ஓம் படைவீட்டம்மா துணை. நண்பர்களுக்கு வணக்கம். செய்வினை தோஷம் 3 ஆவது பதிவு. சென்ற பதிவுகளில், தோஷம் எப்படி உருவாகிறது? யாரால்
உருவாகிறது? எதற்காக உருவாகிறது? என்றும், அதன் துணை தீயசக்திகளான ஏவல், பில்லி, சூன்யம்
ஆகியனவற்றின் தன்மைபற்றியும், சில முன்னெச்சரிக்கைகளை பற்றியும் பார்த்தோம். இனி இந்த பதிவில் தோஷத்திலிருந்து நிவாரணம் பெற
செய்யவேண்டிய தெய்வீக பரிகார வழிபாடுகளை பற்றி சற்று விரிவாக ஆலோசிப்போம்.
..................... [[ தெய்வீக
வழிபாடுகள் ]] .................... 01. ஸ்ரீ
காலபைரவர் வழிபாடு நன்மை தரும். பிரான்மலை,
ராமேஸ்வரம் ஆகிய ஸ்தலங்களில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீபீஷண பைரவர்கள் மிகவும் பிரசித்தி
பெற்றவர்கள். அங்கு சென்று அக்கோவில் முறைபடி,
சிறப்பு வழிபாடு செய்துவிட்டு, பின்பு வாரந்தோறும், உள்ளூர் சிவபெருமான் கோவிலிலுள்ள
ஸ்ரீகால பைரவர் சன்னதியில் விளக்கேற்றி வழிபட்டு வர வேண்டும். 02. ஸ்ரீமஹாபிரத்யங்கரா
தேவி வழிபாடு செய்வதும் நல்லது. ஆங்காங்கே
சில ஸ்தலங்களில் இவர் சன்னதி இருப்பினும், கும்பகோணத்திற்கு அருகே ஐயாவாடியிலுள்ள சன்னதி
தலைமை பீடம் எனலாம். அமாவாசை தோறும், முற்பகலில்
இங்கு நடக்கும் நிகும்பல யாகத்தில் [ மிளகாய் யாகம் ] கலந்துகொண்டால் தோஷம் நீங்கும். இங்கு யாகத்தில் கலந்து கொள்ள வரும் போது இயன்ற
அளவு மிளகாய் கொண்டுவந்து காணிக்கையாக செலுத்தலாம். பின் வாரந்தோறும் ஒரு அம்மன் கோவிலுக்கு சென்று
விளக்கேற்றி வழிபட்டு வர வேண்டும்.
03. பெருமாள் கோவில்களில் எழுந்தருளியிருக்கும்,
ஸ்ரீ நரசிம்மர் இணைந்த ஸ்ரீசக்ரத்தாழ்வார், தனித்த ஸ்ரீஉக்ர நரசிம்மர், ஸ்ரீவராக பெருமாள்,
ஸ்ரீபஞ்சமுக ஆஞ்சனேயர் ஆகியோரின் சன்னதி வழிபாடுகள் தோஷத்தை நீக்க வல்லவை. இத்தெய்வங்கள் உள்ள திருக்கோவில் முறைபடி சிறப்பு
வழிபாடு செய்து விட்டு, வாரந்தோறும் உள்ளூர் பெருமாள் கோவிலில் உள்ள இத்தெய்வங்களின்
சன்னதியில் விளக்கேற்றி வழிபட்டு வர வேண்டும்.
ஸ்ரீசக்ரத்தாழ்வரின் சன்னதிக்கு சிறந்த ஸ்தலம், கும்பகோணம் ஸ்ரீசக்ரபாணி திருக்கோவில். ஸ்ரீ நரசிம்மர், ஸ்ரீஆஞ்சனேயருக்கு சிறந்த ஸ்தலம்,
அரக்கோணத்திலிருந்து, வேலூர் செல்லும் வழியிலுள்ள சோளிங்கர் எனப்படும் சோளிங்கபுரம்
மலை. ஸ்ரீவராக பெருமாளுக்கு சிறந்த ஸ்தலம்,
ஸ்ரீமுஷ்ணம். இது விருத்தாசலம் அருகே உள்ளது. பொதுவாக உக்ர வடிவ பெருமாள் எங்கிருந்தாலும் அங்கு
வழிபடலாம். 03. சிங்கம்புணரியிலுள்ள ஸ்ரீவடுகநாத சித்தரின் ஜீவசமாதி. பௌர்ணமிதோறும் இரவில நடக்கும் சிறப்பு பூஜை, வழிபாடில்
கலந்து கொண்டு அன்று இரவு அங்கு தங்க வேண்டும்.
வழிபாட்டுக்கு முன்பு அன்னதானம் அளிக்கப்படுகிறது. அங்கு தங்களாலியன்ற அளவு காணிக்கை செலுத்துங்கள். பின் வாரந்தோறும், உள்ளூரில் அல்லது அருகாமையிலிருக்கு
ஜீவசமாதிக்கு சென்று வரலாம். அவ்வாறு ஏதும்
இல்லையெனில், சிவபெருமான் கோவில் நவக்கிரக குருவுக்கு வியாழந்தோறும், முல்லை அல்லது
கொண்டை கடலை மாலை சாற்றி வழிபட்டு வரலாம்.
04. ஸ்ரீசரபேஸ்வரர் வழிபாடு நல்ல பலன்
தரும். இவர் சிவஸ்தலங்களில் சன்னதி கொண்டிருப்பார். இவரது தனி சன்னதி கொண்ட ஸ்தலம் கும்பகோணத்திற்கு
அருகில் உள்ள திருபுவனம். இவருக்கு அபிஷேக
ஆராதனை செய்து வழிபட்ட பின், வாரந்தோறும் அருகில் உள்ள சிவஸ்தலங்களில் உள்ள ஸ்ரீசரபேஸ்வரர்
சன்னதியில் விளக்கேற்றி வழிபட்டு வருதல் சிறப்பு.
மேற்கண்ட ஸ்தலங்களுக்கு
சென்று வழிபடுமுன், உங்கள் குலதெய்வ வழிபாடை முறையாக குறைவின்றி முடித்துவிடவேண்டும். அதன் பின் பாதிக்கப்பட்டவரின் ஜாதகக்ப்படி அவரது
இஷ்டதெய்வ வழிபாடை நிறைவாக செய்யதுவிடவேண்டும்.
அதன்பின்பே தோஷனிவர்த்தி ஸ்தல வழிபாடு மேற்கொள்ள வேண்டும். இதோடு இன்னொரு முக்கிய குறிப்பு உள்ளது. இலுப்பைவிதையை பொடியாக்கி, அதை நயம் சாம்பிராணியோடு
சரிசமமாக கலந்து பாக்கெட்டில் ஒரு சிறிய அளவு அடைத்து கொள்ளவேண்டும். இந்த பாக்கெட்டை, ஸ்தல வழிபாடின் போது, அத்தெய்வத்தின்
திருவடியில் வைத்து அர்ச்சனை செய்ய வேண்டும்.
எந்த கிரகங்களால் பாதிப்பு ஏற்பட்டுள்ளதோ அந்த் கிரக நாட்களில், பூஜையறையில்
விளக்கேற்றி, குல, இஷ்ட, ஸ்தல தெய்வங்களை வேண்டிக்கொண்டு தூபமிடவேண்டும். ஐயாவாடியில் மட்டும் அர்ச்சனை கிடையாது. இங்கு பிரார்த்தனை மட்டுமே. வாரந்தோறும் வழிபட்டு வரும் வழிபாடை, தோஷம் நீங்கும்
நாள் வரை விடாமல் செய்துவர வேண்டும். மேலும்
முடிந்த போதெல்லாம் ஸ்தல வழிபாடு மேற்கொள்வது நல்லது. நிவாரணம் பெற ஆரம்பித்தவுடன், வழிபாடை நிறுத்திவிடக்கூடாது. மீண்டும் தோஷம் தொற்றிக்கொள்ளும். உங்கள் வழிபாடுகளால், நீங்கள் நிவாரணம் அடைவதை எதிரி
புரிந்துகொண்டு, மீண்டும் தொல்லை தருவார்.
தோஷ காலகட்டம் முடிந்துவிட்டதா? இல்லையா? என்பதை ஒரு ஜோதிடர் மூலம் தெரிந்துகொள்ளுங்கள். மேலும் ஸ்தல தெய்வங்களை தேர்வு செய்வதிலும் ஜோதிடர்
உதவி தேவைப்படும். எந்த கிரகங்களால் பாதிப்பு
ஏற்பட்டுள்ளதோ, அந்த கிரகங்களுக்கேற்றவாறு ஸ்தல தெய்வங்களை தேர்ந்தெடுத்து வழிபடுவது
நல்லது. அவ்வாறு செய்வதன் மூலம், கிரக சம்பந்த
தெய்வங்களையும் வழிபட்டது போலாகும். மேற்கண்ட
தெயுவீக வழிபாடிலும் ஒரு சிக்கல் உள்ளது. ஒரு
சிலருக்கு, தெய்வீக பரிகார வழிபாடுகள் பலிப்பதில்லை. அத்தகையோர்கள் மாந்திரீக வழிமுறை மூலமே தோஷ நிவர்த்தி
செய்துகொள்ள முடியும். அவைகளை பற்றி விரிவாக
அடுத்த பதிவில் சிந்திப்போம். நன்றி
......................... [[ தொடரும்
]] ...................
No comments:
Post a Comment