Monday 21 December 2015

புதாதித்யயோகம் ", மற்றும் கிரக இணைவுகள்



ம் படைவீட்டம்மா துணை.  ஜோதிட நண்பர்களுக்கு வணக்கம்.  ...................  " புதாதித்யயோகம் ", மற்றும் கிரக இணைவுகள் ..................  பாரம்பரிய முறையிலான பதிவு...........  கிரகங்கள் இணைவதை யோகம் என்று சாஸ்த்திரங்கள் சொல்கிறன.  இந்த இணைவுகளில் இந்த பதிவுக்காக தேவைப்படும் மூன்று வகையான இணைவுகளை மட்டும் பார்க்கலாம்.  1.  ஸ்தான அடிப்படையில் இணைவு.  2.  பாதசார அடிப்படையில் இணைவு.  3.  அஸ்தமன இணைவு.  என்பவையே அவை ஆகும்.  உதாரணத்திற்கு,... தர்மகர்மாதிபதி யோகம், நீசபங்கராஜயோகம், விபரீதராஜ யோகம், ஆகியவை ஸ்தான அடிப்படையிலான இணைவுகள்.  { இந்த இணைவில் கிரகங்களின் ஸ்தானாதிபத்தியமும், ஸ்தானபலமும் மட்டுமே பார்க்கப்படுகிறன. }  இப்படிப்பட்ட இணைவுகளுக்கு, ஒரு ராசியில், சம்பந்தப்பட்ட இரு கிரகங்கள் இருந்தாலே போதுமானது.  தர்மஸ்தானாதிபதியும், கர்மஸ்தானாதியும், ஒரு சுபஸ்தானத்தில், நீசம், அஸ்தமனம், வக்கிரம் இல்லாமல் ஒரே ராசியில் இருந்தால் போதும்.  யோகத்தை தருவர்.  அதுபோல் நீசஸ்தானம் அடைந்த ஒரு கிரகம், உச்சஸ்தானம் அடைந்த கிரகத்துடன், ஒரே ராசியில் இருந்தால் போதும், நீசபலம் பெற்ற கிரகம் நீசபங்கராஜ யோகத்தை பெற்றுவிடும்.  அதுபோல் அசுபஸ்தானாதிபதிகள் இருவர், எந்தவகையிலும், வேறு சுபஸ்தானாதிபதிகள் தொடர்பு இல்லாமல், ஒரு அசுபஸ்தானத்தில் இருந்தாலே போதும், அது விபரீதராஜ யோகத்தை தந்துவிடும்.  இந்த யோகத்திற்கு, ஸ்தானபலக்குறைவு, மற்றும் வக்கிரம் இருக்ககூடாது.  இனி பாதசார அடிப்படையில் ஏற்படும் இணைவுகளை பார்க்கலாம்.

சந்திரமங்கள யோகம், குருமங்கள யோகம், குருசண்டாள யோகம், ஆகியவை பாதசார அடிப்படையிலான இணைவுகளாகும்.  உதாரணத்திற்கு..........  குருவும் செவ்வாயும் ஒரே பாதசாரத்தில் இருந்தால் குருமங்கள யோகம் எனலாம்.  இப்படி ஒரே பாதசாரத்தில் இல்லாமல், ஒரேராசியில் இவ்விரு கிரகங்கள் இருந்தால், அவைகளுக்கு, குருமங்கள யோகத்தை விட வேறு சிறப்பான யோகம் ஏற்படல்லாம் அல்லவா?  இவ்விரு கிரகங்களும், நீச, உச்சமாக ஒரே ராசியில், இருந்தால் போதும், அது நீசபங்கராஜ யோகமாகும்.  இவையிரண்டும் அசுபஸ்தானாதிபதிகளாகி, அசுபஸ்தானத்தில் ஒரே ராசியில் இருந்தால் போதும், விபரீதராஜ யோகம் தரும்.  எனவே இவ்விரு கிரகங்களும் ஒரே பாதசாரத்தில் இருக்கும்போது மட்டும், அதை குருமங்கள யோகம் என எடுத்துக்கொள்ளுதல் பொருத்தமாக இருக்கும்.  இதே போல் சந்திரன் செவ்வாய் இணைவால், சந்திரமங்கள யோகமும், குருவுடன், சனி, ராகு, கேது ஆகிய கிரகங்களின் இணைவுகளால் குருசண்டாள யோகமும் ஏற்படுகிறது.  இனி அஸ்தமன இணைவு பற்றி சிந்திப்போம்.

புதாதித்திய யோகம், இந்த அஸ்தமன இணைவோடு மிக நெருங்கிய தொடர்பு உள்ளது.  ஆனால் சிலர் ஒரே ராசியில் சூரியனும், புதனும் இருந்தாலே போதும், அது புதாதித்திய யோகம் என்று சொல்லி வருகிறனர்.  ராகு, கேதுக்களைத் தவிர மற்ற எல்லா கிரகங்களுக்கும் அஸ்தமனம் உண்டு.  கிரகங்கள் சூரியனிடம் குறிப்பிட்ட எல்லையில் நெருங்கும்போது, அஸ்தமனம் அடைகிறன.  அதனால் ஏற்படும் தீய விளைவுகள் அஸ்தமன தோஷம் எனப்படுகிறது.  ஆக அஸ்தமனம் வேறு.  அஸ்தமனதோஷம் வேறு.  புதனுக்கு அஸ்தமனதோஷம் கிடையாது என்று ஒரு சாரார், சொல்லிவருகிறனர்.  அதாவது புதனுக்கு அஸ்தமனம் உண்டு, ஆனால் அது நற்பலன் மட்டுமே தரும் என்பது அதன் பொருள்.  இதை இதுவரை நாம் பார்த்த உதாரணங்களை வைத்துக்கொண்டு சிந்திப்போம்.........................  தனுசு லக்னத்திற்கு மட்டும், சூரியனும், புதனும், ஒரேராசியில் இருக்கும்போது தர்மகர்மாதிபதி யோகம் தருகிறனர்.  அத்துடன் புதன் தனித்தமுறையில் பத்ரயோகமும் தருகிறார்.  இவைகளையே நாம் புதாதித்திய யோகம் என்று சொல்வது தவறாகிவிடும்.  நமது சாஸ்த்திரங்களில், ஒவ்வொருவகையான யோகத்திற்கும், ஒவ்வொரு பலன் சொல்லப்பட்டுள்ளது.  சூரியனும், புதனும், கன்னியில் இருக்கும்போது, தனுசு லக்ன ஜாதகத்தில், புதன் பாதகாதிபத்தியம், கேந்திராதிபத்தியம் என்ற இருவகை தோஷங்களை அடைகிறார்.  இந்த தோஷங்கள் புதனை பாதிக்காது.  தர்மகர்மாதிபதி யோகம் தரும் நிலையில் உள்ள புதன், இவ்விரு தோஷங்களையும் தள்ளுபடி செய்துவிடுவார்.  ஒரு யோகத்தை தரும் கிரகத்திற்கு, தோஷங்கள் இருந்தால், அது செயல்படாது, என்ற விதியையும் இங்கு நினைவுகூர்தல் அவசியம்.  மேலும் மகர லக்னத்திற்கு, புதன் ஆறாமதிபதி, சூரியன் அஷ்டமாதிபதி.  இப்படி அசுபஸ்தானாதிபத்தியம் பெற்று, இரு கிரகங்களும் அசுப ஸ்தானத்தில் இருக்கும்போது, அவை விபரீதராஜ யோகத்தை தரும்.  ஒரு சாரார் சூரியனுக்கு அஷ்டமாதிபத்தியம் கிடையாது என்கிறனர்.  அஷ்டமாதிபத்தியம் வேறு.  அதனால் ஏற்படும் தீயவிளைவுகள் வேறு.  எனவே சூரியனுக்கு அஷ்டமாதிபத்திய தோஷம் கிடையாதென்று சொல்வதே அவர்களுக்கு பொருத்தமாக இருக்கும்.  இனி இவ்விரு கிரகங்களும், பாதசார அடிப்படையில் இணைவதை யோசிக்கலாம்.

சூரியனும், புதனும் ஒரே பாதசாரத்தில் இணையும்போது புதன் அஸ்தமனம் அடைந்துவிடும்.   சூரியனும் மற்ற கிரகங்களும் இணையும் இணைவை  பொருத்தமட்டில், பாதசார இணைவும், அஸ்தமன இணைவும் ஒன்றே.  இங்கு ஒரு முறை அஸ்தமன விதியை நினைவுகூர்தல் நன்று.  ....................  சூரியன் சுபஸ்தானாதிபதியாக இருந்து, அதனிடம் அஸ்தமனமடையும் கிரகம் அசுபஸ்தானாதிபதியாக இருந்தாலும், அதன் பலன் சூரியனால் சுபமாக மாற்றப்பட்டுவிடும்.  இதுவே சூரியன் அசுபஸ்தானாதிபதியாக இருந்து, அதனிடம் அஸ்தமனமடையும் கிரகம், சுபஸ்தானாதிபதியாக இருந்தாலும், அதன் பலன் சூரியனால அசுபமாக மாற்றப்பட்டுவிடும்.  ......................  இந்தவிதிப்படி, சூரியன் சுபஸ்தானாதிபதியாக இருக்கும்போது, அதனிடம் அஸ்தமனமடையும் புதனின் பலன் சுபபலனாக மாற்றப்பட்டுவிடும்.  இதுவே " புதாதித்திய யோகம் ", ஆகும்.  சூரியன் அசுபஸ்தானாதிபதியாக இருக்கும்போது, அதனிடம் அஸ்தமனமடையும் புதனின்பலன் அசுப பலனாக மாற்றப்பட்டுவிடும்.  இந்த நிலையில் இணையும் சூரிய, புதனின் இணைவை புதாதித்திய யோகம் என்றும், அதற்கான சுபபலனை சொல்வதும் பொருத்தமற்றது.  நன்றி.  வணக்கம்.                       

No comments:

Post a Comment