Tuesday, 4 March 2014

ஆயில்ய நக்ஷத்திர பெண்களுக்கான பதிவு



     ஓம் நமசிவாய.  அனைவருக்கும் வணக்கம். திருமணத்திற்கு காத்திருக்கும்,  ஆயில்ய நக்ஷத்திர பெண்களுக்கான பதிவு இது. [ பாரம்பரிய முறை ]

     ஆயில்ய நக்ஷத்திர ஜாதகங்களை ஜோதிடர்கள் பலர் " மாமியாருக்கு ஆகாத ஜாதகம்," என ஒதுக்குவது வழக்கம்.  இதனால் இவர்கள் மாமியார் இல்லாத குடும்ப வரணை தேடுவது வழக்கம். அப்படி தேடி, கிடைத்தாலும், ஜாதக பொருத்தம் அமைவது குறைவாகவே இருக்கும்.  மிருகசீரிஷம், மகம் ஸ்வாதி, அனுஷம் ஆகிய 4 நக்ஷத்திர ஜாதகங்கள் ஜோதிட விதிப்படி பொருத்தம் பாராமலேயே, அதாவது விவாஹ தச வித பொருத்தம் மட்டும் பார்க்காமலேயே இணைக்கலாம்.  விவாஹ தச வித பொருத்தம் பார்த்தால் இணையக்கூடியது உத்திரம் 1 ம் பாதம் மட்டுமே.  இந்த 5 வகை ஜாதகங்களில் : தோஷ சாம்யம் ", அமையாமல் தள்ளுபடியாகக் கூடியவை உண்டு. மீதம் இருப்பவற்றில் ஜாதக கட்ட பொருத்தம் பார்க்க வேண்டியுள்ளது.  ஆக கடைசியில் சொற்ப அளவு ஜாதகங்களே பொருத்தம் உள்ளதாக அமைவதால் வரன் தேடுவதில் சிக்கல் நீடித்துக்கொண்டிருக்கும்.  அதன் பின் நடைமுறை கொடுக்கல் வாங்கல் வேறு.  ஆக மொத்தம் மேற்கண்ட காரணங்களால்,  ஆயில்ய நக்ஷத்திர பெண்கள் திருமணம் தள்ளிப்போய், காத்துக்கொண்டிருக்கும் நிளை ஏற்படுகிறது. 

     இதற்கிடையில் பொதுவாக, திருமணம் செய்து வைக்கும் சாஸ்த்திரிகள் தரப்பில் ஒரு செய்தி கூறப்படுகிறது.  திருமண பந்தலில் மணமகனின் தாயார் ஸ்தானத்த்ல், பெற்ற தாய்க்கு பதிலாக வேறு யார் இருந்து, திருமண சடங்கு சம்பிரதாயங்களை நிறைவேற்றினாலும், அவர் மணமகளுக்கு மாமியார் ஆகிவிடுகிறார்.  இந்த ஆயில்ய நக்ஷத்திர தோஷம் மாமியாரை பாதிக்குமல்லவா? என்கிறனர்.  சாஸ்த்திர ரீதியாக இதை ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும்.  இப்போது என்ன செய்வது?

     இந்த சாஸ்திரத்துக்கு ஆதரவாக ஒரு மகாபாரத சம்பவமும் உள்ளது.  அர்ஜ்ஜுனனுக்கும், சுபத்திரைக்கும் திருமணம்.  தந்தை பாண்டு இல்லாத காரணத்தால் தாய் குந்தி அர்ச்சுனனுக்காக தாய் ஸ்தானத்தில் இருந்து சடங்கு சம்பிரதாயங்களை நிறைவேற்ற இயலவில்லை.  எனவே தாய், தந்தை ஸ்தானத்தில் பாஞ்சாலியும், தருமரும் அமர்கிறனர்.  பாஞ்சாலி தாய் ஸ்தானத்தில் அமர்ந்து சடங்கு சம்பிரதாயங்களை நிறைவேற்றிய காரணத்தால், அர்ஜ்ஜுனன் தன் மனைவியான பாஞ்சாலியை அன்று முதல் தாயாகவே பாவித்து நடந்துகொண்டான். 

     இறைவன் கருணையே வடிவானவர்.  இந்த சாஸ்த்திர சிக்கலுக்கென ஒரு தீர்வை அவர் தந்திருக்கிறார்.  ஆயில்ய நக்ஷத்திர பெண்களுக்கென ஒரு கோவில் உள்ளது.  அது திருச்சியில் உறையூரில் [ நாச்சியார் கோவில் ] அமைந்துள்ளது.  ஆயில்ய நக்ஷத்திராதிபதி புதன்.  புதன் வழிபடும் தெய்வம் திருமால்.  அந்த திருமால், அங்கு ஆயிலய நக்ஷத்திர பெண்களின் மாமியார் தோஷத்திலிருந்து விடுதலை தர கோவில் கொண்டிருக்கிறார்.  ஸ்ரீ கமலவல்லி நாச்சியார் உடனுறை ஸ்ரீ அழகிய மணவாள பெருமாளாக எழுந்தருளியிருக்கிறார்.  நாச்சியார் பங்குனி மாதம் ஆயில்ய நக்ஷத்திரத்தில் உதித்தவள்.  அவள் ஸ்ரீ பெருமாளை மணம் புரியும் திருக்கோலத்துடன் எழுந்தருளியிருக்கிறாள்.    இந்த திருக்கோவிலுக்கு ஆயில்ய நக்ஷத்திர பெண்கள் ஆயில்ய நக்ஷத்திர தினத்தன்று சென்று அர்ச்சனை செய்து விரைவில் வரன் அமைய வேண்டிக்கொள்ளவேண்டும்.  வரன் அமைந்த பின் மாங்கல்ய தாரணம் [ தாலி கட்டிக்கொள்ளுதல் ] மூலஸ்தானத்தில் இறைவன் திரு முன்பாக நடத்திக்கொள்ள வேண்டும்.  சன்னதியில் பட்டாச்சாரியார் பெருமாள் திருவடியில் மாலையும், மாங்கல்யமும் வைத்து, அரச்சனை செய்து வழங்க, அதை மணமகன், மணமகளுக்கு சூட்ட வேண்டும்.  இவ்வாறு நடக்கும் போது, அங்கு மற்ற திருமண சடங்குகள் இல்லை.  எனவே மணமகன் தாயார் ஸ்தானத்தில் இருந்து சடங்கு, சம்பிரதாயங்களை நிறைவேற்ற யாரும் தேவைப்படுவதில்லை.  சாஸ்த்திர ரீதியாகவும் மாமியார் தோஷம் இல்லாமல் போகிறது.

     எனவே ஆயில்ய நக்ஷத்திர பெண்கள் அனைவரும், திருச்சி, உறையூர் [ நாச்சியார் கோவில் ], ஸ்ரீ கமலவல்லி நாச்சியார் உடனுறை ஸ்ரீ அழகிய மணவாள பெருமாள் திருக்கோவிலுக்கு சென்று பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.  பெருமாள் திருவருளால் நல்ல வாழ்க்கை அமையும். 

     முக்கிய குறிப்பு:  ஒரு நல்ல ஜோதிடரை அணுகி தனக்கு திருமண யோகம் வந்துவிட்டதா? என தெரிந்துகொண்டு, அதன் பின் கோவிலுக்கு செல்வது மிகவும் உத்தமம்.    

No comments:

Post a Comment