Thursday 13 August 2015

ஸ்த்ரி / புருஷ ஹத்தி தோஷம்



ம் படைவீட்டம்மா துணை.  வாசக அன்பர்களுக்கு வணக்கம்.  " ஸ்த்ரி ஹத்தி தோஷம் ", என்று ஒரு வகை தோஷம் இருக்க்றது.  இது ஆண்களை பாதிக்கும்.  இது போல் " புருஷ ஹத்தி தோஷம் ", என்றும் உண்டு.  இது பெண்களை பாதிக்கும்.  இவைகளைப் பற்றியும், பொதுவாக தோஷங்கள் எப்படி உருவாகின்றன? என்பதை பற்றியும் இந்த பதிவில் சிந்திப்போம்.  ..............  பாரம்பரிய முறை  ............

...................  தோஷங்கள் எப்படி உருவாகின்றன?  .............. ஒரு ஜாதகத்தில், தோஷம் உருவாக பல காரணங்கள் இருந்தாலும், கிரக இணைவுகள் ஒரு காரணமாக சொல்லப்படுகிறது.  ஒரு சுபக்கிரகத்துடன், கடுமையான அசுபகிரகம் இணைந்தால் அது தோஷமாகிவிடுகிறது.  உதாரணத்திற்கு, குருவுடன் சனி இணைந்தால் பிரம்மஹத்தி தோஷம் என்று சொல்லிவிடுகிறனர்.  குரு, சனி இணைவு பிரம்மஹத்தி தோஷம் ஆகும், என்று ஒப்புகொள்ளலாம்.  ஆனால் இவ்விரு கிரகங்களும், ஒரு ராசியில் இணைந்தாலே தோஷம் என்பது ஏற்றுக்கொள்ள இயலாது.  இதற்கான முழுமையான காரணங்களை ஆராயந்து தனியாக ஒரு பதிவை ஏற்கனவே இட்டிருக்கிறேன்.  அது என்னுடைய www.josyamramu.blogspot.com ல் உள்ளது.  எனவே அதை இங்கு விரிவாக பார்க்க வேண்டாம்.  ஒரு சுபகிரகத்துடன், கடுமையான அசுபகிரகம் ஒரே நக்ஷத்திர பாதத்தில் இணையும் போது தோஷம் உருவாகிறது என்று சொல்வதே மிக சரியாக இருக்கும்.  சுபகிரகமான சந்திரனுடன், ராகு, கேது ஆகிய இரு நிழல் கிரகங்கள் ஒரே ராசியில் இணைந்தாலே போதும், அது கிரகண தோஷம் என்று சொல்லும் ஜோதிடர்கள் உண்டு.  உண்மையில், சந்திரனுடன், நிழல் கிரகங்களில் ஒன்று ஒரே நக்ஷத்திர பாதத்தில் இணையும் போதுதான் கிரகணம் உண்டாகிறது.  பாகை கணக்கில் துல்லியமாக சொன்னால், இரு கிரகங்களும், 3.33 [ 3 பாகை. 20 கலை. ]  டிகிரிக்குள் கூடியிருக்க வேண்டும்.  இப்படி இரு கிரகங்கள் நெருக்கமாக இணையும் போது, அதன் கதிர்வீச்சுகள் ஒன்று கலந்து, ஒன்றுக்கொன்று ஏறுக்கு மாறாக செயல்படும்.  இப்படி நடக்கும் விரும்பத்தகாத விளைவுகளே தோஷம் எனப்படுகிறது.  ஒரு ராசியின் இரு முனைகளில் இருக்கும் கிரகங்களால் இத்தகைய மோசமான விளைவுகள் ஏற்பட்டுவிடாது.  இனி ஸ்த்ரி / புருஷ ஹத்தி தோஷத்திற்கு வருவோம்.

சுக்கிரனுடன், ராகு ஏழாமிடத்தில் இணைந்தால், அது ஆண்களுக்கு ஸ்த்ரிஹத்தி தோஷம் தரும்.  பெண்களுக்கு புருஷஹத்தி தோஷம் தரும்.  இதன் விளைவாக தவறுகள் எதுவும் புரியாமல், உத்தமனாக / உத்தமியாக இருந்தாலும்,  காமம் சம்பந்தப்பட்ட விஷயமாக, அவப்பெயரும், அவமானமும் தேடிவரும்.  ஆண்களுக்கு பெண்களாலும், பெண்களுக்கு ஆண்களாலும் இந்த அவமானம் வந்து சேரும்.  இந்த தோஷம் ராகு தசை, சுக்கிர புக்தி காலத்திலோ அல்லது, சுக்கிர தசை, ராகு புக்தி காலத்திலோ செயல்படும்.  இந்த தசாபுக்திகள் ஜாதகர்களுடைய வாழ்வில் வரும் சூழ்னிலை இல்லையென்றால், எந்த விதமான தோஷ விளைவுகளும் ஏற்படாது.  அதுவும், ராகுவும், சுக்கிரனும், ஒரே நக்ஷத்திர பாதத்திலோ அல்லது 3.33 [ 3 பாகை 20 கலை ]  பாகைக்குள்ளோ இருக்க வேண்டும்.  இவ்வகை அவப்பெயரையும், அவமானத்தையும் வாழ்க்கையில் அனுபவித்தவரகள் இருப்பார்கள்.  அவர்கள் அனுபவித்த காலத்தில், ஜாதகத்தில் மேற்கண்ட அமைப்புடன் கூடிய, தசாபுக்தி நடந்திருக்கும்.  சோதித்து பார்த்துக்கொள்ளலாம்.  காமகாரகனான சுக்கிரனும், போக காரகனான ராகுவும் இணைவதால் இந்த விபரீதம் நிகழ்கிறது.  அதுவும், இவ்விருகிரகங்களில், ஒன்று நீசமடைத்திருந்தால் கூட நிலைமை மிகவும் மோசமாக இருக்கும்.  சனியின் பார்வை ஏழாமிடத்திற்கு இருந்தாலும், அல்லது அஷ்டமசனி, அஷ்டமராகு ஆகியவை கோசரப்படி நடப்பிலிருந்தாலும்,  அது இன்னும் சங்கடத்தை சேர்க்கும்.  அவமானத்தால் கூனிக்குறுகி உயிர் விட்டுவிடலாமா? என்றெல்லாம் தோன்றும்.  இத்தகைய நிலை வருவதற்கு முன்பே கண்டுபிடித்து விட்டோமானால், அதற்குரிய பரிகார வழிபாடுகள் செய்துகொண்டு நிவாரணம் பெறலாம்.  அந்த வழிபாடு பற்றி சுருக்கமாக காண்போம்.

மயிலாடுதுறையிலிருந்து, பூம்புகார் செல்லும் பாதையில், மேலப்பெரும்பள்ளம் என்ற ஊரில், ஸ்ரீவலம்புரநாதர் திருக்கோவில் உள்ளது.  கீழப்பெரும்பள்ளம் என்பது கேது ஸ்தலமாகும்.  தவறிப்போய் அங்கு சென்றுவிடவேண்டாம்.  செல்லும்போது, 108 அகல்விளக்கு, அதற்குண்டான திரி, சுமார் 2 கிலோ சுத்தமான பசுநெய், விரித்துக்கொண்டு அமர மஞ்சள்தூளில் நனைக்கப்பட்ட ஒரு துண்டு அல்லது விரிப்பு.  ஐந்துமுகம் கொண்ட ருத்திராக்ஷம் இரண்டு, மற்றும் அர்ச்சனை வழிபாட்டுக்குரிய பொருட்களோடு, கோவிலுக்கு காலை 9.00 மணிக்கே சென்றுவிடவேண்டும்  ஆண்கள் ஞாயிறன்றும், பெண்கள் வெள்ளியன்றும் செல்ல வேண்டும்.  அங்கு சென்றபின் அங்குள்ள சிவாச்சாரியாருடைய வழிகாட்டுதலோடு, பரிகார வழிபாடுகளை செய்ய வேண்டும்.  வழிபாடு செய்பவர் பெண் என்றால், திருமணமாகாத ஆணுக்கும், வழிபடுபவர் ஆண் என்றால், கன்னிபெண்ணுக்கும் அன்றையதினம் வெற்றிலை, பாக்கு, பழங்கள் சகிதமாக வஸ்திரதானம் செய்ய வேண்டும்.  அத்துடன் ஒரு தொகை வைத்துத்தர மறந்துவிடவேண்டாம்.  இவை செய்வதன் மூலம், ஸ்ரீவலம்புரநாதர் திருவருளால் வந்த / வர இருக்கும் பழி பாவங்கள் நீங்கும்.  நன்றி வணக்கம்.  [ படத்தில் காண்பது ஸ்ரீவலம்புரநாதர் திருக்கோவில் ]              

No comments:

Post a Comment