Monday 2 May 2016

" கிரகங்களின் இரட்டை வேஷம் ", .................... தொடர் பதிவு எண்: 05. .............. " அமாவாசையின் யோகமும் அவயோகமும் ".



ம் படைவீட்டம்மா துணை.  ஜோதிட நண்பர்களுக்கு வணக்கம்.  " கிரகங்களின் இரட்டை வேஷம் ",  ....................  தொடர் பதிவு எண்: 05.  ..............  " அமாவாசையின் யோகமும் அவயோகமும் ".  ................  பாரம்பரிய முறை.  ...............  அமாவாசையில் பிறந்த ஜாதகர் திருட்டு குணம் கொண்டவராக இருப்பார்.  சந்திரன் இருண்டு போவதால், அதன் மனம் என்ற காரகத்துவமும் இருண்டு பொய்யனாக இருப்பார்.  ஜாதகரை தாய் ஒதுக்கி வைக்க, தாயோடு இணைந்து வாழ தகுதியற்றவராக இருப்பார். என்றெல்லாம் பலவிதமான பழிச்சொல்லுக்கு ஆளாகிறார்.  இது உண்மைதானா? என்று சிந்திக்கும் பதிவாக இது அமைகிறது.  சூரியன், சந்திரன் ஆகிய இரு கிரகங்களின் இணைவே அமாவாசையாகிறது.  எனவே கிரகங்களின் இணைவு பற்றியும் நாம் சிந்திக்க வேண்டும்.  சூரியனும் சந்திரனும் ஒரே பாதத்தில் அல்லது, 3.33 பாகை இடைவெளியில் இணையும் போது அமாவாசை வலுப்பெறுகிறது..  ஒரு ராசிக்கட்டத்தில் இவ்விரு கிரகங்கள் இணைந்திருந்தாலும் அமாவாசை என சொல்லப்படுவதில்லை.  அதாவது இன்னும் சூரியசந்திர இணைவு ஏற்படவில்லை என்று பொருள்.  ஆனால் மற்ற கிரகங்கள் ஒன்றோடொன்று, ஒரே ராசிக்கட்டத்திற்குள் வந்துவிட்டால், அது கிரக இணைவு என்று சொல்லப்படுகிறது.  இதில் எது? சரியென்று  நாம் கொஞ்சம் யோசித்தால் விடை கிடைத்துவிடும்.  ;;;;;;;;;;;;;;;;

இரு கிரகங்கள் ஒரே ராசிக்கட்டத்தில் இருக்கும்போது, அவை வர்க்க பலத்தாலும், பாவபலத்தாலும் இணைகிறதா? என்று சோதித்து பார்த்தால் அவ்வாறு இருக்காது.  ராசிச்சக்கரத்தில் ஒரே ராசியில் இருக்கக்கூடிய இரு கிரகங்கள், பாவ சக்கரத்தில் இருவேறு கட்டங்களில் அமைந்துவிடும்.  ஆனால் ராசிக்கட்டத்தில் ஒரே பாதத்தில் மிக நெருக்கமாக இணையும் கிரகங்கள் பாவசக்கரத்தில் பிரிவதில்லை.  ஒரே கட்டத்திற்குள் இருக்கும் சில பழைமையான ஜோதிடர்கள், துல்லியம் வேண்டும் என்பதற்காக, தசவர்க்கம் கணித்து பலன் சொல்வதுண்டு.  இரு கிரகங்கள் கொண்ட ராசிக்கட்டத்தை பல வர்க்கங்களாக அமைக்கும்போது, ராசிசக்கரம் தவிர மற்ற வர்க்க சக்கரங்களில் பிரிந்திருக்க நிறைய வாய்ப்புகள் உள்ளன.  ஆனால் ஒரே பாதத்தில் மிக நெருக்கமாக இணையும் கிரகங்கள் கொண்ட ராசிக்கட்டத்தை  பல வர்க்கங்களாக அமைக்கும் போது, பெரும்பாலான வர்க்கசக்கரங்களில் அந்த கிரகங்கள் இணைந்தே இருக்கும்.  இப்படி பாவசக்கர பலமும், வர்க்கசக்கரங்களின் பலமும் கொண்ட கிரகங்களின் இணைவே வலுவான இணைவாகும்.  இந்த உண்மையை புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே சூரியசந்திரர்கள் சில நிகழ்வுகளை நம் கண் முன்னே நிகழ்த்திக்காட்டி, நிரூபணம் செய்கிறார்கள்.  சூரிய சந்திரர்கள் ஒரே பாதத்தில், அல்லது ஒரு பாதத்திற்குரிய 3.33 பாகை இடைவெளியில் இணையும் போது அமாவாசை உருவாகிறது.  அதுபோல் சூரிய, சந்திரர்களோடு, ராகு, கேதுக்கள் ஒரே பாதத்தில், அல்லது 3.33 பாகை இடைவெளியில் இணையும் போது முழுகிரகணம் உண்டாகிறது.  ஒளிக்கிரகங்களும், நிழல் கிரகங்களும் ஒரே ராசியில் இருந்துவிட்டால் கிரகணம் உருவாகிவிடுவதில்லை.  ஆக கிரக இணைவு என்றால், அவை ஒரே பாதம் அல்லது 3.33 பாகை இடைவெளிக்குள் இணைய வேண்டும் என்று நமக்கு புரிகிறது.  இனி அமாவாசை தரும் சுபயோகம் ஒன்றை பார்ப்போம்.

துலாத்திற்கு சனி ஒருவரே தனியாக இருந்து, 4, 5 என்ற இரு சுப ஆதிபத்யங்களையும் ஒன்றாக இணைத்து யோகம் தருகிறார்.  அதுபோல் மேஷத்திற்கும் யோகம் கிடைக்கிறது.  ஒரு சிறு வித்தியாசம்.  மேஷத்திகு சந்திர சூரியர்கள் தனித்தனி கிரகங்களாக இருந்தாலும், தாம் இருவரும் ஒன்றிணைவதன் மூலம் 4, 5 ஆகிய சுப ஆதிபத்யங்களை ஒன்றிணைத்து யோகம் தருகிறனர்.  மேஷத்துக்கு 4 ஆம் அதிபதியாக சந்திரனும், 5 ஆம் அதிபதியாக சூரியனும் இருந்து, இருவர் இணைவதன் மூலம் அமாவாசையானாலும் யோகம் கிடைக்கிறது.  சூரியன் சுபஸ்தானாதிபதி என்பதால் அஸ்தங்கத தத்துவத்தின் அடிப்படையில், சந்திரனின் அஸ்தங்கத காலத்தில் அதன் ஸ்தானாதிபத்ய காரகத்துவங்களை தான் வாங்கி அப்படியே சுபமாக தருகிறார்.  அத்துடன் சூரியனுக்கு முன்புறம் சந்திரன் அஸ்தங்கதம் அடைவதால், சந்திரனின் சுயகாரகத்துவங்களும் பூமிக்கு கிடைத்துவிடுகிறன.    இப்படி சூரிய சந்திரர்கள் இணைவால் மேஷத்திற்கு முழுயோகம் கிடைக்கிறது.  இதன் அடிப்படையில் சந்திரனுக்கு அஸ்தங்கதோஷம் இல்லை என்று சொல்வாருமுண்டு.  ஆக இந்த அமாவாசை சுபயோக அமாவாசையாகிறது.   இந்த சுபயோக நேரத்தில் பிறப்பவர்கள் எவ்வாறு? திருடனாகவும், பொய்யனாகவும், தாயால் ஒதுக்கப்பட்ட அனாதையாகவும் இருப்பார்கள் என்று புரியவில்லை.  சூரியன் சுபஸ்தானாதிபதியாக இருந்து, சூரிய சந்திரர்கள் இணைந்து உருவாக்கும் அமாவாசைகளெல்லாம் சுபயோக அமாவாசைகளே.  இந்த இணைவு அசுபஸ்தானங்களில் நிகழக்கூடாது.  நிகழ்ந்தால் அமாவாசையால் கிடைக்கும் சுபயோகம் பங்கப்படும்.  சூரியன் ஸ்தானபலத்தில் நல்ல நிலையில் இருக்க வேண்டும்.  மேஷம், ரிஷபம், கடகம், சிம்மம், துலாம், விருச்சிகம், தனுசு, கும்பம், ஆகிய லக்ன ஜாதகர்கள் அமாவாசையில் பிறந்திருந்திருந்தாலும்,  அந்த அமாவாசை யோகமே.  அவர்கள் வாழ்க்கையில் சூரியதசை சந்திரபுக்தி, மற்றும் சந்திரதிசை சூரிய புக்தி காலங்களில் மகிழ்ச்சியின் உச்ச எல்லையில் இருப்பார்கள்.  இது சூரிய சந்திரர்களின் சுபயோக வேஷம்.  இனி அமாவாசை தரும் அவயோகம் ஒன்றை அடுத்த பதிவில் சிந்திப்போம்.  நன்றி  வணக்கம்.  ....................  தொடரும்.  ............................. 

No comments:

Post a Comment