Friday 29 August 2014

எல்லை மாறி செல்லும் ஜாதகர்களுக்கான பதிவு இது.



 ஓம் நமசிவாய.  அனைவருக்கும் வணக்கம்.  எல்லை மாறி செல்லும் ஜாதகர்களுக்கான பதிவு இது.  சில சந்தர்ப்ப சூழ்னிலைகளால் குடும்பத்தோடு குடி பெயரும் போது, ஊர் எல்லவிட்டு வேற்றூருக்கு செல்லும் நிலை பலருக்கு ஏற்படுகிறது.  இது எப்போது நிகழும்? எந்த திசையில் நிகழும்? இருந்த இடத்தில் அனுபவித்த சில விரும்பத்தகாத சம்பவங்கள், செல்லுமிடத்தில் தொடருமா? என்ற சந்தேகங்களுக்கெல்லாம் ஜோதிடம் பதில் சொல்லும்.  இவ்வாறு எல்லை தாண்டி மாறி செல்லும்போது முக்கியமாக கவனிக்கப்பட வேண்டிய விஷயம் ஒன்று உள்ளது.  அதுவே எல்லைபிடாரன் அல்லது பிடாரி தெய்வ வழிபாடு.  இவ்வழிபாட்டுக்கும் ஜோதிடத்துக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு.  இதை பற்றி சற்று விரிவாக பார்க்கலாம்.

கிராமங்களில் எல்லை காவல்தெய்வங்கள் நிறைய உள்ளன.  ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையான பாதுகாப்பு தரக்கூடியவை.  அவைகளில் ஒன்று எல்லை பிடாரி அல்லது பிடாரன்.  பிடாரி, பிடாரன் என்ற சொற்கள் வட மொழியை சார்ந்தவை.  பீடை என்றால் கெடுதல் என பொருள் கொள்ளலாம்.  ஹரன் என்றால் அழிப்பவன் என்று பொருள் கொள்ளலாம்.  ஹரி என்பது ஹரனின் பெண்பாலாகும்.  பீடையும் ஹரனும் இணைந்து பிடாரன் எனவும், பீடையும் ஹரியும் இணைந்த் பிடாரி எனவும் வழங்கப்படுகிறது.  எனவே பிடாரி என்பதை பீடாஹரி என்றும், பிடாரன் என்பதை பீடாஹரன் என்று சொல்வதே சரியான உச்சரிப்பாகும்.  மொத்தத்தில் பக்தர்களுக்கு வரும் துன்பங்களை, கெடுதல்களை ஊர் எல்லையிலேயே அழிக்கும் சக்தி கொண்ட தெய்வங்களாகும் இவை.  எனவே இத்தெய்வங்களின் கோவில்களை ஊர் எல்லையில் அமைத்து வழிபட்டனர்.  ஊர் எல்லை விரிவாக்கத்தின் காரணமாக இக்கோவில்கள் தற்போது பல நகரங்களில், நகரத்திற்குள்ளேயே அடங்கிவிட்டன.  பழங்காலத்தில் நகரத்தின் எல்லை எதுவரை இருந்தது என்று அறிய இக்கோவில்களே அடையாளங்கள்  என்றும் சொல்லலாம்.  இனி இந்த தெய்வங்களின் சக்தி ஜோதிடத்தோடு எவ்வாறு தொடர்புபடுகிறது என்று பார்ப்போம்.

ஜாதக கட்டத்தில் 4ம் இடமானது எல்லையை குறிக்கும் ஸ்தானமாகும்.  அது சரஸ்தானமானால் ஜாதகர் பிறந்தஊர் எல்லை மாறி தொலை தூரத்தில் வாழ்க்கையை அமைத்துக்கொள்வார்.  ஸ்திரஸ்தானமானால் பிறந்த ஊர் எல்லைக்குள்ளேயே அவரது வாழ்க்கை அமையும்.  உபய ஸ்தானமானால் பிறந்த ஊருக்கும், அருகாமைக்கும் இடையே அடிக்கடி எல்லை மாறக்கூடியவராக இருப்பார்.  இது நுட்பமான ஜோதிட பலனல்ல.  பொதுவானதாகும். இந்த ஸ்தானத்தில் இருக்கும் கிரகமோ அல்லது ஸ்தானாதிபதியோ கெட்டுப்போயிருந்து, பாதகாதிபதியுடன் தொடர்பு கொண்டால் மிக மோசமான சுகக்கேடு உருவாகும்.  இந்த கிரக அமைப்பால் விதியானது மோசமான வாஸ்து அமைப்புள்ள வீட்டிலும் குடியிருக்க வைத்துவிடும்.  நம் எதிரிகளின் ஏவல்களும், மனைதோஷத்தின் காரணமாக எளிதாக பற்றிக்கொள்ளும்.  அன்னேரத்தில் ஜாதகர் படும் துயரம் சொல்லொணாத வகையில் அமைந்திருக்கும்.  சில பெரியோர்கள் '' வீட்டைமாற்றுங்கள் சுகப்படுவீர்கள் ' என்று சொல்வதுண்டு.  இதிலும் ஒரு பொருள் இருக்கத்தான் செய்கிறது.  சில நேரங்களில் ஜாதகருக்கு ஊரையே மாற்றிவிட்டால் என்ன? என்ற அளவுக்கு எண்ணங்கள் தோன்றும்.  வீடு மாறினாலும் துன்பங்கள் தொடர்கதையாகவே இருக்கும்.  சர, உபய லக்ன ஜாதகர்கள் ஒரு நல்ல ஜோதிடரை கலந்தாலோசித்து, தக்க தருணம் பார்த்து ஊர் எல்லை மாற்றம் மேற்கொள்வதே மேற்கண்ட துன்ப, துயரங்களுக்கு சிறந்த மருந்தாக அமையும். 

இம்மாதிரி ஊர் எல்லை தாண்டி குடிமாறும் சூழல் ஏற்படும்போது, கடந்த காலத்தில் நம்மை கசக்கிப்பிழிந்த கெடுதல்கள் தொடர்ந்து விடாத வண்ணம் பாதுகாத்துக்கொள்வது நம் கடமை.   இதற்கு உதவுவதே எல்லை பிடாரி, பிடாரன் தெய்வ திருக்கோவில் வழிபாடு.    இவ்வழிபாடானது ஒவ்வொரு ஊரில் ஒவ்வொரு வகையாக மேற்கொள்ளப்படுகிறது.  கோவில் பூசாரியாரிடம் விசாரித்தறிந்து வழிபாடை நிறைவு செய்து எல்லை மாறி சென்றோமானால், அது எவ்வகை துன்ப துயரங்களாக இருந்தாலும், எல்லையோடு அவைகள் தெய்வ சக்தியால் அழிந்துபோகும்.  பலர் இவ்வழிபாடை செய்வதே இல்லை.  மேலும் எல்லை தாண்டி போகும்போது ஜோதிட வழிகாட்டுதலையும் மேற்கொள்வதில்லை.  இதனால் தொடர் துயரங்களால் அவதிப்படும் குடும்பங்கள் இருக்கின்றன.  எனவே எல்லை தாண்டி குடிபெயரும் போது ஒரு நல்ல ஜோதிடரை கலந்தாலோசிப்பதுடன், எல்லை பிடாரி, பிடாரன் வழிபாடையும் மறக்காமல் மேற்கொள்ளவேண்டும் என்பது என் பணிவான வேண்டுகோளாகும். 


2 comments:

  1. வணக்கம் அய்யா,

    இடம் பெயரும்போது காவல் தெய்வங்களை வணங்க பெரியோர்கள் கூறியதன் அர்த்தம் இப்பொழுதான் புரிகிறது. நன்றாக விளக்கம் கொடுத்துள்ளீர்கள்.

    நன்றி
    செல்வம்

    ReplyDelete
  2. எல்லைக்கு எண்ணிடங்கா விஷயங்கள் இருக்கிறதோ ??
    ராமு அய்யா நீங்க மிக பெரிய ஞானி!!

    ReplyDelete