Monday 21 December 2015

விவாஹ தசவித பொருத்த விளக்கம். ............... 2 ஆவது பகுதி:



ம் படைவீட்டம்மா துணை.  அனைவருக்கும் வணக்கம்.  .....................  விவாஹ தசவித பொருத்த விளக்கம்.  ...............  2 ஆவது பகுதி:  .....................  பாரம்பரிய முறை.  ................... 02.  ரஜ்ஜுப்பொருத்தம்:  .................  ஜாதக அலங்கார பாடலில் விவாஹதசவித பொருத்தம் பார்க்கும்போது, முதலில் ரஜ்ஜுப்பொருத்தத்தை பார்க்க வேண்டும் என்று அறிவுருத்தப்பட்டுள்ளது.  இது மணப்பெண்ணின் மாங்கல்ய பலத்தை குறிப்பிடுவதாகும்.  ரஜ்ஜு என்றால் கயிறு, என்று பொருள்.  இங்கு இது மாங்கல்ய சரடை குறிக்கிறது.  ஒரு பெண்ணுக்கு மாங்கல்ய பலம் முக்கியம்.  இது பலமாக இருந்தால், கணவனுக்கு வரும் கண்டத்திலிருந்து அவரை காப்பாற்றும்.  அத்துடன் தினப்பொருத்தமும் இருந்தால் ஆயுளுக்கும் பங்கம் வராமல் இருக்கும்.  ரஜ்ஜுப்பொருத்தம் பார்ப்பதில் பல விதிவிலக்குகள் உள்ளன.  ராசியதிபதி பொருத்தம் இருப்பின் ரஜ்ஜு பார்க்க வேண்டியதில்லை.  அதுபோல், ஒரே ரஜ்ஜுவாக இருப்பினும், நக்ஷத்திராதிபர்கள் வேறுவேறாக இருந்தால் ரஜ்ஜு பார்க்க வேண்டியதில்லை.  இந்த விதிவிலக்குகளின்படி, ரஜ்ஜு பொருத்தம் தேவையில்லை என்று அந்த பொருத்தம் தள்ளுபடி செய்யப்பட்ட, ரஜ்ஜு பொருத்தம் இல்லாத தம்பதியர்கள் பலர் வெற்றிகரமாக வாழ்க்கையை நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.

ஜாதக அலங்கார பாடலின்படி அக்காலத்தில் ரஜ்ஜுப்பொருத்தத்திற்கு முதலிடம் தந்தனர்.  பெண்ணுக்கு கணவனும், அவன் சூட்டும் மாங்கல்யமும் மட்டுமே முக்கியமாக கருதப்பட்டது.  விதிவசமாக எவ்வளவு கருத்து வேற்றுமை வந்தாலும், அக்காலத்து பெண்கள் மாங்கல்யத்திற்கு முக்கியத்துவம் தந்து எல்லாவற்றையும் சகித்துக்கொண்டனர்.  பெண்ணுக்கு மறுமணம் கண்டிப்பாக மறுக்கப்பட்டது.  பெண் சுயமாக நிதி சேர்த்து, சொந்தக்காலில் நிற்பது மிகவும் அரிதாக இருந்தது.  இதனால் அவள் கணவணை சார்ந்தே வாழ வேண்டியிருந்தது.  வாழ்க்கையில் தனக்கு கணவன் ஒருவனே என்பதால், அந்த ஒருவன் நிலையாக இருக்க வேண்டும் என்பதற்காக மாங்கல்ய பலத்தை குறிக்கும் ரஜ்ஜுப்பொருத்தத்திற்கு முதலிடம் இருந்து வந்தது.  இக்காலத்தில் கணவனை இழந்தும், பிரிந்தும் வாழும் பெண்களின் எண்ணிக்கை பெருகி வ்ருவதை பார்த்தால், ரஜ்ஜுப்பொருத்தத்திற்கு, தற்போது மரியாதை போய்விட்டது என்றே கருத தோன்றுகிறது.  ஜோதிடர்களில் சிலர், விவாஹதசவித பொருத்தமாகிய மொத்த எண்ணிக்கை 10ல் ரஜ்ஜுபொருத்தம், ராசியதிபதி பொருத்தம், தவிர மற்ற 8 பொருத்தங்கள் இருந்தால், 2 தானே குறைகிறது என்று எண்ணிக்கைக்கு முன்னுரிமை தந்து ஜாதகத்தை பொருத்திவிடுகிறனர்.

ஜோதிடரீதியாக சிந்தித்தால், ஒரு விசித்திரமான கணிப்பு இந்த ரஜ்ஜுபொருத்தத்தில் இருப்பதை காண முடிகிறது.  ஒவ்வொரு நக்ஷத்திரத்திற்கும் இரு அதிபதிகள் உண்டு.  இந்த இருவரிடையே கடும் போட்டி நிலவுகிறது.  ஒருவர் நக்ஷத்திராதிபதி.  இன்னொருவர் ராசியாதிபதி.  பொருத்தம் பார்க்கப்படும் இரு ஜாதகங்களின் நக்ஷத்திரங்களுக்கு நக்ஷத்திராதிபதி ஒருவராகவே இருந்தால் ரஜ்ஜுபொருத்தம் இல்லை.  ஆனால் இதுவே ராசியதிபதி ஒருவராகவே இருந்தால் ரஜ்ஜுபொருத்த்ம உண்டு.  நக்ஷத்திரப்பட்டியலை வைத்துக்கொண்டு சரி பார்த்தால் இது உண்மையாகவே இருக்கிறது.  நல்ல வேளை ராசியதிபதி பொருத்தம் ஒன்று இருப்பதைப்போல் நக்ஷத்திராதிபதி பொருத்தம் என்ற ஒன்று இல்லை.

03.  கணப்பொருத்தம்: ..............................  இது பொருத்தம் பார்க்ககூடிய இரு ஜாதகர்களின் மன இயல்பை தெரிந்துகொள்ள உதவுவது.  மனிதர்களில் தெய்வகுணம், மிருககுணம், இயல்பான மனிதகுணம் கொண்ட 3 வகையினர் உள்ளனர்.  அவர்களை அடையாளம் காட்டுவது இந்த கணம் என்ற பிரிவு.  தெய்வகுண மன இயல்பு கொண்டவர்கள் தேவகணம்.  மிருககுண மன இயல்பு கொண்டவர்கள் ராக்ஷஸ கணம்.  இரண்டுக்கும் இடையே சாதாரண மனிதகுண இயல்பு கொண்டவர்கள் மனித கணம்.  மொத்தமுள்ள 27 நக்ஷத்திரங்களையும் 9, 9 ஆக பிரித்து, ஒவ்வொரு கணத்துக்கும் ஒரு பிரிவை உரித்தாக்கியிருக்கிறது நமது சாஸ்த்திரம்.  { இதில், மிருகசீரிஷம், மகம், ஸ்வாதி, அனுஷம் ஆகியவை சிறப்பு நக்ஷத்திரங்கள் என்பதால், அவைகளை கணப்பட்டியலிலிருந்து நீக்கிவிடலாம்.  இந்த நக்ஷத்திரங்களின் படி கணம் கொண்ட ஜாதகரகள் மற்ற இரு கணங்களோடும் நன்றாக ஒத்துப்போவார்கள். }  இதன்படி தேவகணம் எனும் தெய்வகுண இயல்பு கொண்ட தேவகணத்தினர், மிருககுண இயல்பு கொண்ட ராக்ஷஸ கண ஜாதகரோடு குடும்பம் நடத்த இயலாது.  இவ்விரு குண இயல்புகளும் ஒத்துப்போகாது.  அதுபோல், மனிதகுண இயல்பு கொண்ட மனிதகண ஜாதகர்கள், ராக்ஷஸகண ஜாதகர்களோடு குடும்பம் நடத்துவதும் அரிதே.  இவ்வாறு ஒன்றோடொன்றை தொடர்பு படுத்திப்பார்த்து, ஜாதகர்களை இணைப்பதே கணப்பொருத்தமாகும்.  இதை பற்றி இன்னும் விரிவாக, வாசகர்களுக்காகவும், ஜோதிடர்களுக்காவும், சில சுவாரஸ்யமான செய்திகளை அடுத்த பதிவில் பகிர்ந்துகொள்ள இருக்கிறேன்.  நன்றி.  வணக்கம்.:  ..............................  தொடரும்  :.................................         

No comments:

Post a Comment