Tuesday 21 July 2015

ஆடிமாதத்தில் புதுமண தம்பதியரை பிரித்து வைப்பது ஏன்?................... பகுதி 2.


ம் படைவீட்டம்மா துணை.  அனைவருக்கும் வணக்கம்.  ஆடிமாதத்தில் புதுமண தம்பதியரை பிரித்து வைப்பது ஏன்?................... பகுதி 2.  ..................  சென்ற பதிவின் தொடர்ச்சி...............பாரம்பரிய முறை......................  இக்காலத்தில் குடும்ப நலத்திட்டம் என்று ஒரு திட்டம் உள்ளது.  குழந்தை பிறத்தல், தடுத்தல் ஆகியவற்றிற்கான விஞ்ஞான வழிமுறைகளை இத்திட்டத்தின் மூலம் கடைபிடிக்கிறார்கள்.  நமது ஜோதிட சாஸ்த்திரம், மெய்ஞ்ஞான வழிமுறைபடி குழந்தை பிறப்பை திட்டமிட்டுக்கொள்ளும் குடும்ப நலத்திட்டத்தை அக்காலத்திலேயே வகுத்து தந்துள்ளது.  இதன்படி திட்டமிட்டு, ஆடியில் கருவுருதலை மூத்த தம்பதியர்கள் தடுத்துக்கொண்டனர்.  அதை பற்றி சுருக்கமாக பார்க்கலாம். 

ஒவ்வொரு மாதமும் பெண்ணுக்கு மாதப்பிரவிடை நேர்ந்த பிறகு, கோசரப்படி சந்திரன் உபஜெய ராசிகளில் இருக்கும்போது, சந்திரனை குரு பார்க்கும் போது தம்பதியர் தாம்பத்தியம் விரும்புவர்.  ஜென்மராசிக்கு 3. 6. 10. 11 ஆகிய ராசிகள் உபஜெய ராசிகளாகும்.  இதன்பின் சந்திரன் அபஜெயராசிகளில் இருக்கும்போது பெண் கருவுருவாள்.  ஜென்மராசிக்கு 1. 2. 4. 5. 7. 8. 9. 12 ஆகிய ராசிகள் அபஜெய ராசிகள்.  மனக்கட்டுப்பாடு நிறைந்த மூத்த தம்பதியர்கள், மேற்கண்ட காலகட்டங்களை அறிந்து நடந்துகொண்டனர்.  மேற்கண்ட காலங்கள் ஆடியில் வரும்போது தாம்பத்தியத்தை தவிர்த்தனர்.  இம்மெய்ஞான குடும்ப நலத்திட்டத்தை மூத்த தம்பதியர்கள் மனக்கட்டுப்பாடுடன் கடைபிடித்ததனால், ஆடியில் அவரகளை பிரிக்க வேண்டிய அவசியமில்லாமல் போனது. 

ஆடியில் சில இனத்தவர்கள் திருமணம் செய்துகொண்டு, முதலிரவை கொண்டாடுகிறார்கள், என்ற செய்தியை சென்ற பதிவில் சொல்லியிருந்தேன்.  அவரகள் முஹூர்த்தம் குறிக்கும்போது, ஐப்பசிமாதம் முழுதும் சூரியன் நீசபங்கம் பெறுகிறாரா? என்பதை முதலில் கவனிக்கிறனர்.  ஐப்பசி மாதத்தில் சுக்கிரன் மாதம் முழுதும், சிம்மத்தில் அல்லது சூரியனுடன் துலாத்தில் இருந்தால், அந்த மாதம் முழுதும் சூரியன் நீசபங்கமடைவார்.  அபூர்வமாக சில வேளைகளில், ஐப்பசி மாதம் முழுதும், சனி மேஷத்திலிருந்து சூரியனை பார்த்தாலோ, அல்லது சூரியனுடன் துலாத்தில் இருந்தாலோ, சூரியன் நீசபங்கம் அடைவார்.  ஆடிமாதம் திருமணமாகி, உடனே கருவுற்றாலும், கருவின் 4 ஆவது மாதமான ஐப்பசியில் சூரியன் நீசபங்கம் அடைவதால், பிறக்கும் குழந்தைக்கு எலும்புக்குறைபாடு இருக்காது.  ஐப்பசி மாதம் முழுதும் சூரியன் நீசபங்கம் பெறும் வாய்ப்பு இல்லையென்றால், திருமணத்தை, ஆடி மாத கடைசிக்கு மாற்றிவிடுவர்.  அல்லது ஆடியை தவிர்த்துவிடுவர்.

மேற்கண்ட சாஸ்த்திர, சம்பிரதாயங்களை, கவனமுடன் கடைபிடித்து வந்தபோதும், அக்காலத்திலும் சில சாஸ்த்திர, சம்பிரதாய மீறல்கள் தெரிந்தோ, தெரியாமலோ நடந்தன.  அதனால் எலும்பு வளர்ச்சிக்குறைபாடுள்ள குழந்தைகள் பிறக்கவே செய்தன.  அத்தகையோரில் கூன்பாண்டியனும், அஷ்டவக்கிரனும் முன்மாதிரிகள்.  மதுரையை ஆண்ட பாண்டிய மன்னர்களில் ஒருவரான, கூன்பாண்டியனுக்கு, பெயருக்கேற்றவாறு, பிறவிலிருந்தே முதுகு வளைந்திருந்தது.  இந்த குறையை ஸ்ரீஞானசம்பந்தர் திருநீற்றுப் பதிகம் பாடி, திருநீறு தடவி, கூனைப்போக்கினார்.  அன்று முதல் பாண்டியன், நின்றசீர் நெடுமாறனானான்.  அஷ்டவக்கிரனுக்கு, உடம்பில் ஏற்பட்ட எலும்புக்குறைபாடால் எட்டு இடங்களில் வளைவும், கோணலும் இருந்தது.  இதை அஷ்டலிங்க மூர்த்தியாக எழுதருளியிருக்கும் ஸ்ரீசிவபெருமான் போக்கியருளினார்.  இவ்வதிசயம் நடந்த இத்தலத்தில் இன்றும் இதற்கான பரிகார வழிபாடுகள் நடைபெற்றுக்கொண்டிருக்கிறன.

தவறுதலாக ஆடி மாதம் கருவுற்றுவிட்டால், ஐப்பசி மாதத்தில் அஷ்டலிங்க வழிபாடு செய்து, எலும்பு ஆரோக்கியமுள்ள குழந்தையை பெற்றுக்கொள்ளலாம்.  4 ஆவது மாதம், கருவை மருத்துவர் அனுமதியுடன், ஸ்கேன் செய்து பார்த்தோமானால், அதன் எலும்பு வளர்ச்சி பற்றிய முழுதகவல் நமக்கு கிடைத்துவிடும்.  குறைபாடு இருப்பின், மருத்துவம் மேற்கொள்வதோடு, பரிகார வழிபாடும் மேற்கொள்ள வேண்டும்.  கும்பகோணத்திலிருந்து, திருவைக்காவூர் செல்லும் பாதையில் கூனன்சேரி என்றொரு சிவத்தலம் உள்ளது.  இது அஷ்டவக்கிரனுடைய குறையை நீக்கிய தலம்.  அக்குறையை நீக்கிய அஷ்டலிங்கங்களுக்கு அபிஷேக ஆராதனை செய்து, வஸ்த்திரம் சாற்றி வழிபடவேண்டும்.  இக்கோவிலில் எழுந்தருளியிருக்கும். ஸ்ரீகைலாசனாதருக்கும், ஸ்ரீஅம்பாளுக்கும் அர்ச்சனை செய்து வழிபடல் வேண்டும்.  இறைவன் திருவருளால் குறை நீங்கப்பெறும்.  குழந்தை பிறந்தவுடன் இக்குறை இருப்பது தெரிந்தாலும், இத்தலத்தில் வழிபாடு செய்து நிவாரணம் பெறலாம்.  ஆனால் காலம் கடந்த நிலையில் பயனில்லாமல் போகும். 

ஒரு சிவத்தல பரிகார வழிபாடை சிந்தித்தோம்.  இதே போல், இக்குறையை போக்கும் வைஷ்ணவ ஸ்தலமும் உள்ளது.  தலத்தின் பெயர். ஊனமாஞ்சேரி.  ஊனம் மாய்தல் சேரி என்பது காலப்போக்கில் மாறிவிட்டது.  சென்னைக்கு அருகே வண்டலூர்......திருப்போரூர் சாலையில் 5 கி.மி தொலைவில் கொளப்பாக்கம் அருகில் ஊனமாஞ்சேரி அமைந்துள்ளது.  எலும்புக்குறைபாடை தீர்க்கும் தெய்வமாக இங்கு ஸ்ரீராகவப்பெருமாள் விளங்குகிறார்.

நம் முன்னோர்கள் நமக்கு வகுத்துதந்த சாஸ்த்திர சம்பிரதாயங்களை தவறாமல் கடைபிடித்து, ஆடி மாதம் தாம்பத்தியம் தவிர்த்து, ஆரோக்கியமான குழந்தைகள் பிறக்க, திட்டம் வகுத்து, நல்ல வம்சம், பரம்பரை விளங்க முயல்வோமாக................ அதற்கு இறைவன் தனது பரிபூரண நல்லாசிகளை அருள வேண்டுகிறேன்.  நன்றி.  வணக்கம்.              

No comments:

Post a Comment