Tuesday, 4 March 2014

மோக்ஷப் பிறவிகளைப் பற்றிய பதிவு



     ஓம் நமசிவாய.  அனைவருக்கும் வணக்கம்.  மோக்ஷப் பிறவிகளைப் பற்றிய பதிவு இது.  [ பாரம்பரிய முறை ]  இவ்வுலகத்தில்  பிறந்து துன்பங்களையும், துயரங்களையும் மட்டுமே அனுபவித்து வருபவர்களுக்கும் இது ஒரு ஆறுதல் பதிவாக இருக்கும் என்று நம்புகிறேன்.

     பொதுவாக விரயத்தில் கேது இருப்பின் மோக்ஷ ஜாதகம் என்று பரவலாக கருதப்படுகிறது.  ஜோதிட ரீதியாக கொஞ்சம் ஆன்மிக சிந்தனையோடு சிந்திப்போம்.  " இருள் சேர் இருவினையும் சேரா, இறைவன் பொருள் சேர் புகழ் புரிந்தார் மாட்டு",  இத்திருக்குறளை சற்று விரிவாக பார்த்தோமானால் நமக்கு ஒன்று புரியும்;  இவ்வுலகில் பிறந்த ஜீவன்கள் அனைத்தும், வினைப்பயனை அனுபவிக்கப் பிறந்தவை.  புண்ணியம் புரிந்தவர்கள் புண்ணிய பயனை அனுபவிக்கவும், பாவம் புரிந்தவர்கள் பாவ பயனை அனுபவிக்கவும் பிறந்தோம்.  இப்படி பாவ புண்ணிய கணக்கில் எது மிஞ்சுகிறதோ அதை அனுபவிக்கும் பிறவி நமக்கு வாய்க்கிறது.  இதை ஜோதிட ரீதியாக ஜோதிடர்கள், பூர்வபுண்ணிய ஸ்தானத்தையும், பாக்கிய ஸ்தானத்தையும் பார்த்து, நம் பிறவி எத்தகையது என்று கூறிவிடுவார்கள்.  ஆக புண்ணியம் பாபம் இரண்டிலும் எதுவும் மிச்சம் இல்லாதபடி நம் வாழ்க்கை அமையுமானால் நமக்கு மோக்ஷம் நிச்சயம்.  ஆகவே திருவள்ளுவர், புண்ணியம், பாபம் என்ற இருவினையும் பிறவி என்ற இருளுக்க்ள் தள்ளுவதால் " இருள் சேர் இருவினை "என்கிறார்.

     இது சம்பந்தமாக மகாபாரதம் தரும் விளக்கம் ஒன்றை பார்க்கலாம்.  மாதா, பிதா, குரு, தெய்வம் ஆகிய அனைவராலும் கை விடப்பட்ட பாப ஆத்மா கர்ணன்.  வாழ்க்கையில் துயரங்களையும், துன்பங்களையும் மட்டுமே அனுபவித்தவன்.  இப்படி துன்பங்களையே அனுபவித்ததால் அவன் பாவவினைகள் எல்லாம் கழிந்தன.  அப்படியென்றால் கர்ணன் ஜாதகம் எப்படி இருந்திருக்கும்?  இப்பிறவியில் பாப புண்ணீய அனுபவங்களை தரக்கூடிய பாக்கிய ஸ்தானம் கெட்டுப்போயிருக்கும்.  இறுதியில் கர்ணன் போர்களத்தில் குற்றுயிரும், கொலையுயிருமாக இருக்கும் போது ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா அவனுக்கு மோக்ஷம் தர விரும்புகிறார்.  ஆனால் கர்ணன் செய்த தான தருமங்கள் புண்ணியவினைகளாக மாறி அடுத்தபடி புண்ணியபிறவியை தர இருந்தன.  இது மோக்ஷத்திற்கு தடையாக இருந்தது.  எனவே பரமாத்மா, அவனது புண்ணியத்தையெல்லாம் தானமாக பெற்றுக்கொள்கிறார்.  அதுவும் புண்ணியதானம் தருவதால் ஒரு புண்ணியம் உருவாகுமே, அதையும் சேர்த்து தானமாக பெற்றுக்கொள்கிறார்.  இப்போது கர்ணன் கணக்கில் புண்ணியமுமில்லை.  பாவமுமில்லை.  மோக்ஷம் கிடைத்தது.  அவனது ஜாதகம் எப்படி இருந்திருக்கும்? ....................

     எனவே மோக்ஷ பிறவியாக வ்ரும் அவதார புருஷரகள், தமது பாபவினைகளை தாமே ஏற்று அனுபவித்து தீர்த்துகொள்கிறனர். புண்ணிய வினைகளை " சிவார்ப்பணம் "  " கிருஷ்ணார்ப்பணம் " என்று இறைவனுக்கு அர்ப்பணித்துவிடுகிறனர்.  அவர்கள் வாழ்க்கையில் துன்பங்கள் தான் நிறைந்திருக்கும்.  இதனால் அவர்கள் பாக்ய ஸ்தானம் நிச்சயமாக நன்றாக இருக்காது என்று விளங்குகிறது.  புண்ணிய, பாவ நிலையில்லாத நிலையடையும்  இவர்களது மற்ற ஸ்தானங்கள் எப்படியிருக்கும்? என்பது நம் சிந்தைக்கு எட்டாததாகவே இருக்கிறது.  ஆகவே விரயத்தில் கேது இருப்பின் மோக்ஷம் என்பது ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இல்லை.  பொதுவாக, வாழ்க்கையில் துன்பங்களையே அனுபவிக்கும் ஜாதகர்கள் எதையும் இறைவனுக்கு அர்ப்ப்ணித்துவிட்டால் மோக்ஷம் கிடைக்கும் என நம்பலாம்.  ஆனால் இன்னார் தான் மோக்ஷம் அடைவர் என்று எந்த ஜோதிடராலும், எந்த ஜாதகத்தையும் அடையாளம் காட்ட இயலாது. ஆகையால் பாக்ய ஸ்தானம் பாதிக்கப்பட்டு கஷ்டப்படும் ஜாதகர்கள், மஹான்களின் ஜாதகம் போல் நம் ஜாதகம் அமைந்துள்ளது என்று எண்ணி இறைவனுக்கு நன்றி சொல்லி அவன் திருவடி அடையும் வழியை தேடுவோமாக...............அதற்கு இறைவன் அருள் புரிவான்.  நன்றி. 

2 comments:

  1. ஐயா வணக்கம், இந்த பதிவு இக்கால மக்களுக்கு ஏற்றதாக உள்ளது. பலதடவை நான் என் வாழ்கையை திரும்பி பார்க்கும் பேதுதான் தெரிந்தது நான் எதற்காக இவ்வுலகிற்கு வந்தேன் என்று... நன்றி

    ReplyDelete