Friday 13 June 2014

மோக்ஷம். சொர்கம். நரகம்.



     ஓம் நமசிவாய.  அனைவருக்கும் வணக்கம்.  தற்போது வாசகர்களிடையே, தான் மோக்ஷம் அடைவேணா? என்று அறிந்து கொள்வதில் ஆர்வம் மிகுந்து காணப்படுகிறது.  மோக்ஷம், சொர்கம், நரகம் என்ற வார்த்தைகளுக்கிடையே நிறைய வேறுபாடுகள் உள்ளன.  மோக்ஷம் என்பது மீண்டும் பிறவா நிலையாகும்.  சொர்கம் என்பது, தேவலோகம் அடைந்து பேரானந்தத்தில் திளைத்து, பின் மீண்டும் ஒரு பிறவி எடுப்பதாகும்.  நரகம் என்பது யமலோகம் அடைந்து கொடும் துன்பத்தை அனுபவித்து, பின் ஒரு பிறவி எடுப்பதாகும்.  இதில் மோக்ஷத்தை அடைந்தவர்கள் என்று அடையாளம் காண வேண்டுமானால், நாயன்மார்கள், ஆழ்வார்கள், மஹான்கள், சித்தர்கள், தவசிகள், யோகிகள் ஆகியோரை சொல்லலாம்.  ஸ்ரீ காரைக்காலம்மையார், தனது பதிகத்தில் இறைவனை நோக்கி ஒரு வேண்டுகோள் வைக்கிறார்.  இதை நாம் பெரிய புராணத்தில் படிக்கலாம்.  ' இறைவா! பிறவா நிலை வேண்டும், மீண்டும் பிறப்புண்டேல் உனை மறவா நிலை வேண்டும் ', என்பதாகும் அது.  ஸ்ரீ காரைக்காலம்மையார் இறைவன் திருவருளால், தன் இளமையில் தன் பருவத்தை துறந்து, முதுமையடையும் வரம் பெற்றவர்.  63 நாயன்மார்களில் ஒருவர்.  அவருக்கே தனக்கு மோக்ஷம் கிடைக்குமா? என்ற சந்தேகம் வந்து பதிகம் பாடியிருக்கிறார் என்றால் நாமெல்லாம் எம்மாத்திரம்.

     ஸ்ரீ அருணகிரினாதர் தன் ' கந்தரலங்காரம் ' எனும் நூலில் ' சேல் பட்டழிந்தது, செந்தூர் வயல் பொழில்', என்று தொடங்கும் பாடலை எழுதும் போது, ' அவன் கால் பட்டழிந்தது இங்கு என் தலை மேல் அயன் கையெழுத்தே! ', என்று முடிக்கிறார்.  இறைவன் நினைத்தல் ஒருவர் பிறந்தஜாதகத்தையே, அவர் வாழும்போதே மாற்றியமைக்க முடிய்ம் என்பதர்கு இந்த கந்தரலங்காரம் சிறந்த உதாரணம்.  இப்படி நம் வாழ்க்கையில் நடக்குமா?  நடந்தால் நிச்சய்ம் நமக்கு மோக்ஷம்தான் என்பதில் ஐயமில்லை.  பிறந்த ஜாதகத்தை வைத்துக்கொண்டு மோக்ஷம் கிடைக்குமா? என்று ஆராய்ந்துகொண்டிய்ருப்பதைவிட, அந்த ஜாதகத்தை மாற்றியமைக்கும் இறைவன் திருவடியை பற்றுதலே மோக்ஷம் அடைய சிறந்த வழியாகும்.

     சொர்கம்..  இது நம்மில் பலருக்கு கிடைக்க வாய்ப்புகள் உள்ளன.  ஜாதகப்படி இதை அறிந்துகொள்ள முடியும்.  திரிகோண ஸ்தானங்களில், சுபக்கிரகனகளின் ஆதிக்கம் ஓங்கியிருந்து, பாபக்கிரகங்களின் ஆதிக்கம் மங்கியிருக்குமானால், அந்த ஜாதகருக்கு சொர்கம் நிச்சயம்.  இதே திரிகோணங்களில் பாபக்கிரகங்களின் ஆதிக்கம் ஓங்கியிருந்து, சுபக்கிரகங்களின் ஆதிக்கம் மங்கியிருந்தால் நரகம் நிச்சயம்.  திரிகோணங்களில் முழுக்க முழுக்க சுபர்களின் ஆதிக்கமோ, அல்லது பாபர்களின் ஆதிக்கமோ மட்டுமே இருக்கக்கூடிய ஜாதகத்தை பார்த்ததாக எனக்கு நினைவில்லை.  ஒரு வாசகர் மோக்ஷம் அடைய பரிகார வழிபாடு இருக்கிறாதா? என்று பதிவிட்டிருந்தார்.  அவருக்கு பதிலேதும் கிடைக்கவில்லை.  ஆனால் நர்கம் செல்லாமல் சொர்கம் செல்ல பரிகார வழிபாடு உண்டா? என்று கேட்டால் உண்டு என்று சொல்ல முடியும்.  அதற்கு சில விதிமுறைகள் உள்ளன.  அதை தொடர்ந்து பார்க்கலாம்.

     ஸ்ரீ மாணிக்கவாசகர், தமது திருவாசகத்தில், ' அவனருளாலே அவன் தாள் வணங்கி...............', என்று நமக்கு வழிகாட்டியிருக்கிறார்.  நாம் சொர்கம் அடையவேண்டுமென்றால் பரிகார வழிபாடு செய்யவேண்டும்.  இதை செய்யவும் நமக்கு இறைவன் திருவருள் இருக்க வேண்டும்.  அது இருக்கிறதா? இல்லையா? என்பதை பாக்கிய ஸ்தானம் காட்டி கொடுத்துவிடும்.  இந்த ஸ்தானமானது பாபர்கள் சம்பந்தம் பெற்று, சுப சம்பந்தம் அறவே இல்லையென்றால் நம் பரிகார வழிபாடுகள் எதுவும் செல்லுபடியாகாது.  சுப சம்பந்தம் இருப்பின் அந்த சுப சம்பந்த கிரகம் ஆதிக்கம் பெறும் காலத்தில் நாம் பரிகார வழிபாடுகளை மேற்கொள்ளலாம்.  ஜாதகப்படி, திகோணங்களிலுள்ள பாபக்கிகங்களின் ஆதிக்கத்தை கணக்கெடுத்து, அதை நிவர்த்தி செய்து கொள்ள வேண்டும்.  அப்பொழுதுதான் பாபச்சுமை குறையும்.  இந்த பாபக்கிரகங்களின் காரகத்துவப்படி, நாம் ஆற்ற வேண்டிய புண்ணிய, தர்ம செயல்களை செய்து வருவதே பரிகார வழிபாடாகும்.  உதாரணத்திற்கு பாக்கிய ஸ்தானமானது சந்திரன் பாபசம்பந்தம் பெற்றால், நாம் பெற்ற தாயாருக்கும், தாயாராக மதிக்க தகுந்தவர்களுக்கும் சேவை செய்வதும், சிவபெருமான் கோவில் ஸ்ரீ அம்பாளை வழிபட்டு வருவதுமாகும்.  பொதுவாக வாழ்க்கையில் புண்ணிய, தர்ம செயல்களை செய்தாலே சொர்கத்துக்கான கதவு திறந்துவிடும்.  அதற்கு இறைவன் திருவருள் புரிவானாக.  நன்றி.

No comments:

Post a Comment