Tuesday 6 January 2015

புருஷகாலம், ஸ்திரிகாலம் பற்றிய பதிவு



ஓம் நமசிவாய.  அனைவருக்கும் வணக்கம்.  லக்னசந்தி, ஜனன நேரம் ஆகியவற்றை சரி செய்து ஜாதகத்தை கணிப்பது பற்றிய பதிவின் கடைசி பகுதி இது.  [ பாரம்பரிய முறை. ]   சென்ற பதிவில் ஸ்திரிகாலம் புருஷ காலம் பற்றி குறிப்பிட்டிருந்தேன்.  அதை பற்றிய சில சந்தேகங்களை தீர்க்கும் பதிவாக இது அமைகிறது.  ஒவ்வொரு நாளும் 30 நிமிஷங்களுக்கு ஒரு முறை புருஷ காலமும், ஸ்திரி காலமும் மாறி மாறி வரும் என்று ஜோதிட சாஸ்த்திரம் சொல்கிறது.  ஆண் கிரக நாட்களில், சூரிய உதயத்தின் போது புருஷ காலமும், பெண் கிரக நாட்களில் சூரிய உதயத்தின் போது ஸ்திரி காலமும் தொடங்கி மாறி மாறி வரும் என்றும் சொல்கிறது.  இதில் ஆண் திருனங்கை கிரகம் எனப்படும் சனி ஆண் கிரக வரிசையில் சேர்க்கப்பட்டுள்ளது.  பெண் திருனங்கை கிரகம் எனப்படும் புதன் பெண் கிரக வரிசையில் சேர்க்கப்பட்டுள்ளது.  இவைகளின் புருஷ கால, ஸ்திரிகால அடிப்படையில் ஜாதகம் கணிப்பது மரபு.  அதன் அடிப்படையில் நானும் ஒரு உதாரண ஜாதகத்தின் மூலம் லக்ன சந்தி, பிறந்தனேரம் ஆகியவற்றை சரி செய்யும் வழி முறையை சொல்லியிருக்கிறேன்.  இதில் திரு சி.ஜி.ராஜன் அவர்கள் தொகுத்து தந்துள்ள துல்லிய ஸ்திரி, புருஷ காலத்தையும் ஒப்புமைப்படுத்தி லக்ன சந்தி, பிறந்த நேரம் ஆகியவற்றை முடிவு செய்திருக்கிறேன்.  திரு சி.ஜி.ராஜன் துல்லிய ஸ்திரி, புருஷகாலம் பற்றிய பட்டியலை, அவர் எழுதிய ஜாதககணிதம் 2 ஆம் பாகத்தில் தந்திருக்கிறார்.  இதில் ஒரு லக்னனேரம் 16 பாகமாக பிரிக்கப்பட்டு துல்லியமாக்கப்பட்டுள்ளது.  இதில் ஒரு காலம் கிட்டத்தட்ட 7.5 நிமிஷங்களாக வகுக்கப்பட்டுள்ளது.  இதையும் அவர் வடமொழி நூலிலிருந்து தொகுத்ததாக கூறியிருக்கிறார்.  இவையெல்லாம் ஒரு புறமிருக்க, இந்த ஸ்திரிகாலம். புருஷகாலம் பற்றி நிலவும் பல்வேறு கருத்துக்களையும் சற்று பார்க்கலாம்.

30 நிமிஷங்களுக்கு ஒரு முறை காலம் மாறும் என்றால், தொடர்ந்து 30 நிஷங்களுக்கு ஒரே இன குழந்தைகள் மட்டும் தான் பிறக்கின்றனவா?  நடைமுறையில் அவ்வாறு இல்லை என்பதால், இந்த கணக்கு ஒத்து வராதது.  எனவே இதை புறக்கணித்து விடலாம் என்கிறனர் ஒரு சாரார்.

இக்கணீதம் பொய்க்காது.  இதை வேறு ஒரு வகையில் புரிந்துகொள்ள வேண்டும்.  அதாவது, தொடர்ந்து 30 நிஷங்களுக்கு ஒரே இன குழந்தைகள் பிறக்காது என்பது இக்கணிதம் உருவாக்கிய நம் முன்னோர்களுக்கு தெரியும்.  புருஷ காலத்தில் பெண் பிறந்தால், அவளுக்கு ஆண்தன்மை அதிகமாகவும், ஸ்திரி காலத்தில் ஆண் பிறந்தால் அவனுக்கு பெண்தன்மை கூடுதலாகவும் இருக்கும் என்றும் புரிந்துகொள்ள வேண்டும் என்பது இன்னொரு சாரார் கொள்கை. 

கிரகங்களின் ஹோரை எனபப்படுவதும் காலங்களின் அளவுகளே.  இவைகளை ஸ்திரி, புருஷ காலங்களோடு இணைத்து இன்னும் நுட்பமாக ஸ்திரி, புருஷ காலங்களை கணக்கிடலாம் என்று சிலர் சொல்கிறனர்.   இதற்கென சில கணிதங்கள் இருப்பதாகவும் சொல்லி, அதை பட்டியலிடுகிறனர். .  இதற்கு எவ்வித ஆதாரமும் இல்லை. 

முதல் சாரார், இந்த காலக்கொள்கையை சரியாக புரிந்துகொள்ளவில்லை என்பதும், இரண்டாவது சாரார், சாஸ்த்திரத்தில் இல்லாததை, தானாகவே கற்பித்துகொள்கிறனர் என்பதும் உண்மையாகும்.  முதல் சாரார் வாதத்தை பதியளவு ஏற்றுக்கொள்ளலாம்.  தொடர்ந்து 30 நிஷங்களுக்கு ஒரே இன குழந்தைகள் பிறப்பதில்லை, மாறி மாறி பிறக்கிறன என்பது உண்மை.;  இவ்வுண்மையை அறியாமல் ஜோதிஷ சாஸ்த்திரம் இயற்றப்படவில்லை.  ஜோதிஷ சாஸ்த்திரம் முக்காலத்திற்கும் ஏற்புடையது.  எனவே இன்னும் ஸ்ரீபராசரர் போற்றப்படுகிறார்.  நம் சித்தர்கள் ஜோதிடர்கள் மனதில் ஆராதிக்கப்படுகின்றனர்.  அவர்கள் இந்த காலங்களை பற்றி என்ன எழுதியிருக்கிறார்கள்? என கூர்ந்து கவனித்தால் ஒரு உண்மை புரியும். அதாவது புருஷ காலத்தில் ஆண்குழந்தைதான் பிறக்கும் என்றும், ஸ்திரி காலத்தில் பெண்குழந்தைதான் பிறக்கும் என்றும், யாராலும் கூறப்படவில்லை.  மேலும் காலங்களுக்கேற்ற குழந்தைகள் பிறக்காமல் இனம் மாறி பிறந்தால் மாறிய இனத்தன்மை கூடுதலாக இருக்கும் என்றும் யாரும் சொல்லவில்லை.  இது சம்பந்தமாக விபரங்கள் நான் தேடியவரை அகப்படவில்ல.  அவ்வாறு இருப்பின் அதன் மூலத்துடன் தெரிவிக்க வேண்டுமாய் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன். 

ஜாதகம் கணிக்கப்பட்டபின், அந்த ஜாதகம் கொண்டு பிறந்த குழந்தை ஆணா? அல்லது பெண்ணா? என்று அறிய, இந்த கால கணக்குகளை விட, மிக துல்லியமாக சில கிரக நிலைகளை எழுதிவைத்திருக்கிறார்கள்.  காலங்களில் திருனங்கை காலம் கிடையாது.  ஆனால் கிரகங்களில் அவற்றை வகுத்து, அதை பற்றி அறியும் வழி வகைகளையும் ஏற்படுத்தியிருக்கிறார்கள்.  இவ்வளவு இருக்கும்போது பின் ஏன்? இந்த ஸ்திரி, புருஷ காலக்கணக்குகள் என்று எண்ணத்தோன்றும்.  இவை பிறக்கும் / பிறந்த குழந்தை ஆணா? அல்லது பெண்ணா? என்று அறிய அல்ல.  லக்ன சந்தி திருத்தம், சரியான பிறந்தனேரம் கொண்ட ஜாதகங்களை கணிக்கவே ஆகும்.  அவ்வாறு கணிக்கும்போதுதான், இந்த ஸ்திரி, புருஷ கால கணித அருமை புரியும்.  மேலும், ஜாதக பலன் உரைப்பவர்களில் பெரும்பாலானஃவருக்கு ஜாதக கணிதம் தெரிவதில்லை.  எனவே அவர்கள் ஜாதகம் சரியாக இருக்கிறதா? என சரிவர பாராமலேயே பலன் சொல்லிவிடுகிறனர்.  இதனால் பாதிக்கப்படுவது ஜோதிடர்களல்ல.  ஜாதகர்களே.  இப்படி பாதிக்கப்பட்டவர்கள்தான், " ஜோதிடம் பொய், " என்றும் " ஜோதிடர்கள் பொய்யர்கள் " என்றும் பிரசாரம் செய்கின்றனர்.    ஆகவே ஜாதகம் கணிக்கும்போதே எவ்வித பிசகும் இல்லாமல் கணிப்பது அவசியமாகிறது.  அதற்கு இந்த ஸ்திரி, புருஷ காலங்கள் அத்தியாவசிய தேவையாகின்றன.

எனவே நான் பழமையான காலக்கணக்கை பயன்படுத்தியதோடு, சற்று துல்லிய காலகணக்குக்கும் [ திரு சி.ஜி. ராஜன் அவர்கள் தொகுத்தது ] ஒத்துப்போகுமாறு இரண்டையும் ஒப்புமைப்படுத்தி, உதாரண ஜாதகத்தில் தீர்வு கண்டிருக்கிறேன் என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்.  நன்றி.

1 comment: