Sunday 1 February 2015

ஜோதிடமும் நவரத்தினங்களும்.....பகுதி...5



ஓம் நமசிவாய.  அனைவருக்கும் வணக்கம்.  நவரத்தினங்கள் பற்றிய பதிவு இது.  பகுதி 5..  திருமால் வஜ்ராயுதம் பற்றிய திட்டம் வகுத்து தந்தது, சிம்மராசிக்கு மூன்றாம் ராசியாகிய துலாத்திலிருந்தாகும்.  மூன்றாம் ஸ்தானத்தின் காரகத்துவங்களில் ஒன்று செயல் திட்டம் வகுப்பதாகும்..  அத்துடன் வீரத்தையும், வெற்றியையும், போர் ஆயுதத்தையும் இந்த மூன்றாமிடம் குறிக்கும்.  துலாராசிக்குரியது. வைரம்.  ஆக வைரத்தாலான வஜ்ராயுதத்தை திட்டமிட்டு அடைந்து வெற்றி பெற்றான் சூரியன் எனும் இந்திரன் என்பது, இந்த புராணம் நமக்கு எடுத்து சொல்லும் ஜோதிட தத்துவமாகும்.  " வைரம் அணிந்தவரை பகை நெருங்காது ", என்ற பொன்மொழி இந்த தத்துவத்தின் அடிப்படையில் சொல்லப்படுவதாகும்.  அதோடு ஜோதிடரீதியாக மூன்றாமிட ஆதரவு இருந்தால் பகையை வெல்லாம் என்றும் புரிந்துகொள்ள முடிகிறது.  இந்த ஸ்தானத்தில் காரகத்துவ அடிப்படையில், ' தம்பியுடையான் படைக்கஞ்சான் ', என்ற பழ்மொழியும் உருவாகியிருக்க வேண்டும்.  ஜோடதிட சாஸ்த்திரத்தில் மூன்றாமிடம் மறைவிடம், துர்ஸ்தானம் என்றெல்லாம் சொல்லப்பட்டாலும், அந்த ஸ்தானாதிபதிக்குரிய ரத்தினக்கல்லை கொண்டு ஜாதகர் சாதனைகளை மேற்கொள்ள முடியும் என்பது புரிகிறது.  இந்த அணுகுமுறையானது ' பிரதிகூலசக்தி முறை ' எனப்படும்.  அதாவது ஒரு தீயகிரகத்தால் ஜாதகருக்கு ஜாதகப்படி நல்ல யோகம் கிடைப்பதில் பாதகமான சூழ்னிலை இருக்கும் போது,  மூன்றாமிட ரத்தினக்கல் கொண்டு, அதை சாதகமாக்கிக் கொள்வதாகும். 

இந்த பிரதிகூலசக்தி முறை அவ்வளவு எளிதானதல்ல.  கரணம் தப்பினால் மரணம் என்பது போல், கணிதம் தப்பினால் ஜாதகரின் வாழ்க்கையை, தலைகீழாக புரட்டிப்போட்டுவிடும்.  நம் மனம் விரும்புவது போல் வரம் தர ரத்தினக்கற்கள் தெய்வங்களல்ல.  அவை கிரகங்களோடும், பஞ்சபூதங்களோடும் மட்டுமே தொடர்புடையவை.  இந்த தொடர்பின் நுட்பம் அறிந்து அவைகளை பயன்படுத்தும் விதத்தில் பயன்படுத்தினால் நன்மையடையலாம்.  முறை தவறி பயன்படுத்தும் போது, மின்சாரத்தை போல் மீளா அதிர்ச்சியை தந்துவிடும்.  எனவே திறமையான ஜோதிடர்களாக இருந்தாலும், அனுகூலசக்தி முறையையே அனுசரிக்கிறனர்.  அனுபவமும், நுட்பமும், தெய்வீக அருளும் இருந்தால் மூன்றாமிடத்துக்குரிய பிரதிகூலசக்தி முறையை பயன்படுத்தலாம்.  துர்ஸ்தானங்கள் என்று வர்ணிக்கப்படும், 6, 8, 12 ஸ்தானாதிபதிகளுக்குரிய ரத்தினக்கல்லை பயன்படுத்தவே கூடாது என்பதில் கற்றறிந்த ஜோதிடர்கள் உறுதியாக இருக்கிறார்கள்.  பிரதிகூலசக்தி முறையை பயன்படுத்தும் போது, மூன்றாமிட கிரகம், துர்ஸ்தானங்களுக்கும் அதிபதியாகி விடலாம்..   அத்தகைய நிலையில் மிகமிக எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்.  அல்லது பிரதிகூலசக்தி முறையை கையாளாமல் விட்டுவிடுதல் இன்னும் நல்லது.  இப்போது நாம் இன்னொரு விஷயத்தையும் யோசித்தாக வேண்டும். 

சில சந்தர்ப்பங்களில் திரிகோணாதிபதிகள், துர்ஸ்தானங்களுக்கும் அதிபதியாவதுண்டு.  அப்போது ஜோதிட விதிமுறைகளுக்கேற்ப, எந்த ஸ்தானாதிபதித்துவத்துக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று தீர்மானித்து பின் செயல்படவேண்டும்.  திரிகோணாதிபதியாக இருந்து, சுபத்துவம் நிறைந்திருந்தால் அனுகூலசக்தி முறை உதவும்.  இதற்கு உதாரணமாக நாம் ஏற்கனவே நடிகர் திரு அமிதாப்பச்சனின் ஜாதகம் பார்த்தோம்.  இனி மூன்றாமிடத்ததிபதியாக இருக்கும் அதே நேரத்தில், துர்ஸ்தானத்துக்கும் அதிபதியாக இருக்கும் கிரகத்தின் ரத்தினக்கல்லை, பயன்படுத்தும் அவசியம் நேரும் போது, நாம் பின்பற்ற வேண்டிய சில முக்கிய விதிகளை முதலில் பார்க்கலாம்.  பொதுவாக 3 ஆம் ஸ்தானாதிபதியாக உள்ள அனைத்து கிரகங்களுக்கும் இந்த விதி பொருந்தும்.  அதாவது, 3ஆம் ஸ்தானாதிபதி அவசியம் ஏதாவது ஒரு கேந்திரத்தில் ஜோதிட சாஸ்த்திரம் குறிப்பிடும் ஜாதக யோகங்களில் ஒன்றை அடைந்திருக்க வேண்டும்.

இப்போது ஒரு உதாரண ஜாதகத்தை பார்ப்போம்.  ஜாதகம் இணைக்கப்பட்டுள்ளது.  ஜாதகர் முன்னாள் பிரதமர். திரு. பி.வி. நரசிம்மராவ் அவர்கள்.  சாதகமான பலன் தராத செவ்வாய் திசையில், அதை சாதகமாக்க , செவ்வாயின் ரத்தினக்கல்லான பவளம் அணிந்து, இந்தியாவுக்கு அவர் பிரதமரானார்.  அடுத்த பதிவில் கணித்து பார்ப்போம்................................[ [ [ தொடரும் ] ] ]

     

No comments:

Post a Comment