாகிவிடுவதில்லை.  ஆக கிரக இணைவு என்றால், அவை ஒரே பாதம் அல்லது 3.33 பாகை இடைவெளிக்குள் இணைய வேண்டும் என்று நமக்கு புரிகிறது.  இனி அமாவாசை தரும் சுபயோகம் ஒன்றை பார்ப்போம்.

துலாத்திற்கு சனி ஒருவரே தனியாக இருந்து, 4, 5 என்ற இரு சுப ஆதிபத்யங்களையும் ஒன்றாக இணைத்து யோகம் தருகிறார்.  அதுபோல் மேஷத்திற்கும் யோகம் கிடைக்கிறது.  ஒரு சிறு வித்தியாசம்.  மேஷத்திகு சந்திர சூரியர்கள் தனித்தனி கிரகங்களாக இருந்தாலும், தாம் இருவரும் ஒன்றிணைவதன் மூலம் 4, 5 ஆகிய சுப ஆதிபத்யங்களை ஒன்றிணைத்து யோகம் தருகிறனர்.  மேஷத்துக்கு 4 ஆம் அதிபதியாக சந்திரனும், 5 ஆம் அதிபதியாக சூரியனும் இருந்து, இருவர் இணைவதன் மூலம் அமாவாசையானாலும் யோகம் கிடைக்கிறது.  சூரியன் சுபஸ்தானாதிபதி என்பதால் அஸ்தங்கத தத்துவத்தின் அடிப்படையில், சந்திரனின் அஸ்தங்கத காலத்தில் அதன் ஸ்தானாதிபத்ய காரகத்துவங்களை தான் வாங்கி அப்படியே சுபமாக தருகிறார்.  அத்துடன் சூரியனுக்கு முன்புறம் சந்திரன் அஸ்தங்கதம் அடைவதால், சந்திரனின் சுயகாரகத்துவங்களும் பூமிக்கு கிடைத்துவிடுகிறன.    இப்படி சூரிய சந்திரர்கள் இணைவால் மேஷத்திற்கு முழுயோகம் கிடைக்கிறது.  இதன் அடிப்படையில் சந்திரனுக்கு அஸ்தங்கதோஷம் இல்லை என்று சொல்வாருமுண்டு.  ஆக இந்த அமாவாசை சுபயோக அமாவாசையாகிறது.   இந்த சுபயோக நேரத்தில் பிறப்பவர்கள் எவ்வாறு? திருடனாகவும், பொய்யனாகவும், தாயால் ஒதுக்கப்பட்ட அனாதையாகவும் இருப்பார்கள் என்று புரியவில்லை.  சூரியன் சுபஸ்தானாதிபதியாக இருந்து, சூரிய சந்திரர்கள் இணைந்து உருவாக்கும் அமாவாசைகளெல்லாம் சுபயோக அமாவாசைகளே.  இந்த இணைவு அசுபஸ்தானங்களில் நிகழக்கூடாது.  நிகழ்ந்தால் அமாவாசையால் கிடைக்கும் சுபயோகம் பங்கப்படும்.  சூரியன் ஸ்தானபலத்தில் நல்ல நிலையில் இருக்க வேண்டும்.  மேஷம், ரிஷபம், கடகம், சிம்மம், துலாம், விருச்சிகம், தனுசு, கும்பம், ஆகிய லக்ன ஜாதகர்கள் அமாவாசையில் பிறந்திருந்திருந்தாலும்,  அந்த அமாவாசை யோகமே.  அவர்கள் வாழ்க்கையில் சூரியதசை சந்திரபுக்தி, மற்றும் சந்திரதிசை சூரிய புக்தி காலங்களில் மகிழ்ச்சியின் உச்ச எல்லையில் இருப்பார்கள்.  இது சூரிய சந்திரர்களின் சுபயோக வேஷம்.  இனி அமாவாசை தரும் அவயோகம் ஒன்றை அடுத்த பதிவில் சிந்திப்போம்.  நன்றி  வணக்கம்.  ....................  தொடரும்.  .............................