Monday 27 October 2014

ஜாதகமும் பரிகார வழிபாடுகளும்.



ஓம் நமசிவாய.  அனைவருக்கும் வணக்கம்.  பரிகார வழிபாடுகள் பற்றிய முழுதகவல்களை ஜாதகர்களுக்கு தெரிவிக்கும் பதிவு இது.  திரு கீரனூர் நடராஜன் அவர்கள் இயற்றிய ஜாதக அலங்காரம் என்னும் நூல் ஜோதிடர்களுக்கு ஒரு அறிவுரையை வழங்குகிறது.  இந்த அறிவுரை 11 வது பாடலாக இடம் பெற்றுள்ளது. 

' பிரம்மதேவர் அவரவர்கள் முற்பிறவியில் செய்த நல்வினை தீவினைகளுக்கேற்ப அவரவர்களது தலையெழுத்தை நிர்ணயிக்கிறார்.  பிரம்மதேவர் விதித்த அந்த விதி என்னவென்று எடுத்தியம்புவதே ஜாதகமாகும்.  ஜாதகத்திலுள்ள பன்னிரண்டு பாவங்களை கொண்டு அவர்வர்களுக்கு இப்பிறவியில் நடக்கவிருக்கின்ற நன்மை என்ன/ தீமை என்ன/ என்று பெரியோர்கள் கண்டறிந்து கூறியிருக்கின்றனர்.  நன்மை வருமானால் அதை எடுத்து சொல்லி, மனிதர்களை ஆனந்தப்படுத்துவதற்கும், தீமை வருமானால் அதற்கான பரிகாரத்தை எடுத்து சொல்லி மனிதர்களை ஆற்றுப்படுத்துவதற்கும், ஜாதக கணிதத்தை பெரியோர்கள் வகுத்துரைத்துள்ளனர் '.

இதிலிருந்து பரிகாரங்களை எடுத்துரைப்பதும், அதற்கு வழிகாட்டுவதும் ஒரு ஜோதிடரின் கடமையென புரிந்துகொள்ளலாம்.  நல்வினைகளை ஜாதகர்கள் தானே அனுபவிப்பர்.  இந்த நல்வினை பயன்களை முழுமையாக தடையின்றி பெற குலதெய்வ வழிபாடும், இஷ்டதெய்வ வழிபாடும், பிதுர் வழிபாடும் முறையாக செய்து வருதல் வேண்டும்.  இது எல்லோருக்கும் பொதுவானது.  தீவினை பலன்கள் தரக்கூடிய ஜாதகங்களை இருவகையாக பிரிக்கலாம்.  அவை..............

1.  தீவினை பலன்கள் அனுபவித்தே ஆக வேண்டிய ஜாதகங்கள்.
2.  பரிகார வழிபாடுகளால் தீவினைகளை குறைக்கவும், தவிர்க்கவும் வழிவிடக்கூடிய ஜாதகங்கள்.

முதல்வகை ஜாதகங்களுக்கு பாக்கியஸ்தானம் முற்றிலுமாக கெட்டுப்போயிருக்கும்.  இவ்வகை ஜாதகர்களுக்கு எவ்வித பரிகார வழிபாடுகளும் செல்லுபடியாகாது.  எனவே அவர்கள், முன் சொல்லப்பட்டதுபோல் குலதெய்வவழிபாடையும், இஷ்டதெய்வவழிபாடையும், பிதுர் வழிபாடையும் தவறாது செய்து வருதல் வேண்டும்.  பிதுர்வழிபாடு விடுபட்டு போயிருப்பின் திலஹோமம், அல்லது குறிப்பிட்ட சில ஸ்தலங்களுக்கு சென்று வழிபாடு செய்து விடுபட்டு போன பிதுர் வழிபாட்டு குறையை நிவர்த்தி செய்துகொள்ளலாம்..

இரண்டாம் வகை ஜாதகங்ளில் பாக்கிய ஸ்தானம் நல்ல முறையில் அமைந்திருக்கும்.  இவ்வகை ஜாதகங்களை இரு வகையாக பிரிக்கலாம்.

1.  சுப கிரகங்கள் நல்லயோகம் தரும் நிலையில் இருந்தும், அவற்றில் தாமதம், அல்லது தடை ஏற்படும் வகையில் அமைந்திருப்பது.
2.  ஜாதகத்தில் நல்லயோகம் கிடைக்கும் நிலை இருந்தும் அசுப கிரகங்களால் தடுக்கப்படுவது.

இவ்விருவகையான ஜாதகர்களுக்கும் இருவகையான பரிகார வழிபாடுகள் உள்ளன.  இவற்றை முறையாக செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.  மாற்றி செய்யும்போது பலன் ஏறுக்கு மாறாக அமைந்துவிடும்.  எந்த வகை வழிபாடாக இருந்தாலும். அவ்வழிபாடு மனமொன்றி செய்தலும் அவசியம். மேற்கண்ட இருவகை ஜாதகங்களுக்கும் திருக்கோவில் பரிகார வழிபாடு, மற்றும் அதற்கேற்ற தான தருமங்கள் செய்தல் அவசியம்.  திருக்கோவில் பரிகார வழிபாடால் பரமாத்மாவை வணங்குகிறோம்.  தானதருமங்களால் இவ்வுலக ஜீவாத்மாக்களுக்கு உதவுகிறோம்.  இதை ஜாதகர்கள் மறந்துவிடலாகாது. மேலும் முதல்வகை ஜாதகர்கள் வழிபடும்போது, நல்லயோகங்களை விரைந்து தடையின்றி வழங்கியருளுமாறும், இரண்டாம் வகை ஜாதகர்கள் யோகங்கள் பெறுவதில் உள்ள தடைகளை நீக்கியருளுமாறும் வேண்டிக்கொள்ளவேண்டும்.  இவ்விரண்டுக்கும் உள்ள வித்தியாசத்தை உணர்ந்து வழிபடுவது சாலச்சிறந்தது.  இதன் பின்பு தொடர்ந்து செய்யக்கூடிய வழிபாடுகளில் வித்தியாசங்கள் உள்ளன.  முதல்வகை ஜாதகங்களுக்கு, நவரத்தினகற்கள், எந்திரம் ஆகியவற்றின் துணையால் நல்ல யோகங்களை தாமதமின்றி, தடையின்றி விரைவாக கிடைக்கும்..  இதே நவரத்தினகற்கள், எந்திர வழிபாடை இரண்டாம் வகை ஜாதகங்களுக்கு பரிகார வழிபாடாக மேர்கொண்டால், அசுபகிரகங்களின் சக்தி அதிகரித்து, பலன் எதிர்வினையாகிவிடும்.  இரண்டாம்வகை ஜாதகங்களுக்கு, வீட்டிலேயே ஜாதகர் ஹோமம் செய்து வழிபடுவதே சிறந்தவழியாகும்..

கடைசியாக ஒரு முக்கிய குறிப்பு.  ஜனன ஜாதகத்தில் ஒரு நல்ல யோகம் இல்லையென்றால், என்ன வழிபாடு செய்தாலும் நல்லது நடந்துவிடாது.  ஆனால் ஏமாற்றி பிழைக்கும் சில ஜோதிடர்கள், இல்லாததை வரவழைத்துவிடலாம் என்றும் மந்திர, எந்திர வழிபாடு செய்யலாம் என்றும் தந்திரம் புரிந்து பணம் பறித்துவிடுகிறார்கள்.  இம்மாதிரியான ஜோதிடர்களிடம், ஜாதகர்கள் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.  எனவே நல்ல அனுபவமுள்ள, மனிதநேயமுள்ள ஜோதிடரை அணுகி, சரியான வழிகாட்டுதலுடன், பரிகார வழிபாடுகளை நிறைவேற்றி வாழ்க்கையில் வளம் பெறுங்கள்.  இறைவன் திருவருள் புரிவானாக.  நன்றி.  வணக்கம்.

2 comments:

  1. வணக்கம் அய்யா

    நன்றாக விளக்கம் தந்துள்ளீர்கள். தங்களின் இந்த பொது சேவைக்கு எனது மனமார்ந்த நன்றி.

    நன்றி
    செல்வம்

    ReplyDelete
  2. அருமையான பதிவுகள் ராமு அய்யா.....nanri

    ReplyDelete