Friday 21 August 2015

" செய்வினை தோஷம் ", இரண்டாவது பதிவு



ம் படைவீட்டம்மா துணை.  நண்பர்களுக்கு வணக்கம். " செய்வினை தோஷம் ", பாரம்பரிய முறையிலான இரண்டாவது பதிவு இது.

............................  [[  செய்வினையும் மாந்திரீகமும்  ]]  ....................  சென்ற பதிவில் ஒருவர் இன்னொருவர் மீது செய்வினை செய்ய ஜாதக அமைப்பு எப்படி இருக்கும்? என்று பார்த்தோம்.  இந்த ஜாதக அமைப்பு இல்லாதவர்களுக்கு, யாராலும் செய்வினை தோஷத்தை உருவாக்க முடியாது.  எனவே செய்வினை செய்யும் மாந்திரீக ஜோதிடர், வெற்றியடைய, பாதிக்கப்படும் நபரின் ஜாதகத்தை பார்த்தபின்பே அதில் ஈடுபடுவார்.  ஜாதகம் கிடைக்காத போது இருக்கவே இருக்கிறது, மற்ற வகைகளான பில்லி, சூன்யம், போன்றவை..  இதற்கு நக்ஷத்திரமும், ராசியும் தெரிந்தால் போதும்.  பாதிக்கப்படவேண்டிய நபரின் தலைமுடி, பயன்படுத்திய துணிமணிகள், காலடிமண் ஆகியவற்றில் ஒன்று கிடைத்தால் போதும், அந்த நபரை பில்லி, சூன்யத்துக்கு உட்படுத்திவிடலாம்.  கோசரப்படி அஷ்டமத்தில் ராகு, கேது, சனி இருக்கும் காலத்தில் மட்டுமே இத்தகைய செயல்கள், குறிப்பிட்ட நபரை பற்றிக்கொள்ள செய்யமுடியும்.  ஜாதகமும் இல்லை, ராசி நக்ஷத்திரமும் தெரியவில்லை.  இந்த நிலையில் தீயசக்தி கொண்டு நம்மை தாக்க நினைப்பவர்கள், பயன்படுத்துவது இயந்திரம்.  இப்படிப்பட்ட மாந்திரீக தகடுக்ளை, நம் குடியிருப்பு எல்லைக்குள், திருட்டுத்தனமாக வந்து புதைத்து அல்லது கண்ணில் தென்படாவண்ணம் ஒளித்து வைத்து விடுவார்கள்.  இந்த இயந்திரங்கள், முன் குறிப்பிட்டு சொல்லப்பட்டுள்ளபடி, கிரக அமைப்புகள் அமையும் வரை காத்திருந்து, பின் செயல்பட துவங்கும்.  இவை அமைதியாக இருக்கும் காலங்களில் நமக்கு அதை பற்றி ஒன்றுமே தெரியப்போவதில்லை.     

ஒரு மாந்திரீக ஜோதிடரால் எந்த நேரத்தில் வேண்டுமானாலும் இத்தீயசக்திகளை ஒருவர் மீது பயன்படுத்த முடியும் என்றாகிவிட்டால், பிறகு தெய்வம் இருப்பதற்கே அர்த்தம் இல்லாமல் போய்விடும்.  கிரகங்கள் வழி விட்டால் தீயசக்திகள் தாக்கும்.  இதன்படிபார்த்தால், இந்த தீய சக்தியால் விளையும் துன்பங்கள் எல்லாம் நமக்கு தெய்வத்தின் அனுமதியோடுதான் நடக்கிறது என்றல்லாவா ஆகிவிடுகிறது.  ஆச்சரியமாக இருக்கிறதா!  அதுதான் உண்மை.  நாம் செய்யும் கர்மவினைகள் நம்மை திருப்பி தாக்கும் என்பதை நீங்கள் ஒப்புக்கொள்பவராக இருந்தால், அந்த பாபகர்மவினை திருப்பி தாக்கும் வழிமுறைகளில், இதுவும் ஒன்று என்று ஏற்றுக்கொண்டுதானாக வேண்டும்.  ஆகவே பாபங்கள் புரியாமல், தர்மவழியில் நடக்கவேண்டும் என்பதை உணர்ந்து கொள்ளவே நாம் இன்னிலைக்கு ஆளாகிறோம் என்பதும் உண்மையிலும் உண்மை.  இதை உணர்ந்தவர்கள், தீயசக்திகளை கொண்டு நம்மை தாக்கும், எதிரிகள் மீதோ, அதை செயல்படுத்தும் மாந்திரீக ஜோதிடர்கள் மீதோ வருத்தப்பட மாட்டார்கள்.  [  இது என் சொந்த அனுபவம்.  நானும் செய்வினை தோஷத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டு அல்லல் பட்டிருக்கிறேன்.  மஹான்களும் ஞானிகளும் கூட இதிலிருந்து தப்பவில்லை எனும் போது நாம் எம்மாத்திரம்.  ]]  எந்த நேரத்தில்? எப்போது? யாருக்கு? நாம் எத்தகைய கொடும்பாவம் புரிந்தோம் என்று தெரிந்துகொள்ளவும் ஜோதிடத்தில் வழி இருக்கிறது. 

.......................  [[  முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்  [[  ....................  பொதுவாக நாம் ஜாதகம் பார்க்கும்போது, எந்த தசாபுக்தியாவது, நமக்கு செய்வினை தோஷத்தை உருவாக்குமா? என்றும், அதன் காலகட்டத்தை அறிந்து வைத்துக்கொள்வது நல்லது.  சிலருக்கு மேற்கண்ட தசாபுக்திகள் தீயசக்திகளுக்கு வழிவிடாத அமைப்பும் ஜாதகத்தில் இருக்கும்.  நம் ஜாதக விபரங்களை, நமது நம்பிக்கைக்குரியவரிடம் தவிர மற்றவரிடம் வெளியிடாமல் இருப்பதும் நல்லது.  நமது தலைமுடியை அனாவசியமாக உதிரவிடாமல் இருக்க வேண்டும்.  நமது இந்துமத சாஸ்த்திரம் இதை ஒரு சம்பிரதாயமாகவே வலியுறுத்துகிறது.  பொழுதுபோன பின் தலைமுடி வாரக்கூடாது என்பதும் இதில் சேர்ந்ததுதான்.  இருட்டிய நேரத்தில் உதிர்ந்த தலைமுடிகளை சுத்தம் செய்வதில் விடுபட்டு போகும்.  வீட்டினுள் தலைமுடி வரக்கூடாது என்பதும் இந்த சம்பிரதாயத்தின் ஒரு அங்கமே.  தானங்களில் ஒன்றான வஸ்திரதானம் மேற்கொள்ளும் போதும், புதியதையே அளிக்க வேண்டும்.  நாம் பயன்படுத்தியதை கொடுத்துவிடக்கூடாது.  அதை நாமே அழித்துவிடவேண்டும்.  [[  போகிப்பண்டிகையை நினைவிற்கொள்க.  ]]  பாதரட்சை இல்லாமல் நடமாடக்கூடாது.  விரத நாட்களில், நாம் வெறும் காலில் இருக்கும்போது, நம்மை இறைவன் ரட்சிப்பான்.  இன்னாட்களில் எடுக்கப்படும் காலடிமண் எதிரிக்கு உதவாமல் போகும்.  " அதிதி தேவோ பவ: ", என்ற சொற்றொடரை அடிக்கடி கேட்டிருப்பீர்கள்.  நம்மால் முடிந்தபோதெல்லாம், ஆன்மிகம், யோகம், ஆகிய நிலைகளில் உயர்ந்தவர்களை அழைத்து, அவர்களை வணங்கி, ஆசி பெற்று, விருந்துபசரிக்க வேண்டும் என்று ஒரு இந்துமத சம்பிரதாயம் இருக்கிறது.  இத்தகையோர்களே அதிதிகளாவர்.  தெய்வத்திற்கு சமமானவர்கள்.  அமைதியாக இருக்கும் மாந்திரீக தகடுகள் பற்றி இவர்களுக்கு புரிந்துவிடும்.  இவர்கள் வருகையால் மாந்திரீக தகடுகள் தானாகவே சக்தியிழந்துவிடும்.  எனவே அதிதி தேவோ பவ: என்னும் விருந்தளித்தல் சம்பிரதாயத்தை விடாமல் கடைபிடித்து வர வேண்டும் என்று நம் முன்னோர்கள் நமக்கு அறிவுருத்தியிருக்கிறார்கள்.  ......................  [[  தொடரும்  ]]  ...................... 


No comments:

Post a Comment