Monday 22 February 2016

" நவாம்சத்தை பற்றி.....



ம் படைவீட்டம்மா துணை.  ஜோதிட நண்பர்களுக்கு வணக்கம்.  " நவாம்சத்தை பற்றி............... ".  பாரம்பரிய முறையிலான பதிவு.  ................  பொதுவாக ஜாதகம் கணிப்பவர்கள், தற்போது பக்கம் பக்கமாக கணித்துத் தள்ளுகிறார்கள்.  முற்காலத்தில் ஒரு ஓலைச்சுவடியின் ஒரு பக்கத்திற்குள் ஜாதகத்தை கணித்து விடுவார்கள்.  ஓலையின் அளவு சிறியது என்பதால், அதில் ராசி மற்றும் நவாம்ச சக்கரம் மட்டுமே இடம் பெற்றிருக்கும்.  கிரகபாதசாரம் எழுத இடம் இருக்காது.  சுருக்கமான முறையில் தினசுத்தி, தசாபுக்தி இருப்பு குறிக்கப்பட்டிருக்கும்.  இக்காலத்தில் பக்கம் பக்கமாக எழுதப்பட்ட ஜாதகத்திலும், சில தகவல்கள் இல்லையென்று குறை சொல்வாருண்டு.  ஆனால் அக்காலத்தில், இந்த ஒற்றை பக்க ஓலையில் இருக்கும் விபரங்களை பார்த்த மாத்திரத்திலேயே, ஜாதகம் சம்பந்தப்பட்ட எல்லா விபரங்களையும், புரிந்துகொண்டுவிடும், ஜோதிடஞானம் பெற்றவர்கள் இருந்தனர்.  அவர்களுக்கு நவாம்சம் என்ற துணைசக்கரம் ஒன்று இருந்தால் போதுமானது.  உயர்கல்வி, பெற்றோர், தொழில், புத்ரபாக்கியம் என்று எதைபற்றி கேட்டாலும், அவைகளுக்குண்டான சதுர்விம்சாம்சம், துவாதசாம்சம், தசாம்சம், சப்தமாம்சம் என்ற வர்க்க சக்கரங்களை கணித்து, மிக மிக துல்லியமான பலனை அவர்களால் சொல்ல முடிந்தது.  பாதசாரம் அல்லது பாகையின் துணையின்றி, தேவையான வர்க்க சக்கரங்களை கணிக்க இயலாது.  நவாம்ச சக்கரம் கிரகபாதசாரத்தை அடிப்படையாக கொண்டதால், அதை வைத்து இந்த சாதனையை அவர்கள் செய்திருக்கிறார்கள்.  இது நவாம்சத்தின் முக்கியமான பயன்பாடுகளில் ஒன்று.

நவாம்சம் போன்ற வர்க்கசக்கரங்கள் நிறைய உள்ளன.  அவற்றுள் மிக முக்கியமானவையாக கருதப்படுபவை சோடச வர்க்கம் எனப்படும் 16 வகையான சக்கரங்களாகும்.  ராசிக்கட்டத்தில், ஒரு கட்டத்தில் இடம் பெற்ற ஒரு கிரகம், அதே கட்டத்தில் சோடச சக்கரங்களில், எத்தனை சக்கரங்களில் இடம் பெறுகிறதோ அதற்கு தகுந்தவாறு, அந்த கிரகம் பலம் பெறுகிறது.  இதை வர்க்கபலம் என்கிறனர்.  எனவே ஒரு கிரகத்தின் பலம் பரிபூரணமாக கணிக்கப்பட வேண்டுமென்றால், இந்த சோடச சக்கரங்களில் எத்தனை சக்கரங்களில், அந்த கிரகம் வர்க்கபலம் பெறுகிறது என்பதை பொறுத்ததாகும்.  இதில் ராசிக்கட்டமும், நவாமச கட்டமும் அடங்கும்.  ஆனால், பல ஜோதிடர்கள், நவாம்ச கட்டத்தை மட்டும் கவனித்துவிட்டு, வக்கோத்தம பலம் கிரகம் பெற்றுவிட்டது என்று முடிவு கட்டிவிடுகிறனர்.  கிரகம் வர்கோத்தமம் மட்டும் அடைந்தால் போதும், என்று நம் முன்னோர்கள் நினைத்திருந்தால், அவர்கள் நவாம்ச சக்கரத்தை மட்டும் அறிமுகப்படுத்தி அறிவுருத்தியிருக்கலாம்.  ஆனால் அதை விடுத்து, மேலும் பல சக்கர வகைகளை அறிமுகப்படுத்தி, சோடசாம்ச கிரக வர்க்கபலங்களையும் அறிமுகப்படுத்த வேண்டிய காரணம் என்ன? என்பதை சிந்திக்க வேண்டும்

ராசி சக்கரப்படி மேஷத்தில் சனி நீசம்.  மகரம் அல்லது கும்பம் லக்னமாக இருந்தால், லக்னாதிபதி நீசம் என்றாகும்.  பாதசாரப்படி சனி அஸ்வினி 1 ஆம் பாத தொடக்கத்தில் இருக்கிறார்.  இப்போது சனி கிட்டத்தட்ட ராசி சக்கரத்தில் தொடங்கி, சோடச வர்கத்தின் வரிசையில் பல சக்கரங்களில் வர்க்கபலம் அடையும்.  இப்போது ஸ்தான பலத்தை ராசி சக்கரத்தில் பார்த்து, கிரக வலிமையை வர்க்க சக்கரங்களில் பார்த்து, இரண்டையும் இணைத்தோமானால், சனி நீச பலனை தருவதில் மிகுந்த வலிமையுடன் செயல்படும் என்று கொள்ள வேண்டும்.  இதுவே சனி ராசி சக்கரத்தில் மட்டும் மேஷத்தில் நீசமடைந்து, வர்க்க சக்கரங்களில் பல்வேறு கட்டங்களில் இருந்தால், சனியின் நீசபலனை வழக்கம்போல் ராசி சக்கரப்படி மட்டும் காண வேண்டும்.  வர்க்க சக்கரங்களில் கிரகங்களுக்குரிய வர்க்கபலம் காணும்போது, அந்த சக்கரங்களுக்கு உச்சம், நீசம் எனப்படும் ஸ்தானபலம் பார்ப்பது தேவையற்றது. 

ராசி சக்கரத்தில், மேஷத்தில் சனி பரணி 3 ஆம் பாதத்தில் இருக்கும் போது, நவாம்சத்தில், பரணி 3 ஆம் பாதத்துக்குரிய, துலாம் என்று அடையாளம் சொல்லக்கூடிய கட்டத்தில் இருக்கும்.  இதை பல ஜோதிடர்கள், " நவாம்சத்தில் சனி துலாத்தில் உச்சமடைந்ததால், அவர் உச்சபலனையும் ", தருவார் என்று குழப்பிவிடுகிறார்கள்.  பரணி 3 ஆம் பாதம் என்பது மேஷமா? துலாமா? என்றும், பரணி 3 ஆம் பாதத்திலிருக்கும் சனி நீசமா? உச்சமா? எது நிரந்தரம்? என்றும் சிந்திக்க வேண்டும்.  எனவே ஒரு கிரகத்தின் வர்க்கபலம் காணும்போது, வர்க்க சக்கரத்தில் ஸ்தானபலம் பார்ப்பது தவறு என்று உணரமுடிகிறது.  மொத்தத்தில் ராசி சக்கரத்தை போல, வர்க்க சக்கரங்களையும் பயன்படுத்தினால், பின் ராசி சக்கரமே தேவையில்லை என்றாகிவிடும்.  ராசி சக்கரத்தில் பார்க்கப்படும், ஸ்தானபலம், திக்பலம், வக்கிரம், அஸ்தங்கதம், கிரக சுபாசுப பார்வைகள் என்ற எதுவுமே வர்க்க சக்கரங்களுக்கு இல்லை. 

ஒவ்வொரு வரக்க சக்கரத்திற்கும், ஒவ்வொரு சிறப்பு பயன்பாடு உண்டு.  புத்ரபாக்கியம் பற்றி துல்லியமாக அறிய, சப்தமாம்சம் என்னும் வர்க்க சக்கரம் கணித்து, அதை மட்டும் வைத்துக்கொண்டு பார்க்க வேண்டும்.  அதுபோல் தசாம்சம் கொண்டு தொழிலை பற்றியும், துவாதசாம்சம் கொண்டு பெற்றோரை பற்றியும் துல்லியமாக அறியலாம்.  இவ்வாறிருக்கும்போது, எந்த பலன் காண வேண்டுமென்றாலும், உடனே சம்பந்தப்பட்ட கிரகம் நவாம்சத்தில் இருக்கும் நிலை என்ன? என்று ஆராய்வதும் எவ்வளவு தவறு என்பதையும் புரிந்துகொள்ள முடிகிறது.  நிறைவாக, வர்க்க சக்கரங்களின் கட்டங்களை ராசிகளின் பெயரால் குறிப்பிடுவது ஒரு அடையாளத்திற்கே.  எனவே ராசிக்குரிய கிரக பலங்களை அதில் காண்பது தவறு, என்றும், எல்லா பலன்களுக்கும், கிரக பலம் அறிய நவாமசத்தை மட்டுமே பயன்படுத்துவது தவறு என்றும் புரிந்துகொண்டு, ஜாதகர்களுக்கு, மிக சரியான துல்லிய பலன்களை, வர்க்க சக்கரங்களை கொண்டும் சொல்ல வேண்டும்.  பிருகத்பராசர ஹோரை முதற்கொண்டு பாரம்பரிய சாஸ்த்திர மூலனூல்கள் இதையே வலியுறுத்துகின்றன என்பதை புரிந்துகொள்வது நன்று.  வணக்கம்.                   

3 comments:

  1. நவாம்சத்தை பற்றி எனக்கு நெடுநாள் இருந்த சந்தேகம் தங்களின் மேற்கூறிய பதிவின் மூலம் தீர்ந்தது. எந்த வலை தளத்திலும் கிடைக்காத இரண்டு தகவல்கள் எனக்கு கிடைத்ததில் பெரு மகிழ்ச்சி.

    நன்றியுடன்,
    ராம்சுதர்சன்.மோ

    ReplyDelete
  2. மிக்க நன்றி ஐயா, தங்களின் பணி சிறக்க இறைவன் எப்பொழுதம் துணை நிற்க வேண்டும்.... இனிய இரவு வணக்கங்கள்....

    ReplyDelete
  3. ஐயாவின் ஆத்மா இறைவனடி சரணமடையட்டும் ஓம் சாந்தி

    ReplyDelete