Thursday, 20 March 2014

"சயன தோஷம்," பற்றி வாசகர்களுக்கான பதிவு



     ஓம் நமசிவாய.  அனைவருக்கும் வணக்கம்.  "சயன தோஷம்," பற்றி வாசகர்களுக்கான பதிவு இது.  சயன தோஷம் இருந்தால் புத்திர பாக்யம் தடை ஏற்படும்.  புத்திர தோஷத்திற்கும், சயன தோஷத்திற்கும் ஒரு வித்தியாசம் உள்ளது.  ஜாதகத்தில் புத்திர தோஷம் இருந்தால், புத்திர பாக்யம் கிடைக்காமல் போக வழி உள்ளது.  ஆனால் புத்திர பாக்யம் இருந்து, சயன தோஷம் இருந்தால் புத்திர பாக்யம் கிடைப்பதில் தடையும் தாமதமும் ஏற்படும். 

     சயன தோஷம் என்பது, இளம் தம்பதியருக்கு தாம்பத்திய உறவில் விருப்பமின்மையை ஏற்படுத்தி அதில் நாட்டத்தை குறைக்கும்.  அல்லது திருப்தியின்மைய தந்து, அதன் மீது ஒரு இனம் புரியாத வெறுப்பை ஏற்படுத்திவிடும்.  இப்படிப்பட்ட தோஷம் இருவரில் ஒருவருக்கு நேரலாம்.  சில நேரங்களில் அபூர்வமாக இருவருக்கும் நேர்வது உண்டு.  விவாக தச வித பொருத்தத்தில் யோனிப்பொருத்தத்தோடு தொடர்பு உடையது இது.  இந்த பொருத்தம் அமையவில்லை என்றால், அவர்களுக்கு சயன தோஷம் பெரும்பாலும் இருக்கும்.  எனவே யோனிப்பொருத்தம் என்பது முக்கியமான ஐந்து பொருத்தங்களில் ஒன்றாகவும், அவசியம் இருந்தாக வேண்டும் என்றும் கூறப்படுகிறது. 

     அஸ்திவாரம் பலவீனமானால் அதில் வீடு கட்டினால் தாங்காது என்பது போல, அடிப்படை தோஷமான இது இருந்தால் புத்திர பாக்கியத்திற்கு வழி கிடைக்காமல் தடை ஏற்பட்டு விடும்.  புத்திர பாக்ய தோஷம் என்பது நிரந்தரமாகவோ அல்லது மிக நீண்ட காலமோ இருக்கக்கூடியது.  சயன தோஷம் என்பது தற்காலிகமான குறுகிய காலம் கொண்டது.  தானாகவே நீங்கிவிடக்கூடியது.  உடனடியாக நீங்க பரிகாரவழிபாடுகளை மேற்கொள்ளலாம்.  அதிக பட்சமாக 3 வருஷம் 4 மாதம் நீடிக்கும்.  குறைந்த பட்சமாக 10 மாதம் நீடிக்கும்.  இந்த கணக்கின் விபரம் ஜோதிடர்க்கான பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது.  நீண்ட காலமோ, குறுகிய காலமோ, இந்த கால கட்டத்தில், ஆணுக்கு ஆண்மை குறைவு என்றும், பெண்ணுக்கு பெண்மை குறைவு என்றும் தேவையில்லாத பட்டம் கட்டி அவர்களை மன வேதனைக்கு ஆளாக்கிவிடுகிறது இந்த சமுதாயம்.  சிலர் மனம் திறந்து, மருத்துவ கவுன்சிலிங் மேற்கொள்வதுண்டு.  அறிவியல் ரீதியாக இது நல்ல வழிமுறையாகும்.  அத்துடன் ஜோதிட ரீதியாகவும் தீர்வு காண வேண்டியது அவசியம்.  சிலர் இவ்விஷயத்தில் வெளிப்படையாக இருக்க நாணிக்கொண்டு, ஜோதிட தீர்வையும், மருத்துவ கவுன்சிலிங்கையும் நாடாமல் மறுத்துவிடுவதும், மறைத்துவிடுவதும் உண்டு. 

     இப்படிப்பட்டவர்கள் தம் நண்பர்கள், தோழிகள் போன்றோரிடம் மட்டும் கலந்தாலோசிப்பது உண்டு.  அவர்களோ சயனக்கோல பெருமாள் கோவிலுக்கு சென்று வந்தால் சரியாகிவிடும் என்றும், இந்த விஷயம் யாருக்கும் தெரியப்போவதில்லை என்றும் வழி காட்டிவிடுகிறனர்.  இது ஒரு வகையில் பாதியளவு பரிகாரவழிபாடாகும்.  பெருமாளுக்கு பத்து வித சயனத்திருக்கோலங்கள் உண்டு.  இதில் சரியான ஸ்தலத்தை தேர்வு செய்து கொண்டு சென்று வருவது முழு பலனைத்தரும்.  எந்த கிரக அமைப்பால் தோஷம் ஏற்படுகிறதோ, அந்த கிரக சம்பந்தமாக பரிகார வழிபாடை மேற்கொண்டால் சிறப்பானதாக இருக்கும்.  இதற்கான முழு விபரங்கள்" சயனதோஷம் ஜோதிடர்களுக்கான பதிவு," என்பதில் தரப்பட்டுள்ளது.  எனவே இவ்விஷயத்தில் ஒரு மூத்த, விபரமான ஜோதிடரை அணுகி, தீர்வுக்கான வழிமுறைகளை தேர்வு செய்து கொள்வதோடு, நாணம் கொள்ளாமல், மனம் திறந்து ஒரு மருத்துவரிடமும் கவுன்சிலிங் பெற்று வாழ்க்கையை வளமாகவும், மகிழ்ச்சியாகவும் வாழும் வகையில் அமைத்துக்கொள்ளுங்கள்.  வாழ்த்துக்கள்.

    முக்கிய குறிப்பு:  இந்த பதிவின் தொடர்ச்சியாக உள்ள " சயனதோஷம். ஜோதரகளுக்கான பதிவு," என்பதையும் படித்து பாருங்கள்.  அதில் உங்களுக்கு தேவையான விபரங்களும் கிடைக்கலாம்.  ஆனால் அந்த பதிவு ஜோதிடர்களுக்கானது என்பதால் உங்களுக்கு புரியுமாறு அமைந்திருப்பது கடினம் என எண்ணுகிறேன்.  நன்றி.

No comments:

Post a Comment