Wednesday 2 April 2014

ஆயில்ய தம்பதியர்க்காக ஒரு பதிவு



     நண்பர்கள் அனைவருக்கும் வணக்கம்.  திரு. ஸ்வாமிகள் எனது வேண்டுகோளுக்கு செவி சாய்த்து, அனுமதி வழங்கியதற்கு நன்றி.  இது ஸ்வாமிகள் வழங்கிய ஒரு பதிவில் இட வேண்டிய கருத்துரை ஆகும் [ கமெண்ட் ].  மிக நீண்டதாக அமைந்திருப்பதல் தனியாக இட வேண்டியதாயிற்று. 

     ஆயில்யம் ஆயில்யத்தோடு இணைக்கும் போது ராசியாதிதபதி ஒருவராகத்தான் இருப்பார் இதில் சந்தேகம் இல்லை.  எனவே நான் முன் கூறியபடி, ராசி கணம், ரஜ்ஜு ஆகிய பொருத்தங்கள் இல்லை என்றாலும் இணைக்கலாம்.  ராசிப்பொருத்தத்தின் பயனான வம்ச விருத்தி கிடைத்து விடும்.  அது போல் கணப்பொருத்தத்தின் பயனான மங்களகரமான வாழ்க்கை அமையும்.  ர்ஜ்ஜுப்பொருத்தத்தின் பயனான தீர்க்கசுமங்கலித்துவம் கிடைத்துவிடும்.  திரு ஸ்வாமிகள் சுட்டி காட்டியிருக்கும் தம்பதிருக்கு இவையனைத்தும் கிடைத்திருப்பதில் ஆச்சரியமில்லை. 

     ஆனால் அவசியம் இருந்தாக வேண்டும் என்று சொல்லக்கூடிய ஐந்து பொருத்தங்களில் மீதம் உள்ள தினம், யோனி ஆகிய பொருத்தங்களின் பயன்கள் கிடைக்காமல் போய்விடும்.  தினப்பொருத்தம் என்பது ஆயுள், ஆரோக்கியத்துடன் சம்பந்தப்பட்டது.  ஆயில்ய தம்பதியருக்கு வாழ்க்கையில் இவை இரண்டில் ஒன்றை அனுபவிக்கும் பாக்கியம் நிச்சயமாக இருக்காது.  நல்ல ஆரோக்கியம் இருந்தால் ஆயுள் இருக்காது.  நல்ல ஆயுள் இருந்தால் ஆரோக்கியம் இருக்காது.  வாழ்க்கை முழுவதும் ஆயில்ய தம்பதியர் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு, மருந்து, மாத்திரைகளால் உயிர் வாழ்ந்து கொண்டிருப்பார்கள்.  திரு ஸ்வாமிகள் ஒரு மருத்துவ ஜோதிடர்.  ஜோதிடம் பார்த்து, அதற்குப்பின் மருத்துவம் மேற்கொள்வார்.  அந்த தம்பதியரின் ஜாதகத்தை ஆராய்ந்த பின்னரே மருத்துவமும் செய்திருப்பார்.  எனவே ஸ்வாமிகளுக்கு, நான் கூறிய அமைப்பின் படி அந்த தம்பதியருக்கு ஆரோக்கியமானது அமைந்திருக்கும் என்று அறிந்திருப்பார்.  இனி இதற்கு மேல் ஸ்வாமிகள்தான் விளக்கம் சொல்லவேண்டும்.

     யோனிப்பொருத்தம் இல்லாததால் ஆயில்ய தம்பதியர் முழுமையான தாம்பத்திய சுகம் அனுபவிக்க இயலாமல்போகும்.  அவர்கள் ஜாதகத்தை ஆராய்ந்தால் சயன தோஷம் கூட அமைந்திருக்கலாம்.  இது தம்பதியருக்கு மட்டுமே தெரிந்திருக்கக்கூடிய ரகசியம்.  இதை அவர்கள் மனதில் எண்ணி, எண்ணி பொறுமிக்கொண்டிருப்பார்களே தவிர, வெளிகாட்டிக்கொள்வதில்லை.  மற்ற காரணங்களுக்காகவெல்லாம், ஜாதக பொருத்தத்தை மறுபரிசீலனை செய்பவர்கள், நான் சொல்லும் இவ்விரு காரணங்களுக்காக மறுபரிசீலனை செய்வதில்லை.  ஆரோக்கியக்குறைவுக்கு வேறு வேறு காரணங்களை தனக்குதானே கற்பித்துகொண்டு விடுவார்கள்.  இவ்வாறு ஆயில்ய தம்பதியினரின் இவ்விரு குறைபாடுகள் வெளியில் தெரியாமல் போகிறது.  வெளிப்பார்வைக்கு அவர்கள் நல்ல வாழ்க்கை வாழ்வதுபோல் தெரியும்.  நன்றாக சாஸ்திரம் கற்றுணர்ந்த ஜோதிடருக்கு இது அவர்கள் சொல்லாமலேயே புரிந்துவிடும். 

     என் கண்ணில் இருந்து மறைதாலும் இன்னும் கருத்தில் இருந்து வழி நடத்திக்கொண்டிருக்கும் என் குருனாதரின் உபதேச மொழிகள் இவை.  எனவே ஆயில்யத்தை ஆயில்யத்தோடு இணைத்து இவ்விரு துன்பங்களையும் அவர்களை அனுபவிக்க செய்யும் பாவத்தை சுமக்க என் மனம் விரும்பாததால் ஆயில்யத்தை ஆயில்யத்தோடு நான் இணைப்பதில்லை.  மனம் திறந்து என் கருத்தை சொல்ல வாய்ப்பை உருவாக்கித் தந்த ஸ்ரீ ஸ்வாமிகளுக்கு என் நன்றியை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன்.  நன்றி.

No comments:

Post a Comment